தமிழக நாட்டார் தெய்வங்கள், வழிபாடு, நாட்டார் சடங்குகள் பற்றி ஆராய்ந்தவர்களில் பெரும்பாலோர் இவற்றைச் சைவச்சார்புடன் தொடர்புபடுத்திப் பேசுவது வழக்கமாக உள்ளது. நாட்டார் தெய்வங்களின் வழிபாட்டு மரபில் சிவன், பார்வதி தொடர்பான கதைகளே அதிகம் உள்ளன. சைவத்தை ஒப்பிடும் போது வைணவம் அல்லது விஷ்ணு, தொடர்பான கதைகள், தெய்வங்கள் வழிபாட்டு முறைகள் மிகக் குறைவாகவே கிடைத்துள்ளன.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இராமாயண, பாரதக் கதைகள் தமிழகத்தில் வழக்கிலிருந்தன. இவை பற்றிய குறைவான சான்றுகள் சங்கப் பாடல்களில் காணப்படுகின்றன. இராமாயணத்தின் முழுக்கதையும் அல்லது வான்மீகியின் மூலவடிவமும் சங்க காலத்தில் வந்து சேர்ந்ததா என்பதைச் சரியாகச் சொல்ல முடியவில்லை. அதே சமயத்தில் சங்கப் பாடல்களில் காணப்படுகின்ற இராமாயணத் துணுக்குகள் வாய்மொழியாகப் பேசப்பட்டவற்றின் அறுபட்ட துண்டுகளும் அல்ல.

sree padmanabha swamy templeஆரம்ப காலத்தில் தமிழ் மக்கள் வழங்கிய இராமாயணக்கதை உவமை, உருவகத்திற்குப் பயன்படும் அளவுக்கு பரவலாக அறியப்பட்டிருக்கிறது. சிலப்பதிகாரம், பரிபாடல் போன்ற இலக்கியங்களின் காலத்தில் பாகவதக் கதைகள் பரவலாகிவிட்டன. இவ்விரு இலக்கியங்கள் மட்டுமல்ல, பெரும்பாணாற்றுப்படை, தொல்காப்பியம் போன்றவற்றிலும் குறிப்பிடப்படும் மாயோனும்- விஷ்ணுதான் என்று கூறுவது மரபாகிவிட்டது. ஐங்குறுநூறு கடறு கூறும் விண்டு விஷ்ணுவே என்பார் உரையாசிரியர்கள்.

உரையாசிரியர்களின் கணக்குப்படி சங்ககால விஷ்ணு வைதீகக் கடவுளாகவே காட்டப்படுகின்றான். இவன் ஆயிரம் தலைகளை உடைய பாம்பின் மேல் பள்ளி கொண்டவன். இவனது மகன் மன்மதன், இரணியனைக் கொன்றவன். ஆமை, பன்றி வடிவங்களை எடுத்தவன். தேசி என்னும் அரக்கனை அழித்தவன். கம்சனுடன் போர் செய்தவன். திருமகள் கணவன், இப்படிப் பல புராணத் துணுக்குகள் தமிழகத்துக்கு வந்து சேர்ந்துள்ளன. சிவன், திருமால் என இரண்டு தெய்வங்களிலும் வைதீகச் சார்புடன் சாட்டப்படுவது திருமால்தான்.

சிவன் ஆரம்பகாலத்திலிருந்தே நாட்டார் மரபுடன் இணைக்கப்பட்டே பேசப்படுகிறான். சாதாரண மக்களின் கடவுள் என்ற அடையாளத்தைப் பெறுவதற்குரிய கூறுகள் அவனிடம் உள்ளன. திருமாலின் நிலை வேறு. நகரமயமாக்கப்பட்ட இடத்தில் வாழும் மக்களுடன் இணைக்கப்பட்டு பேசப்படுகின்றான்.

தமிழக வழிபாட்டு மரபுச் செய்திகளில் விஞ்சி நிற்பது சிவனா, விஷ்ணுவா என்று ஒரு பட்டிமன்றம் நடப்பதாக வைத்துக் கொண்டால் அதற்குத் தலைமை தாங்குபவர் நியாயமாக முடிவு சொன்னால் அது சிவனுக்குத்தான் வந்து சேரவேண்டும்.

இதற்கான சான்றுகளைத் தமிழகத்தில் பரவலாகத் தேடமுடியும் என்றாலும் சைவ ஆச்சாரியர்களோ சித்தாந்திகளோ நாட்டார் வழிபாட்டை ஏற்றுக் கொண்டார்கள் என்று சொல்ல முடியாது. ஆறுமுக நாவலர் கண்ணகியின் வழிபாட்டை வெறுத்ததும், ‘செத்துப் பிறக்கின்ற தெய்வங்கள்' என நாட்டார் தெய்வங்களை ஒரு பிரபந்த ஆசிரியர் கூறியதும் தமிழுலகம் அறியும்.

தமிழகத்தில் நாட்டார¢ தெய்வங்கள், நாட்டார் வழிபாடு என எல்லாவற்றையும் ஒரு சேர வைத்துப் பார்த்து ஒரு பொதுப் பண்பை உருவாக்கும் ஆய்வு நடந்ததாகத் தெரியவில்லை. நாட்டார் வழிபாட்டில் பழம் தமிழர் மதத்தையோ வைதீக சமயத் தாக்கத்தையோ தேடும் முயற்சி ஆரம்ப காலத்தில் நடந்திருக்கிறது. இத்தகு ஆய்வாளர்களில் பெரும்பாலோர் நாட்டார் மரபில் வைணவத் தாக்கம் அல்லது திருமால் வழிபாடு பற்றிய செய்திகளை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளவில்லை என்று தோன்றுகிறது. இதற்கு முக்கிய காரணம் சான்றுகள் குறைவு என்பதால் இருக்கலாம்.

தென்மாவட்ட நாட்டார் மரபில் திருமால் அல்லது வைணவத் தாக்கம் குறித்த செய்திகளை 16க்கு மேற்பட்ட கதைப் பாடல்களில் தேட முடியும். ரங்கநாதன் குடிபெயர்ந்ததான கதை தொடர்பான பெருமாள்சாமி காவியம் என்ற கதைப்பாடலுக்கு மட்டும் பத்து வாய்மொழி வடிவங்கள் உள்ளன. இவற்றில் 7 வாய்மொழி வடிவிலும், ஏட்டு வடிவிலும் உள்ளன.

பெருமாள்சாமி காவியத்தில் வரும் பெருமாள் என்ற நாட்டார் தெய்வத்திற்கு தென்மாவட்டங்களில் வழிபாடு உள்ளது. நாஞ்சில் நாட்டில் மட்டும் இலந்தவிளை, புல்லுவிளை என 12 க்கு மேற்பட்ட கிராமங்களில் வழிபாடு பெறுகிறது. இலந்தவிளை கிராமத்தில் சங்கு சக்கர தாரியாக நான்கு கரங்களுடன் அமர்ந்த கோலத்தில் பெருமாள் சாமி இருக்கிறார். இது பஞ்சலோகப் படிமம். இவர் அண்மைக்காலம் வரை ஆடு பலிவாங்கிக் கொண்டிருந்தார்.

‘திருவனந்தபுரத்திற்கு திருவரங்கன் வந்த வரலாறு அல்லது பெருமாள்சாமி காவியம்’ என்ற வில்லிசைப் பாடல் தென்மாவட்டக் கோவில்களில் இன்றும் வில்லிசை நிகழ்ச்சியில் பாடப்படுகிறது.

திருவரங்கத்தில் குடிகொண்ட ரங்கன் தன் பூசகன் ஒருவனை பிற பூசகர்கள் பழித்ததால் திருவரங்கத்திலிருந்து குடிபெயர்ந்து திருவனந்தபுரத்தில் கோவில் கொண்டான் என்ற வாய்மொழிக் கதையின் அடிப்படையில் இந்த வில்லுப்பாட்டு உருவானது. இதே கதை காஞ்சி வரதராஜப் பெருமாளுடனும் சார்த்திக் கூறப்படுகிறது. இக்கதை திருமழிசை ஆழ்வாருடனும் தொடர்புடையது.

திருவரங்கம் அல்லது காந்திபுரத்திலிருந்து பெருமாள் தென் மாவட்டத்துக்கு குடிபெயர்ந்தான் என்ற வாய்மொழி மரபுக்கு திருமழிசையாழ்வார் கதைமூலமாயினும், பெருமாள்சாமி கதை அதிலிருந்து சற்று வேறுபட்டது; அதோடு தென்மாவட்ட வாய்மொழி மரபின் இணைப்பும் அதில் உண்டு.

தென் திருவிதாங்கூர் பகுதிகளில் மட்டுமல்ல, திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவில் தொடர்பான கதைகளில் கூட ரங்கனாதனின் குடிப்பெயர்ச்சி செய்தி வருகிறது. திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவில் தொடர்பான வாய்மொழிக் கதைகளை ராணி கவுரிலட்சுமிபாய் தொகுத்திருக்கிறார் (Sree Padmanaba Swamy Temple, Bharatiya Vidya Bhavan, Bombay 1995).

பத்மநாபசுவாமி கோவிலில் கிடைத்த அனந்தசயனம் மகாத்மியம் என்னும் ஏடு அக்கோவில் தொடர்பான ஒரு கதையைச் கூறுகிறது. இது திவாகர முனிவருடனும் குஜராத் மாநிலத்தில் குடிபெயர்ந்த ஒரு சாதியினருடனும் தொடர்புடையது. இதே கதை இன்றைய கன்னியாகுமரி மாவட்டத்தில் வாய்மொழியாகவும் பேசப்படுகிறது.

குஜராத் (துவாரகை), காஞ்சிபுரம், ஸ்ரீரங்கம் ஆகிய இடங்களில் ஒன்றிலிருந்து தென் திருவிதாங்கூருக்கு வைஷ்ணவக் குடும்பங்கள் சில குடிபெயர்ந்தது பற்றிய 9 கதைகள் சேகரிக்கப்பட்டுள்ளன.

கன்னியாகுமரி மாவட்டம் மேற்கு பகுதியில் வாழும் கிருஷ்ணவகை (குருப்பு) என்னும் சாதியினர் பற்றி டாக்டர் கே.கே.பிள்ளை ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார். அவர் “இச்சாதியினர் கிருஷ்ணனின் பசையினர், அதனால் இப்பெயர்; இவர்கள் துவாரகையிலிருந்து கிருஷ்ணப் படிமத்தை சுமந்துவந்து திருவனந்தபுரத்திற்குக் கொண்டு வந்தார்கள். இந்தக் கதை 18 ஆம் நூற்றாண்டிலேயே சேகரிக்கப்பட்டிருக்கிறது என்கிறார்.

இந்த சாதியினர் தமிழ், மலையாளம் என இரு மொழிகளையும் பேசுகின்றவர்கள். இவர்களிடம் மருமக்கள் வழியினரும் உண்டு. இவர்களிடம் சேகரித்த செய்திகளின் அடிப்படையில் வைணவச் சார்பு உடைய அரச வம்சா வழியினர் என்கின்றனர்.

பிரமானந்த புராணமும் சுவாதித் திருநாள் பிரபந்தமும், திவாகர முனி என்னும் துளு பிராமணர் தொடர்பான கதையைக் கூறுகின்றன. ஒருமுறை இவர் தன் பூஜை அறையில் இருக்கும்போது குழந்தை ஒன்று சாளக்கிரமத்தை எடுத்துக் கொண்டு ஓடியதாம்; திவாகரம் குழந்தையின் பின்னே ஓடினார். குழந்தை புலையர் குடியிருப்பு இருந்த இடத்திற்கு சென்றது. சாளக்கிரமத்தை ஒரு இலுப்பை மரத்தின் அடியில் போட்டுவிட்டு மாயமாய் மறைந்தது. திவாகர் அந்த இடத்தில் ஒரு கோவில் கட்ட ஏற்பாடு செய்தார். திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவில் உருவானதற்கான கதை இது. இந்த நிகழ்ச்சி கொல்ல வருஷம் 222 இடவ மாதம் (மேய் - ஜூன் கி.பி. 1050) என்பது பழைய ஆவணக் கணக்கு.

திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலுடன் தொடர்புடைய இரண்டு கதைகளை நாட்டார் வழக்காற்றுச் செய்திகளில் பரவலாகக் கேட்க முடியும். ஒன்று ஸ்ரீரங்கம் அல்லது காஞ்சிபுரத்திலிருந்து கிருஷ்ணன் திருவனந்தபுரத்தில் குடியேறியது. இரண்டு அப்படிக் குடியேறும்போது முதலில் புலையர் வழியே கிருஷ்ணன் அறிமுகமாகிறான் என்ற முதல் செய்திக்குக் கதைப்பாடல் சான்று. இரண்டாவது வாய்மொழியாக வழங்குவது.

திருவனந்தபுரம் அனந்தங்காடாய் இருந்த சமயம். இலுப்பை மரங்கள் நிறையவே அடர்த்தியாக நின்றன. அந்தக் காட்டில் ஒருநாள் புலையன் புலைச்சி இரண்டு பேர் நடந்து போய்க் கொண்டிருந்தார்கள். அப்போது இலுப்பை மரத்தின் கீழ் குழந்தை ஒன்று அழுதுகொண்டு நிற்பதைக் கண்டனர்.

குழந்தை பசியால் அழுகிறது என்பதைப் புலைச்சி புரிந்து கொண்டாள். குழந்தைக்கு முலைப் பாலைக் கொடுத்தாள், குழந்தை பால் குடித்தது. சிரித்தது. புலையன் பசும்புல்லைச் சேகரித்து மெத்தை போல் ஆக்கினார். புல் மெத்தையில் குழந்தையைக் கிடத்தினாள் புலைச்சி. குழந்தை உடனே கிருஷ்ணனின் சிற்பமாக ஆனது. இலுப்பை மரம் ஐந்துதலைப் பாம்பாக மாறியது.

இதைப் பார்த்ததும் புலையனும் புலைச்சியும் பயந்து போனார்கள். அங்கிருந்து வேகமாய் ஓடிவிட்டனர். இந்த விஷயத்தை தன் எஜமானிடம் சொன்னான் புலையன். அதை அரசனும் அறிந்துவிட்டான். அங்கே ஒரு கோவில் கட்டினான் அரசன். அது பத்மநாபசுவாமி கோவில்.

அனந்தனை முதலில் கண்ட புலையனை அரசனுக்கு மறக்க முடியவில்லை. கோவில் பக்கத்திலுள்ள ஒரு வயலை புலையனுக்குக் கொடுத்தான். அந்த வயலில் விளையும் நெல்லை அரிசியாக்கி பத்மநாபனுக்கு நைவேத்தியமாகக¢ கொடுக்க வேண்டும் என்றும் அரசன் புலையனுக்குக் கட்டளை இட்டான். அந்த வயல் புத்தரிக் கண்டம் எனப்பட்டது.

பத்மநாபசாமி கோவிலில் கன்னிப்பூ நிறை சடங்கிற்கு இந்த வயலிலிருந்து கதிரை அறுத்துச் செல்வது வழக்கம். இருபதாம் நூற்றாண்டு ஆரம்பத்தில் கூட இந்த நிகழ்ச்சி நடந்தது. திருவனந்தபுரம் கிழக்கே கோட்டை எதிரே இப்போதுள்ள மைதானமே ஒரு காலத்தில் புத்தரிக் கண்டமாக இருந்தது. மகாத்மா காந்தி திருவனந்தபுரம் வந்தபோது, புத்தரிக் கண்டம் வயலில் புலையர்கள் நின்று பார்த்திருக்கிறார்கள்.

பத்மநாபசாமி கோவில் உருவான கதைகளில் வில்வமங்கலம் சாமியார் கதையும் ஒன்று. இதனுடனும் புலையர் ஒருவர் தொடர்புபடுத்தப்படுகிறார். வில்வமங்கலம் நம்பூதிரி என்பவர் ஒருவரல்லர்; இவர்கள் மூன்று கால கட்டங்களில் வாழ்ந்தவர்கள் என்று சொல்லுகிறார்கள். மலையாள மகாகவியும் இலக்கிய வரலாற்றாசிரியருமான உள்ளூர் பரமேஸ்வர அய்யர் வில்வமங்கலம் நம்பூதிரி ஒருவரே; அவர் பத்மநாபசுவாமி கோவில் தொடர்பானவர் என்கிறார். 9ஆம் நூற்றாண்டில் வில்வமங்கலம் சாமியார் ஒருவர் இருந்தார்; 1588ல் ஒருவரும் இருந்தார்.இவர்களைப் பற்றிய வாய்மொழிக் கதைகளே பின்னர் தல புராணத்தில் நுழைந்தது. இவர்களின் கதை திவாகரமுனிவர் கதை போன்றது.

திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலும் திருவட்டாறு ஆதி கேசவர் கோவிலும் ஒரே அமைப்பை உடையது. இங்கு இருக்கின்ற அம்பாடி கிருஷ்ணன் கோவில் பற்றிய கதைகள் மகாபாரதத் தொன்மத்துடன் இணைக்கப்பட்டு பேசப்படுகிறது. இந்தக் கதைகள் தென் திருவிதாங்கூரிலும் வாய்மொழியாகப் பேசப்படுகின்றன.

அர்ஜுனன் தீர்த்தயாத்திரை சென்ற போது ராமேஸ்வரத்திற்குச் சென்றான். அங்கே ஒரு கல்பாலத்தைக் கண்டான். பாலம் அருகே ஒரு குரங்கு நின்றது. அர்ஜுனன் குரங்கிடம் “இந்தப் பாலத்தைக் கட்டியது யார்?” என்று கேட்டான். குரங்கு “இராமனின் கட்டளையால் குரங்குகளும் கரடிகளும் பாலத்தைக் கட்டின” என்றது.

அர்ஜுனன் “கிருஷ்ணனின் பெயரைச் சொல்லி என் வில்லின் உதவியால் பாலம் கட்ட முடியும்” என்றான். குரங்கு "செய் பார்க்கலாம்" என்றது. அர்ஜுனன் வில்லை வளைத்து அம்பைப் பொருத்தி கிருஷ்ணா என வாய்விட்டுச் சொல்லி சரத்தைச் செலுத்தினான். சரங்கள் சென்றன. பாலம் உருவானது. குரங்கு “அப்பனே நீ யார்” எனக் கேட்டது.” "நான் பாண்டு மைந்தன் அர்ஜுனன்” என்றான். இதே சமயத்தில் குரங்கு அனுமனாக உருமாறியது.

அனுமனுக்கும் அர்ஜுனனுக்கும் இடையே கிருஷ்ணன் குழந்தையாக நின்றான். இருவரும் கிருஷ்ணனை வணங்கினர். கிருஷ்ணன் “திருவரங்கத்தில் ரங்கனுக்குப் பூசை செய்வோரிடம் மாறுபாடு வரப்போகிறது; அதனால் ரங்கனாதன் அங்கிருந்து குடிபெயர்ந்து அனந்தங்காட்டுக்கு வரப்போகிறான். நானும் அவனுடன் சேர்ந¢து கொள்ளுவேன்” என்றான்.

திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி ஆலயம் உருவான கதை பெருமாள்சாமி கதையுடன் தொடர்புடையது. இராம வழிபாட்டிற்கு எதிராக அல்லது அதை அகற்றிவிட்டு கிருஷ்ண வழிபாட்டின் ஆரம்பம் இந்த வாய்மொழிச் செய்தியின் சாராம்சம். தென் மாவட்டங்களில் குறிப்பாக - தென் திருவிதாங்கூரில் கிருஷ்ண வழிபாடு நாட்டார் மரபில் நுழைந்ததற்கு இது போன்ற வேறு கதைகளும் உண்டு.

ஸ்ரீரங்கத்திலிருந்து ரங்கநாதன் திருவனந்த புரத்திற்கு வந்தபோது தனியாக வரவில்லை; மூன்று பூதங்கள், சில தெய்வங்களுடள் வந்தார். ஸ்ரீரங்கத்திலிருந்து அனந்தபுரம் வரையுள்ள ஊர்களில் உள்ள கோவில்களுக்குச் சென்றார். சிதம்பரம் நடராசன். மதுரை மீனாட்சி, நெல்லை காந்திமதி எனப் பல தெய்வங்களைக் கண்டு அளாவினார். இதெல்லாம் பெருமாள்சாமி காவியம் கூறும் செய்தி. வில்லிசைக் கலைஞர் தங்கமணி, ரங்கனாதன் ஸ்ரீரங்கத்திலிருந்து பெரும் செல்வங்களுடன் தங்க நகைகளுடன் பட்டு பீதாம்பரங்களுடன் ஆடம்பரமாக வந்தார் என வில்லிசை நிகழ்ச்சியில் பாடுவார்.

அனந்தங்காட்டில் கிருஷ்ணன் (பெருமாள்) வந்தபோது புலையன் ஒருவனே முதலில் கண்டான் என்னும் செய்திகள் வேறு வேறு வடிவங்களில் உள்ளது, ரங்கன் குடிபெயர்ச்சி மூலக்கதை; மட்டுமன்றி தென் திருவிதாங்கூரில் பெருமாள் சாமி அல்லது திருமால் குடிபெயர்ச்சி மட்டுமல்ல வைணவத்தாக்கம் உள்ள வேறு கதைகளும் வழக்கில் உள்ளன.

1.           காஞ்சிபுரத்திலிருந்து கருடன் பறக்கை மதுசூதனப் பெருமாள் ஆலயத்துக்கு வந்த கதை

2.           இராமாயண காவிய இராவணன் வழிபட்ட பத்திரகாளி வழிபாடு, இராவணன் பூஜா விதி என்ற நூல்.

3.           இடைகரை புலை மாடசாமி கதை

4.           பிணமாலை ஆடும் பெருமாள் கதை

5.           திருநெல்வேலி மாவட்டம் வாகைக் குளம் உலகளந்த பெருமாள் கோவில் அருகே உள்ள வைணவ பிராமணர் குடிபெயர்ச்சி

6.           தென் மாவட்டங்களில் வழக்கில் உள்ள தோல்பாவைக் கூத்து, கண்ணன் ஆட்டம் என்னும் இரு கலைகள்.

இச்சான்றுகள் எல்லாமே தென் மாவட்டம் - குறிப்பாக திருநெல்வேலி, கன்னியாகுமாரி மாவட்டம் தொடர்பான வைணவத் தொடர்புகளைக் கூறுவன.

ஒருமுறை காஞ்சிபுரத்து அரசன் ஒருவனின் பிறந்தநாள் சனிக்கிழமை வந்தது. சோதிடர்கள் அரசனிடம் “இதனால் தோஷம் வரும் பரிகாரம் செய்யலாம்” எனச் சொன்னார்கள். அரசன் "என்ன பரிகாரம்" எனக் கேட்டான். ஜோதிடன் “மரத்தால் கருடன் செய்து அதைத் தென் திருவிதாங்கூரில் உள்ள பறக்கை மதுசூதனர் ஆலயத்திற்குக் கொடுக்க வேண்டும்” என்றான்.

அரசனின் கட்டளைப்படி திறமையான தச்சர் ஒருவர் கருடன் செய்தார். அது தத்ரூபமாக இருந்ததால் வானில் பறக்க யத்தனித்தது. ஆசாரி தன் கை உளியை அதன் மேல் எறிந்தான். உளி கருடனின் சிறகில் பட்டது; என்றாலும் கருடன் வானில் பறந்தது. ஆசாரி அதன் பின்னே ஓடினான். அரசனும் பரிவாரங்களும் கருடன் பின்னே சென்றன. கருடன் பறக்கை கோவிலில் தஞ்சமடைந்தது; தச்சனும் அங்கே போனான். கருடன் கோவிலில் தென்மேற்கு மூலையில் அமர்ந்தது.

இந்தக் கதை மேலும் தொடருகிறது. பறக்கை மதுசூதனர் கோவில் தலபுராணத்தில் இக்கதை வருகிறது. இக்கோவில் திருவிழாவில் 5 ஆம் நாளில் கருடனுக்குக் கண் திறக்கிறது என்ற சடங்கு நடக்கிறது. இப்போதும் நடக்கும் நிகழ்ச்சியை ஆசாரி ஒருவரே செய்கிறார். இவரது குடும்பத்தினர் தங்களைக் காஞ்சிபுரத்திலிருந்து குடிபெயர்ந்ததாகச் சொல்லிக் கொள்ளுகின்றனர்.

நாஞ்சில் நாட்டில் பறக்கை, மருங்கூர், இரவிபுதூர், காடேத்தி என்னும் கிராமங்களில் காஞ்சிபுரத்திலிருந்து அரசன் ஒருவன் வந்ததான கதை வழங்குகிறது. இவன் வைஷ்ணவச் சார்பாளன். இவனுக்கு இரவிபுதூரில் வழிபாடு உள்ளது. இவன் தொடர்பான கதை வில்லிசை நிகழ்ச்சியில் பாடவும் செய்கின்றனர்.

இராமாயணக் கதையுடன் தொடர்புடைய பாத்திரங்களுக்கு வழிபாடு நிகழ்வது பொதுவானது. இவற்றில் வட்டார ரீதியான வேறுபாடு உண்டு. தென் திருவிதாங்கூரில் இப்படியான வழிபாடுகள் சிலவற்றை அடையாளம் காண முடியும். இதுவும் இப்பகுதியின் வைணவச் சார்பின் சான்று.

கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் தாலுகாவில் தெக்குறிச்சி உட்பட 14 கிராமங்களில் கோவிலூட்டம்மை வழிபாடு உள்ளது. இந்த வழிபாடு தூத்துக்குடி மாவட்டம் தட்டார் மடம் ஊரிலிருந்து குடிபெயர்ந்த வைணவர்களால் பரவியதாகச் சொல்லுகிறார்கள். தட்டார் மடம் கோவில் வடதமிழ்ப் பகுதியில் ஓர் ஊருடன் தொடர்புடையது என்ற ஒரு கதை உண்டு. அந்த ஊர் பெரும்பாலும் காஞ்சிபுரம் அல்லது ஸ்ரீரங்கமாக இருக்கலாம்.

கோவிலூட்டம் என்ற பெயர் காளியைக் குறிப்பது. இவள் இராவணனால் பூசை செய்யப்பட்ட காளி. இராமனை வெல்ல சுக்கிராச்சாரியார் கூறிய அறிவுரைப் படி இராவணன் வழிபட்ட தெய்வம். இந்த வழிபாட்டை அனுமனும் அங்கதனும் அழித்தனர் என்பது ஒரு ராமாயணக் கதை.

கோவிலூட்டம்மை வழிபாட்டினரிடம் ஒரு சிறிய கதைப்பாடல் உள்ளது. 238 வரிகள் கொண்ட இதை இவர்கள் காவியம் என்கின்றனர். இராவணன் இராமனை ஜெயிக்க காளியிடம் வாள் வேண்டி எட்டாவது கோட்டையில் யாகம் செய்கிறான். இதை விபீஷ்ணன் வழி அறிந்த அனுமன் தன் வீரர்களுடன் அந்த இடத்திற்குப் போகிறான்.

அனுமன் காளியிடம் இராம அவதாரப் பெருமையையும் திருமாலின் சிறப்பையும் விவரிக்கிறான். உடனே காளி வீரவாளை அனுமனிடம் கொடுத்து விடுகிறாள். தன்னை திருமால் அடியவனாகப் பிரகடனப் படுத்துகிறான். என்னை யார் வணங்குகிறார்களோ அவர்களுக்கு திருமாலின் அருள் கிடைக்கும் என்கிறான்.

இராமன் காளியிடம் பெற்ற வாளால் இராவணனை வெட்டுகிறான். இந்த வாள் திருமாலின் அம்சமாகக் கொள்ளப்பட்டது. இராம ராவணப் போர் முடிந்ததும் காஞ்சிபுரத்தில் உள்ள சிலர் காளியை வழிபட்டனர்; இதற்கு அடையாளமாக ஒரு வாளை நட்டனர். இது கோயிலூட்டம்மை எனப்பட்டது.

இராவணன் யாகம் செய்து காளியை வருவித்த கதை தமிழ் ராமாயணங்களிலோ வான்மீகியிலோ இல்லை. ஆழ்வார்களும் சொல்லவில்லை. வட இந்திய ராமாயணங்கள் சிலவற்றிலும் (அத்யாத்ம ராமாயணம்) தெலுங்கு இராமாயணங்களிலும் (ரங்கநாத ராமாயணம், ஆனந்த ராமாயணம்) பரோடா சமஸ்தானத்தில் கிடைத்த சமஸ்கிருத ராமாயண ஏட்டிலும் இந்தக் கதை நிகழ்ச்சி உள்ளது.

தோல் பாவைக் கூத்து நிகழ்ச்சியில் இராவணனின் தம்பி ஒருவன் இராமனைக் கொல்ல யத்தனிக்கும் கதை காட்டப்படும். இது மயில்ராவணன் கதை எனத் தனியாகவும் காட்டப்படுகிறது.

இடைகரை புலை மாடசாமி என்னும் நாட்டார் தெய்வம் தொடர்பான கதையும் அனந்தன்காட்டு கிருஷ்ணன் கோவில் பூசகருடன் தொடர்புடையதுதான். பிணமாலை ஆடிய பெருமாள் கதை மாடன் விஷ்ணு தொடர்புடையது. பெருமாள் மாடனாக மாறிய இந்தக்கதை திருநெல்வேலி மாவட்டம் தென்பகுதி கிராமங்களில் வழக்கில் உள்ளது.

இப்படியாக தென் மாவட்டங்களில் வழிபாடு பெறுவதும், வில்லிசை நிகழ்வில் பாடப்படுவதும், வாய்மொழி வடிவில் இருப்பதுமான தெய்வங்களின் கதைகள் பெருமாள் சாமி காவியத்துடன் நேரடியாகவோ மறைமுகமாகவோ தொடர்புடையவை என்பதை மறுக்க முடியாது. இவற்றின் வழி சில விஷயங்களை ஊகிக்க முடியும்.

நாட்டார் மரபில் வைணவத் தாக்கம் முழுதும் இல்லை என்ற முந்தைய கருத்தாக்கத்திற்கு எதிரான சான்றுகள் உள்ளள. நாட்டார் தெய்வங்களில் சிவன் பார்வதி தொடர்பானவை மிக அதிகம்; என்றாலும் பெருமாளும் நாட்டார் தெய்வமாக இருக்கிறார்.

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ஸ்ரீரங்கம் அல்லது காஞ்சிபுரத்திலிருந்து குடிப்பெயர்ச்சி நடந்திருக்கிறது. இப்படி வந்தது தொடர்பான திருமழிசை ஆழ்வாரின் கதையை மூலமாக வைத்து ஒரு கதைப் பாடல் உருவாகியிருக்கிறது. பெருமாள் சாமி காவியம் என்னும் இக்கதைப் பாடல் வேறு பல கிளைக்கதைகள் உருவாகவும் காரணமாயிருக்கிறது.

திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவில் உருவானதற்காகச் சொல்லப்படும் கதைகளில் ஸ்ரீரங்கம் குடிப்பெயர்ச்சி கதை முக்கியமானது. அதோடு நாட்டார் மரபின் தாக்கத்துடனேயே அனந்தன் காட்டு பத்மநாபன் உருவாயிருக்கிறான் என்று சொல்லும் அளவுக்கு கதைகள் வழக்கில் உள்ளது.

திருவனந்தபுரம் கோவில் உருவான கதைகளில் புலையர் சாதியினருக்கும் பங்குண்டு. ஸ்ரீரங்கத்திலிருந்து குடிபெயர்ந்த பெருமாள் முதலில் அனந்தன் காட்டில் புலையர் தம்பதிகளைத்தான் சந்திக்கிறான். புலையர் வாழும் குடியிருப்பில்தான் பெருமாளுக்கு வழிபாடு நடந்திருக்கிறது. அப்போது பூசை செய்த நம்பூதிரி புலைப்பெண்ணை விரும்பியதால் கொலைப்பட்டார் என்ற ஒரு கதை உண்டு

தென்மாவட்டங்களில் வைணவத் தாக்கம் உடைய கண்ணன் ஆட்டம், கிருஷ்ணனாட்டம், தாதராட்டம், தோல் பாவைக் கூத்து எனச் சில நாட்டார் கலைகளும், பெருமாள் சாமி காவியம், கோவிலூட்டம்மன் கதை, அயோத்தி கதை, இரண்யசம்ஹாரம், குகலவர்சாமி கதை என அச்சில் வந்த கதைகளும், இடைகரை புலை மாடசாமி கதை, பிணமாலை ஆடும் பெருமாள் கதை, கோமாண்டி கதை எனச் சில வாய்மொழிக் கதைகளும் உள்ளன. தோல்பாவைக் கூத்து ஆந்திர ராமாயணச் செல்வாக்குடையது..

- அ.கா.பெருமாள், ஓய்வுபெற்ற பேராசிரியர், நாட்டார் வழக்காற்றியல் மற்றும் சமூகப் பண்பாட்டு ஆய்வாளர்.

Pin It