கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- செல்வராஜ் ஜெகதீசன்
- பிரிவு: தொழில்நுட்பம்
சம்சாரம் அது மின்சாரம் என்பதில் சம்சாரத்தைப் பற்றி ஓரளவாவது(!) அறியும் நமக்கு மின்சாரத்தைப் பற்றி எந்த அளவுக்குத் தெரியும்? இந்த சிந்தனையில் விளைந்ததே இந்த சிறு கட்டுரை. சில அடிப்படை விஷயங்களோடு தொடங்குவோம்.
மின் அழுத்தம் (voltage), மின் ஓட்டம் (current), மின் தடை (resistance).
நம் வீட்டிலுள்ள எல்லா மின்சார சாதனங்களிலும் (230V, 5A) என்பது போன்று குறிக்கப்பட்டிருப்பதை அநேகம் பேர் பார்த்திருப்போம். இதில் உள்ள V உணர்த்துவது voltage, A என்பது ampere என்பதின் சுருக்கம்.
மின்னோட்டத்தை கணக்கிட உதவும் அலகு ampere. மின்னழுத்தத்தை அளவிட volts. இதோடு மின் தடை (resistance).
இந்த மூன்றையும் ஒரு உதாரணம் மூலம் புரிந்து கொள்ள முயல்வோம். காலையில் எழுந்ததும் நாம் பல் விளக்கப் பயன்படுத்தும் பற்பசை குழாயை எடுத்துக்கொள்வோம். அதனுள் இருக்கும் பற்பசையை மின்னோட்டம் (current) என்று வைத்துக்கொள்வோம். அந்த பசை வெளிவர நாம் கொடுக்கும் அழுத்தம்தான் மின்னழுத்தம் (voltage). பசை வெளியேற ஒரு எதிர்ப்பை அந்தக் குழாய் கொடுக்குமே அதுதான் மின் தடை (resistance).
அழுத்தம்(voltage) அதிகமாய் கொடுத்தால் அதிக அளவில் பசை (current) வெளியே வரும். அப்படி வெளிவரும் அளவு அந்த குழாய் தரும் எதிர்ப்பையும் சார்ந்த ஒன்று தானே? இப்போது இந்த மூன்று காரணிகளையும் இணைக்கும் வாய்ப்பாடு (formula) ஒன்றைப் பார்ப்போம்.
V = I x R
அதாவது,
மின்னழுத்தம் = மின்னோட்டம் x மின் தடை
இதை முன்னிறுத்தி மின்னியலின் ஆதாரமான அடிப்படை விதி (Ohms law) ஒன்று உள்ளது.
["At constant temperature, the current flowing through a conductor is directly proprtional to the voltage difference between its ends"]
"ஒரு கடத்தியின் (conductor or wire) வழியே செல்லும் மின்னோட்டம் (current) அதன் இரு முனைகளுக்கிடையே உள்ள மின்னழுத்தத்தை (voltage) நேரடியாகச் சார்ந்தது."
இந்த கட்டுரையின் புரிதல் மற்றும் தெளிவு பற்றிய உங்களின் கருத்துகளைப் பார்த்தபின், அடுத்த பகுதியில் இன்னும் சற்று முன்னெடுத்துச் செல்ல விருப்பம்.
- செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி
- விவரங்கள்
- தமிழநம்பி
- பிரிவு: தொழில்நுட்பம்
பல்வேறு மதங்களின் துய்த(புனித) நூல்களை இயற்றிய எழுத்தாளர்கள், புடவி(universe)யின் உண்மையான இயல்பு பற்றிய அறிவைப் பெற்றிருக்கவில்லை. அவர்களனைவருமே இவ்வுலகம் தட்டையானதென்றும் புடவியின் நடுவாக உள்ளதென்றும் நினைத்தார்கள். இவ்வுலகம் உருண்டையானதென்று கூறிய முதல் ஆளான, கியார்டானோ புரூனோ, உரோமன் கத்தோலிக்கத் திருச்சவையால் எரிக்கப்பட்டு இறந்தார்.
உலகம் இடம்பெயரா நிலையினதென்றும் கதிரவக்கோளே இவ்வுலகைச் சுற்றிக்கொண்டிருக்கிறது என்றும் கூறும் கிறித்தவ மத நூலான ‘பைபிள்’ கருத்துக்களை எதிர்த்த 'குற்ற'த்திற்காகக் கலீலியோ கத்தோலிக்கத் திருச்சவையால் சிறைக்கனுப்பப்பட்டார்.
புடவியைப் பற்றிய இன்றைய நம் அறிவனைத்தும் வானியலரின் அறிவியல் ஆராய்ச்சிகளால் பெற்றவையேயன்றி, மத நூல்களிலிருந்து பெற்றவை அல்ல. இவ்வுலகம் மற்றைய கதிரவக் கோள்களைப் போலவே நானூறு கோடி ஆண்டுகளுக்கு முன்னர், விண்வெளித் துகள்களின் தொகுப்புத் திரண்மையால் உருவானதென்று வானியலர் கருதுகின்றனர். பின்னர், இவ்வுலகின் வெதண(temperature) வளிப்புரிய(atmospheric) நிலைகள் பொருத்தமானவையாக அமைந்தபோது வேதியல் வினைப்பாடுகளின் விளைவால் உயிர்த் தோற்றம் ஏற்பட்டது.
எரிமலை மற்றும் கதிரவ ஆற்றல்களின் தாக்கத்துடன், உலகின் மிகத்தொன்மையான வளிப்புரிய நிலையில் சதுப்புவளி(methane), குருவளி (ammonia), நீர் ஆகியவற்றிலிருந்து உயிர்க்கக்கூடிய உயிர்மப்பொருளின் (livable organic matter) மூலக்கூறுகள் உருவாயின. (நோபல் பரிசு பெற்ற முனைவர் அர்கோபிந்து கொரானாவும் முனைவர் சிரில் பொன்னம்பெருமாவும், உலகின் மிகத்தொன்மையான வளிப்புரிய நிலைகளை, அவர்களின் ஆய்வறைகளில் செயற்கையாக ஏற்படுத்தி உயிர்வாழக்கூடிய உயிர்மப்பொருளின் மூலக்கூறுகளை உண்டாக்குவதில் வெற்றி கண்டுள்ளனர்)
இம்மூலக்கூறுகள் காலப்போக்கில் மறுபகர்ப்புறவும், மெள்ள சேர்மவுயிரகவாக்கம் (slow oxidation) என்கின்ற மூச்சுயிர்ப்பு (respiration) மூலம் ஆற்றலை உண்டாக்கவுமான பண்புகளை வளர்த்துக் கொண்டன. மூச்சுயிர்க்கின்ற உயிர்மப்பொருள் உண்டாக்கிய இவ்வகை ஆற்றலையே நாம் உயிர் என்கின்றோம். மூச்சுயிர்த்துக் கொண்டு, உயிர்ப்பாற்றலை (vital energy) உருவாக்குகின்ற பொழுது உயிர்மப்பொருள் உயிரியாக (உயிர்வாழ்கின்ற ஒன்றாக) ஆகி விடுகின்றது.
மிகத் தொன்மைக் காலத்தில், நிலத்தில் உருவாகிய உயிர்மப் பொருளின் (organic matter) மூலக்கூறுகள் காலப்போக்கில் ஒற்றைக்கல உயிரிகளை (unicellular organisms) உருவாக்கின. இவையே, பல இலக்கக்கணக்கான ஆண்டுப் படிநிலை வளர்ச்சியின் விளைவாக, இன்றைய மரவடை மாவடை(flora and fauna)களைத் தந்துள்ளன.
புகழ்பெற்ற வான்பூதியலர் (astrophysicist) ஆர்லொ சேப்ளி, உயிர்கள் இருக்கக்கூடிய பல இலக்கக்கணக்கான கோள்கள் விண்வெளியில் இருக்கக்கூடும் என்று கூறுகின்றார். இக்கோள்களுள் சிலவற்றில், மாந்தனை விடப் படிநிலைவளர்ச்சியிலும் அறிவுத்திறத்திலும் மிகுந்த வளர்ச்சி பெற்ற உயிரிகள் இருக்கலாமெனவும் சொல்லுகின்றார். சில வான்பூதியலர், இவ்வுலகை அடைந்த எரிகற்கள் மற்றும் வால்விண்மீன்களின் வழியாக உயிர்க்கக்கூடிய உயிர்மப்பொருளின் மூலக்கூறுகள் இங்கு வந்தனவென்று கருதுகின்றனர்.
நிலவில் உள்ள நிலைமைகள் உயிர்நிலைப்புக்கு ஏற்பேய்வு இல்லாமை காரணமாக, நிலவிற்குச் சென்ற விண்செலவர்(astronauts), உயிரின் விளைவாக்கத்திற்குத் தேவையான கீழ்க்காணும் மூன்று பொருள்களையும் அவர்களுடன் எடுத்துச் சென்றனர். அம்மூன்று பொருள்கள்: 1. உயிர்க்கக் கூடிய பொருள் [புரத்துப்பயினம்(proteinic protoplasm)] 2. உணவு, நீர் வடிவில் உணவூட்டம் 3. உயிர்வளி(oxygen).
இம்மூன்றனுள் முதலாவதை அவர்கள் தங்கள் உடல்களிலும், மற்ற இரண்டையும் கொள்கலன்களிலும் எடுத்துச் சென்றனர். இவ்வுயிராக்கப் பொருள்களில் எதிலேனும் பற்றாக்குறை ஏற்பட்டிருந்தால் அவர்கள் இவ்வுலகிற்கு உயிருடன் திரும்பியிருக்க மாட்டார்கள்.
உயிரிகளின் கலன்(cell)களில் காணப்படும் இனிகம்(glucose), கொழுப்புகள், புரத்தம் போலும் ஊட்டமளிக்கும் பொருள்களின் மெள்ள சேர்ம வுயிரகமாக்கம் (மூச்சுயிர்ப்பு) உண்டாக்கும் ஆற்றலின் வடிவமே உயிர்! அது, உயிரிகளின் கண்ணறை எனப்படும் கலன்களில் (cells) நடக்கும் வேதிய எதிர்வினைகளின் விளைவாகும். இந்த, உயிர் உண்டாக்கும் மூச்சுயிர்ப்பு, மெழுகுத்திரி போல் எரிபொருளை எரிப்பது போன்றதிலிருந்து எவ்வகையிலும் வேறுபட்டது இல்லை. வேதிய எதிர்வினைகளின் வேகத்தில் மட்டுமே இரண்டிற்கும் வேறுபாடு உள்ளது.
ஓர் உயிரியின் உடலில் நிகழும் சேர்ம வுயிரகமாக்கம், எரிபொருள் எரிந்துகொண்டிருக்கின்ற வேகத்தில் நடைபெறுமானால், அதனால் ஏற்படும் உயர்வெதணம்(high temperature) உயிர்க்கக்கூடிய பொருளை அழித்துவிடும். மெழுகுப்பொருள் வேதியச்சிதைவு உறாதவரையில் அதைப் பலதடவைகள் எரியவிடவும் அவிக்கவும் செய்யலாம். அதைப்போன்றே, ஓர் உயிரின் உடலிலுள்ள புரத்துப்பயினீர்(protoplasm) சிதைவுறாமலிருந்தால் இறந்த உடலைச் செயற்கை வழிகளால் பலமுறை உயிர்பெறச் செய்ய முடியும்.
1963இல் அமெரிக்கத் திரைப்பட நடிகர் பீட்டர் செல்லர்சு ஏழுமுறைகள் இறந்தார். ஒவ்வொரு முறையும் மின்துகளிய நெஞ்சவியக்கியைப் (electronic pacemaker) பயன்படுத்தி உயிர்த்தெழுப்பப்பட்டார். ஏழாவது மறுவுயிர்ப்பின் பிறகு, அவர் மேலும் பல படங்களில் நடித்தது மட்டுமின்றி மேலும் இரு குழந்தைகளைப் பெற்றுக் கொண்டார். அவிக்கப்பட்ட ஒரு மெழுகுத்திரியை மீண்டும் எரியவிடும் நிகழ்ச்சியில், அவிக்கப்பட்டபோது மெழுகுத்திரியின் சுடர் விலகிப் போனதாகவும் மீண்டும் அதை எரிய விட்டபோது, அச்சுடர் திரும்பி வந்ததாகவும் நாம் சொல்லுவதில்லை.
அதைப்போலவே, பீட்டர் செல்லர்சு இறந்த ஒவ்வொரு முறையும் அவருடைய உடலைவிட்டு உயிர் பிரிந்தது என்பதும் பின்னர் உயிர்ப்பிப்பின் போது, அவ்வுடலுக்குத் திரும்பி வந்தது என்பதும் பொருளற்ற உரைகளே!
- தமிழநம்பி
- விவரங்கள்
- மு.குருமூர்த்தி
- பிரிவு: தொழில்நுட்பம்
'கார்போஹைட்ரேட்' என்பது தான் சரியான பதில்.காரின் எஞ்சினுக்கு பெட்ரோல் எப்படியோ அப்படித்தான் உடல் என்கிற எந்திரத்திற்கு கார்போஹைட்ரேட் என்கிற உணவுப் பொருள். குளுகோஸ் என்பதுதான் எளிமையான கார்போஹைட்ரேட். இது ரத்த ஓட்டத்தில் உடனடியாகக் கலந்து உடல் வேலை செய்வதற்குத் தேவையான சக்தியைக் கொடுக்கிறது. பட்டினியாய் கிடப்பவன் சோர்ந்து போவதும், உணவு சாப்பிட்டவுடன் உடலுக்கு சுறுசுறுப்பு ஏற்படுவதும் இதனால்தான்.
நீங்கள் தண்ணீரில் குளுகோசை கரைத்துக் குடித்தால் உங்களுடைய செரிமான உறுப்புகள் வழியாக குளுகோஸ் நேரடியாக இரத்தத்தில் கலந்து சக்தி கிடைத்துவிடுகிறது. குளுகோஸ் மூலக்கூறில் கார்பன் அணுக்களும், நீர் மூலக்கூறும் அடங்கியிருக்கின்றன. ஒரு குளுகோஸ் மூலக்கூறில் ஆறு கார்பன் அணுக்களும், ஆறு நீர் மூலக்கூறுகளும் அடங்கியுள்ளன.
குளுக்கோஸ் ஒரு எளிமையான சர்க்கரைப்பொருள். இதனால்தான் நாக்கில் பட்டவுடன் இனிக்கிறது. குளுக்கோஸின் வேறொரு வடிவம் ஃப்ரக்டோஸ். இது பழங்களில் இருக்கிறது. ஃப்ரக்டோஸும், குளுக்கோஸும் ஒரே மாதிரியான மூலக்கூறுகள்தான். ஆனால் அணுக்களின் அமைப்பில் கொஞ்சம் வேறுபாடு இருக்கிறது. நம்முடைய கல்லீரல் ஃப்ரக்டோசை குளுக்கோசாக மாற்றுகிறது. இதேபோல் நாம் சீனி என்றழைக்கும் சுக்ரோஸ், பாலில் மறைந்துள்ள லாக்டோஸ், மாவில் மறைந்துள்ள மால்டோஸ் என்பவையும் குளுக்கோசின் வெவ்வேறு வடிவங்கள் ஆகும்.
குளுக்கோசும், ஃப்ரக்டோசும் நேரடியாக ரத்தத்தில் கலந்து கொள்ளக்கூடியவை. ஆனால் லாக்டோஸ், சுக்ரோஸ், மால்டோஸ் இவையெல்லாம் என்சைம்கள் உதவியால் மாற்றமடைந்து ரத்ததில் கலக்கப்படுகின்றன. அடுத்தமுறை பாக்கெட் உணவை வாங்கும்போது கார்போஹைட்ரேட் என்கிற தலைப்பில் என்னென்ன உள்பிரிவுகள் எழுதியிருக்கிறார்கள் என்பதைப் பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.
மிகவும் சிக்கலான குளுக்கோஸ்களைப் பற்றியும் நாம் தெரிந்து கொள்ளவேண்டும். அரிசி, கோதுமை, ஓட்ஸ், சோளம் போன்ற தானியங்களும், உருளைக்கிழங்கு, வாழைப்பழம் போன்றவற்றில் சிக்கலான கார்போஹைட்ரேட்கள் உள்ளன. இந்த சிக்கலான கார்போஹைட்ரேட்டுகளை என்சைம்களின் உதவியால் சிதைவடையச் செய்து எளிமையான குளுக்கோஸாக உடல் உறுப்புகள் மாற்றுகின்றன.
சிக்கலான கார்போஹைட்ரேட்டுகள் சிதைவடைந்து இரத்தத்தில் கலப்பதற்கு கூடுதல் நேரம் பிடிக்கும். ஒரு இனிப்பான சோடவைக் குடித்தால் ஒரு நிமிடத்திற்கு 30 கலோரிகள் என்ற வீதத்தில் குளுக்கோஸ் இரத்தத்துடன் கலந்து விடுகிறதாம். ஆனால் சிக்கலான கார்போஹைட்ரேட்டுகள் ஒரு நிமிடத்திற்கு 2 கலோரிகள் என்ற வேகத்தில் இரத்தத்துடன் கலக்கிறதாம்.
- மு.குருமூர்த்தி
- விவரங்கள்
- நளன்
- பிரிவு: தொழில்நுட்பம்
அமெரிக்காவில் ட்ரெக்வான் ஆராய்ச்சிக் கூடமும் நாசா விண்வெளி மையமும் இணைந்து ஒருவர் பறந்து செல்லக்கூடிய சிறிய காற்றாடி விமானத்தை கண்டுபிடித்துள்ளனர். ஆங்கிலத்தில் springtail என்று அழைக்கப்படும் இந்த காற்றாடி விமனாங்களில் வானில் மணிக்கு 182 கிலோமீட்டர் வேகத்தில் கூட பறந்து செல்லலாம். 46 லிட்டர் அளவுள்ள டாங்கியில் நிறப்பிய எரிபொருளை கொண்டு 296 கிலோ மீட்டர் வரை பயணிக்கலாம். தரையிலிருந்து 11,000 அடி உயரம் வரை இந்த விமானத்தால் பறக்க முடியும். இத்தனை திறன் இருந்தும் இதனை சராசரியாக 400 அடி உயரத்தில் மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில் பயன்படுத்தப்போவதாக ட்ரெக் ஆராய்ச்சிக்கூட விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
காற்றாடி விமானத்தில் பயணிக்கும் நபருக்கு சில உடற்தகுதிகள் வேண்டும். அவர் உயரத்தில் ஐந்தரை அடியிலிருந்து ஆறரை அடிக்குள்ளும். எடையில் 50 கிலோவிலிருந்து 125 கிலோ வரை மட்டும் இருக்கவேண்டும். அப்போதுதான் விமானத்தை அதிக உயரங்களில் கட்டுப்பாடாக ஓட்ட முடியும்.
காற்றாடி விமானங்களின் முக்கியப் பகுதியாக இருப்பது 118 குதிரை சக்தி மிக்க சக்திவாய்ந்த மோட்டார் இயந்திரம். இதனை கொண்டு இதன் மேல் உள்ள இரு பெரிய காற்றாடிகள் சுழன்று இவை வானில் பறக்க ஆரம்பிக்கின்றன. வீடியோ விளையாட்டுகளில் பயன்படுத்தப்படும் ஜாய்ஸ்டிக் கருவிகள் இந்த விமானத்தில் பயன்படுத்தப்படுகிறது. இடது பக்கமிருக்கும் ஜாய்ஸ்டிக் கருவியின் மூலம் விமானத்தின் உயரத்தையும், வலது பக்க கருவியின் மூலம் விமானத்தின் திசையையும் மாற்றி கட்டுப்படுத்தலாம். ஹெலிகாப்டர் எப்படி பறக்கிறதோ, அதே போல இவையும் ஒரே இடத்தில் அந்தரத்தில் பறந்தபடி நிற்க முடியும். பல வகைகளிலும் அளவுகளிலும் காற்றாடி விமானங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. உயர்தர 120 ஆக்டேசன் பெட்ரோலை கொண்டு இயக்கக்கூடிய வகையில் முதல் காற்றாடி விமானங்கள் தயாரிக்கப்பட்டாலும் தற்போது சாதாரண பெட்ரோலையும், ஏன் டீசலை கொண்டும் இயங்கும் படி புதிய விமானங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இயந்திரக்கோளாறு காரணமாக விமானம் நடுவானில் நின்று விட்டாலும் அதில் பயணிப்பவர் பயப்படத் தேவையில்லை. விமானத்திலிருக்கும் பாராசூட்டின் மூலம் அவர் தப்பித்து விடலாம். முதல் பாராசூட் வேலை செய்யவில்லையென்றால் கூட கவலையில்லை. இருக்கவே இருக்குகிறது இரண்டாம் பாராசூட். ஆம் இதில் இரண்டு பாராசூட்கள் உள்ளன.
இந்த விமானத்தை சோதனை முயற்சியாக முதலில் பயன்படுத்தும் போது ஒரு இராட்சத கிரேன் இயந்திரத்துடன் விமானம் கயிற்றின் மூலம் கட்டப்பட்டிருந்தது. விமானம் செயலிழந்தால் உடனே கிரேன் வழி கயிற்றின் மூலம் விமானம் தரையில் விழாமல் பாதுகாக்கவே இவ்வாறு செய்யப்பட்டது. கயிற்றின் மூலம் கட்டப்பட்டு இதுவரை 200 முறையும் கயிற்றில்லாமல் 20 முறையும் வெற்றிகரமாக காற்றாடி விமானங்கள் இதுவரை பறந்துள்ளன. இதன் பயன்கள் என்று பார்த்தால் தற்போதைக்கு போர் வீரர்களுக்கும், இயற்க்கை பேரழிவு காலங்களில் அவசரகால பாதுகாப்பு பணிகளுக்கும், தீயணைப்புப்படை வீரர்களுக்கும் காற்றாடி விமானங்கள் பயன்படுத்தப்படும் என்று தெரிகிறது. வருங்காலத்தில் நீங்கள் கனவு காண்பதை போல் தனி நபர்கள் அலுவலகம் செல்வதற்கு பயன்படலாம்
- எச்சரிக்கை! செல்பேசி
- இன்பம் தரும் மின் அதிர்ச்சி
- புற்றுநோய் அறியும் எண்ணியல் (Digital) முறை
- மசாலா பூச்சிக்கொல்லிகள்
- சோப்பு வேண்டாம் தண்ணீரில் முக்கி எடுத்தால் போதும்!
- கூந்தல் வேர்களும் அதிசய மருந்துகளும்
- மூலக்கூறுகளை வருடும் மைக்ராஸ்கோப்
- தன்கையே தனக்கு எதிரி
- மரத்திலிருந்து பிளாஸ்டிக்
- பார்வையற்றவர்கள் ஓட்டுவதற்கு கார்
- வளையும் ஒலிபெருக்கி
- மூளை வளருகிறது - நாம் தான் அதை தடை செய்கிறோம்
- நேனோ ரேடியோ - தூசி தட்டினால் பாட்டு நின்று விடும்
- மூளை சொல்படி நகரும் சக்கர நாற்காலி
- கெமிஸ்ட்டுகளின் பொறாமை
- பாதிப்பை ஏற்படுத்தும் பாதரசம்...
- கைடு வேலை பார்க்கும் ரோபோ
- மருந்துப் பொருள் மாசுகளால் நடத்தை மாறும் மீன்கள்
- இதயத்திற்காக மரங்கள்
- செயற்கை வெளிச்சமும் ஒரு மாசே