கீற்றில் தேட...

இலந்தைப் பழம்
உதிர்ந்துக் கிடப்பதைப்போல
மழைக்கால ஈரவெயில்
புளியமரத்திடையே நுழைந்து
துளித்துளியாய்
உதிர்ந்து கிடக்கிறது.
ஒன்றின்மேல் ஒன்று மேலேறி
அட்டைப் பூச்சிகள்
ஆலிங்கன ஊர்வலம் போகிறது.
ஈசல்கள் உதிர்த்த இறகுகளாய்
தரையெங்கும் கொட்டிக் கிடக்கிறது
குளிரிருள் மோகங்கள்.
இலைகளிலிருந்து சொட்டும் பெருமழையாய்
இன்னும் மிச்சமிருக்கிறது
உன்னுடன் கரம் கோர்த்து
நடந்த கார்கால நாட்கள்.

- சதீஷ் குமரன்