திருச்சி மாவட்டம் திருவரங்கத்தில் 2006 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பெரியாரின் சிலை திராவிடர் கழகத்தின் சார்பில் நிறுவப்பட்டது, அதே 2006 ஆம் ஆண்டு, டிசம்பர் 7 ஆம் தேதி சமூக விரோதிகளால் பெரியாரின் சிலை உடைக்கப்பட்டது. அதன் பிறகு திராவிடர் கழகத்தின் சார்பில் மீண்டும் பெரியாரின் வெண்கல சிலை அதே இடத்தில் வைக்கப்பட்டது. கடந்த நான்கு ஆண்டுகளாக அந்த சிலையை மறைக்கும் விதமாக, அந்த சிலைக்கு பாதுகாப்பு என்கிற பெயரில் அதன் முன்பாக காவல் துறைக்குச் சொந்தமான பழுதடைந்த வாகனம் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அந்த சிலையும், அதனைச் சுற்றி பொறிக்கப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகளும் பொது மக்கள் பார்க்க முடியாத வண்ணம் மறைக்கப்பட்டுள்ளது. திட்டமிட்டே திருவரங்க பார்ப்பனர்கள் ஏற்பாட்டின் பேரிலேயே சிலை மறைக்கப்பட்டுள்ளது.

திருவரங்கம் கோயில் எதிரே பெரியார் சிலை உள்ளதால் சிலையை மறைப்பதற்கு காவல்துறை இப்படி ஒரு சூழ்ச்சியை பின்பற்றி வருகிறது. வாகனத்தை மார்ச் 6 ஆம் தேதிக்குள் அப்புறப்படுத்தாவிடில், 7 ஆம் தேதி, பெரியார் திராவிடர் கழகத் தோழர்களே வேனை அப்புறப்படுத்துவார்கள் என்று திருச்சி மாவட்ட பெரியார் திராவிடர் கழகம், 12.1.2011 அன்று நடந்த மாவட்டக் கழக கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு செய்துள்ளது. திருச்சிராப்பள்ளி சகிலா விடுதியில் மாவட்டத் தலைவர் எஸ்.எஸ்.முத்து தலைமையில், தோழர்கள் ஜெகநாதன், ஆரோக்கியசாமி, இளந்தாடி துரைராசன் முன்னிலையில் மாவட்டக் கழகக் கூட்டம் நடந்தது. காவல்துறை வேனை அப்புறப்படுத்தும் போராட்டத்தை கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடத்த முடிவு செய்யப்பட்டது

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.