இப்போது தமிழ்நாட்டில் தி.மு.கழகத்தை எதிர்த்து நிற்கும் கட்சித்தகுதி எதற்கும் இல்லை. அ.தி.மு.க அந்தத் தகுதியை இழந்து விட்டது.

நீட் தேர்வை நீக்கமறுக்கும், தமிழ்நாட்டுக்குத் தர வேண்டிய நிதியைத் தரமறுக்கும், இந்தி-சமஸ்கிருதத்தை வலிந்து திணிக்கும், தமிழ்நாட்டு மீனவர்களை- அவர்களின் படகுகளைக் காப்பாற்ற மறுக்கும், இதுபோலத் தமிழின விரோதப் போக்குடன் இருக்கும் சர்வாதிகார, பா.ஜ.கவுடன் கூட்டணியே கிடையாது என்று 'சத்தியம்' செய்த எடப்பாடி, இன்று அதனுடன் கொண்டிருக்கும் கூடாநட்பைக் கூட்டணி என்று சொல்வதனால் கொஞ்சநஞ்சம் இருக்கும் மக்கள் ஆதரவையும் அ.தி.மு.க இழந்துவிட்டது. பா.ஜ.க. தமிழ்நாட்டில் 'போணி' ஆகாத கட்சி.

நேற்று பிறந்த கட்சியின் தலைவர் விஜய் கோவைக்குச் சென்றபோது, அவரின் தொண்டரடிப் பொடிகள் நடந்து கொண்ட சர்க்கஸ் காட்சிகளை விஜய்யே கண்டித்துள்ளார். இதே சர்க்கஸ்தான் அவர் கொடைக்கானல் படப்பிப்புக்குப் போனபோதும் நடந்துள்ளது.

இதுபோன்ற கட்சிக் கட்டுப்பாடற்ற சினிமாக் கூட்டம், நாளைய முதலமைச்சர் மட்டுமல்ல, நாளைய பிரதமராகக் கூட ஆகிவிடலாம் என்று கனவு காண்பதை யாரும் தடுக்க முடியாது. நேற்று பிறந்தவர்கள் எல்லாம், நேற்று கட்சி தொடங்கியவர்கள் எல்லாம், அரசியலுக்கு அரிச்சுவடு கூடத் தெரியாதவர்கள் எல்லாம் நான்தான் அடுத்த முதலமைச்சர் என்கிறார்கள். அவர்களைக் கணக்கில் எடுக்கத் தேவையில்லை என்று அண்மையில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் பேசியிருக்கிறார். அப்படிப் பட்ட துண்டுதுக்கடா கட்சிகள் இருக்கத்தான் செய்கின்றன, முதலமைச்சர் கனவுகளோடு.

தேர்தல் அனுபவம், ஆட்சி அனுபவம், மக்களிடம் பெரும்செல்வாக்கைப் பெற்றிருக்கும் வலிமையான இயக்கம் தி.மு.கழகமும் அதன் கூட்டணியும்.

முதல்வர் ஸ்டாலின் சொல்வதுபோல அவரின் நான்காம் ஆட்சியாண்டு நிறைவுற்று, ஐந்தாம் ஆண்டில் கால்பதித்து விட்டார். ஏழாவது முறையாக தி.மு.க ஆட்சிதான், முதல்வராகப் பொறுப்பேற்பார் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள்!

- கருஞ்சட்டைத் தமிழர்