பிச்சை எடுத்ததாம் பெருமாள் அதைப் பிடுங்கியதாம் அனுமார் என்பார்கள். அந்தக் கதையாக ஒரு ஆர்கிட் செடி தனக்குத் தேவையான சக்கரை உணவை பூஞ்சானக் கிருமிகளிடமிருந்து ஓசியில் பெற்றுக் கொள்கின்றன. அந்தப் பூஞ்சனங்களோ பக்கத்தில் வளரும் மரங்களின் வேர்களிலிருந்து சக்கரையைத் திருடுகின்றன. இந்தக் கொடுக்கல் வாங்கல்கள் மண்ணுக்கடியில் வெளியே தெரியாமல் நடைபெறுகின்றன. உயிரியல் வல்லுநர்கள் அண்மையில் தாய்லாந்தில் பச்சையம் இல்லாத மூன்று ஆர்க்கிட் செடிகளைக் கண்டனர்.

பச்சை நிறம் இல்லாமல் எப்படி இந்தச் செடி ஒளிச்சேர்க்கை செய்து பிழைக்கிறது என்று பார்த்தபோதுதான் இந்த பூஞ்சனங்களின் உதவியுடன் பக்கத்தில் இருக்கும் மரங்களின் வேர்களிலிருந்து உணவைத் திருடி வாழ்வது தெரிய வந்தது. அடர்ந்த கானகத்தில் வாழும் இந்த ஆர்க்கிடுகள் மிகவும் அபூர்வமானவை மட்டுமல்லாமல் இவற்றின் வாழ்க்கை முறையும் அதிசயமாக இருக்கிறது.

பூஞ்சனங்கள் பொதுவாக மண்ணில் வாழும் கிருமிகள். காளான்கள்கூட பூஞ்சனங்கள்தான். செடிகள் இவற்றை சாதுர்யமாகப் பயன்படுத்தி செலவில்லாமல் காலங்கடத்துவது ஆச்சரியமாக இருக்கிறது என்று அறிஞர்கள் கூறுகிறார்கள்.

- முனைவர் க.மணி

Pin It

மேடம் டுஸ்ஸாட், பிரபல மனிதர்களின் அசல் உருவங்களை மெழுகால் செய்து மிகப்பெரிய பொருட்காட்சியை செய்து வைத்திருக்கிறார். பெரிய மனிதர்களை சிலை செய்து வைப்பது மற்றவர்களுக்கு சரித்திரத்தை நினைவுறுத்துவதற்காகவும், காகங்கள் உட்கார்ந்து கக்கா போடவும் உதவுகிறது. சைக்ளாப்ஸ் என்ற சிலந்தி பாருங்கள், வலையில் தன்னைப் போலவே ஒரு உருவத்தை, செத்துப்போன பூச்சிகள், குப்பை செத்தை முதலியவற்றைப் பயன்படுத்தி செய்து வைத்துக் கொள்கிறது. எது நிஜம் எது பொய் என்றே கண்டுபிடிக்க இயலாத அளவுக்கு அது தத்ரூபமாக இருக்கிறது. தன் உருவம் மட்டுமல்ல தனது முட்டை பொதியைப் போலவும், இரையைப் பிடித்து நூலாம்படையால் முடிச்சு போட்டு வைக்குமே, அதைக்கூட தத்ரூபமாக செய்து வைக்கிறது. சைக்ளாப்ஸ் சிலந்தி இப்படி என்றால், வேற சிலந்திகள் தனது வலையை குப்பை செத்தைகளால் அலங்கரித்து கவர்ச்சி தருவதும் உண்டு. இதற்கெல்லாம் காரணம் என்ன? என்ற கேள்வி உயிரியலாளர்களை 100 ஆண்டுகளாகத் துளைத்துக் கொண்டிருந்தது. சைக்ளாப்ஸ்ஸை பார்த்த பிறகுதான் இதன் உண்மை புரிந்தது.

உலகில் உள்ள உயிரினங்களில் 40 விழுக்காடு பூச்சிகள்தான். மற்ற மிருகங்களை நீங்கள் பார்க்க முடியாமல் இருக்க வாய்ப்புண்டு, ஆனால் பூச்சிகளைப் பார்க்காமல் இருக்க முடியாது. பூச்சிகளின் மொத்த எடைதான் பூமியில் உள்ள மொத்த உயிரின எடைகளில் முதலாவது. இத்தனை பெருமைகள் இருந்தாலும் பூச்சிகள்தான் உலகில் உள்ள பெருவாரியான மிருகங்களின் உணவும்கூட. மனிதர்கள் நெல்லையும் கோதுமையையும் பயிரிட்டு பசியைத் தணித்துக்கொள்கிறார்கள். பாவம் மிருகங்கள் என்ன செய்யும்? அவை இயற்கையாகவே பெருகும் பூச்சிகளை சாப்பிட்டு உயிர் வாழ்கின்றன!

பூச்சிகள் தம்மைப் பாதுகாத்துக்கொள்ள ஏற்படுத்திக்கொண்ட உத்திதான் தம்மைப்போலவே உருவ பொம்மையை வலையில் தொங்கவிடும் இரகசியம் என்று தெரியவந்தது. பட்டாம்பூச்சிகளும், அந்திப்பூச்சிகளும் தம் இறக்கைகளில் பெரிய பளபளப்பான கண்கள் போன்ற வடிவங்களை உருவாக்கிக் கொள்வது, ஓணான் போன்ற பிராணிகளை மிரட்டவே. சில குச்சிபோலவும், காய்ந்த இலைபோலவும் தோற்றப்படுத்திக் கொண்டு கண்களுக்குத் தெரியாமல் பிழைத்துக்கொள்கின்றன. இதெல்லாம் தெரிந்த கதைதான். தன்னைப்போலவே சிலை செய்துகொள்ளும் தந்திரம் முற்றிலும் புதியது (நமக்கு). சிலந்தியை வேட்டையாடி சாப்பிடும் குளவிகள் இந்தப் பொய் பொம்மையை என்ன செய்கின்றன என்று பார்த்தபோது, அவை நிஜம் என்று அவற்றை நம்பி தாக்க ஆரம்பிக்கும்போது நிஜ சிலந்தி வாய்ப்பைப் பயன்படுத்தி தப்பித்துக் கொள்கிறதாம்.

படம் 1. சைக்ளாப்ஸ் மல்மெய்னென்சிஸ் என்ற சிலந்தி தன்னை வேட்டையாடும் குளவிகளின் கவனத்தை திசைதிருப்ப தன்னைப்போல, தன் முட்டைப்பொதியைப்போல, தான் பிடித்து சேமித்து வைத்த இரைமுடிச்சைப்போல உருவ பொம்மைகளை செய்து வலையில் மாட்டி வைக்கின்றன.

படம் 2. இடது பக்கமுள்ளது நிஜ சிலந்தி. வலது பக்கம் உள்ளது, அதன் கைவண்ணத்தால் உருவான முழு உருவ பொம்மை.

- முனைவர். க. மணி, பயிரியல்துறை. பி எஸ் ஜி கலை அறிவியல் கல்லூரி. கோயம்புத்தூர்

Pin It

உயிரியல் அடிப்படையில் நாய்களைத் தவிர பிற விலங்குகள்கூட குரைக்கின்றன என்கிறார் கேத்ரைன் லார்ட். இவர் மசாசூசட்ஸ் பல்கலைக்கழக பரிணாம உயிரியல் வல்லுநர். இதற்கான காரணங்களை ஆராய்வதற்கு நாம் 10,000 ஆண்டுகள் பின்னோக்கிப் போகவேண்டியுள்ளது. அண்மையில் இவர் Behavioural Processes என்னும் இதழுக்கு அளித்துள்ள கட்டுரையில் ‘மற்ற விலங்குகளைக் காட்டிலும் நாய் அதிகமாகக் குரைக்கிறது’ என்பது மட்டும்தான் வேறுபாடு என்கிறார். மேலும், நாய் குரைத்தலில் அடங்கிய ஒலிநுட்பக் கூறுகளையும் இந்தக் கட்டுரை விளக்கியுள்ளது.

‘குரைத்தல் என்பது நாய்க்கும் மனிதர்களுக்கும் இடையேயான ஒரு தகவல் பரிமாற்றம் அல்ல: நாயின் மனப்போராட்டத்தின் வெளிப்பாடுதான் குரைத்தல் என்பது’ என்கிறார் இந்த ஆய்வாளர். அதாவது குரைத்தல் என்பது “எனக்கு சிறுநீர் கழிக்க வேண்டும்” “நான் விளையாடப் போக வேண்டும்” என்று கூறுவதைப்போல் அல்ல என்பதுதான் இந்த ஆய்வின் சாரம். குரைத்தல் ஒரு கும்பலின் குரல் வெளிப்பாடு. அதை ஒரு கும்பல் நடத்தையாகக் கருதலாம். ஒரு கும்பல் அதனுடைய நடத்தையை குரல் மூலம் வெளிப்படுத்துகிறது என்பதுடன் குரைப்பதை ஒரு கூட்டுறவின் வெளிப்பாடாகவும் கொள்ளலாம். ஒரு அந்நியன் அத்துமீறி எதிர்ப்படும்போது ‘அங்கேயே நின்று தன்னுடைய குட்டிகளைக் காப்பாற்றுவதா’ அல்லது ‘தப்பித்து ஓடுவதா’ என்ற இரண்டு மனப்போராட்டங்களின் வெளிப்பாடு அது. தன்னுடைய இனத்தவர்கள் தனக்குத்துணையாக சேர்ந்துகொள்ளும்போது குரைத்தல் கும்பல் நடத்தையாகிப்போகிறது. இந்த ஓசை அத்துமீறி வருபவரை திரும்பி ஓட வைக்கிறது.

நாய்கள் மனிதர்களை அண்டிவாழும் பழக்கம் 8,000 முதல் 10,000 ஆண்டுகள் பழமையானது. மனிதர்கள் ஒதுக்கித்தள்ளும் உணவுப்பொருட்களுக்காகவே இவை ஆரம்பகாலத்தில் மனிதனை அண்டி வாழத்தொடங்கின. அக்காலத்தில் எதிரி எதிர்ப்படும் ஒவ்வொரு முறையும் ஒரு மைல்தூரம் தூரம் ஓடி ஒளிந்து கொள்ளும் இயல்புடன் நாய்கள் இருந்திருக்க வேண்டும். காலப்போக்கில் எதிராளியை எதிர்த்து நிற்கும் நாய்களுக்கு வெகுமதியாக மனிதர்களிடமிருந்து உணவு கிடைக்கத் தொடங்கியது. அந்த உணவை மற்ற நாய்களுடன் முந்திக்கொண்டு பெற்றுக்கொள்ளும் முயற்சியில் மனிதர்களை நாய்கள் அண்டி வாழத்தொடங்கின. அச்சத்தினால் ஒதுங்கிய நாய்கள் காலப்போக்கில் அழிந்தொழிந்தன. அச்சம் தவிர்த்த நாய்கள் மனிதர்களை அண்டி, உண்டு வாழ்கின்றன. வேலிக்கு மறுபுறம் நிற்கும் ஒரு மனிதனைப் பார்த்தவுடன், நாயின் மனதில் ஒரு வியப்பும், அச்சமும் ஏற்படுகிறது. மனிதனை நெருங்கவோ, மனிதனைவிட்டு விலகி ஓடவோ முடியாத மனவெழுச்சி தோன்றும்போது அது குரைத்தலாக வெளிப்படுகிறது.

இவரது கட்டுரையில் குரைத்தலை வகைப்படுத்தும் பல்வேறு அளவீட்டுக்கூறுகளை ஆராய்ந்துள்ளார். ஸ்தாயி (tonality) எனப்படும் குரல் தரவரிசை, இரைச்சல்(noise), சுருதி (pitch), ஒலியின் கேட்கும் அளவு (volume), வீச்சு (amplitude) எதிர்பாராஒலி (abrupt onset), ஒலித்துடிப்பின் கால அளவு (pulse duration) ஆகிய ஒலியின் அளவீட்டுக்கூறுகளை இவரது கட்டுரை ஆராய்ந்துள்ளது.

குரைத்தல் என்பது செய்திகளின் பரிமாற்றச்செயல் அல்ல. குறைந்த கால அளவிற்கு உரத்த குரலில் எழுப்பப்படும் ஒலி என்பதுதான் குரைத்தலின் இலக்கணமாகும். இது இரைச்சல், தொனி என்னும் இரண்டு கூறுகளை உள்ளடக்கியது. விலங்குகள் எழுப்பும் பிற ஓசைகளில் இருந்து குரைத்தல் தனித்துவம் வாய்ந்தது. இந்த இலக்கணத்தை விரிவுபடுத்துபோது நாய் இனம் மட்டுமன்றி பறவைகள், பாலூட்டிகள் இனத்தைச் சேர்ந்த குரங்குகள், எலிகள், மான்கள் இவையும் குரைப்பதாக கொள்ளலாம். சிக்கலான மனவெழுச்சிகளில் பிற விலங்குகளும் குரைக்கின்றன என்பதுதான் ஆய்வர்களின் முடிவு. ஆனால் செல்லப்பிராணிகளாக நாய்களை வளர்ப்பவர்கள் இந்தக் கருத்தை ஏற்றுக்கொள்ளாமல் போகலாம். அவர்களுடைய செல்லப்பிராணிகள் உணவு கேட்டு குரைப்பதாக நம்மிடம் சொல்லுவார்கள். நாய்கள் அறிவுத்திறன் மிக்கவை. தூண்டல்-துலங்கல், காரண-காரிய விளைவுகளை அவைகள் நன்றாக கற்றுக் கொள்கின்றன. தன்னை வளர்ப்பவர் சரியான நேரத்திற்கு உணவு கொடுப்பார் என்று தெரிந்து கொண்டால் அவை குரைப்பதில்லை.

தகவல்: மு.குருமூர்த்தி

இன்னும் படிக்க:http://www.sciencedaily.com/releases/2009/07/090714210137.htm

Pin It

பாசிகல்பாசி காட்டுப் பகுதிகளில் பாறைகளில், மரக்கிளைகளில், பனை தென்னை மரங்களின் மீது தேமல் பட்டதுபோல படர்ந்து வளரும் பாசி. பாசி என்று அழைத்தாலும் இது உண்மையில் இரண்டு உயிரினங்கள் இணைந்து நட்பு வாழ்க்கை நடத்தும் "ஓருடம்பு ஈருயிர்கள்' ரகம். கிட்டத்தட்ட 1000 வகை கல்பாசிகள் உலகில் உள்ளன.

ஒரு உயிரி பூஞ்சனம், இன்னொன்று நீலப்பச்சைப்பாசி. பாசியை ஃபோட்டோ பயான்ட் என்பார்கள், பூஞ்சனத்தை மைக்கோபயான்ட் என்பார்கள். பாசி ஒளிச்சேர்க்கை செய்து சக்தி தருகிறது. பூஞ்சனம் வாழ இடத்தை உண்டுபண்ணித் தருகிறது. ஆயிரம் வகை கல்பாசிகள் பல்வேறுவிதமான பூஞ்சனங்களால் உருவாக்கப்பட்டிருந்தாலும், அதில் 4 வகை பாசிகள்தான் திரும்பத்திரும்பக் காணப்படுகின்றன. குறிப்பாக ரைசோனீமா என்ற நீலப்பச்சப் பாசிதான் அதிகம். இதை முதலில் சைட்டோனீமா என்று தவறாக கருதிவந்தார்கள், டி என் ஏ சோதனை மூலம் ரைசோனீமா என்பது முடிவாயிற்று.

பல்வேறு வகையான பூஞ்சானங்கள் ஒரே வகைப் பாசியை துணையாகக் கொண்டு வாழ்வதைப் பார்க்கும்போது, பரிணாமத்தில் பூஞ்சானங்கள் தம்மிடையே பாசிகளை பங்கிட்டுக் கொண்டிருக்கின்றன என்று தெரிகிறது. ஆரம்ப காலத்தில் விவசாயிகள் தமக்குள் விதைகளை பகிர்ந்து கொண்டார்கள். அதுபோல பூஞ்சனங்களும் பாசிகளைப் பகிர்ந்துகொண்டு பல்லுயிர் ஓம்பின என்று தெரிகிறது.

- முனைவர். க. மணி, பயிரியல்துறை. பி எஸ் ஜி கலை அறிவியல் கல்லூரி. கோயம்புத்தூர்

Pin It