மகாகவி பாரதியின் புதுச்சேரி வாழ்வில் உடனிருந்து உதவியவர்களது பட்டியலும் பங்களிப்பும் இன்னும் முற்றாகக் கண்டறிந்து விரிவாகத் தொகுக்க வேண்டியுள்ளது என்பதைத் தொடர்ந்த தேடலில் அறிந்து கொள்ள முடிகிறது.

மகாகவி பாரதியின் வருகையால், நெல்லையில் இருந்தும், அரவிந்தர் வருகையால் வங்காளத்திலிருந்தும் தொண்டர் குழாம் புதுவைக்கு வந்து பணி செய்த காலத்தில், அவர்களுடன் இணைந்து களம் இறங்கிய புதுவையன்பர்கள் பலர். அவர்களுள் ஒருவர் வில்லியனூர் தந்த விடுதலை வீரர் அ.முத்துக்குமாரசாமிப்பிள்ளை.

muthukumarasamiவில்லியனூர் வீரர்

இவர், புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் கொம்யூனில் (வட்டத்தில்) உள்ள, மணக்குப்பம் என்ற சிற்றூரில் சோம.அண்ணாமலை பிள்ளை - எல்லம்மாள் தம்பதியருக்கு 15.06.1880 அன்று பிறந்தவர். புதுவைக் கல்வே கல்லூரியில், 1906இல் தமிழ் பிரவே (Brevet de langue Indigene) தேர்வெழுதி முடித்து, 1907, செப்டம்பர் மாதம் 19 முதல் பள்ளி ஆசிரியராகப் பணி தொடங்கியவர்.

வில்லியனூரில் பணிபுரிந்தபோது, கா.நமச்சிவாய முதலியார் எழுதிய மூன்றாம் வகுப்பிற்கான தமிழ்ப்பாட நூலில், ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் வரலாற்றைப் பாடமாக நடத்துவதைத் தவிர்த்தார். அதனால், அரசின் நடவடிக்கைக்கும் ஆளானார். விசாரணையின்போது, “நாம் இருப்பது, பிரெஞ்சுக் குடியரசில். ஜார்ஜ் மன்னர் நமது ஆட்சிக்கு மன்னர் இல்லை” என்று துணிந்து பதில் அளித்தார். அதனைக் கல்வித்துறை இயக்குநர் ஏற்றுக் கொண்டார் என்பது வரலாறு.1

முத்துக்குமாரசாமிப்பிள்ளை ஆசிரியப் பணி ஏற்ற மறு ஆண்டில், புதுவையைப் புகலிடமாகக் கொண்டு வாழ்கிற நிலையில் பாரதி வருகிறார். வ.வே.சு.ஐயர், அரவிந்தர் உள்ளிட்ட சுதேசிகளின் வரவால் புதுச்சேரி, இந்திய விடுதலைப் போராட்டத்தின் தலைமைக் கேந்திரமாகி விடுகிறது.

“மகாகவி பாரதி, புதுவைக்கு வருமுன்பே, தமிழகத்தில் அன்று வாழ்ந்த தேசியவாதிகளால் திரு.முத்துக்குமாரசாமிப் பிள்ளையைப் பற்றிய தகவல்களை நன்கு தெரிந்துகொண்டிருக்கிறார். பாரதியும் பிள்ளையும் ஒருவருக்கொருவர் பரிச்சயமாகிக் கொள்வதற்கும், இணக்கமான நட்பை வளர்த்துப் பிடிப்பான நல்லுறவை ஏற்படுத்திக் கொள்வதற்கும் ஆதாரமாக அந்தத் தகவல்கள் அமைந்துள்ளன”2 என்று கவி.வெ.நாரா. குறிப்பிடுகிறார். எனினும், இவர் தொடர்பான தகவல்களை பாரதி எங்கேனும் பதிவிட்டிருக்கிறாரா என்பதை இனித்தான் தேட வேண்டும். ஆனால் புதுவையில், பாரதியாருக்கு உதவிய அன்பர்களில் இன்றியமையாத இடத்தைப் பிடித்தவர் இவர் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

இவருக்கும் பாரதிக்கும் இடையிலான நட்பிற்கு உறவுப் பாலமாகத் திகழ்ந்தவர் எஸ். நாகசாமி. இவர் பாரதியார் புதுவைக்கு வந்து ‘இந்தியா’ இதழை நடத்தத் தொடங்கியபோது, அவருக்கு உதவியாக வந்தவர். புதுவை ஈசுவரன் தருமராஜா வீதியில் உள்ள விளக்கெண்ணெய்ச் செட்டியார் என்று பாரதியன்பர்களால் குறிக்கப்பெறும் சபாபதிச் செட்டியார் இல்லத்தை வாடகைக்கு எடுத்துத் தங்கிய பாரதியுடன் வாழ்ந்தவர். பின்னர், அதே வீதியில், இருந்த 89 ஆம் வீடான ‘தர்மாலயத்தில்’ குடியேறியவர்.

‘தருமம்’ என்ற பெயரில், தேசிய தமிழ் மாதம் இருமுறை இதழை வெளியிடத் தொடங்கிய இடம் இதுவானதால், இந்த வீட்டிற்கு, ‘தர்மாலயம்’ என்ற பெயர் அமைந்துவிட்டது. நாட்டுப்பற்றையும், விடுதலை இயக்கத்தையும் வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டு வெளிவந்த இவ்விதழுக்கு விலை இல்லை. புதுவையில் உள்ள அன்பர்கள் மனமுவந்தளித்த தொகையின் உதவியால் அச்சிடப்பட்டு, உள்ளூர், வெளியூர் அன்பர்களுக்கு அனுப்பப் பெறும். வெளியூர் அன்பர்கள் தரும் அன்பு நிதியும் இதற்கு உதவியாய் அமையும்.

இந்த இல்லத்தில், உடற்பயிற்சி வகுப்புகளும் நடக்கும். அதிகாலையில் இளைஞர்கள் இங்கு வந்து பயிற்சி செய்வதும் புதிதாய்க் கற்றுக்கொள்வதும் நடைமுறை. வெளி நகரங்களில் இருக்கும் இளைஞர்களை வரவழைத்து, அவர்களுக்கு நாட்டுப்பற்றை போதித்து, அதற்குரிய நூல்களைப் படிக்கச் செய்து, இந்திய விடுதலைக்குப் பாடுபட வேண்டும் என்று உணர்த்துகிற பணியையும் தர்மாலயம் செய்துவந்தது.

அப்படி வந்து இங்கே தங்கியிருந்து, துப்பாக்கி சுடும் பயிற்சி எடுத்துக் கொண்டு போனவர்தான் வாஞ்சிநாதன். “1911ஆம் ஆண்டு மே மாதம் இறுதியில் ஒருநாள் இரவு சுமார் 11 மணிக்கு நானும் கண்ணுப் பிள்ளையும் வாஞ்சியை அழைத்துக் கொண்டு, பிஸ்டல், துண்டுப் பிரசுரங்களுடன் தர்மாலயத்திலிருந்து கால்நடையாய்ப் புறப்பட்டு முதலில் வில்லியனூர் போய் அங்கிருந்து பாகூர் வழியாக ஆற்றைக் கடந்து திருப்பாதிரிப்புலியூர் சென்று ரயிலில் ஏற்றி அனுப்பினோம்”3 என்று நாகசாமியால் குறிப்பிடப் பெறும் கண்ணுப்பிள்ளைதான், நமது அ.முத்துக்குமாரசாமிப்பிள்ளை. (அது இவரது மறுபெயர்.)

தமது மைத்துனர் திரு. தங்கப்பிள்ளைக்குச் சொந்தமான அரியாங்குப்பம் தென்னந்தோப்பு, கருவடிக்குப்பம் சித்தானந்தசுவாமி கோயில் தோட்டம் ஆகிய பகுதிகளில் வாஞ்சிநாதனுக்குத் துப்பாக்கி சுடும் பயிற்சி அளித்த பிள்ளை, இறுதியாக, அவனிடம் ஐந்து முறை சுடும் சேந்த் எத்தியேன் (Saint Etienne) மார்க் உள்ள பிரஞ்சு ரிவால்வாரைக் கொடுத்து, “தம்பி, ஆஷ் செத்தான் என்று அறிந்த பின்பே நீ தப்புவதற்கு முயல வேண்டும். முடியாமல் போனால், உனது வாயில் ரிவால்வாரை வைத்து நீயே சுட்டுக்கொள்” என்று உபதேசம் செய்து, தனது இடக்கையில் கீறி வழிந்த குருதியை அவன் நெற்றியில் வீரத் திலகமாய் இட்டு வழியனுப்பினார்.4

அவ்வண்ணமே, ஆஷ் என்னும் கொடுங்கோலனைச் சுட்டுக் கொன்றுவிட்டுத் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு வீரமரணம் எய்தினான் வாஞ்சிநாதன். இந்தச் செய்திகளைப் பலரறியத் தந்த பாரதி ஆய்வாளர் ரா.அ.பத்மநாபன், “ஆஷ் துரையை 1911இல் கொன்று தன்னையும் மாய்த்துக்கொண்ட வாஞ்சிநாதனை, நீலகண்ட பிரம்மச்சாரியின் அணியிலிருந்து கவர்ந்து, ஆஷ் கொலைக்கு வித்திட்டார் வ.வே.சு.ஐயர். வாஞ்சிக்குப் பலவித போதனைகளும், பயிற்சிகளும், கைத்துப்பாக்கிப் பயிற்சியும் முடிவில் பிரெஞ்சுக் கைத்துப்பாக்கியும் தந்து ரத்த திலகமிட்டு அனுப்பியவர்கள் நாகசாமியும், கண்ணுப்பிள்ளையுமே” என்று ‘சித்திரபாரதி’யில் பதிவிடுகிறார்.5 அதில், ‘வாஞ்சிநாதனும் அவனுக்குப் பயிற்சி அளித்தவரும்’ என்ற தலைப்பின்கீழ், கண்ணுப்பிள்ளை உடனாய வாஞ்சிநாதன் படத்தையும் தந்திருக்கிறார். அதுவரையில் வெளிவராத அப்படத்தை, நினைவுகூர்ந்து எடுத்துத் தர வைத்தவர், கண்ணுப்பிள்ளையின் துணைவியார் கண்ணம்மாள். இவர்கள் திருமணம் நடைபெறத் தூண்டுதலாய் இருந்தவர் அரவிந்தர்.

ஆஷ் கொலை அரங்கேற்றம் தொடர்பான தகவல்களை அரவிந்தரோ, பாரதியோ முன்னர் அறிந்திருக்கவில்லை. ஆனாலும், அதன்பின்னர் புதுவையில் அவர்களுக்கு நேர்ந்த நெருக்கடிகள் அளவில்லாதவை. தொடர்ந்து, வாஞ்சிநாதன்போல வன்முறையில் பிள்ளை இறங்கிவிடுமுன் காக்க, அரவிந்தர் மேற்கொண்ட அன்பு முயற்சியால், 23.08.1912இல் திருமணம் நடந்தது. மூன்று மகன்கள், ஒரு மகள் என நால்வரைப் பெற்றனர் பிள்ளை தம்பதியர். எந்த நிலையிலும் தன் விடுதலை உணர்வை விட்டவராக, பிள்ளை இல்லை.

இந்திய எல்லைக்குள் ‘இந்தியா’வைக் கொண்டு செலுத்தியவர்

பாரதியின் ஆக்கங்கள் தாங்கி புதுவையில் அச்சிடப்பெற்ற ‘இந்தியா’ இதழ்களுக்கு, ஆங்கில அரசு தடைவிதித்திருந்த காலத்தில், பிரெஞ்சிந்திய எல்லை கடந்து பிரிட்டிஷ் இந்தியாவுக்குள் அவற்றைக் கொண்டு சேர்த்த புண்ணியர், முத்துக்குமாரசாமி. அவர் ‘இந்தியா’ இதழ்களைக் கட்டாகக் கட்டித் தன் தலையிலே சுமந்து, நடையாக நடந்து தமிழகத்தின் எல்லைகளில் யாரிடம் சேர்க்க வேண்டுமோ, அக்காரியத்தைத் திறம்படச் செய்துவந்தார். 1910 மார்ச் வரையில் ‘இந்தியா’ ஏடு 17 மாதங்கள் வெளியாகியது. பாரத சுதந்திரப் போரின் கேடயமாக விளங்கிய அந்த ஏட்டின் ஆசிரியர் பாரதிக்கும், அதற்கும் அவர் துணையாக நின்று தனது முழு ஆதரவை நல்கிவந்தார்” என்கிறார் கவி வெ.நாரா.6 அது அவ்வளவு எளிதான பணியில்லை என்பதை உறுதிப்படுத்துகிறது நாகசாமியின் இன்னொரு பதிவு.

“புதுவையில் அந்நாளில் இருந்த தமிழ்நாட்டுத் தேசபக்தர்கள் பாரதியார், வ.வே.சு.ஐயர், எஸ். ஸ்ரீநிவாசாச்சாரியார், நான் ஆகிய நால்வரே. எங்களுக்கு பிரிட்டிஷ் சர்க்கார் இழைத்த தொந்தரவுகள் இவ்வளவுதான் என்று சொல்ல இயலாது. தபால் காரியாலயம் மூலம் எங்களுக்கு எதுவும் கிடைக்கவிட்டதில்லை. அப்படியே தவறி ஏதாவது வந்தாலும் அதைப் பறிமுதல் செய்துவந்தார்கள். புதுவை வாசிகளிடம் தேசபக்தர்கள் பேசினால் உடனே, அவர்களிடம் சி.ஐ.டி. சென்று அவர்களைப் பயமுறுத்திப் பேசாமல் செய்துவந்தார்கள். அப்படியும் அவர்கள் மீறிப் பேசினால் பிரிட்டிஷ் எல்லைக்குள் சென்றபொழுது அவர்களைக் கைது செய்து இம்சித்து வந்தார்கள்…. தேசபக்தர்கள் தனியே அல்லது சேர்ந்து வெளியே சென்றால் சி.ஐ.டி. சிறிது தூரத்தில் பின்தொடர்ந்து சென்றார்கள். அவர்கள் எங்கெல்லாம் போனார்கள். யார் யாரைக் கண்டு அவர்கள் பேசினார்கள் என்று சி.ஐ.டி. கவனித்து வந்தார்கள்.”7

அப்படி ஒரு ஒற்றனால் கவனிக்கப்பட்டவர் இந்த முத்துக்குமாரசாமி பிள்ளை.

ஒற்றனை உதைத்துப் பெற்ற டயரி

16.07.1914இல் முதலியார் பேட்டையில் பணியாற்றிவந்த முத்துக்குமாரசாமி பிள்ளை, முத்திரப்பாளையம் அரசினர் பாடசாலைக்கு மாற்றப்பட்ட காலத்தில், உழவர் கரை கிராமத்தில் குடியேறி இருந்தார். அப்போதும் அவரை வழக்கம்போல், ஆங்கிலேய அரசின் ஒற்றன் பின் தொடர்ந்து கண்காணித்து வந்தான். அத்துடன், “கடன்காரன், வாங்கினால் கொடுக்க மாட்டான். மோசடிகள் பல புரிந்தவன்” என்று பிள்ளை பற்றிப் பல்வேறு அவதூறுகளும் பரப்பி வந்தான். இந்தச் செய்திகளைக் கேள்விப்பட்ட பிள்ளை அவனுக்குச் சரியான பாடம் கற்பிக்கத் திட்டமிட்டார்.

ஒருநாள் மாலை. இருள் படியத் தொடங்கும் நேரம். மேட்டுப்பாளையம் ஐயனார் கோயில் பாலத்தருகே முத்துக்குமாரசாமி பிள்ளை சென்று கொண்டிருக்கும்போது, அந்த ஒற்றன் வசமாகச் சிக்கிக் கொண்டான். தனித்து வந்த அவனைப் பிடித்து மடக்கி, தன் காலில் போட்டு நடக்கும் கட்டையைக் கொண்டு அடித்து உதைக்கத் தொடங்கினார். வலி பொறுக்க முடியாமல் அந்த ஒற்றன், நழுவி ஓட்டம் எடுத்தபோது, அவன் வைத்திருந்த டைரி கீழே விழுந்துவிட்டது. அதனை எடுத்து வசப்படுத்திக் கொண்ட பிள்ளை, பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டார். அதில், பாரதியார், அரவிந்தர், பிஜாய் குமார் நாயக், நொளினிகாந்த் குப்தா, வ.வே.சு.ஐயர், திருமலாச்சாரி, மாடசாமி, நாகசாமி உள்ளிட்ட தேசபக்தர்களின் பெயர்கள், முகவரிகள், வாழ்க்கைக் குறிப்புகள் ஆகியன ஏ.பி.சி. என வகுப்புகள் பிரித்துப் பதிவிடப்பட்டிருந்தன. அப்பட்டியலில், பிள்ளையின் பெயரும் அவரது மைத்துனர் தங்கவேலுப்பிள்ளையின் பெயரும் பிற புதுவைசார் தேசியப் பற்றாளர்களின் பெயர்களும் குறிப்பிடப்பட்டிருந்தன.

ஒருவேளை பிள்ளையின் கைக்குச் சிக்காமல் போயிருந்தால், அந்தக் குறிப்புகளால் சுதேசிகளுக்கு என்னென்ன கேடுகள் தொடர்ந்திருக்குமோ, தெரியாது. அதனைக் கைப்பற்றிய பிள்ளையைத் தொடர்ந்து அவர்தம் குடும்பத்தாரும் அதனைப் பாதுகாத்து வெளியிட்டதனால், அந்தக் குறிப்புகள் அழியாத வரலாற்றில் அடித்தளப் பதிவுகளாகி, விடுதலைப் போராட்ட வீரர்களில் ஒருவராக முத்துக்குமாரசாமிப்பிள்ளையை நிலைநிறுத்தியிருக்கின்றன.

“பாரதி, ஐயர் தொடர்பால் தாமும் பிரிட்டிஷ் போலீஸ் சி.ஐ.டி.யின் வேவுப் பார்வைக்கு இலக்கான கண்ணுப்பிள்ளை, 1914இல், தம்மைப்பற்றிப் பொய்ப்புரளிகளைப் பரப்பிய ஒரு வேவுக்காரனுக்குத் தக்க பாடம் கற்பிக்க, அவனை நையப்புடைத்து அவனுடைய பையிலிருந்த, ரகசியக் குறிப்புகள் கொண்ட ‘டயரி’யைப் பிடுங்கிக் கொண்டார். இந்த ‘டயரி’ போலீஸ் வேவுக்காரர்கள், பாரதி, ஸ்ரீநிவாஸாச்சாரி, ஐயர், அரவிந்தர், கண்ணுப்பிள்ளை முதலியவர்களைப் பற்றி என்ன நினைத்தார்கள் என்று நமக்குத் தெரிவிக்கும் அரிய வரலாற்றுப் பொக்கிஷமாக உளது”8 என்று குறிப்பிடும் பாரதி ஆய்வாளர் ரா.அ.பத்மநாபன், தனது ‘சித்திரபாரதி’ நூலில், வி.வி.சுப்பிரமணிய ஐயர், நாகசாமி ஐயர், கண்ணுப்பிள்ளை ஆகியோர் பற்றிய குறிப்புப் பக்கங்களைப் படமாக்கி இணைத்துள்ளார்.9 அதில், பாரதி, அரவிந்தர் உள்ளிட்டோர் குறித்த பதிவுப்பக்கப் படங்கள் இடம்பெறவில்லை. ஆயினும், பிள்ளை அவர்களின் குடும்பத்தாரால் பாதுகாக்கப்பட்டுவரும் அந்த ‘டயரி’யில் இடம்பெறும் பக்கங்கள் பிளாக் செய்யப்பட்டு, அவர்தம் புதல்வர் முத்து.சுந்தரமூர்த்தி அவர்களது, ‘வில்லியனூர் விடுதலை வீரர்’ நூலில் வெளியிடப்பெற்றுள்ளன. அக்கால வழக்கப்படி கூட்டெழுத்திலும், பேச்சு வழக்கிலும் தவறுகள் மலிந்த அக்குறிப்புகளில் சில எழுத்துகள் புரிபடவில்லை. Group, Class என்று வகைபிரித்து அவற்றின் கீழ், பெயர்கள் எழுதப்பட்டிருக்கின்றன. அவை பின்வருமாறு:

ஒற்றர் டயரிக் குறிப்பில்…

1வது குருப்பு

A கிளாஸ்

 (1) சீனிவாசாச்சாரி

B கிளாஸ்

 (1) அரவிந்தகோஷ்

 (2) பிஜால் குமார நாய்க் (சக்கிரவர்த்தி)

 (3) நாளிகாந்த சேன் குப்தா (பஸ்கி)

 (4) சுரேந்திரகோஸ் (மொனி)

 (5) சூரேஸ் சக்கிரவர்த்தி (நளயி)

 (6) றாமசாமி அய்யங்கார் (a) றாமசாமி (a ) நாறாயண அய்யர்

 (7) பார்த்தசாரதி அய்யங்கார்

C கிளாஸ்

 (1) திருமலாச்சாரி

 (2) சௌந்திர றாஜலு

 (3) சுப்பிரமணிய ஆசாரி

2வது குருப்பு

A கிளாஸ் இல்லை

B கிளாஸ்

 (1) ஜோகோந்திர நாத்பால்

 (2) (மகோ உபாத்தியாயர்)

 (3) ஜோசப் டேவிட்

C கிளாஸ்

 (1) துரைக்கண்ணு

 (2) சுந்தரேசய்யர்

 (3) கான்றாஜேந்திரம்

தலைமறைவாய் இருக்கும் வாரண்டு நபர்கள்

 (1) S.M. மாடசாமி பிள்ளை

 (2) CIL P. திருமலாச்சாரி

3வது குருப்பு

A கிளாஸ்

 (1) V.V.சுப்பிரமணிய அய்யர்

 (2) C .சுப்பிரமணிய பாரதி

 (3) நாகசாமி

B கிளாஸ்

 (1) கனகறாஜன்

 (2) வாத்தியார் சுப்பிரமணிய அய்யர்

 (3) சாமிநாதய்யர்

 (4) வெங்கிடேச அய்யர்

 (5) கண்ணுப்பிள்ளை

 (6) தங்கவேலு பிள்ளை

C கிளாஸ்

        கிர்ணசாமி நாய்டு

இவற்றைத் தொடர்ந்து இவ்வரிசையில் ஒவ்வொருவர் குறித்தும் தனிக் குறிப்புகள் அந்த டயரியில் எழுதப்பட்டிருந்தன. அவற்றுள் பாரதியார் குறித்த பதிவும், அவருக்கு உதவிய அன்பர்களுள், நாகசாமி, கண்ணுப்பிள்ளை (எ) முத்துக்குமாரசாமிப்பிள்ளை, கனகராசன் ஆகியோர் பற்றிய குறிப்புகள் பின்வருமாறு அமைகின்றன.

C. சுப்பிரமணிய பாரதி

தர்மறாஜா ஈஸ்வரன் கோயில் தெரு 47 நீ.வீடு. சம்சாரம் செல்லம்மாள். பெண் குழந்தை சகுந்தலா, பாட்டனார் குருசாமி அய்யர். மாமன் சாம்பசிவ அய்யர். றெட்டியா புறம் ஷயார் றெட்டியா புறம் ஸ்கூலில் ஜெம்னாசியம் வாத்தியார்.

சினேகிதர் (1)தங்கவேலு பிள்ளை சஸ்பென்டு

(2) முத்துக்குமரசாமி பிள்ளை 82 நீ.வீடு ரூழ் பூனிசர் வீதி

(3) சுல்தான் பெட்சுலேமான் சாயப்பு வில்லியனூர்

சகலை விசுவனாதய்யர் பண்டா குமாஸ்தா அனுமந்து.

காடு சாகி செட்டியார் தம்பி வேத றாமய்யரும் அவருடன் இருக்கிறார். மூத்த சம்சாரத்திற்கு சுரணம்மாள் என்ற பெண் குழந்தை கடையம் என்ற ஊரில் பாட்டனார் வீட்டில் இருக்கிறது.

கண்ணுப்பிள்ளை

முத்துமாரியம்மன் கோயில் தெரு 98நீ.வீடு. முதலியார் பேட்டை பிரஞ்சி ஸ்கூல் வாத்தியார். அரவிந்தகோஷ், V.V.S பார்ட்டிகளுக்கு ஒத்தாசை செய்யக்கூடியவன். பந்துக்கள் தங்கவேலு பிள்ளையின் மைத்துனர். மாமனார்…..சம்சாரம் பொன்னு கண்ணம்மாள். தகப்பன் சோம.அண்ணாமலை பிள்ளை. மைத்துனர் ரெத்தனம் பிள்ளை…

நாகசாமி

89 தர்மறாஜவீதி, இவர் V.V.S வீட்டிலேயே இருந்து சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார். வையாபுரி கந்தசாமி செட்டி இவருக்கு பணம் ஒத்தாசை செய்கிறார்.

சினேகிதர்கள்- ரெத்தினசபாபதி நாயக்கர், தங்கவேலு பிள்ளை, கண்ணுபிள்ளை, சிவக்கொழுந்து, றாஜம் நாயக்கர், ஆருமுகஞ் செட்டி.

கனகறாஜன்

ஈஸ்வர தர்மராஜா வீதி 43 நம்பர் தெரு. தகப்பனார் முருகேசம்பிள்ளை. தமையனார் இவர் பாரிசில் இஞ்சினீர் வேலைக்கு வாசிக்கிறார். தாய்மாமன் கோவிந்தறாஜ முதலியார். B.A.B.L ஹைகோர்ட்டு வக்கீல். 41நீ.வீடு பூந்தமலை றோட்டு, சென்னை. பாரதிக்கு ஒத்தாசை செய்யக்கூடியவன்.ரெங்கநாதன், சிவப்பிரகாசம் என்ற காலாடிகள் இவனுக்கு சினேகிதம்.

இந்த வரிசையில் ஏனையோர் பற்றிய குறிப்புகளும் இடம்பெற்றிருக்கின்றன.10 அவற்றைப் படங்களில் காணலாம்.

இவற்றையெல்லாம் இறுதி வரை பாதுகாத்து வைத்திருந்த கண்ணுப்பிள்ளை, தன் வாழ்வின் இறுதிக்காலம் வரை இந்திய நாட்டிற்கான கடமைகளைப் புதுவையில் இருந்து நிகழ்த்திக் கொண்டே இருந்திருக்கிறார். பிரிட்டிஷ் அரசிடமிருந்தும் பிரஞ்சு அரசிடமிருந்தும் நாடு விடுதலை பெற இடையறாது உழைத்த இவர், தமது 63ஆவது வயதில், 10.02.1943 அன்று மறைந்தார். ஆயினும் அவர் ஆற்றிய தொண்டுகள் அவர் புகழை என்றும் நின்று இசைத்துக் கொண்டே இருக்கும்.

சான்றெண் விளக்கம்

1.      முத்து சுந்தரமூர்த்தி, வில்லியனூர் விடுதலை வீரர், ப.220.

2.      மேலது, ப.149.

3.      புதுவையில் தேசபக்தர்கள், பக்.47-48.

4. முத்து சுந்தரமூர்த்தி, வில்லியனூர் விடுதலை வீரர், ப.154.

5.      ரா.அ.பத்மநாபன், சித்திரபாரதி, ப.78.

6.      முத்து சுந்தரமூர்த்தி, வில்லியனூர் விடுதலை வீரர், ப.150.

7.      புதுவையில் தேசபக்தர்கள், பக்.53-54.

8.      ரா.அ.பத்மநாபன், சித்திரபாரதி, ப.78.

9.      மேலது, ப.79.

10.    முத்து சுந்தரமூர்த்தி, வில்லியனூர் விடுதலை வீரர், பக்.41-52.

துணை நின்றவை

1.      சித்திர பாரதி, ரா.அ.பத்மநாபன், காலச்சுவடு/ கடவு வெளியீடு, நாகர்கோவில், மு.ப.2006,

2.      வில்லியனூர் விடுதலை வீரர், முத்து சுந்தரமூர்த்தி, சேகர் பதிப்பகம், சென்னை, மு.ப.2001,

3.      புதுவையில் தேசபக்தர்கள், சாரதி பதிப்பகம், சென்னை, மு.ப.1966.

4.      சுதந்திரம்- பொன்விழா மலர், (1934-1984)

பேராசிரியர் கிருங்கை சேதுபதி