தெலுங்கானாவில் தொழில் அதிபரின் மகள் அம்ருதா, பிரனாய் என்ற தலித் இளைஞரை காதலித்து ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டார். அம்ருதாவுக்கு வயது21. பிரணாய்க்கு வயது 24. இவர்களின் குழந்தை அம்ருதாவின் வயிற்றில் வளருகிறது. அம்ருதாவின் தந்தையான தொழில் அதிபர், கூலிப்படையை வைத்து பிரணாயை வெட்டிக் கொலை செய்து விட்டார். இதற்காகக் கூலிப் படைக்கு அவர் கொடுத்த பணம் ஒன்றரை கோடி ரூபாய். இணையர் இருவருமே படித்தவர்கள். பள்ளிப் பருவத்திலிருந்தே காதலித்தவர்கள்.

இளம் காதல் கணவனை இழந்து தவிக்கும் அம்ருதா, “எனது வயிற்றில் வளரும் குழந்தையை ஜாதி எதிர்ப்புப் போராளியாக வளர்ப்பேன். இனி நானும் ஒரு ஜாதி எதிர்ப்புப் போராளி” என்று ஒரு பேட்டியில் கூறியுள்ளார். இதேபோல் ஜாதி வெறிக்கு தனது கணவரை பலி கொடுத்த உடுமலை கவுசல்யா, ஓடோடிச் சென்று அம்ருதாவை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார். அத்துடன் அம்ருதாவுக்கு தனது உணர்வுகளை வெளிப்படுத்தும் கடிதம் ஒன்றையும் எழுதி நேரில் அளித்திருக்கிறார்.

அம்ருதாவுக்கு கவுசல்யா எழுதிய கடிதம் இது:

“இதயத்தில் இருந்த காதலுக்கு நீங்கள் உண்மையாக இருக்க வேண்டும் என்று நினைத்திருந்தால், அதற்கு சமூகம் ஒரு தடையாகவே இருக்கும். அதற்கு ஒரே காரணம்தான், சாதி கட்டமைப்பு உருவாக்கிய வெறுப்பு. நாம் நம் மனதிற்கு பிடித்த ஒரு நபருடன் வாழவேண்டும் என்பதே ஆசை. ஆனால், அந்த உணர்ச்சியை நம் பெற்றோர்களால் ஒருபோதும் புரிந்து கொள்ள முடியாது அம்ருதா. நம் பெற்றோர் நம் மீது அதிக அன்பு வைத்திருக்கலாம். ஆனால், சாதியின் பெருமை மீது அவர்கள் வைத்திருக்கும் அன்பு அதைவிட அதிகம்.

உங்கள் கணவர் பிரனாயை நீங்கள் புரிந்து கொண்டது போல, குடும்பத்தினரால் ஏன் புரிந்து கொள்ள முடியவில்லை என்று யோசித்திருப்பீர்கள். சாதி அவர்கள் கண்களை மறைத்ததில் பெற்ற மகளான உங்களையே அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவர்கள் எப்படி பிரனாயை புரிந்து கொள்ள முடியும். இதில் வியப்பேதும் இல்லை.

பெற்றோர்களால் உங்களுக்கு இப்படி ஒரு காரியத்தை செய்ய முடியும் என்று நீங்கள் நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டீர்கள். அவர்களின் சாதி மேலாதிக்கத்துக்கு முன்னதாக 'காதல்' என்பது ஒன்றுமில்லை. பிரனாய் உங்களை ஒரு தாய்ப்போல் பார்த்துக் கொண்டிருப்பார். அந்த காதல்தான் நீங்கள் போராட உங்களுக்கு சக்தி கொடுக்கப் போகிறது என்று எனக்கு தெரியும்.

பிரனாயின் குழந்தை உங்கள் வயிற்றில் வளர்வதை எதிர்ந்து நிற்பவர்களை நீங்கள் எதிர்த்து நிற்கப் போகிறீர்கள். உங்களுக்கு பிறக்கப் போகும் குழந்தைதான், அவர்களின் சாதிக்கு எதிராக நீங்கள் பயன்படுத்தப்போகும் சவுக்கடி. நீதிக்கான இந்தப் போராட்டத்தின்போது, உங்களை போன்ற எண்ணம் கொண்ட நபர்களை நீங்கள் சந்திப்பீர்கள். சமூக சிந்தனையும் உறுதியும் கொண்ட மக்களை நீங்கள் சந்திக்கும்போது, நீங்கள் நினைத்துப் பாரத்ததைவிட, அர்த்தமுள்ள உறவுகள் உங்களுக்கு கிடைக்கும்.

உங்கள் வலியை தங்கள் வலியாக எடுத்துக்கொள்ளும் மக்கள் இங்கிருக்கிறார்கள். நீங்கள் தனிமையாக உணர வேண்டிய அவசியம் இனி இருக்காது. பிரனாய் உங்களுக்கு ஒரு குழந்தையை விட்டுச்சென்றுள்ளார். ஒரு புதிய சமூக இறக்கத்தை அவர் கொடுத்து சென்றிருக்கிறார். பிரனாய் அருகில் இல்லாமல் நீங்கள் நின்று கொண்டிருக்கிறீர்கள். சில காலங்களுக்கு முன், நானும் உங்கள் இடத்தில்தான் இருந்தேன். என் வாழ்க்கை முழுவதும் இருண்டு போனது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது.

முன்னொரு காலத்தில் நான் பயந்து போயிருந்தேன். என் சங்கர் இல்லாமல் என்னால் ஒருநாள் கூட இருக்க முடிந்ததில்லை. இரண்டரை ஆண்டுகளாக அவர் இல்லாமல் தனியாக வாழ்ந்து வருகிறேன். பிரனாயை கொன்றவர்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுத்து நீதியை நீங்கள் வென்றெடுப்பது மிகவும் முக்கியம்.

நாம் இன்னும் நிறைய போராட வேண்டி இருக்கிறது அம்ருதா. ஆணவக் கொலைகளை தடுக்க தனிச்சட்டம் பெற நாம் வலியுறுத்த வேண்டும். நாம் வாழும் வரை சமூக நீதியின் வீரர்களாக மாறி, சாதி கட்டமைப்பை ஒழிக்க வேண்டும். இதுவே பிரனாய்க்கு நீங்கள் வாங்கித்தரும் நீதி. சாதியை ஒழிக்க தமிழகத்தில் பலரும் போராடிக் கொண்டிருக்கிறோம். எங்கள் ஒவ்வொருக்கும் நீங்கள் குழந்தைதான். இக்கடிதம் மூலம் நான் ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். சாதி எதிர்ப்புக்கு போராடும் சக்தியாக நாங்கள் உங்களுடன் இருக்கிறோம். ஆணவக் கொலைகளுக்கு எதிராக சட்டம் கொண்டு வருவது முதல் அனைத்திலும் தனிப்பட்ட முறையில் உங்களுக்கு நான் என்றென்றும் துணை நிற்பேன் என்று கூறி விடைபெறுகிறேன்” - கவுசல்யா.

Pin It