mettur_561

அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜை நடத்துவதைத் தடை செய்து, தமிழக அரசு பிறப்பித்துள்ள ஆணையையும், அதைப் பின்பற்றும்படி ஒரு வேண்டுகோள் கடிதத்தையும் – சேலம் மாவட்டம் மேட்டூரில் உள்ள காவல் நிலையத்திற்கு, பெரியார் திராவிடர் கழகத்தினர் பதிவு அஞ்சலில் அனுப்பினர். ஆனால், அரசாணையை மதிக்காமல், 16.10.2010 அன்று, இக்காவல் நிலையத்தில் ஆயுத பூஜை கொண்டாடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதைக் கண்டித்து, காவல் நிலையத்தில் நடைபெறவிருந்த பூஜை பொருட்களை பெரியார் தி.க.வினர் வீசியெறிந்து, கொண்டாட்டத்தை தடுத்தனர்.

சப்தமில்லாமல் அமைதியாயிருக்கின்றன
உங்கள் சாத்திரங்கள்
பசித்த வயிறுகளின் இடையறாத
அழுகைகளைப் புறக்கணித்து

உழைப்பவனைக் கொண்டாடாமல்
கருவிகளைக் கழுவுகின்றன
உங்கள் துருவேறிய மூளைகள்

களைத்த கைகளுடன் வரும் அவனை
மிதித்துத் துரத்தும் உங்கள்
பளபளக்கும் காலணிகள்
பொரிகடலைக்காக
கழற்றப்படுகின்றன பவ்யமாய்

அறிவின் விளிம்பில் மானுடம்
விண்ணேகிக் கொண்டிருக்க
அறிவற்ற உங்கள் மூடத்தனம்
இன்னும் ஆண்டுகளை விழுங்குகின்றன

நம்பிக்கை என்னும் பாம்பின்
பிளவுபட்ட நாக்கால்
கொத்திப் பரப்பிய நச்சின்
நீலவண்ணத்தை மையாக்கியே
அரசுக் கோப்புகளில் கையெழுத்திடுகின்றீர்கள்

வெட்கமற்ற மூடத்தின் அறிவீனத்தால்
சிதைக்கப்பட்டவைகளைச் சீராக்க
வேறென்ன வழி இருக்கிறது
இதைத்தவிர!

Pin It