அதென்ன தமிழில் கெட்ட வார்த்தை நல்ல வார்த்தை? கெட்ட வார்த்தைகள் எனச் சொல்லி பாசாங்கு செய்து திறமான சொற்களை ஒரு மேன்மையான மொழி இழந்துவிடலாகாது என்பது என் கருத்து. எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்பதுதான் மரபு. தொடர்பு எல்லைகள் விரிவடைந்தபிறகு, நுகர்வுப் பொருள்களோடு கருத்துக்களும் வார்த்தைகளும் வந்து குவியவே செய்யும். இயற்கையான இந்த வருகையையும் இயக்கத்தையும் தடுத்தல் சரியன்று. அதுவும் தமிழ் நவீன இலக்கியக் களத்தில் ஆசார - வைதீக சாஸ்திரிகள் மடிசஞ்சிகள் இருப்பது நியாயமல்ல. மடி விழுப்பு பார்க்கும் காலம் போய்விட்டது. தமிழ் வாத்தியார்கள் மட்டும்தான் தமிழுக்கு எதிரானவர்கள் என்ற நிரந்தர கருத்து போய் புத்திலக்கியச் சூழலில் நவீன வைதீகர்கள் வாளைச் சுழற்றிக் கொண்டு வருவது தகாது.
கிராமப்புறங்களில் மாலை நேரத்தில் கொல்லைப் புறத்தில் பெண்கள் ஓய்வாக உரையாடிக் கொண்டிருப்பதை சற்று எட்டிப் பாருங்கள். தவறு ஏதுமில்லை. வெள்ளந்தியான பெண்கள். நம் வீட்டுப் பெண்கள் அண்டை அசல் எதிர்வீடு என ஒரு உரையாடற் சூழல். வீட்டு வேலை, பிரச்சினை அசதியிலிருந்து விடுபட்டு மனந்திறக்கும் இனிய வேளை. தலை சீவிக் கொண்டும் கொடுக்கல் வாங்கல் எனப் பொருளாதாரம் புழங்கிக் கொண்டும் இருப்பது அற்புதமானது. சற்றே உற்சாகம் - சற்றே களைப்பு - சற்றே சலிப்பு எனக் கலவையாய் - ஒரு பெண்மணி திடீரெனச் சொல்வாள் “எங்க வூட்டுக் கம்மனாட்டிக்கு பாக்கு கடிக்கற நேரம்தான்டி...” எவ்வளவு கவித்துவமான வரி. இதில் "கம்மனாட்டி'யும் "பாக்கு கடிக்கிற நேர'மும் கெட்ட வார்த்தையோ. இதில் வாழ்க்கையையும் கவித்து வத்தையும் ரசிக்க தனி மனசு வேணும்.
அசல் கிராமத்து மனிதனான எனக்கு பொருளாதார இன்ன பிற லௌகீக காரணங்களால் தமிழின் புதுவரவுகளை உடனுக்குடன் விலை கொடுத்து வாங்கி வாசிப்பது சிரமமானதுதான். எனவே பெருமாள் முருகனை இன்னும் வாசிக்க வில்லை என்ற செய்தியையும் குறிப்பிடுவது அவசியம்.
கொஞ்சமாய் சங்ககாலம் பயணிப் போம். நவீனத் தமிழ் இலக்கிய வாதிகளுக்கு பழியேதும் வந்துவிடாது. "அண்ணாந்து ஏந்திய வனமுலை தளரினும்' (நற்.10) எனத் தொடங்கும் பாடலை ஒரு நல்ல தமிழாசான் வழி பாடங்கேட்க வேண்டும்.
கன்றும் உண்ணாது கலத்தினும் படாது... பசலை உணீஇயர் வேண்டும் ஞி திதிலை அல்குல் என மனமக்கவினே (குறு.27) என்ற வெள்ளிவீதியாரை வாசிக்கலாம். அல்குல் கைவரல் அணிந்தவை திருத்தல் (தொல் - மெய்.15) இன்னும் கொஞ்சம் இது குறித்துப் பார்க்கலாம். கலைத்தரம்பு தொடுத்த காழ் ஊன்று அல்குல் (பெரும்பாணாற்றுப் படை.244) இடைக்குக் கீழும் தொடைகட்கு மேலும் தோற்றத்தில் பாம்பின் படம் போன்று அகன்ற மைந்துள்ள உடற்பகுதி என்று அடையாளப் படுத்தும் வியாக்யானமும் உண்டுதான். பாங்காம் அல்குல் பற்றவன் ஊக்கிச் செலவுடன் விடுங்கோ (நற்.25:5-6) மாண்விரி அல்குல் மலர்ந்த நோக்கு (பதிற்.65:7) நல் எழில் அல்குல் வாடிய நிலையே (ஐங்குறுநூறு.351) மார்பும் அல்குலும் மனத்தொடுபரியை (பரி.13:54) மிசைந்து சூழ்போகிய அகன்றேந் தல்குல் (சிலம்பு.13:160) மேகலை விரீயெ தூசு விசி அல்குல் (பெருங்காதை 1:44:6) களனெனக் கரையும் அல்குல் (சீவக சிந்தாமணி.684) மணந்தாய் புரிகுழலாள் அல்குல் போல வளர்கின்றதே (திருக்கோவையார்.9) வாம மேகலையினுன் வளர்ந்த அல்குலே (கம்பர்.1:12:62) மணிகிளற் காஞ்சி அல்குல் வரி அரவுலகை வென்ற துணிவு கொண்டார்ப்ப (பெரியபுராணம்.138) ஆர்த்த மணிக்காஞ்சி அல்குலாள் (மதுரை சொக்கருலா.242) அல்குல் - வடிவு அகல் உபத்தமும் ஆகும் என்று பிங்கலநிகண்டு (1003) விளக்கும். ஆக அல்குல் சங்க இலக்கியத்தில் 100 இடங்களிலும், முலை 170 இடங்களிலும் வருகின்றது என்ற புள்ளி விவரம் கூடப் பயன் தரும். பட்டியல் போதும் என்று நினைக்கிறேன். தமிழில் சொல்லக் கூடாத வார்த்தைகள் என ஏதுமில்லை. எல்லாச் சொற்களும் அழகியவையே. தமிழ் இலக்கியங்களை உலகத் தரத்திற்குக் கொண்டு போகும் முயற்சிக்குத் தடை என்பது அறமாகாது.
"அவையில் கிளவி மறைத்தனர் கிளர்த்தல்' (தொல்.46) என்று தொல் காப்பியம் சொன்னது இலக்கண மரபு தவிர வேறில்லை. இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் என்பது பால பாடம். ஈகார - பகரம் என்பது "பீ” தான். என்னுடைய முப்பாட்டி ஒருத்தி இருந்தாள். அவள் பேர் ஆண்டாள். சாமியையே புணரக் கூப்பிட்டவள்; நப்பின்னை கொங்கைமேல் வைத்துக் கிடந்த மலர்மார்பா என்பாள். "உன்னித்தெழுந்த என் தடமுலைகள் மானிடற் கென்று பேச்சுப்படின் வாழ்கிலேன்' என்று தகித்தாள். நிறையச் சொல்லலாம்.
செந்தமிழில் கெட்டவார்த்தைகள் என ஏதும் இருக்க முடியாது. நம் அரசியலில் தியாகம், சுதந்திரம், தேசபக்தி, திட்டம், அரசு முதலான வார்த்தைகளை வேண்டுமானால் கெட்டவார்த்தைகளாகச் சொல்லலாம். ஓர் ஆறுதலுக்காக -
ஒரே செய்தி. தமிழில் இரண்டே வகைதான். ஒன்று நன்றாகச் சொல்லப்பட்டது. இன்னொன்று நன்றாகச் சொல்லப்படாதது - சரிதானே?
திருத்தம் பொன்.சரவணன்.
முன்னுரை:
முதலில் இக் கட்டுரைக்கு ' அல்குலும் அகராதிகளின் அரைவேக்காட்டுத் தனமும் ' என்றே பெயரிட நினைத்தேன். காரணம், அல்குல் என்ற இச் சொல்லுக்கு இன்றைய தமிழ் அகராதிகள் கூறும் அரைவேக்காட்டுத் தனமான பொருள் ஆகும். சிறிதளவும் தமிழ்த் தாயின் நினைப்பின்றி நேர்மையின்றி அகராதிகள் பொருள் கூறி இருக்கும் விதம் மிக மிக இழிவானது; வன்மையாகக் கண்டிக்கத்தக்கத ு. அல்குல் என்ற சொல்லுக்கு இன்றைய அகராதிகள் பொருள் கூற முனைந்து எவ்வாறு தமிழின் மானத்தைக் காற்றில் பறக்க விட்டுள்ளன என்பதைப் பற்றியும் அச் சொல்லின் உண்மையான பொருளையும் இங்கே காணலாம்.
தற்போதைய பொருள்கள்:
அல்குல் என்ற சொல்லுக்கு இன்றைய அகராதிகள் கூறும் பொருட்கள் இவை தான்:
சென்னைத் தமிழ் இணையப் பேரகராதி: பெண்குறி.
பேப்ரிஸியஸ் இணைய அகராதி: பெண்குறியின் மேல்பாகம், பக்கம், அரை.
கழகத் தமிழ்க் கையகராதி: பெண்குறி, பக்கம்.
வின்ஸுலோ இணைய அகராதி: பெண்குறியின் மேல்பக்கம், மலைப்பக்கம், நிதம்பம்.
அகராதிகளின் அரைவேக்காட்டுத் தனம்:
அகராதிகள் தாமாகத் தோன்றியவை அல்ல. மெத்தப் படித்த மனிதர்களால் / மனிதரால் இயற்றப் பட்டவை. தற்கால மாந்தருக்கும் வருங்கால மாந்தருக்கும் சொற்களின் சரியான பொருளைக் கூறுவது அகராதிகளின் தலையாய வேலை. அத்துடன் ஒரு மொழியின் பெருமையினைக் காப்பதிலும் அகராதிகளுக்கு இன்றியமையாத பங்கு உள்ளது என்பதால் ஒரு சொல்லுக்குப் பொருள் கூறும்போது சில அடிப்படை மனித சமுதாய விதிகளை அகராதிகள் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும். இவ் விதிகள் எவையும் இச் சொல்லுக்குப் பொருள் கூறும்பொழுது பின்பற்றப் படவில்லை என நன்றாக்வே தெரிகிறது.
மனித சமுதாய விதிகள் ஒருபுறம் இருந்தாலும் தமிழ்ப் புலவர்களின் உயர்ந்த உள்ளம் கூடவா அகராதி இயற்றியோருக்கு விளங்கவில்லை?. ஏறத்தாழ நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களில் புலவர்கள் இச் சொல்லைப் பயன்படுத்திப் பாடல் இயற்றி உள்ளனர். அத்துடன் சில புலவர்கள் இறைவியைப் புகழும் பாடல்களிலும் இச் சொல்லை தாராளமாகக் கையாண்டுள்ளனர். இந் நிலையில் இச் சொல்லுக்கு மேற்காண்கின்ற தவறான இழிவான பொருட்களைக் கூற எப்படித் துணிந்தனர் அகராதி இயற்றியோர்?. எது எவ்வாறாயினும் இச் செயல் அகராதிகளின் மேல் மக்கள் வைத்திருந்த நல்ல நம்பிக்கையினைத் தகர்த்திருக்கும ் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
சரியான பொருள்:
அல்குல் என்ற சொல்லின் சரியான பொருள் 'கண் புருவம்' என்பது தான்.
நிறுவுதல்:
அல்குல் என்னுல் சொல் கண் புருவத்தையே குறிக்கும் என்று நிறுவுவது எளிய செயலே ஆகும். முதலில் கண் புருவத்தின் தன்மைகளைப் பற்றிக் கீழே காணலாம்.
1) கண் புருவமானது கண்களை விடவும் அகலமானது.
2) கண்புருவம் மேல்நோக்கி வளைந்த தன்மை கொண்டது.
கண் புருவத்தின் இந்தத் தன்மைகளைப் பற்றிக் கூறும் பல பாடல்கள் இலக்கியங்களில் உள்ளன. அவை யாவற்றையும் இங்கு விரிப்பது கடினம் என்பதால் சில பாடல்கள் மட்டும் சான்றாகக் கீழே தரப்பட்டுள்ளன.
அல்குல் அகலமானது:
அகல் அல்குல் - கலி.௰8
அகன்ற அல்குல் - கலி.௧4
ஐது அகல் அல்குல் - அக.௨75,390
ஐது அமைந்து அகன்ற அல்குல் - ஐங்கு.௧35,176
ஐது அகல் அல்குலாள் - கலி.௫2
அகல் எழில் அல்குல் அவ் வரி வாட - அக.௩07
அகல் அமை அல்குல் - அக.385
அகன்ற அல்குல் - நற்.௰1,245,252
ஐது அகல் அல்குல் - நற்.௨00,390
பேர் அகல் அல்குல் - புற.௧66
ஐது அகல் அல்குல் - புற.௨71,389
பாரித்த அல்குல் - தி.ஐ..௩4
அகல் அல்குலார் - சிறுபஞ்.௧8
மேல்நோக்கிய வளைவினை உடையது அல்குல்:
கோடு உயர் அகல் அல்குல் - கலி.- 1
கோடு ஏந்து அகல் அல்குல் - கலி.௰9
கோடு எழில் அகல் அல்குல் - கலி.௬7
கோடு ஏந்து அல்குல் - அக.௨01
கோடு ஏந்து அல்குல் - நற்.௧98,213,282,368
கோடு ஏந்து அல்குல் - புற.௨40
கோடு ஏந்து அகல் அல்குல் - நாலடி.௩54
ஏந்து கோட்டு அல்குல் - நெடு.௧45
ஏந்து கோட்டு அல்குல் - பதிற்.௧8
ஏந்து கோட்டு அல்குல் - புற.௮9
அம் கோட்டு அகல் அல்குல் - நாலடி.௩72
மேற்காணும் பாடல்களில் வரும் கோடு என்பது வளைவினைக் குறிக்கும். ஏந்து என்பது உயர்ந்த என்ற பொருளைத் தரும். பெண்களுக்கு அழகு சேர்க்கும் முதல் உறுப்பே கண் என்பதால் இக் காலத்தும் சரி அக் காலத்தும் சரி பெண்கள் தம் கண்களுக்கு மென்மேலும் அழகு சேர்க்கத் தயங்கியதில்லை. கண்களுக்கு அழகு சேர்க்கும் பல முறைகளுள் ஒன்று தான் கண் புருவங்களுக்கு அழகு கூட்டுதல் ஆகும். இதனைக் கீழ்க்காணும் முறைகளால் செய்ததாக சங்க இலக்கியங்களும் கீழ்க்கணக்கு நூல்களும் கூறுகின்றன.
1) கண் புருவத்தின் மேற்பகுதியில் அழகிய பல புள்ளிகளால் ஆன ஒரு வரியோ பல வரிகளையோ வரைதல். இப் புள்ளிகள் பெரும்பாலும் வட்டமாக இருப்பதுடன் வெள்ளை, கருப்பு, மஞ்சள் முதலான பல வண்ணங்களில் இருக்கும். இவை ஒரு நல்ல பாம்பின் படப்பொறியில் உள்ள கண் போன்ற அமைப்பிற்கு மேல் உள்ள புள்ளிகளை ஒத்திருக்கும். இப் புள்ளிகளைத் திதலை என்றும் தித்தி என்றும் இலக்கியம் கூறுகிறது. இக் கூற்றினை மெய்ப்பிக்க அருகில் உள்ள படம் போதும் என்றாலும் சங்க இலக்கியங்கள் மற்றும் கீழ்க்கணக்கு நூல்களில் இருந்து சில பாடல்களும் சான்றாகக் கீழே காட்டப்பட்டுள்ளன.
அல்குல் அழகிய வரியினை உடையது:
தேர் அகல் அல்குல் அவ் வரி வாட - ஐங்கு.௩16
அவ் வரி அல்குல் - ஐங்கு.௪81
அல்குல் வரி யாம் காணும் நாள் - கலி.௮0
வரி ஆர் அகல் அல்குல் - கலி.௯2
வரி ஆர்ந்த அல்குலாய் - கலி.௬0
மாண் வரி அல்குல் - குறு.௰1
வரி அணி அல்குல் - அக.௩3
அவ் வரி அல்குல் - அக.௧17
அவ் வரி அல்குல் - அக.௩42
மாண் வரி அல்குல் - பதிற்.௬5
அல்குல் அவ் வரியே - புற.௩44
தேமல் போன்ற புள்ளிகளை உடையது அல்குல்:
திதலை அல்குல் நின் மகள் - ஐங்கு.௨9
திதலை அல்குல் துயல்வரு கூந்தல் - ஐங்கு. ௭2
திதலை அல்குல் - குறு.௨7
திதலை அல்குல் - அக.௫4
திதலை அல்குல் அவ் வரி வாடவும் - அக.௧83
திதலை அல்குல் - அக.௧89,227
திதலை அல்குல் - நற்.௬,77,84,161,307,370
பாம்பின் படப்பொறி போன்ற புள்ளிகளை உடையது அல்குல்:
தட அரவு அல்குல் - கலி.௧25
தித்தி பரந்த பைத் தகவு அல்குல் - குறு.௨94
பொறி வரி அல்குல் - அக.௩97
பை வரி அல்குல் - குறிஞ்சி.௰2
பைத்தகன்ற அல்குல் - திரி.௨5
பை அர அல்குலாய் - தி.நூ.௯6
மேற்காணும் பாடல்களில் வரும் பை என்பது நல்ல பாம்பினைக் குறிக்கும்.
2) செல்வச் செழிப்பில் வாழும் இளம் பெண்கள் இந்தப் புள்ளிகளுடன் நிற்காமல் பொன்னால் ஆன காசுகள் மற்றும் மணிகள் கோர்த்த சிறு மாலையினை கண் புருவத்தின் மேல் பகுதியில் அணிவர். இன்னும் சிலர் முத்துக்கள் கோர்த்த மாலையினையும் சிலர் சிறு மலர்களால் தொடுத்த மாலையினையும் அணிந்து அழகு சேர்ப்பர். இக் கூற்றுக்களை மெய்ப்பிக்க புகைப்படமும் கீழே சில பாடல்களும் சான்றாகத் தரப்பட்டுள்ளன.
பொன்னாலான காசுகள், மணிகள் கோர்த்த மாலையை உடையது அல்குல்:
பல் காழ் அல்குல் அவ் வரி வாட - ஐங்கு.௩06
பொலம் பசும் பாண்டில் காசு நிரை அல்குல் - ஐங்கு.௩10
இழை அணி அல்குல் - கலி.௫0
மணி மிடை அல்குல் - குறு.௨74
பல் காசு நிரைத்த கோடு ஏந்து அல்குல் - அக.௭5
பசும் காழ் அல்குல் - அக.௧67
பொலம் காசு நிரைத்த கோடு ஏந்து அல்குல் - அக.௨69
பொலம் காழ் அல்குல் - அக.௩87
காழ் பெயல் அல்குல் - நற்.௬6
பல் காழ் அல்குல் - நற்.௧33
பசும் காழ் அல்குல் - நற்.௨22
காழ் ஊன்று அல்குல் - பெரும்.௨44
பைங் காழ் அல்குல் - பெரும்.௩29
பல் காசு நிரைத்த சில் காழ் அல்குல் - திருமு.௧6
திருந்து காழ் அல்குல் - திருமு.௨04
பொலம் செய் பல் காசு அணிந்த அல்குல் - புற.௩53
பாசிழைப் பகட்டு அல்குல் - பட்டி.௧47
மேற்காணும் பாடல்களில் வரும் காழ் என்ற சொல்லானது இங்கு உருண்டையான மணி போன்ற அமைப்பினைக் குறிக்கும்.
முத்துக்களால் ஆன மாலையினை உடையது அல்குல்:
கதிர் மணி முத்தம் படம் அணி அல்குல் - தி.ஐ.௪5
பூக்களால் ஆன மாலையை உடையது அல்குல்:
கூம்பு அவிழ் முழுநெறி புரள் வரும் அல்குல் - புற.௧16
தொடலை அல்குல் - புற.௩39
அம் பூந் தொடலை அணித் தழை அல்குல் - புற.௩41
புனை பூந் தழை அல்குல் - ஐ.ஐ.௧4
மேற்காணும் சான்றுகளில் இருந்து அல்குல் என்பது கண் புருவத்தையே குறிக்கும் என்பதைத் தெளியலாம்.
முடிவுரை:
அகராதிகள் கூறும் பொருளை அப்படியே முழுமையாக நம்பக் கூடாது என்பதற்கு இச் சொல் ஒரு நல்ல சான்று ஆகும். இது போன்று பல சொற்கள் தவறான பொருளில் கூறப்பட்டு இருக்கலாம். அவற்றைக் கண்டறிந்து சரியான பொருளை மீட்டெடுத்துப் பயன்படுத்துவது தமிழராகிய நம் அனைவரின் கடமை ஆகும்.
RSS feed for comments to this post