உலக வரலாற்றில் கடந்த சில நூற்றாண்டுகளில் அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சி வியக்கத்தக்க மாற்றங்களையும் விளைவுகளையும் நிகழ்த்தியுள்ளன என்பது மறுக்க முடியாத உண்மை. இயற்கையோடு இணைந்து வாழ்ந்த மனிதகுலம் அதற்கு மாறாக இயற்கையை இடைவிடாமல் சிதைத்து மாற்றி அமைத்துக்கொண்டே இருக்கிறது. அதன் விளைவுகளை உலகளாவிய அளவில் வெளிப்படையாகக் கண்டு வருகிறோம்: வாழ்க்கையில் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.
காற்று, நீர், நெருப்பு, ஆகாயம், மண் என்ற பஞ்ச பூதங்களின் எல்லையற்ற ஆற்றல்களை உயிர் வாழ்க்கைக்கு எதிராக மாற்றி மனிதன் நுகர்வுக்கலாச்சார வாழ்க்கையில் திளைத்து வருகிறான். உயிரினங்களில் மனிதன் மட்டுமே இந்தச் செயலைச் செய்து வருகிறான். உயிர் வாழ்க்கைக்குரிய சுற்றுப்புறச் சூழலை சிதைத்து அழித்துவரும் மனிதனின் விழிப்புணர்வைத் தூண்டும் வகையில் இயன்ற அளவுக்கு எல்லாத் தளங்களிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதற்கு அடையாளமாக கலை, இலக்கியத்துறையில் புதிய மாற்றங்களுடைய மாறுபட்ட முயற்சிகள் அங்கங்கே தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன. அதன் வெளிப்பாடாக ’சாயத்திரை’ என்ற நாவல் தமிழில் வெளியாகியுள்ளது. இது, ஆங்கிலம், இந்தி, வங்காள மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. சிறந்த நாவலுக்கான தமிழக அரசு விருது பெற்றுள்ளது. தமிழகத்திற்குப் பலவகைகளிலும் பெருமை சேர்த்துவரும் திருப்பூர் நகரத்தை மையமாகக் கொண்டு கடந்த மற்றும் நிகழ்கால வாழ்வியலைப் பதிவு செய்துள்ளது இந்த நாவல்.
இதன் முன்னுரையில், இதன் தனித்தன்மையைத் தெளிவாகக் குறிப்பிடுகிறார் பிரேமா நந்தகுமார்: விளம்பரயுகத்தில் வண்ணங்கள் காட்டும் மாயையில் இன்று நாம் சிக்கியிருக்கிறோம். இந்த வானவில்லின் பின்னால் அனைத்தும் சோகம். இயற்கையைப் பார்த்து அதைப் போல் தானும் வர்ணங்களைச் சிருஷ்டிக்கும் மனிதன், புலியைப பார்த்து பூனை சூட்டிக் கொண்டது போல் அவதியுறுவதை சுப்ரபாரதிமணியன் மறக்க முடியா அல்ல, மறக்கக்கூடாத புதினமாக வடித்திருக்கிறார்.
கடந்த எழுபது ஆண்டுகளுக்கு முன்னால் பொருள் உற்பத்தியில் இது ஒரு நிலவுடைமைச் சமுதாயமாக இருந்து வந்தது. பருவ மழையை நம்பி மட்டுமே உழவுத் தொழிலை நம்பி வாழ்ந்த எளிமையான ஏழ்மையான சமுதாயமாக இருந்து வந்த திருப்பூர் கைத்தறி நெசவுத் தொழிலை அடுத்ததாகக் கொண்டிருந்தது. அதன் விளைவாக அறியாமை, ஏழ்மை, வறுமை போன்ற பின்தங்கிய சூழல்களில் மக்கள் வாழ்ந்து வந்தார்கள்.
அதைத் தொடர்ந்து பனியன் தொழில் திருப்பூரிலும், அதன் சுற்றுப் புறங்களிலும் படிப்படியாக வளரத் தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக வளர்ந்த அந்தத் தொழில் இன்று பின்னலாடை உற்பத்தி என்ற நவீனத் தொழிலாக வளர்ந்து ஆண்டுக்கு நூறு கோடி ரூபாய் அந்நியச் செலாவணியை ஈட்டித்தரும் ஒரு தொழில் நகரமாக வளர்ந்து உலகளாவிய அளவில் அறியப்பட்டுள்ளது.
இந்த மாற்றமும் வளர்ச்சியும் நிலவுடைமை சமுதாயம் முதலாளித்துவ சமுதாயமாக வளர்ந்துள்ள வரலாற்றை அடையாளப் படுத்துகிறது. அழகும், அமைதியும், தூய்மையும், எளிமையும் நிறைந்த, குறைந்த மக்கள் தொகையுள்ள நிலப்பரப்பு மக்கள் தொகை நிறைந்த மிகப்பெரிய தொழில் நகரமாக உருமாறிப் புதிய பிரச்சினைகளைத் தோற்றுவித்து ஏராளமான நெருக்கடிகளுக்கு அடிப்படையாக அமைந்துவிட்டது. குறிப்பாக, இங்கே நீர் ஆதாரம் மிகப்பெரிய அளவுக்குச் சிதைந்துவிட்டது.
ஒரு காலத்தில், மேற்குத் தொடர்ச்சிமலையில் தோன்றி திருப்பூர் நகர் வழியாகப் பாய்ந்து பின் கொடுமணல் பகுதியில் பவானியுடன் கலக்கும் நொய்யல் நதி இன்று மிகப்பெரிய சாக்கடையாக உருமாறிப்போய்விட்டது. கடந்த காலத்தில் அதன் அழகையும், தூய்மையையும், பயன்பாட்டையும் பற்றிய நிகழ்ச்சிகளை அங்கங்கே நாவல் முழுவதும் பரவலாகக் காட்சிப்படுத்துகிறார்.
“கண்ணிற்கு எட்டிய தூரம் வரைக்கும் கறுப்பாய் சாக்கடை மினுங்கிக் கொண்டிருந்தது. இன்னும் கொஞ்சம் பார்வையை அவன் எட்டிப் போட்ட போது சாயப்பட்டறைக் கழிவுகள் பல்வேறு வர்ணங்களுடன் வந்து கலந்து நின்றிருந்தன. ரோசா கூசினபடி மெதுவாக நடந்தான். வறண்ட கழிவுகளும், முட்களின் சிதிலங்களும் வழியை நிறைத்திருந்தது. டில்லி முட்களின் ஆக்கிரமிப்பிலிருந்து ஒற்றையடிப்பாதை குறுகலாய் சென்று நொய்யலில் மறைந்தது. ஆறு கறுத்த நிறத்துடன் கழிவுகளாய் நிரம்பியிருந்தது”
கல்லறைகளுக்குத் தேவைப்படும் இடம் குறித்து அவர் குறிப்பிடுகிறார். “ஆமாம். சவக்குழிகள் கல்லறைத் தோட்டத்திற்கு ரொம்பதூரம் போக வேண்டும். அவர்கள் குடியிருக்கும் இடத்திற்குப் பக்கத்தில் எங்காவது இடம் கிடைத்தால் அங்கேயே சவங்களைப் புதைத்து விடுகிறார்கள். அப்புறம் இதுபோன்ற கீழ் ஜாதிகளை அனுமதிப்பதில்லை. அவமானப்பட வேண்டியிருக்கிறது. இடம் கிடைக்கின்ற இடம் கல்லறை தான்’’
வாழ்க்கையில் பல வகையான மாறுபட்ட மனிதர்களின் அனுபவங்களையும், நெருக்கடிகள் நிறைந்த வாழ்க்கை முறைகளையும் எதார்த்தம் சிறிதும் பிசகாமல் அழகாகவே சித்தரித்திருக்கிறார்.
நாவலில் வரும் பக்தவத்சலம், ஜோதிமணி நாகன், செல்லம்மணி, பெரியண்ணன் போன்ற எளிய கீழ்த்தட்டு மனிதர்களின் வாழ்வியலை அடையாளப்படுத்தும் வகையில் உழைக்கும் மக்களின் வாழ்நிலைமைகளை மனமுருகக் காட்டுகிறார்.
இது கிறித்து பிரேமா நந்தகுமார் கூர்மையாக மதிப்பீடு செய்துள்ளார். தனது முன்னுரையில் நிகழ்ச்சிகள் ஒரே, சீராக முன்னேறாமல் விட்டு விட்டுத் தரப்பட்டாலும் சாயத்திரை’ எங்குமே சோகம் தான். அங்கிங்கெனாதபடி திருப்பூர் சாயப்பட்டறைத் தொழிலாளர்கள் அனைவர் மேலும் வண்ணமோ, பஞ்சுத்துகளோ படிந்திருப்பது போல் துயரமும் இவர்கள் சோகத்தினை மூலதனமாகக் கொண்டுள்ள முதலாளிகளை ஆசிரியர் நமக்குக் காட்டவில்லை.”
சாயத்திரை நாவலை அறிமுகம் செய்த நாவலாசிரியர் இன்னொரு கோணத்தில் தன்னுடைய மதிப்பீடுகளை முன்வைப்பது மேலும் பெருமை சேர்க்கிறது.
திருப்பூர் என்றதும் நினைவுக்கு வருவது நொய்யல் என்னும் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஜீவநதியும் அதன் கரையில் உருவாகி, வெற்றிலைக்கும், தாழம்பூவுக்கும், விதவிதமான கீரை, காய்கறிகளுக்கும் பெயர் பெற்று விளங்கிய சின்னஞ்சிறிய திருப்பூர் நகரமும், விடுதலைப் போர்க் கொடி கீழே விழாமல் தன் இன்னுயிர் தாங்கிய திருப்பூர் குமரனும் நினைவுக்கு வருவார். மக்களைக் காந்தமாய்க் கவரும் விதவிதமான பின்னலாடைகள் நினைவுக்கு வரும், புதிதாய் முளைத்தெழும் வண்ண வண்ண கட்டடங்களும் நினைவுக்கு வரும்.’’
சாயத்திரை’ நாவலின் உள்ளடக்கம் மற்றும் உருவம் குறித்துத் தனது மதிப்பீடுகளை வைத்து அறிமுகம் செய்யும் பொன்னீலன் இதன் தனித்தன்மையையும் புதுமைப்பண்பையும் குறிப்பிட்டுச் சொல்லுகிறார்.
மையமில்லாத, அழுத்தமில்லாத, கதாநாயகன் இல்லாத விளிம்பு மனிதரைப் பற்றிப் பேசுகின்ற இதைப் பின்நவீனத்துவ நாவல் என்று வகைப்படுத்தலாம். ஆனால், ஐம்புலன்களிலும் உணரத்தக்க நுட்பத்துடனும், ஒவ்வொன்றையும் நேர்த்தியாகச் சொல்லுகின்றார் ஆசிரியர். மொழி பெயர்ப்புத்தனமோ, அன்னியத்தனமோ, இல்லாத அசல் கலை இது. நவீனத்துவத்தையும், எதார்த்தத்தையும் குழைத்துப் பிசைந்து இழையாக்கி அதில் பின்னப்பட்டிருக்கிறது. ஒவ்வொன்றிலும் இருண்மையோ, மயக்கமோ, ஓலமோ எதுவும் இல்லை’’
இது, இவரது துல்லியமான நேர்மையான அறிமுகம். நாவலைக் கூர்ந்து படிக்கத்தூண்டுகிறது. தண்ணீருக்காக கண்ணீர் சிந்தாத குறையாகத் தவிக்கும் பெண்களின் நிலைமையை மனதை நெருடும் வகையில் நாவலாசிரியர் காட்சிப்படுத்துகிறார்.
மேட்டிலிருந்து கீழறங்கியவுடன் கனத்த வாகன இரைச்சல்களுடன் வீதி ஆரம்பமானது. வீதியின் ஓரத்திலிருந்து கிளம்பிய பைக்குகள். பனைமரங்களை கீழே வீழ்த்தி கறுப்பு வர்ணமிட்டது போல் இருந்தன. வலது மூலையில் ஒரு சிறுகூட்டம் கூடியிருந்தது. ரோசா அந்தக் கூட்டத்தின் அருகாமையில் சென்றாள். குழாயின் ஒரு நுனியிலிருந்து நீர் கொட்டிக் கொண்டிருந்தது. கொட்டும் நீரைப் பிடிப்பதற்கென்று குடங்கள் இருந்தன. கலைந்த முகத்துடன் இருந்த பெண்கள் ரோசாவைப் பார்த்தார்கள். இவர்கள் என்ன செய்கிறார்கள்?’’
குடி நீர்க்குழாயில் சிறு கசிவு. அந்தத் தண்ணீரைப் பிடிக்கிறார்கள்.’’
குடி நீருக்கு இவ்வளவு சிரமமா? டாலரும் பவுண்டுகளும் தண்ணீராய் ஓடும் நகரத்தில்?
அவள் குழாயையும், தண்ணீர் பிடிக்கும் பெண்களையும் படம் பிடித்தாள். சொட்டுத் தண்ணீரைப் பார்த்துக் கொண்டிருந்தாள். கசிவு சட்டென வேகம் எடுக்க ஆரம்பித்ததும் பரபரப்பு ஏற்பட்ட மாதிரி பெண்கள் நெருக்கியடித்தனர்.
தொடர்ந்து பஞ்சுப் பொதிகளாலும், அவற்றைச் சலவை செய்து வெளுக்கச் செய்வதையும், சுற்றுப்புறச் சூழல் மாசுபடுவதையும் நாவலாசிரியர் காட்சிப்படுத்துகிறார்.
தெருமுனையில் நின்ற போது கம்பெனி கட்டடத்தை மறைத்துக் கொண்டு ஒரு லாரி நின்றிருப்பது தெரிந்தது. லாரியிலிருந்து நூல் மூட்டைகள் இறக்கப்பட்டுக் கொண்டிருந்தன. இயந்திரத் தன்மையுடன் அவை கைமாறிக் கொண்டிருந்தன. எங்காவது ஒரு புள்ளி பிசக வேண்டும் என ஆசைப்பட்டான். லாரியை நெருங்க நெருங்க நூலின் வாசம் மெல்ல மெல்லக் கிளம்பியது, சலவை செய்யப்பட்ட துணிகள் கிளர்த்திய சாயங்களின் வாசம் லாரியை நிறைத்திருந்தது.’’
மாற்றங்களுக்கிடையிலும் தொடர்ந்து நிகழ்ந்து வரும் கலை, கலாச்சாரப் பண்பாட்டு நிகழ்ச்சிகள் மக்களிடையே நிலைபெற்று வருவதையும், சாமி காட்டுதல் போன்ற நாட்டுப்புற நடைமுறைகளையும் இந்த நாவலில் அவர் காட்சிப்படுத்துகிறார். கும்மியடித்தல், கூத்தாடுதல், ஆடல், பாடல் போன்ற நிகழ்வுகள் மக்களிடையே தொடர்ந்து நிலைபெற்று நிற்பதையும் காட்சிப்படுத்துகிறார்.
மீன்களைப் பற்றிய விவரங்களையும் கதாபாத்திரங்கள் உரையாடல் மூலம் உணர்த்துகிறார்.
“ஏதோ ஐஸ் மீனுன்னு வரும். ஆனா இந்தத் தள்ளுவண்டியில் பொரிச்சு விக்கிற மீன்களெ நம்பக்கூடாது, சகாயமா இருக்குன்னு பாத்தா சாய்ப்பட்டறை தண்ணி நிக்கிற எடத்திலிருந்து மீனுப் புடிச்சிட்டு வந்தாலும் வருவாங்க.”
இளம் வயதினர் காகிதத்தில் செய்த கத்திக்கப்பலை சாயத்தண்ணியில் விட்டு ஓட்டம் பர்க்கும் சோதனையைப் பதிவு செய்துள்ளார் நாவலாசிரியர்.
அடுத்து செளண்டியம்மன் கோயில் சப்பரம் பற்றிய சண்டைசச்சரவு மக்களிடையே நிலவுவதைக் காட்சிப்படுத்தி இயற்கையின் அழிவை அறிமுகப்படுத்துகிறார்.
சுற்றுப்புறங்களிலும், பொது இடங்களிலும் சாயம் பூசப்பட்ட காகிதங்கள், துணிகள், பிளாஸ்டிக் பொருட்கள் போன்றவை குவியும் நிகழ்ச்சிகளையும் நாவலில் பதிவு செய்கின்றார்.
வண்ணங்கள் நிறைந்த போஸ்டர்கள்’ காம்பவுண்டுகள் சாயத்திரை நாவலில் துயரங்களின் பங்கேற்பு கணக்கில் அடங்காதது. இயற்கையில் காணப்படும் தாவரங்களின் நிறங்களைக் குறிப்பாக மலர்களில் காணப்படுபவை குறித்து மக்களுக்கு இயல்பான ஈடுபாடு இருப்பது அந்த நிறங்களை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தும் நோக்கத்தில் நீர்நீலைகளை மாசுபடுத்துவதும், வணிக முயற்சிகளுக்கு உள்ளாக்குவதும் உயிர் வாழ்க்கைக்கு எதிரான செயல்கள்.
நீரின்றி அமையாது உலகம் என்பது தமிழ்ச் சான்றோர் வாக்கு. ஆகவே, காடுகளையும், நதிக்கரைகளையும் சிதைக்கும் வகையில் அறிவியல் தொழில் நுட்பக் கண்டுபிடிப்புக்கு உள்ளாக்குவதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என்ற எண்ணத்தை இந்த நாவல் தோற்றுவிக்கிறது.
சாயத்திரை நாவலாசிரியரின் பொதுப்பார்வை குறித்து பொன்னீலன் அழுத்தமான தெளிவான கருத்தைத் தெரிவிக்கிறார்.
வண்ணச் சாயத்திரை போர்த்திய திருப்பூர் நகரத்தின் உண்மையைக் காட்டுகிறார் சுப்ரபாரதிமணியன். நிஜமும் மாயமுமாக, வாழ்வும் சாவுமாக, அழுக்கும் அழுக்கனுமாக எல்லாவற்றையும் பக்கத்துக்குப் பக்கம் அடுக்கி சாயத்திரையைக் கிழித்து சோகத்தினைக் காட்டுகிறார்.
இது உண்மையிலேயே மறுக்க முடியாத புதினம்.
- சி.ஆர்.ரவீந்திரன்