ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு கொடுக்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை சங்கிகள் ஒழித்துக் கட்டியதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்திருக்கின்றது.

காஷ்மீருக்கு தன்னாட்சி அதிகாரத்தை வழங்கிய ஆர்டிகிள் 370 (பெயரளவிற்கு மட்டுமே) மற்றும் 35 ஏ-வை மோடி தலைமையிலான பாசிச பாஜக அரசு 2019 ஆண்டு ஆக்ஸ்ட் 5 ஆம் தேதி தனக்கிருந்த அசுர பலத்தை பயன்படுத்தி நீக்கியது.

நீக்கியதோடு மட்டுமல்லாமல் ஜம்மு-காஷ்மீரில் இருந்து லடாக் பகுதியை சட்டமன்றமற்ற யூனியன் பிரதேசமாகவும், மற்ற பகுதிகளை இணைத்து சட்டமன்றமுள்ள யூனியன் பிரதேசமாகவும் அறிவித்தது. இதை எதிர்த்து ஏறக்குறைய 23 மனுக்கள் உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

தற்போது இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றத்தின் அரசியலமைப்பு பெஞ்சின் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், பி.ஆர்.கவாய், சூர்ய காந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு, சட்டப்பிரிவு 370(3) பிரிவின் கீழ் 370ஐ நீக்க குடியரசுத் தலைவருக்கு உரிமை உண்டு எனவும் ஜம்மு காஷ்மீர் அரசியல் நிர்ணய சபையின் பரிந்துரைகள் குடியரசுத் தலைவரைக் கட்டுப்படுத்தாது என்றும் இந்திய அரசியலமைப்பின் அனைத்து விதிகளும் ஜம்மு காஷ்மீருக்குப் பொருந்தும் என்றும் தீர்ப்பளித்துள்ளது.kashmir muslims 650மாநிலத்தில் போர் போன்ற சூழல் நிலவுவதால் சட்டப்பிரிவு 370 தற்காலிக ஏற்பாடு என்றும், ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பது அரசியலமைப்பின் 1 மற்றும் 370வது பிரிவுகளில் இருந்து தெளிவாகிறது என்றும் கூறியுள்ளது.

தீர்ப்பை வழங்கிய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், ஜம்மு காஷ்மீரில் செப்டம்பர் 2024க்குள் தேர்தலை நடத்தவும் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டிருக்கின்றார்.

அதுமட்டுமல்ல இந்தியாவுடன் இணைந்த பிறகு, ஜம்மு-காஷ்மீருக்கு தனி இறையாண்மை உரிமை இல்லை என்று தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கூறியிருக்கின்றார்.

இதன் மூலம் சங்கிகளின் அடாவடித்தனத்திற்கு சட்ட அங்கீகாரத்தை உச்சநீதி மன்றம் அளித்துள்ளது. அதுவும் மக்களவைத் தேர்தலுக்கு மூன்று மாதங்களே உள்ள சூழ்நிலையில் இப்படியான தீர்ப்பைக் கொடுத்ததன் மூலம் பிஜேபியின் மதவாத அஜண்டாவுக்கு நேரடியாகவே உச்சநீதி மன்றம் சேவை செய்திருக்கின்றது.

காஷ்மீருக்கு வழங்கப்படும் சிறப்பு அதிகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை ‘ஜம்மு பிரதான் பரிஷத்’ போன்ற இந்துத்துவ அமைப்புகள் 1949 இல் இருந்து வைத்து வந்தன. இதனையொட்டித்தான் இந்திய அரசியல் நிர்ணய சபை, அரசியலைப்பு சட்டத்தை வடிவமைத்தபோது ஆர்டிகிள் 370 இல் காஷ்மீர் இந்தியாவில் இருக்கும் வரை அந்த மாநிலத்திற்கு தனி அந்தஸ்து இருக்கும் என்று உறுதி செய்யப்பட்டது. ஆனால் இந்தியாவுடன் இருப்பதா, இல்லை தனியாக இருப்பதா என்பதை நிர்ணயித்துக் கொள்ளும் சுயநிர்ணய உரிமை மறுக்கப்பட்டு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை வடிவமைத்தர்கள், துரோகம் செய்தார்கள். (காங்கிரஸ், நேரு கும்பலின் துரோகம் தனியாக விவாதிக்கப்பட வேண்டியது)

ஆர்டிகிள் 370-ன்படி இந்திய நாடாளுமன்றம் ஜம்மு காஷ்மீர் மீது பாதுகாப்பு, வெளிநாட்டு விவகாரங்கள், தகவல் தொடர்பு ஆகிய மூன்று அம்சங்களில் மட்டுமே அதிகாரத்தைப் பெற்றிருக்கும் எனவும், ஏதாவது ஒரு விவகாரம் இந்த மூன்றின் கீழ் வருகிறதா? இல்லையா? என்கிற சந்தேகம் எழுந்தால் இந்திய ஜனாதிபதி ஜம்மு காஷ்மீர் மாநில அரசாங்கத்தைக் கலந்து முடிவெடிப்பார் என்றும் கூறப்பட்டது.

அது மட்டுமின்றி, இதர இந்திய மாநிலங்கள் தொடர்பாக மத்திய அரசாங்கத்திற்கு எந்தெந்த அதிகாரங்கள் இருக்குமோ, அந்த அதிகாரங்கள் அனைத்தும் ஜம்மு காஷ்மீர் அரசாங்கம் சம்மதித்தால் அந்த மாநில விசயத்திலும், இந்திய அரசாங்கத்திற்கு ஒப்படைக்கும் அதிகாரம் இந்திய ஜனாதிபதிக்கு இருக்கும் என்று ஆர்டிகிள் 370 கூறுகிறது.

இதன்படி பார்த்தால் இதர மாநிலங்கள் விஷயத்தில் மத்திய அரசாங்க அதிகார எல்லைகளுக்கு உட்பட்ட ஏதாவது ஓர் அம்சம், ஜம்மு காஷ்மீர் விஷயத்தில் மத்திய அரசுக்கு இருக்கிற மூன்று அதிகார எல்லைகளுக்குள் வருகிறதா? இல்லையா? என்கிற விவாதம் தலைதூக்கினால், அதனைத் தீர்த்து வைப்பதற்கு மத்திய அரசாங்கம் மற்றும் அந்த மாநில அரசாங்கம் சம அந்தஸ்தில் அமர்ந்து முடிவு செய்ய வேண்டும் என்பதற்குப் பதிலாக மாநில அரசாங்கத்தைக் கலந்தாலோசித்து மத்திய அரசே நிர்ணயிக்கும் என்று கூறப்பட்டுள்ளது, மத்திய அரசுக்கு முன்னுரிமை வழங்குவதாகிறது. அத்துடன் நிற்காமல் ஜம்மு காஷ்மீர் மாநில அரசாங்கம் சம்மதித்தால் இணைப்பு உடன்படிக்கையில் இல்லாத அம்சங்கள் மீதும் மத்திய அரசாங்கத்திற்கே அதிகாரத்தை ஒப்படைக்கலாம் என்றும் ஆர்டிகிள் 370 கூறுகிறது.

பிற்காலத்தில் மாநில அரசாங்கத்திலிருந்து அந்தச் சம்மதம் தடையின்றி கிடைக்கும் வகையில் இந்திய அரசாங்கம் பார்த்துக் கொண்டது. கண்டிப்பாக மத்திய அரசாங்கத்துடன் ஒத்துழைப்பவர்கள் மட்டுமே ஜம்மு காஷ்மீரில் அதிகாரத்திற்கு வரும் வகையில் பல மோசடியான செயல்களை அங்கு இந்திய ஆளும் வர்க்கம் செய்து வந்தது. இன்று வரையிலும் இந்திய ஆளும் வர்க்கத்திற்கு ஜால்ரா போடும் நபர்கள் மட்டுமே அங்கு நிரந்தரமாக ஆட்சி புரிய அனுமதிக்கப்பட்டு வருகின்றார்கள் என்பதை நாம் பார்க்கின்றோம். இன்று பிஜேபியால் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்ட பலர் இந்திய ஆளும் வர்க்கத்தின் அடிவருடிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனெவே ஆர்டிகிள் 370ல் பல மாற்றங்களை இந்திய ஆளும் வர்க்கம் செய்து அதன் சாரத்தை சிதைத்துள்ளது. 1964ல் மாநில அரசின் ஒப்புதலுடன் வரிசையாக சட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

பக்ஷி குலாம் முகமத் பிரதமராக இருக்கும்போதே இது துவங்கி விட்டது. சாதிக் தலைமையில் இது முழுமையடைந்தது. இவற்றின் விளைவாக அதுவரை காஷ்மீர் மாநில அதிபரை ஜனாதிபதி என்று அழைப்பது நிறுத்தப்பட்டு கவர்னர் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது . மேலும் கவர்னரை ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்வு செய்யாது என்றும், இந்திய ஜனாதிபதியே நியமிப்பார் என்றும் மாற்றப்பட்டது. அதே போல அந்த மாநிலப் பிரதமரையும் முதலமைச்சர் என்றே அழைக்க வேண்டும் என மாற்றப்பட்டது. மாநில அரசுகளைக் கலைத்து மத்திய ஆட்சியைத் திணிக்கும் ஆர்டிகிள் 356 ஜம்மு காஷ்மீருக்கும் இனிமேல் பொருந்தும் என்றும், ஜம்மு காஷ்மீரிலிருந்து நாடாளுமன்றத்திற்கு வரும் உறுப்பினர்கள் அதுவரை இருந்தது போல் மாநில சட்டசபை உறுப்பினர்களால் அல்லாமல் நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்றும் மாற்றப்பட்டது. இது நாட்டின் மற்ற மாநிலங்களில் இருக்கும் அரசியலமைப்பு முறையே ஆகும்.

இதன் மூலம் ஆர்டிகிள் 370 என்பது பெயரளவுக்குக் கூட எந்த சிறப்புரிமையையும் காஷ்மீருக்கு வழங்கவில்லை என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும்.

இதுவரை ஏறக்குறைய 70000 மேற்பட்ட காஷ்மீர் மக்களை இந்திய ராணுவம் கொன்று போட்டிருக்கின்றது. 10000 மேற்பட்ட மக்கள் காணாமல் போய் உள்ளார்கள். இது இல்லாமல் நூற்றுக்கணக்கான பெண்களை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியும் ஆயிரக்கணக்கான மக்களை முடமாக்கியும் இந்திய ராணுவம் அங்கே தனக்கு வழங்கப்பட்ட ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தைப் பயன்படுத்தி நடத்தியிருக்கின்றது.

எண்ணிக்கையில் 400 பேர் கூட இல்லாத தீவிரவாதிகளைப் பிடிக்க ஏறக்குறைய 7 லட்சத்து 50 ஆயிரம் துருப்புகளை அதாவது 7 பேருக்கு ஒரு ராணுவ வீரரை அங்கே இந்திய அரசு நிறுத்தி வைத்திருக்கின்றது என்றால் அதன் உண்மையான நோக்கத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அந்த மக்களை நிரந்தமான மரண பீதியிலேயே வைத்திருந்து உளவியல் நெருக்கடியை ஏற்படுத்தி பணிய வைப்பதுதான் இந்திய அரசின் ஒரே நோக்கம்.

எனவே இல்லாத ஒரு சிறப்புரிமையை எப்படி பறிக்க முடியும்? அந்த மக்களுக்கு குறைந்தபட்ச ஆறுதல் என்றால், அது 35 ஏ சட்டப்பிரிவு மட்டுமே. இதன் மூலம் காஷ்மீரிகள் தங்கள் மண்ணையாவது அந்நியர்களிடம் இருந்து இதுவரை காத்து வந்தார்கள். தற்போது உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பால் அதற்கும் குழி பறிக்கப்பட்டிருக்கின்றது. இனி காஷ்மீரின் மண் உள்நாட்டு, பன்னாட்டு நிறுவனங்களின் வேட்டைக்காக திறந்து விடப்படும்.

பிஜேபியின் திட்டம் இதுதான். லடாக்கை தனியாகப் பிரித்ததன் மூலம் லடாக் முஸ்லிம்களை காஷ்மீர் முஸ்லிம்களிடம் இருந்து தனியே பிரித்து காஷ்மீர் விடுதலைக்காகப் போராடும் காஷ்மீரிகளின் பலத்தைக் குறைத்ததன் மூலம் ஜம்முவில் பெரும்பான்மையாக உள்ள இந்துக்களும், காஷ்மீரில் பெரும்பான்மையாக உள்ள முஸ்லிம்களும் ஒன்றாக வைக்கப்படுவார்கள். இதனால் மிக எளிதாக பாஜக காஷ்மீரில் வெற்றி பெற முடியும்.

முஸ்லிம்கள் எங்கெல்லாம் பெரும்பான்மையாக வாழ்கின்றார்களோ அங்கெல்லாம் அவர்களுக்கு அச்சுறுத்தலைக் கொடுத்து அவர்களை இரண்டாம்தர குடிமக்களாக நினைக்க வைக்க வேண்டும் என்பதுதான் சங்கிகளின் டிஎன்ஏவில் ஊறி ப்போய் கிடக்கும் மதவெறி.

காஷ்மீர் எப்போதுமே பார்ப்பனக் கூட்டத்திற்கு கடும் எரிச்சலை கொடுத்துக் கொண்டே இருந்தது.

எப்படியாவது காஷ்மீர் முஸ்லிம்களின் உரிமைகளை எல்லாம் பறித்து அவர்களை இந்திய ஆளும்வர்க்கத்தின் மேலாதிக்கத்தின் கீழ் கொண்டு வந்துவிட வேண்டும் என்று பல சதி வேலைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தது. தற்போது அதை சட்டப்படியே சாதித்தும் காட்டி இருக்கின்றது.

உச்சநீதி மன்றத்தின் இந்தத் தீர்ப்பானது இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒழித்து, தேசிய இன உரிமைகளை ஒழித்து ஒன்றுபட்ட பார்ப்பன மேலாதிக்க நாட்டை கட்டமைக்கும் அதன் பாசிச திட்டத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்கி இருக்கின்றது.

ஆனால் இவற்றுக்கு எதிராக மக்களை ஒன்றுதிரட்டிப் போராட இந்தியாவில் எந்த ஒரு அரசியல் கட்சியும் இல்லை என்பதுதான் முற்போக்கு ஜனநாயக சக்திகளின் இன்றைய கையறுநிலை.

- செ.கார்கி

Pin It