Friendshipஒரு காத்திருப்பின்
இடைவேளையில்
நட்பில் கரைந்த
ஞாபகங்கள்!!
தனக்கு வேண்டியதை
`தா`என்று கேட்கவும்
கேட்காமலே
எடுத்துக் கொள்ளவுமான
உரிமைப் பத்திரம்!
மௌனத்தின் பாஷை
இத்தனை
தெளிவாய் இருக்குமா
உயிரில் கேட்கிறதே!!
ஒவியம் வரைகையில்
தூரிகையின்
பெருமூச்சு
புரியும் நிதானம்
புலன்களில்...
வண்ணங்களை
வாரியிறைத்து
எனக்கு மட்டுமாய்
இயற்கை
சந்தோஷிக்கிறது!
ஒரு சந்தோஷத்தின்
வேதனையை
ஒரு வேதனையின்
சந்தோஷத்தை
இதயம் உணர்கிறது!
தாய்மடி மேல்
தலை வைத்தழும்
சுதந்திரம் போல்...
உள்ளார்ந்த தோழமையில்
உயிர் சிலிர்க்கிறது!
உன்னை நானும்....
என்னை நீயுமாய்
பகிரும் பொழுதுகளில்
பசியில்லை.....
தாகமில்லை......
மனவெளியில்
மகிழ்ச்சி
ஆயிரம் மழைத் துளிகளாய்
வர்ஷிகின்றது!!!
காதலின் சுகம்
போலவே
நட்பின் இதமும்
ஒரு புதிராய்
அதிரும் மனதின்
தலை தடவுகிறது!!!
ஒரு
நட்பின் புன்னகைக்கு
உதடுகள்
தேவையில்லை
இதயம் போதுமே!!!


சமீலா யூசுப் அலி, மாவனல்லை, இலங்கை. இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Pin It