2011 ஜுன் ஜுலை மாத தமிழ் பத்திரிகைகளும் இதழ்களும் திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலின் பாதாள அறைகளில் அளவற்ற தங்கக் குவியல்கள் இருப்பது பற்றிய பரபரப்பான செய்திகளைப் போட்டி போட்டுக் கொண்டு வெளியிட்டன. இவை பெரும்பாலும் ஊகங்களின் அடிப்படையில் உருவானவை அல்லது ஏதோ ஒரு பார்வையில் வைக்கப்பட்டவை.
தமிழகத்தில் தொல்லியல் வரலாற்று ஆய்வாளர்கள் இது பற்றிய ஆழமான கருத்தைச் சொல்லவில்லை. முக்கியமாக இது பற்றிய அறிதலும் ஆய்வும் இல்லை என்பதை ஒத்துக்கொண்டு சிலர் பேசினார்கள். கேரளம், கொச்சி ஊரினரான ஜேக்கப் என்பவர் பத்மநாபசாமி கோவில் பொக்கிஷத்தை நாட்டு நலனுக்குச் செலவழிக்க வேண்டும் என பொதுநல வழக்கு தொடுத்தார். ஆனால் அது தள்ளுபடி ஆயிற்று.திருவனந்தபுரம் கோவிலில் பொக்கிஷம் இருப்பது என்னும் செய்தி சுந்தரராசன் என்பவர் தொடுத்த நீதிமன்ற வழக்கின் மூலம்தான் வெளிப்பட்டது என்று சொல்லப்பட்டது. ஆனால் அது ரகசியமான விஷயம் அல்ல, பத்மநாபசுவாமி கோவிலின் ஐந்து தலை நாகத்தின் பாதுகாப்பில் நிறைய தங்கங்கள் இருக்கின்றன என்னும் வாய்மொழிக் கதை காலம் காலமாக சொல்லப்பட்டு வருவது. அது ஒரு சிலருக்குத் தெரிந்த விஷயம்.
என் அம்மா 30களில் திருவனந்தபுரத்தில் வளர்ந்தவர். இந்தப் பொக்கிஷக் கதையை அப்போதே அவர் கேட்டிருக்கிறார். திருவனந்தபுரம் ஆரியசாலை சந்தைக்கடையில் இந்தக் கதையைச் சொல்வதைக் கேட்டிருக்கிறார். இதுபோன்று பலர் சொல்ல நானே கேட்டிருக்கிறேன். தென் திருவிதாங்கூர் கதைப்பாடல்களில் போகிற போக்கில் கோவில் பொக்கிஷத்தைப் பற்றி சொல்லும் விஷயங்களைத் தொகுத்தால் இது ரகசியம் அல்ல என்பது தெரியும்.
பத்மநாபசுவாமி கோவிலின் உள்ளே தரை மட்டத்திலிருந்து ஆறடி ஆழத்தில் ஆறு பொக்கிஷ அறைகள் உள்ளன. இவற்றில் சில அறைகள் 1990 இல் 2 முறையும் 2002ல் 5 முறையும் திறந்தார்கள். ஒரு அறை மட்டும் திறக்கப்படவில்லை.
2011இல் இந்த அறைகளைத் திறந்து ஆய்வு செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஐந்து பேர்கள் கொண்ட குழுவினர் இந்த ரகசிய அறைகளைத் திறந்து ஆய்வு செய்தனர். ஆறு ரகசிய அறைகளுக்கு A முதல் F வரை அடையாளம் இடப்பட்டு ஆராய்ந்தனர். B அறை திறக்கப்படவில்லை
B தவிர்த்த ஐந்து அறைகளிலும் இருக்கும் தங்கம், வெள்ளி, வைரம், வைடூரியம் ஆகியவற்றின் மதிப்பு ஒரு லட்சம் கோடி என கணக்கிடப்பட்டது. இந்த அறைகளில் தங்க நாணயங்கள், வைர வைடூரிய ஆபரணங்கள், வெள்ளிப் பாத்திரங்கள் ஆகியன இருந்தன. யானையின் மீது தங்க மகாவிஷ்ணு 270 சென்டிமீட்டர் நீளமுள்ள தங்க மாலை போன்றவைகளும் இருந்தன.
இவை பழைய செம்புப் பெட்டிகளிலும் மண் பானைகளிலும் செப்புக் குடங்களிலும் வைக்கப்பட்டுள்ளன. கார்த்திகைத் திருநாள் ராமவர்மா காலத்து (1772) நகைகள் ஏராளம் உள்ளன. இவை தவிர கோவில் சடங்குகளுக்கும் விழாக்களுக்கும் தேவையான வெள்ளிப்பாத்திரங்கள் நிரம்ப உள்ளன என்று பட்டியலிட்டார்கள்.
இந்த அறைகளில் B அறையைத் திறந்தால் நாடு அழிந்து விடும் என்ற நம்பிக்கையும் பழமையானது. இந்த அறையின் முன் வாசலில் இரண்டு பாம்புகளின் புடைப்புச் சிற்பங்கள் உள்ளன. இது எச்சரிக்கையாக உள்ளது என்று ஊகித்தனர். இந்த அறை மார்த்தாண்ட வர்மா காலத்தில் நாக பாச மந்திரங்கள் ஓதி மூடப்பட்டன என்று கூறப்பட்டது. இதைத் திறக்க வேண்டும் என்றால் அந்த மந்திரம் அறிந்த புரோகிதர்கள் வேண்டும் என்ற நம்பிக்கை அந்த அறையைத் திறக்க மறுத்தது.
1930 ல் B அறையைத் திறப்பதற்கு முயற்சி நடந்தது. அப்படிச் செய்தவர்கள் பாம்புகளால் தாக்கப்பட்டனர் என்ற கதையும் வழங்கியது. பாம்புகள் கூட்டம் கூட்டமாய் அங்கே தங்கியிருந்தன. சீத் சீத் எனச் சப்தம் எழுப்பின என்னும் கதைகளும் வழங்கின. இருபதாம் நூற்றாண்டு கடைசியில் கூட இந்தக் கதை வழங்கப்பட்டதைச் சொன்னார்கள்
இந்த மர்ம அறைகளைத் திறக்க வேண்டும் என்று வழக்கு தொடுத்த சுந்தர்ராஜன் அறைகள் திறக்கப்பட்ட ஒரு மாதத்தில் உயிர் இழந்தார். இன்னொருவரின் அம்மா இறந்தார். இதன் பிறகு குறிப்பிட்ட அந்த மர்ம அறை திறக்கப்பட்டால் திருவனந்தபுரம் அழிந்துவிடும் என்ற நம்பிக்கை வலுப்பட ஆரம்பித்தது.
தமிழ் பத்திரிகைகளில் குமுதம் வார இதழும் தீராநதி மாத இதழும் இது பற்றிய செய்திகளை ஊகங்கள் கலந்து வெளியிட்டன. நானும் தீராநதியில் ஒரு கட்டுரை எழுதினேன். 2013 இல் பத்மநாபசாமி கோவில் உரிமை திருவாங்கூர் அரச குடும்பத்திற்கு என்னும் நீதிமன்ற தீர்ப்பு வந்தது. இதனால் அந்த அறையைத் திறக்க அனுமதி கிடைக்கவில்லை. இதன் பிறகு B அடையாள அறை பலப்படுத்தப்பட்டது.
இவ்வளவு பொக்கிஷம் திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்கு மட்டும் எப்படி வந்தது? பத்மநாப சுவாமி கோவிலில் இவற்றை யார் குவித்து வைத்தார்கள், சேகரித்தார்கள், இதன் மர்மம் என்ன? இந்தியாவின் வேறு சமஸ்தானங்களிலும் பெரிய கோவில்களிலும் இது போன்ற பொக்கிஷ அறைகள் இருந்ததாகத் தெரியவில்லையே. ஏன் என்பதற்கான விடை இன்னும் கிடைக்கவில்லை.
பத்மநாபசுவாமி கோவில் பற்றிய வாய்மொழிக் கதைகள் தென் திருவிதாங்கூர் கிராமங்களுடனும் (இன்றைய கன்னியாகுமரி மாவட்டம்) தொடர்புடையன. திருவனந்தபுரம் கோவிலுக்குச் சொந்தமான வயல்களும் தோட்டங்களும் நாஞ்சில் நாட்டில் நிறையவே இருந்தன. இவற்றைப் பராமரித்தவர்களிடம் வழங்கிய கதைகள் இந்தக் கோவிலுடன் தொடர்புடையன. இவை முழுமையாகச் சேகரிக்கப்படவில்லை. இந்தக் கதைகள் மட்டுமல்ல கதைப்பாடல்களிலும் இது போன்ற செய்திகள் உள்ளன.
பத்மநாபசுவாமி கோவிலுக்கும் புலையருக்கும் உள்ள தொடர்பு பற்றிய கதை வாய்மொழியாகப் பேசப்படுகிறது. நாஞ்சில் நாட்டில் இரவி புதூர் என்ற ஊரின் குளத்தின் கரையில் வழிபாடு பெறும் இடைகரை புலை மாடசாமி தொடர்பான வாய்மொழி கதை இது தொடர்பானது.
ஒருமுறை அனந்தன் காடு வழியாகச் சென்ற புலைப்பெண் ஒருத்தி காட்டில் அழுது கொண்டு கிடந்த ஒரு குழந்தையைக் கண்டாள். அதை எடுத்து வீட்டிற்கு எடுத்துச் சென்றாள். குழந்தையை நீராட்டி அரவணைத்து பாதுகாத்தாள். சில நாட்கள் கழிந்தன.
ஒரு நாள் அவள் அந்தக் குழந்தையுடன் காட்டு வழி சென்றபோது அசரீரி கேட்டது. அப்போது குழந்தை மரப்பொம்மையாகிவிட்டது. அவள் பயந்து போய் அது மாயக் குழந்தை என்று நினைத்து ஒரு மரத்தடியில் வைத்தாள். அது கிருஷ்ணனின் கல் உருவமாக மாறியது. இந்த விஷயத்தை அவள் நாட்டு அரசனிடம் சொன்னாள். பின்னர் அங்கே கோவில் உருவானது.
ஒருமுறை வில்வ மங்கலம் நம்பூதிரி ஒருவர் கிருஷ்ண விக்கிரகத்திற்குப் பூசை செய்து கொண்டிருந்த போது ஒரு குழந்தை வந்தது. அவரது பூஜைக்கு இடையூறாக அட்டகாசம் செய்தது. அவர் குழந்தையை விரட்டினார். குழந்தை வீட்டை விட்டு வெளியே செல்லும்போது என்னை அனந்தன் காட்டில் வந்து பார்ப்பாய் எனச் சொல்லிவிட்டு ஓடிவிட்டது.
நம்பூதிரி பூஜை விக்கிரகத்தைப் பார்த்தார். காணவில்லை. அங்கே வந்த குழந்தை கிருஷ்ணனே என்று உணர்ந்தார். அவனைத் தேடிப் புறப்பட்டார். அனந்தன் காடு எங்கே இருப்பது என்பது அவருக்குத் தெரியாது. தற்செயலாக இரண்டு புலையர்கள் பேசிக்கொண்டிருப்பதைக் கேட்டார். ஒருவன் " நீ இப்படி எல்லாம் பேசினால் அனந்தன் காட்டில் விட்டு விடுவேன்" என்றான். நம்பூதிரி அவனிடம் அனந்தன் காடு எங்கே இருக்கிறது. என்று கேட்டார். அவன் வழி சொன்னான்.
நம்பூதிரி அனந்தன் காட்டு வழியே நடந்தார். அங்கே புலைப்பெண் ஒருத்தியின் மடியில் தன்னைத் தொந்தரவு செய்த குழந்தை இருப்பதைப் பார்த்தார். நம்பூதிரியைக் கண்டதும் அந்த குழந்தை கிருஷ்ண விக்ரகமாக மாறியது. அவருக்கு அது புரிந்தது. அந்த இடத்திலேயே கோவில் கட்டுவதற்கு அரசரிடம் வேண்டினார். கோவில் உருவானது. கோவிலுக்குத் தேவையான தங்க நாணயங்களை அரசன் அங்கு சேமித்து வைத்தான்.
பத்மநாபசுவாமி கோவிலின் கருவறையில் மூலப் படிவத்தின் பின்னே ஒரு துவாரம் இருந்தது. அதன் வழியே கடல் நீர் கசிந்து வந்தது. முதிய பூசகர் ஒருவர் அந்த துவாரத்தை கல்லால் அடைத்து வைத்தார். ஒரு சமயம் இளம் நம்பூதிரி ஒருவர் அந்தக் கல்லைப் புடுங்கி விட்டார். நீர் கசிந்தது. அவருக்கு அந்த நீர் எங்கிருந்து வருகிறது என்று கண்டறிய ஆசை. நீண்ட நூலில் மூலப்படிவத்தில் இருந்த மோதிரத்தைக் கட்டி துவாரத்தில் இட்டார்.
மோதிரம் துவாரம் வழி சென்றது. நூலும் போய்க் கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் நூல் அறுந்துவிட்டது. நம்பூதிரி அந்த செய்தியை யாரிடமும் சொல்லவில்லை. இரண்டு நாட்கள் கழிந்தன. ஒரு நாள் சங்கு துறை கடற்கரையில் மீனவன் பெரிய மீன் ஒன்றைப் பிடித்தான். அதை வீட்டிற்குக் கொண்டு சென்று அறுத்த போது மோதிரம் இருப்பதைக் கண்டான். அதை அதிகாரியிடம் கொடுத்தான். அரசனுக்குச் செய்தி தெரிந்தது. மோதிரம் கோவிலின் மூலப் படிவத்திற்கு உரியது என்று அறிந்தனர். இதன் பிறகு அந்த துவாரம் நிரந்தரமாக அடைக்கப்பட்டது.
இந்தக் கோவிலின் கீழே பாற்கடல் உள்ளது. பால் அடிக்கடி கோவில் மண்டபத்தில் பொங்கி வழியும் என்று நம்பிக்கை உண்டு. 1563 ஆம் ஆண்டு ஆதித்தவர்மா காலத்தில் கோவிலின் ஒற்றைக் கல் மண்டபத்தில் ஒரு துவாரத்திலிருந்து பால் பொங்கியது. ஒரு முறை அல்ல இரண்டு மூன்று முறை. 1628 ஆம் ஆண்டு இது போன்ற ஒரு நிகழ்ச்சி நடந்தது. இது போன்ற கதைகள் நிறையவே வழங்கின.
அனந்தபத்மநாபன் பாற்கடல் மீது பள்ளி கொண்டு கிடக்கிறான் என்னும் நம்பிக்கை இது போன்ற கதைகளுக்குக் காரணமாக இருந்திருக்கலாம். இதன் காரணமாக கோவிலின் சில பகுதிகள் பெரிய கல்லால் மூடப்பட்டன.
இந்தக் கோவில் வளாகத்தில் உள்ள அம்பாடி கோவிலில் ஒரு மேடையில் மரத்தாலான அனுமான் சிலை உள்ளது. அம்பாடி கோவிலுக்கு வருகின்றவர்கள் இந்த அனுமனையும் வழிபடுகின்றனர். இந்த அனுமான் ராமேஸ்வரத்திலிருந்து வந்தவன் என்பது நம்பிக்கை.
அர்ஜுனன் தீர்த்த யாத்திரை சென்ற போது ராமேஸ்வரம் கடற்கரையில் நின்றான். ராமன் கட்டிய பாலத்தைப் பார்த்தான். அங்கே ஒரு சிறு குரங்கு நின்று கொண்டிருந்தது குரங்கு அர்ஜுனனிடம் "இந்தப் பாலத்தை வானரப் படைகள் கட்டின என்பது உனக்குத் தெரியுமா" என்றது.
அர்ஜுனன் குரங்கைப் பார்த்து "இந்தப் பாலத்தைக் கட்ட வானரங்கள் தேவையா என்னுடைய பாணம் போதுமே" என்றான். குரங்கு "நீ கட்டும் பாலத்தில் நான் போக முடியுமா?" என்று கேட்டது. அர்ஜுனன் இதோ பார் என்று சொல்லிவிட்டு வில்லை வளைத்துப் பாணத்தைச் செலுத்தினான். பாலம் கட்டினான்.
அந்தக் குரங்கு பாலத்தின் மீது நடந்ததும் பாலம் உடைந்தது. கடலில் விழுந்தது. அர்ஜுனன் திகைத்தான். அப்போது அங்கே குரங்கைக் காணவில்லை. ஒரு சிறுவன் நின்று கொண்டிருந்தான். அவன் "அர்ஜுனா வானரங்கள் பக்தியுடன் கட்டியது இந்தப் பாலம். அவர்களிடம் ஆணவம் இல்லை, அன்பு இருந்தது. உன் பாணம் அகங்காரத்தின் அடையாளம், அது உடைந்து விட்டது " என்றான்.
அர்ஜுனன் பதில் சொல்லவில்லை. திகைத்து நின்றான். சிறுவன் நின்ற இடத்தில் இப்போது அனுமான் நின்று கொண்டிருந்தான். அருகே கிருஷ்ணன் அவன் அர்ஜுனனிடம் "நான் அனந்தன் காட்டுக்குப் போகிறேன். அங்கே கோவில் கொண்டு இருப்பேன். அனுமனும் என்னுடம் வருகிறான். நீ அங்கே வந்து என்னைப் பார்க்கலாம்" என்றான்.
இந்தக் கதை வாய்மொழியாக மட்டுமல்ல தென் திருவிதாங்கூரில் வழக்கில் இருந்த தர்ம ராஜாவின் ராமேஸ்வர யாத்திரை பூதங்களின் கதை என்னும் கதைப் பாடல்களிலும் வருகிறது. வாய் மொழியாகவும் பேசப்படுகிறது. இது போன்று பத்மநாபசுவாமி கோவில் தொடர்பான வேறு கதைகளும் தென்திருதாங்கூர் பகுதிகளில் வாய் மொழியாக உள்ளன. வேறு கதைபாடல்களிலும் மேலோட்டமாகக் குறிப்பிடப்படுகின்றன.
திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவில் மிகப் பழமையானது என்பதற்குப் புராணங்களில் இருந்து மேற்கோள் காட்டுகின்றனர். பத்மநாபன் என்ற அவதாரம் பற்றி வேத வியாசரின் 18 புராணங்களில் குறிப்புகள் வருகின்றன.
வராக புராணத்தில் பாரதத்தின் தெற்கு பகுதியில் மலையா மலை என்னும் மலையின் அருகே ஒரு கடல் உண்டு. அங்கே பாம்பின் மேல் பள்ளிகொண்ட பத்மநாபன் இருக்கின்றான். அவரைத் துதிக்கின்றேன் என்று செய்தி வருகிறது. பிரம்ம புராணத்தில் அனந்த சயனம் என்பது நகரத்தின் பெயராகக் குறிப்பிடப்படுகிறது.
பிரம்மானந்த புராணத்தில் விஷ்ணுவின் நகரமாக அனந்தம் நகர் என்ற பெயர் சொல்லப்படுகிறது. கிபி 10 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த கருநாகப்பள்ளி லட்சுமி தாச நம்பூதிரி என்பவர் சுக சந்தேசம் என்ற நூலில் இக்கோவிலைக் குறிப்பிடுகிறார். இந்தக் கோவிலுக்கு வைஷ்ணவ ஆச்சாரியரான யமுனாச்சாரியார் வந்திருக்கிறார் என்று வைஷ்ணவ குரு பரம்பரை பிரபாவம் கூறும் என்னும் செய்திகளை கோவிலில் வரலாற்றை எழுதியவர்கள் கூறுகின்றனர்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியமான பதிற்றுப்பத்து என்ற நூலில் நாலாவது பத்தில் காப்பியாற்றுக் காப்பியன் என்பவன் விஷ்ணுவை வர்ணிக்கின்றார். இதன் உரையாசிரியர் இங்கு குறிப்பிடப்படும் விஷ்ணு திருவனந்தபுரம் திருமாலே என்கிறார்.
சிலப்பதிகாரத்தில் ஆடக மாடம் என்று குறிப்பிடப்படுவது திருவனந்தபுரம் தான். நம்மாழ்வார் திருவனந்தபுரம் கோவிலை விரிவாகவே பாடி இருக்கிறார். இப்படியான பழமையான இந்தப் கோவில் பற்றிய செய்திகள் சிலவற்றைப் பார்ப்போம்.
திருவனந்தபுரம் பத்மநாத சுவாமி கோவில்பற்றி நம்மாழ்வார் 11 பாடல்கள் பாடியிருக்கிறார். இவரது பாடல்கள் திருவாய்மொழி பத்தாம் பத்தில் செருமிடர் என்னும் தலைப்பில் வருகின்றன. இவரது பாசுரங்களில் கேசவன் பாம்பணை மேல் பள்ளி கொண்டிருக்கிற அனந்தபுரம் கடல் சூழ்ந்தது நிறைய மரங்கள் உடைய பொழில்கள் உடையது வயல்கள் சூழ்ந்தது என்னும் செய்திகள் உள்ளன. அனந்தபுரம் ஊர் பெயரை பத்து இடங்களில் நம்மாழ்வார் கூறுகிறார். நம்மாழ்வார் எட்டாம் நூற்றாண்டவர். அதனால் இக்காலத்திற்கு முன்பு இக்கோவில் பிரபலமாக இருந்திருக்கிறது என்பதை ஊகிக்கலாம்.
இவ்வளவு பழமையும் பிரபலமுமான இந்தக் கோவிலில் 24 கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இந்தக் கோவிலில் உள்ள கல்வெட்டுக்களைத் திருவிதாங்கூர் தொல்லியல் தொகுதிகளில் (1, 2, 3, 4) காணலாம். இந்தக் கோவில் தொடர்பான கல்வெட்டுகள் திருவட்டாறு ஆதிகேசவப். பெருமாள் கோவில், கேரளபுரம் சிவன் கோவில், கன்னியாகுமரி பகவதி கோவில் ஆகியவற்றிலும் காணப்படுகின்றன. இந்த மூன்று கோவில்களும் இப்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளன.
இந்தக் கல்வெட்டுக்கள் தமிழ் மொழியில் வட்டெழுத்து, சமஸ்கிருத மொழியில் மலையாள எழுத்து, சமஸ்கிருத மொழியில் கிரந்த எழுத்து மலையாள மொழியில் மலையாள எழுத்து ஆகியவற்றில் உள்ளன. தமிழ் மொழியில் வட்டெழுத்து வடிவில் அமைந்த கல்வெட்டுக்கள் ஒன்பது அளவில் உள்ளன.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் கருவறை கல்வெட்டு திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலுக்குப் பராக்கிரம பாண்டியன் நிபந்தம் கொடுத்ததைக் குறிப்பிடுகிறது (1070). இதில் பாண்டியனின் அந்தப்புற மகளிர் கோவிலுக்கு ஆபரணங்களை நிவந்தமாகக் கொடுத்த செய்தி வருகிறது. இந்தப் பாண்டியன் குலோத்துங்கன் காலத்தவன் வேணாட்டு வீர ராம கேரளவர்மனின் 1208 ஆம் ஆண்டு தமிழ்க் கல்வெட்டு இக்கோவில் மூலவருக்கு நிபந்தம் அளித்ததைக் கூறும் ஆதித்தவர்மா என்ற சர்வாங்கநாதன் (1374, 1373) வீர ரவி குலசேகர பெருமாள் (1601) கோதை மார்த்தாண்ட வர்மா (16 ஆம் நூற்) ஆகியோரின் கல்வெட்டுக்கள் இக்கோவிலில் உள்ளன வேணாட்டு அரசன் ஒருவன் கோபுர அதிஷ்டானம் கட்டியதை ஒரு கல்வெட்டு கூறுகிறது (1565).
திருவிதாங்கூர் சமஸ்தானத்தை நிறுவிய அனுஷம் திருநாள் மார்த்தாண்ட வர்மா (1728 - 58) இக்கோவிலில் பல கட்டுமானங்கள் செய்திருக்கிறான். இவனது கல்வெட்டுக்கள் 4 அளவில் உள்ளன (1729, 1731 1731, 1739) சித்திரை திருநாள் கட்டுமானம் செய்ததை ஒரு கல்வெட்டும் (1934) ஒற்றைக்கல் மண்டபத்தில் தகடு வேயப்பட்டதை ஒரு கல்வெட்டும் (1990) கூறுகின்றன.
இந்தக் கோவில் சிலப்பதிகார காலத்தது என்றாலும் பெரும்பான்மையான கட்டுமானம் பதினெட்டாம் நூற்றாண்டு ஆரம்பத்தில் தான் நடந்திருக்கிறது. கோவிலின் கிழக்கு சுற்றுச் சுவர் 20 அடி உயரமுடையது. மற்ற பக்கங்கள் 15 அடி உயரம். அண்மை காலத்தில் வரை கோவிலைச் சுற்றி உள்ள பகுதிகளில் தமிழர்கள் நிறைய பேர் இருந்தனர் என்று கோவிலைப் பற்றி விரிவாக எழுதிய ராணி அஸ்வதித்திருநாள் கவுரி லட்சுமிபாய் (Sree Padmanaba swamy Temple 2023 Page 262) கூறுகின்றார்.
இந்தப் கோவில் கிழக்கு நோக்கியது. திராவிடப் பாணி மரபினது. மதுரை நாயக்கர் செல்வாக்கும் உண்டு ஸ்ரீ கோவில், பலிக்கல் மண்டபம், கொடிமரம் மண்டபம், குலசேகர மண்டபம் என பல மண்டபங்களைக் கொண்டது.
வீர ரவிவர்மா காலத்துத் தமிழ்க் கல்வெட்டு (1600) இந்த அரசன் கோவில் பணி செய்ததைக் குறிப்பிடுகிறது. இதே நூற்றாண்டில் கோத மார்த்தாண்டவர்மா என்பவன் திரு அம்பாடி முகமண்டபத்தை அமைத்திருக்கிறான். 16 ஆம் நூற்றாண்டில் வீர ரவி வர்மா காலத்தில் கோவிலின் சில பகுதிகள் நெருப்பால் அழிந்தன.
அனுஷம் திருநாள் மார்த்தாண்ட வர்மா காலத்தில் கோவிலில் பெரும்பாலான பணிகள் நடந்தன. தீபசாலை, அலங்கார மண்டபம் கருவறை, பிரகாரம், போன்றவை பழுது நீக்கப்பட்டன. 1732இல் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.
இந்தக் கோவிலின் ஒற்றைக்கல் மண்டபத்தின் தரை ஒரே கல்லால் ஆனது. இது திருவனந்தபுரம் திருமலை என்ற இடத்திலிருந்து கொண்டு வரப்பட்டது என்பதற்குத் தனிக்கதைகள் உள்ளன.
கோவில் கோபுரம் ஏழு நிலைகளைக் கொண்டது. 100 அடி உயரம், கோவிலின் எதிரே பத்ம தீர்த்தம் என்னும் பெயருடைய குளம் உள்ளது. கோவில் கருவறையில் பத்மநாபன் அனந்த சயனம் கொண்டிருக்கிறான். இவரது இடது கையில் தாமரை நாபியில் பிரம்மா 10008 சாளக்கிரமங்களைக் கொண்ட இந்த கடுசர்க்கரை படிமம் 18 அடி நீளமுடையது.
திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலுக்கு உரிமையான நஞ்சை, புஞ்சை நிலங்கள் தென் திருவிதாங்கூர் பகுதிகளில் உள்ளன. குறிப்பாக நாஞ்சில் நாட்டில் நிறையவே வயல்கள் இருந்தன. இவற்றைப் பராமரித்த குத்தகைக்காரர்களிடம் இந்த கோவில் பற்றி வாய்மொழி கதைகள் வழங்கின. வில்லிசை கலையில் பாடப்படும் கதைப்பாடல்கள் சிலவற்றிலும் இந்தக் கோவிலின் தோற்றம் பற்றிய கதைகள் வருகின்றன.
இந்தக் கோவில் பற்றி ஒன்பதுக்கு மேற்பட்ட கதைப்பாடல்களில் செய்திகள் வந்தாலும் பெருமாள் சாமி கதை அல்லது திருவரங்கநாதன் அனந்தபுரம் வந்த வரலாறு, சோமண்டி கதை, பூதங்களின் கதை ராமேஸ்வரம் யாத்திரை ஆகியவற்றில் நேரடியான செய்திகள் வருகின்றன.
திப்பு சுல்தான் படையெடுப்பு தொடர்பான திவான் வெற்றி என்ற கதைப்பாடலில் இந்தக் கோவிலுடன் தொடர்புடைய பிராமணர்கள் நாஞ்சில் நாட்டில் குடியேறியது குறித்த செய்திகள் வருகின்றன. ராம கீர்த்தனம் என்னும் ராமாயண கதை பாடலில் இந்த கோவிலுடன் தொடர்புடைய அனுமன் குறித்த ஒரு கதை வருகிறது.
பெருமாள் சாமி கதை 1909ல் (பாலம் பதிப்பு திருநெல்வேலி) அச்சில் வந்திருக்கிறது. ஆறுமுகப்பெருமாள் நாடார் திருந்திய பதிப்பு ஒன்று வெளியிட்டுள்ளார் (1969 நாஞ்சில் அச்சகம் நாகர்கோவில்). சோமாண்டி கதையும் பூதங்களின் கதையும் ஏட்டு வடிவில் உள்ளன.
பெருமாள்சாமி கதை வருமாறு; திருவரங்கம் கோவிலில் பூசை செய்த தர்ம சிந்தனை உடைய பூசகன் ஒருவனை மற்ற பூசகர்கள் பொறாமையால் துன்புறுத்தினார். அந்தப் பூசகன் திருவரங்கம் கோயிலை விட்டு வெளியேறினான். அப்போது ரங்கநாதன் சேத்திர பாலன், ஈஸ்வர பாலன், சங்கிலி பூதம் ஆகிய மூன்று பூதங்களுடன் புறப்பட்டார் பூசகனும் உடன் வந்தான்.
அரங்கநாதனும் பூசகனும் பூதங்களும் திருவரங்கத்திலிருந்து. புறப்பட்டு சீர்காழி, உறையூர், தில்லை, மதுரை திருவில்லிபுத்தூர், திருநெல்வேலி என பல இடங்களைக் கடந்து திருக்குறுங்குடி வந்தனர். அரங்கநாதன் அங்கே பூதங்களையும் பூசகனையும் இருக்குமாறு சொன்னார்.
அரங்கநாதன் திருவிதாங்கூர் எல்லைக்குள் நுழைந்து திருவட்டாறு வந்தார். அங்கிருந்து திருவனந்தபுரத்திற்கு அருகில் உள்ள அனந்தம் காட்டிற்குச் சென்றார் அங்கே குழந்தையாக மாறி இலுப்பை மரம் ஒன்றிலே மறைந்திருந்தார் திருக்குறுங்குடியில் இருந்த பூசகன் அரங்கனைப் பிரிய மனமில்லாமல் அனந்தன் காட்டுக்கு வந்தான். அங்கே அவரைத் தேடிக் கண்டுபிடித்தான். அவருக்குப் பூசை செய்ய விரும்பினான் அந்தக் காட்டில் இருந்த ஈழுவ சாதியினன் ஒருவனிடம் சிரட்டையில் தீயைப் பெற்று முறைப்படி வழிபாடு செய்தான்.
அரங்கன் அனந்தன் காட்டுக்கு வந்ததைக் கனவிலே கண்ட திருவிதாங்கூர் மன்னன் இலுப்பை மரத்தை அடையாளம் கண்டு வந்தான். அந்த இடத்தில் பெரிய கோவில் ஒன்றைக் கட்டினான். இந்தக் கதை சிறு மாற்றங்களுடன் நாஞ்சில் நாட்டில் வழங்குகிறது. சோமாண்டி கதையும் பூதங்கள் கதையும் பெருமாள் சாமி கதையுடன் தொடர்புடையன.
அரங்கநாதனால் திருக்குறுங்குடி மலையில் தாபிக்கப்பட்ட பூதங்களின் கோவிலில் பூசகன் ஒருவன் பூசை செய்தான். அவனது மகனை மூன்று பூதங்களில் ஒன்று கொன்றுவிட்டது. அதனால் பூசகன் பூதங்களைப் பழி வாங்கினான். ஆனால் பூதங்கள் அவனைக் கொன்றன. அவனுக்கு உதவி செய்த வேளாளப் பிரமுகரையும் கொன்றன. மறுபடியும் அங்கே கோவில் கொண்டன. இந்தப் பூதங்களின் கோவிலில் இருந்த பெருமளவு தங்க ஆபரணங்களைப் பூதங்கள் பாதுகாத்தன.
இந்தக் கதைகளுக்கெல்லாம் மூலமான கதை வைஷ்ணவ பாரம்பரியத்தில் வழங்குகிறது. இந்தக் கதை திருமழிசையாழ்வாரின் கதையுடன் தொடர்புடையது. காஞ்சிபுரத்தில் கிழக்கே உள்ள ஒரு சிறு கிராமத்தில் பார்க்கவர் என்ற முனிவர் இருந்தார். அவருடைய மனைவி கனகாங்கி. இவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்தது. அதற்கு கை கால் முதலிய உறுப்புகள் இல்லை. அதனால் வருத்தப்பட்ட முனிவர் அந்தக் குழந்தையை பிரம்புப் புதரில் போட்டு விட்டு சென்று விட்டார்.
அந்தக் குழந்தை திருமாலின் அருளால் முழு வடிவம் பெற்று அழுது கொண்டிருந்தது. அப்போது அந்த வழியே, திருவாளன் பங்கயச்செல்வி என்னும் தம்பதியர் வந்தனர். அவர்கள் குழந்தையை வளர்த்தனர். அந்தக் குழந்தை தெய்வத்தன்மை வாய்ந்தது என்பதைக் கண்டு கொண்டனர்.
அந்தக் குழந்தை பல கலைகளைக் கற்று முதிர்ந்த ஞானியைப் போன்று திகழ்ந்தது. சைவ தத்துவத்தில் ஈடுபாடு உடையதாக இருந்தது. சிவவாக்கியர் என்ற பெயரைப் பெற்றது. திருவாளன் தம்பதியருக்கு ஒரு குழந்தை பிறந்தது. அதற்குக் கணிகண்ணன் என்று பெயரிட்டனர். கணிகண்ணன் சிவவாக்கியரின் சீடனாக அமர்ந்து கல்வி கற்றான்.
சிவவாக்கியர் ஒரு முறை திருமயிலை சென்றபோது பேயாழ்வாரைச் சந்தித்தார். ஆழ்வார் சிவவாக்கியாருக்கு நாராயணனின் திருமந்திரத்தை முறைப்படி கற்பித்தார். சிவவாக்கியர் திருமழிசை ஆழ்வார் ஆனார்.
அவரது சீடன் கணிகண்ணனுடன் காஞ்சிபுரத்தில் இருந்தார். அங்கு அவரது வீட்டில் வயதான பெண்ணொருத்தி பணிவிடை செய்தாள். அவளது சேவையைக் கண்ட ஆழ்வார் உனக்கு என்ன வரம் வேண்டும் கேள் என்றார். அந்த முதிய பெண் எனக்கு இளமை வேண்டும் என்று கேட்டாள். ஆழ்வார் வரம் கொடுத்தார். அவள் இளம் அழகியாக மாறிவிட்டாள்.
அந்த அழகியைப் பார்த்த அந்த ஊர் மன்னன் அவளைத் தனக்கு இரண்டாம் மனைவியாக வைத்துக் கொண்டான். அவளுக்கு இளமை வந்த வரலாற்றைக் கேள்விப்பட்டு கணிகண்ணனிடம் உன் ஆசிரியரிடம் சொல்லு எனக்கும் இந்த இளமை வரவேண்டும் என்றான்.
கணிகண்ணன் அரசனிடம் என் குருநாதர் உன் மனைக்கு வர மாட்டார். உன்னைப் பாட மாட்டார் என்றான். அதனால் அரசன் நீ என் நகரை விட்டு சென்று விடு என்றான். இதைக் கேள்விப்பட்ட திருமழிசையாழ்வார் நானும் உன்னிடம் வருகிறேன் என்றார். மட்டுமல்ல அரங்க நாதனைப் பார்த்து
கணிகண்ணன் போகின்றான் ; காமரும் பூங் கச்சி
மணிவண்ணா நீ கிடக்க வேண்டா - - துணிவுடைய
செந்நாப் புலவனும் போகின்றேன் நீயும் உன்றன்
பைந்நாகப் பாய் சுருட்டி கொள்
என்றார். உடனே ரங்கநாதனும் அவருடன் புறப்பட்டான். இந்த விஷயத்தைக் கேள்விப்பட்ட அரசன் ஆழ்வாரைப் பணிந்தான். ஆழ்வார் தன் பாடலை மாற்றி, பாய் விரித்துக்கொள் என்று பாடினார்.
இந்தக் கதையின் பின்னணியில் பெருமாள் சாமி கதை உருவானது மட்டுமல்ல பெருமாள் சாமிக்குக் கன்னியாகுமரி மாவட்டத்தில் கோவிலும் இருக்கிறது.
இலந்த விளை என்ற ஊரில் உள்ள பெருமாள் சாமி கோவிலில் அரங்கநாதன் ஐம்பொன் விக்ரகமாக இருக்கிறான். அமர்ந்த கோலம் நான்கு கைகள் இரண்டு கைகளில் சங்கு சக்கரம் பிற இரண்டும் அபய வரத முத்திரைகள் காட்டுகின்றன. இங்கே இவர் நாட்டார் தெய்வமாகவே இருக்கிறார். இங்கே பெருமாள்சாமிக்கு வேறு ஊர்களிலும் கோவில்கள் உள்ளன.
இந்தப் பெருமாள் சாமிக்கு ஆடு கோழி பலி கொடுக்கப்படுகிறது. கொடை விழாவின் போது சாமி ஆடுபவர் சாமிக்கு அருள் வந்து ஆடுகிறார். நாட்டார் தெய்வக் கோவில்களில் விழாவும் பூசையும் எப்படி நடக்கிறதோ அப்படியே இங்கு நடக்கிறது.
சோமாண்டி கதையிலும் பூதங்கள் கதையிலும் அரங்கநாதன் பெரும் செல்வத்துடன் ஸ்ரீரங்கத்தில் இருந்து வந்தான். அதைப் பூதங்கள் பாதுகாக்கின்றன என்ற தகவல் உள்ளது. பொதுவாக இந்த மூன்று பூதங்களும் பெரும் பொக்கிஷங்களைப் பாதுகாப்பன என்னும் வாய் மொழிக்கதைகள் அதிகம் உண்டு. இந்தக் கதைகளை எல்லாம் பத்மநாபசுவாமி கோவிலுடன் பொருத்திப் பார்க்கலாம்.
- அ.கா.பெருமாள்