ஒரு சமுதாயம் தன் வலிமைகளைப் புரிந்து கொள்ளாத போது, ஒரு பார்வையாளனைப் போல் அது நகர்ந்து போய்விடும். தனது வேர்களை அறிந்து மரபுகளை உணர்ந்த சமூகத்தால் மாத்திரமே உலக ஒருமைப்பாடும், மானுடம் முழுவதையும் நேசித்து நல்லிணக்கத்தோடும், நட்புணர்வோடும் வாழ இயலும். அவ்வகையில் அரேபியத்தில் தோன்றிய இஸ்லாம், அகிலம் முழுவதும் பரவியதைப் போல, பாரதத்திலும் குறிப்பாகத் தமிழகத்திலும் கிளை பரப்பியது. யவனர், சோனகர் என்று முற்காலத்திலேயே குறிப்பிடப்பட்ட மக்கள், பின் துருக்கர் எனவும் ராவுத்தர் எனவும் குறிப்பிடப்பட்டனர். இஸ்லாமியம் தமிழுக்குப் பல தொண்டுகளைச் செய்தது. இதுவரை ஏறத்தாழ 1200 இஸ்லாமியச் செய்யுள் இலக்கியங்கள் பற்றிய விவரங்கள் கிடைத்துள்ளன.1 இவ்விலக்கியங்களில் தமிழ் மரபும் இஸ்லாமிய மரபும் ஆரத்தழுவி அகமிக மகிழ்கின்றன. இங்கே முத்தமிழால் முருகனைப் பாடிய முஸ்லீம் பாவலர்கள் பற்றிக் காண்போம்.இலக்கியம் காட்டும் இராவுத்த முருகன்
திருப்பெருந்துறைப் புராணம், கோட்டமிலா மாணிக்கவாசகர் முன் குதிரை ராவுத்தனாக இறைவன் வந்து நின்றதாகக் குறிப்பிடுகிறது. அந்தத் திருப்பெருந்துறையில் உள்ள ஆலயத்தின் முகப்பு மண்டபம் குதிரை வீரர் சிற்பங்களுடன் அமைக்கப்பட்டு இருப்பதுடன், ராவுத்தர் மண்டபம் என்றே வழங்கப்படுகிறது. கந்தர் அலங்காரத்தில் அருணிகிரிநாதர் தாம் வழிபடும் முருகனை,
"சூர் கொன்ற ராவுத்தனே!
மாமயிலேறும் ராவுத்தனே!
எனக் குதிரை ராவுத்தனாகவே கற்பனை செய்து பாடியுள்ளார்.
பழனி காதர் முகையதீன் மஸ்தான், என்.
பழனி மாநகரில் செந்தமிழ் வித்வான் என்று அழைக்கப்பட்ட காதர் முகையதீன் மஸ்தான் பலதனிப்பாடல்களையும், சீட்டுக் கவிகளையும் எழுதியுள்ளார். இவர் 1925ஆம் ஆண்டு தஞ்சாவூர் சிவாஜி மகாராஜாவிடம் தங்க மெடல்களும், தக்க சன்மானங்களும் பெற்றவர். இவருடைய இரண்டு மகன்களில் ஒருவரான என்.எஸ்.ஏ.சலாம், மலைக் கோவில் படிகள் வழியில் புத்தகக் கடை வைத்திருந்தார். அவரும் பழனித் தல மகிமையை நூலாக வெளியிட்டுள்ளார். புலவர் காதர் முகையதீன் மஸ்தான் முருகன் மீது மிகுந்த ஈடுபாடு உள்ளவர்". இவர் முருகனைப் பற்றிப் பல நூல்கள் பாடியுள்ளார். பழனி ஸ்தல யாத்திரை வாசிகளுக்காகப் பழனி ஆண்டவர் ஸ்தல வரலாறு” எனும் நூல் இவரால் எழுதப்பட்டது. இந்நூலில் தினந்தோறும் பழநிமலைக்கு இஸ்லாமானவர்கள் ஊதுபத்தி, சர்க்கரை, பழம், சந்தனம் முதலியவைகளைக் கொண்டுவந்து ஆண்டவருக்குப் பின்புறம் நீராடிப் பத்திகிரியில் வைத்து, ஊதுவத்தி கொளுத்தி சந்தனம் தெளித்து பழனி பாவாவென்று சொல்லி பாத்திஹா செய்து வருகிறார்கள். இவ்வூரில் எக்காலத்திலும் முகம்மதியர்களுக்கும் இந்துக்களுக்கும் மிகவும் ஒற்றுமை என்பதைப் பக்த கோடிகளுக்கு இதனால் தெரியப்படுத்துகிறோம்" என நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார்.
108 பாடல்கள் அடங்கிய பழனி ஆண்டவர் மாலை என்ற நூலைப் பாடியுள்ளார். பழனி பால தண்டாயுதபாணி அழைப்பு மாலை என்பதும் இவர் பாடிய நூலேயாகும். இச்சிறு நூலில் முருகனை,
"பாலன் வருந்துகிறேன் ஓலமிட்டழுகிறேன்
பதறியே வேலெடுத்து
பளபளவெனவே மயிலேறி வள்ளி
தெய்வானையுடன் வருவாய்
பால தண்டாயுதபாணி போற்றி"
என உருகிப் பாடுகிறார்.
பாரமலை யாண்டவனே பழனிவேலா
கால் கொண்ட தூரமெல்லாம் சுற்றி வந்தேன்
கதிர்வேலா என்று மனம் கருத்திலெண்ணி
வேல் கொண்ட மயிலேறி நடனமாடி
விளையாடி ஓடி வந்து முருகாயென்னை
ஆட் கொண்டால் உனக்கு வெகு பாரமுண்டா"2
எனப் பழனிவேலன் பேரில் மாலை எனும் பகுதியில் இறைஞ்சுகிறார்.
பக்தர்களுக்கு முக்தி கொடுக்கும் பழநியாண்டவர் மாலை எனும் நூலைப் புலவர்
15 பக்கங்களில் பாடி, 1928ஆம் ஆண்டு சென்னை கிருஷ்ண விலாசம் பிரஸில் அச்சிடப்பட்டது.3
"அய்யா நின் சன்னதியில் அறுத்த சேவல்கூவும்
அடிசிலிடு மீன் துள்ளிடும்"
என்பது புலவர் நூலின் சிலவரிகளாகும்.
ஸ்ரீ பழனியாண்டவர் கிரி அலங்காரத் தோத்திரம் எனும் சிறு நூல் புலவரால் பாடப்பட்டது. இது 1929இல் அச்சிடப்பட்டது.4
பழனியாண்டவர் சன்னதி அக்னி வழிநடை அபிசேகக் காரணச் சரித்திரம் என்ற நூலைப் பழநிக்குப் பயணம் செய்யும் பக்தர்களுக்கு வழிநடையாகப் பாடும்படி எழுதப்பட்டது. இந்நூல் 1924இல் பழனி வாணி பிரசில் அச்சானது.
1924இல் எழுதிய இன்னொரு நூல் பழநியாண்டவர் சன்னதி மருத்துவத் தரிசனச் சரித்திரம் என்பதாகும். பழநிக்கு ஒருவன் தன் மனைவியுடன் பயணம் சென்று அங்கே கண்ட காட்சிகளை விவரிக்கும் விதமாக நூலமைந்துள்ளது. சன்னதி செல்வோம் மைடியர் லேடி என்பது போன்ற ஆங்கிலச் சொற்களும், கொச்சை மொழிகளும் இந்நூலில் கலந்து வருகின்றன. 1925ஆம் ஆண்டு புலவர் பாடியது பழனியாண்டவர் தோத்திரக் கீர்த்தனை எனும் நூலாக வெளிவந்துள்ளது. முருகன் மேல் பற்றுக் கொண்ட புலவர் 06.09.1954 இல் மறைவுற்றார்.
பழனி என்.கே.எம்.ஷெரீப்
காதர் முகையதீன் மஸ்தானின் புதல்வர்களில் ஒருவரான என்.கே.எம்.ஷெரீப், தந்தையின் விருப்பப்படி முருகனின் பெருமைகளைக் கூறும் விதமாகப் பழனி வேலாயுத ஸ்தல மஹாத்மியம் என்ற நூலைச் செய்தார். 1946இல் 29 பக்கங்கள் கொண்ட இந்நூலை வித்வான் ஒய்.நாராயண ஐயர் மலையாளத்தில் மொழிமாற்றம் செய்தார்.5 இந்த நூல் அன்றைக்கு எட்டணாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் தபாலில் 9 அணா செலுத்திப் பெற்றனர்.
தாராபுரம் காதர் முகையதீன் ராவுத்தர், என்.,
தாராபுரத்தைச் சேர்ந்த புலவர் காதர் முகையதீன் ராவுத்தர் பல நூல்களைப் பாடியுள்ளார். 1910 ஆம் ஆண்டு தாராபுரத்தில் பிளேக் நோய் பரவிய போது பிளேக்குச் சரித்திரம் (சாமுண்டீஸ்வரி பிரஸ், தாராபுரம்) என்ற நூலைப் பாடியுள்ளார். பழனி மலை ஆண்டவரைத் தரிசிக்கப் போகும் பக்தர்கள், வழியில் களைப்புத் தெரியாதிருக்கும்படிப் பாடியபடி செல்ல பழநி ஆண்டவர் வழிநடைச் சிந்து எனும் நூலை மூன்று பாகங்களாகப் பாடியுள்ளார். நவம்பர் 1909இல் தாராபுரம் சாமுண்டீஸ்வரி பிரஸில் இந்நூல் அச்சிடப்பட்டது. இந்நூலின் சிறப்பு, பழநிக்குக் காதலியுடன் செல்லும் காதலன் அங்குள்ள காட்சிகளைக் காட்டி மகிழ்வதைப் பாடியுள்ளதாகும்.
கணியூர் அப்துல் சுகூர் சாஹிப்
கணியூரைச் சார்ந்த புலவர் அப்துல் சுகூர் சாஹிப் பண்டிதர் அவர்களைக் கொங்கு நாட்டுப் புலவர் தலைமணி என்று கி.ஆ.பெ.விசுவநாதம் பாடியுள்ளார். இவர் கணியூர் சன்மார்க்க சங்கம் தமிழ்ச் சங்கம் ஆகியவற்றில் தலைமைப் பொறுப்பு வகித்தவர். 1930ஆம் வருடம் பழைய கோட்டைப் பட்டக்காரர் மீது நான்மணிமாலை என்ற நூலைப் பாடினார். புலவரின் சிறப்பான நூலாகச் சுட்டப் பெறுவது தண்டமிழ் மாண்பு என்பதாகும். திண்டுக்கல் விஜயரெங்கம் பிரஸில் 1929இல் அச்சானது. தமிழும், வடமொழியும் என்பது பற்றிய வாதங்கள் எழுந்த போது திருவுளச் சீட்டெழுதி சிறுமியொருத்தி எடுத்துத் தர, தமிழே உயர்ந்ததென்று வந்ததைப் புலவர் மிக விரிவாகக் கூறும்போது,
"செந்தமிழால் உயர்வென்று முன்னொரு
சீட்டெனக்குத் தந்தனன் கந்தன்"5
என்று குறிப்பிடுகிறார். கந்தன் வந்து தமிழின் உயர்வைக் குறிப்பதாகப் புலவர் சான்று காட்டுகிறார்.
ஈரோடு அலாவுதீன் சாகிப், ஏ.கே.
ஈரோடு நகரைச் சார்ந்த புலவர்களாகிய அலாவுதீன் சாகிப் மற்றும் ஏ.ஹெச். அமீர்பாட்சா சாகிப் இருவரும் நண்பர்கள். இவர்கள் இல்லற இன்பத்தை இராகத்துடன் பாடியது மாதர்களின் வினோத கீர்த்தனங்கள் என்பதாகும். 1925இல் இந்நூல் அச்சானது. அதே ஆண்டில் அலாவுதீன் சாகிப் மட்டும் பழனி முருகன் மீது பக்தி கொண்டு உருகிப் பாடிய பக்திரசக் கீர்த்தனங்கள் என்ற நூல் ஈரோடு டயமண்ட் பிரஸில் ஆகஸ்ட் 1925இல் அச்சானது.
பொள்ளாச்சி சையத் முகமது. ஏ.
பொள்ளாச்சியைச் சார்ந்த புலவர் சையத் முகமது பழனியாண்டவர் மீது காதல் கொண்டவர். பக்தியில் கலந்து பழனியாண்டவர் கீர்த்தனை எனும் நூலைப் பாடினார். அந்நூலைப் பொள்ளாச்சியைச் சேர்ந்த வி.மாரியப்ப செட்டியார், பொள்ளாச்சி கிருஷ்ணா பிரிண்டிங் ஒர்க்ஸில் அக்டோபர் 1923இல் பதிப்பித்தார்.
கோவை காஸிம் சாகிப். எம்.
கோவையைச் சார்ந்த புலவர் காஸிம் சாகிப் கந்தன் மீது பக்தி கொண்டவர். இவர் கோவையை அடுத்த காளிபட்டியில் அமைந்திருக்கும் கந்தசாமி கோவிலுக்குப் பிரயாணம் செய்யும் பக்தர்கள் பாடும் படி பாடல்கள் பாடினார். அது காளிபட்டி கந்தசாமி கோவில் பேரில் வழிநடைச் சிந்து என்ற நூல் வடிவில் கோவை காளிபட்டி எம்.முத்துக்காளி முதலியாரால் பதிப்பிக்கப் பெற்றது. பவானி கோல்டன் பிரஸில் பிப்ரவரி 1925இல் அச்சானது.
பவானி மஹமத் அயினுதீன் சாயபு
பவானி, தாராபுரம் பகுதிகளில் வசித்து வந்த புலவர் மஹமத் அயினுதீன் சாயபு ஏராளமான பாடல்களைப் பாடி அவை நூல்களாக வெளிவந்துள்ளன.
வள்ளிக்கும் முருகனுக்கும் நடந்த காதல் உரையாடலாகப் புலவர் பாடியது. சுப்பிரமணியருக்கும் வள்ளியம்மைக்கும் நடக்கும் சிங்காரத் தர்க்கம் என்பதாகும். மூன்று பதிப்புகள் கண்ட இந்த நூல் பவானி கோல்டன் பிரஸில் 1924இல் வெளியானது.
வெள்ளக்கோவில் வீரக்குமாரசாமி மீது பாடிய பக்திப்பாடல்களும், ஓர் ஆணும் பெண்ணும் கோவில் திருவிழாவிற்குப் புறப்பட ஆயத்தம் செய்து கொண்டு பேசிக் கொள்வதைப் பற்றிய பாடல்களும் அடங்கிய வீரக்குமாரசாமி மீது சாராம்ஸ ஆண் பெண் தர்க்க சம்பாஷணை எனும் நூல் 1924இல் வெளியானது. இது கரூர் விவேகபானு அச்சுக் கூடத்தில் அச்சிடப்பட்டதாகும்.
இக்கட்டுரையில் கொங்கு நாட்டில் வாழ்ந்த இஸ்லாமியப் புலவர்கள் முருகனைப் போற்றியது மட்டுமே இடம் பெற்றுள்ளது. இன்னும் பல கொங்கு நாட்டு இஸ்லாமியப் புலவர்கள் முருகனை மட்டுமின்றி, கணபதி, பெருமாள், கருப்பணசாமி, அம்மன்கள் ஆகிய தெய்வங்களையும் போற்றிப்பாடி எழுதியுள்ளனர். பல இந்துப் புலவர்கள் எழுதிய பக்தி நூல்களை இஸ்லாமியர் பதிப்பித்துள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும். மதங்களைக் கடந்து மலரும் என்பது மானுடத்திற்கு மகிழ்வானதாகும்.
சான்றாதாரங்கள்
1. சி.எம்.ஏ. அப்துல் காதிர், கொங்கு நாட்டு முஸ்லிம்கள் பக்க எண்:38
2. என்.காதர் முகையதீன் மஸ்தான், பழனி பாலதண்டாயுதபாணி அழைப்பு மாலை, பக்க எண்:2,8
3. ரோஜா முத்தையா நூலகம் : எண் 008953
4. ரோஜா முத்தையா நூலகம் : எண் 002794
5. அப்துல் சுகூர் சாகிபு, தண்டமிழ் மாண்பு (நன்றி : தமிழ் நூல் விவர அட்டவணைத் தொகுதிகள்)
சில குறிப்புகள்:
திருவாவடுதுறை ஆதீனம் வெளியிட்ட முருகன் என்ற நூலில் பழனி மலையில் கருவறையின்பின் முஸ்லிம்களும் வந்து வணங்குகிறார்கள் என்ற செய்தி உள்ளது.
திருத்தணி முருகன் கோவில் நான்காம் பிரகாரத்தின் கிழக்குப் பகுதியில் நவாப் வாத்திய மண்டபம் உள்ளது. இங்கு இஸ்லாமிய வாத்தியக்காரர்கள் வாத்தியம் வாசிப்பது வழக்கம். இந்த மண்டபத்தை காதர் என்ற இஸ்லாமியர் கட்டியதாகச் சொல்லப்படுகிறது.
கதிர்காம முருகன் கோவிலில் இஸ்லாமியர், பவுத்தர் வணங்குவதும் வழக்கம்.
- முனைவா் கு. மகுடீஸ்வரன், வருகைதரு புலமையாளர், தமிழ்த்துறை, காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகம், திண்டுக்கல்.