சமத்துவமற்ற உலகில் எல்லோரும் எல்லோரிடமும் உண்மையான அன்பு செலுத்திட முடியாது. ஆணும் பெண்ணும் இங்கே சமமானவர்களாய் இல்லை. எனவே காதலும் சிக்கல் நிறைந்ததாகவே இருக்கும்.

அன்றைக்கும் புழுவினும் அடிமையாயிருந்த பெண் தனக்கென ஒரு அடையாளம் பெற்றபோது அங்கே காதல் மலர ஆரம்பித்தது. பிறகு ஆண்களால் துய்க்கப்படுவதற்கான போகமாய் மட்டும் இருந்தவள் மெல்ல சுவாசிக்க ஆரம்பித்த போது காதல் தன் மணத்தைப் பரப்பியது. இன்றைக்கு சந்தை உலகத்தில் விற்பனைப் பொருளாய் கருதப்படும் பெண் அதிலிருந்து மீள முயற்சிக்கும்போது காதல் அதற்கான விடுதலை கீதத்தை இசைக்கிறது. இதிலிருந்து தான் ஆணுக்கும் பெண்ணுக்குமான முரண்பாடுகள் கூர்மையடைகின்றன.

இந்த முரண்பாடுகளை சரி செய்யவோ, இணக்கங்களை உருவாக்கவோ விரும்பாத சமூகம் காதலை உலகத்திலிருந்து தள்ளி வைக்கவும், கொச்சைப்படுத்தவும் முயலுகிறது.

இதனை அறிவுபூர்வமாக ஆணும், பெண்ணும் புரிந்து கொண்டு, உணர்வுபூர்வமான உறவுகளை செழுமைப்படுத்திட முயற்சிக்க  வேண்டும். காமம், அன்பு, நம்பிக்கை, சுதந்திரம் என எல்லாம் கலந்த ஆண், பெண் உறவே காதலாகிறது. அதை விட்டு விட்டு காதலை வெறும் காமம் என்றோ அல்லது காமத்தை முழுமையாகக் கடந்த நூறு சதவீதம் புனிதமாகவோ பார்த்திட முடியாது.

உடலைத் துறந்து நினைவுகளிலேயே வாழ்வது என்பது இயற்கைக்குப் புறம்பான கற்பனையே. பறவைகளுக்கு கால்கள் தேவையில்லை. சிறகுகள் மட்டும் போதும் என்பதுபோலத் தான் இது. உடல்களில்லாமல் நினைவுகள் இல்லை. உள்ளங்களில் மட்டுமில்லை, உள்ளங்கைகளின் வெது வெதுப்பிலும் காதல் இருக்கிறது.

இளமைப் பருவத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையில் தோன்றும் மயக்கம் முதலில் உடல் சார்ந்ததாகவே இருக்கிறது. உடல்களை அறிகிற வேகமே காதலாய் காட்சியளிக்கிறது. அதுவே முழுக்க முழுக்க உடல் சார்ந்ததாய் மாறும்போதுதான், கிறக்கம் களைந்தவுடன் காதலும் காட்சிப் பிழையாகிக் காணாமல் போய் விடுகிறது. “பதனீரைக் குடித்துவிட்டு பட்டையைத் தூக்கி எறிவது போல என்னையும் தூக்கி எறிந்து விடுவாய்” என்று ஒரு ஆணிடம் சங்ககாலப் பெண் சொன்ன அவநம்பிக்கை இன்னும் பெண்களிடம் இருக்கிறது.

இதனை சமூகத்தில் தக்க வைத்துக் கொண்டிருப்பது ஊடகங்களால் திணிக்கப்பட்ட உடல் குறித்த மயக்கங்களே. திரைக் கதாநாயகி களும், கதாநாயகர்களும், விளம்பர மாடல்களும், ஆண் பெண் உருவங்களை முன்னிறுத்துகிறார்கள். அவர்களே காதல் உலகத்தின் தேவர்களாகவும், தேவதைகளாகவும் வந்து அசைந்தாடுகிறார்கள். தோற்றங்களே அழகென மயக்கம் வருகிறது. வெற்று பிம்பங்களே இளமையின் அற்புதங்களை ஆட்டுவிக்கின்றன.

பெண் என்பவள் வெறும் உடல் மட்டும்தான் என்ற சிந்தனை சமூகத்தில் இருந்து அகற்றப்படும் போதுதான் சூரியன் பெண்களுக்காகவும், காதலுக்காகவும் உதிக்கும். உடல் குறித்த பயத்தையும், பெருமிதத்தையும் பெண்ணிட மிருந்தும், பிரமைகளை ஆண்களிடமிருந்தும் பிரித் தெடுக்கும்போது எல்லோரும் அழகானவர்களாக வும், நம்பிக்கை மிக்கவர்களாகவும் இருப்பார்கள். காதலின் கதவுகள்  அங்கு திறந்தே இருக்கும். அப்போது காதல் ஒரு சிற்றின்பமாக சிறுத்தும் போகாது. இளமைப் பருவத்தில் மட்டும் வந்துவிட்டுப் போகிற உணர்வாகவும் இருக்காது.

உடலைத் தாண்டி நெருங்குகிறவர்கள் ஒருவருக்காக ஒருவர் தன்னை இழப்பதோ அல்லது ஒருவரையொருவர் ஆக்கிரமிப்பதோதான் காதல் என்றும் நினைத்துவிடுகிறார்கள்.

இதுதான் இன்றைய காதலின் பிரச்சினையாக இப்போது தெளிவாகப் புரிய முடிகிறது. ஒரு ஆண் தனது வாழ்க்கைத் துணை தன்னைப் போலவே சிந்திக்க வேண்டும், பேச வேண்டும் என விரும்புகிறான். அதுபோலவே பெண்ணும் ஆணிடம் இதை  எதிர்பார்க்கிறாள். அவரவர் முரண் பாடுகளை ஒப்புக் கொள்ளாமல், ஏற்றுக் கொள்ளாமல் விலகி நிற்கும் மனோபாவமே இதில் வெளிப்படுகிறது. ஆணும் பெண்ணும் சமம் என்று நினைக்கும் போதுதான் ஒருவரையொருவர் அங்கீகரிக்கும் பக்குவம் மனிதர்களுக்கு சாத்தியப்படும்.

ஆணும், பெண்ணும் ஒருவரையொருவர் புரிந்து கொள்வதுதான் காதலின் அர்த்தம். ஆனாலும் இந்த முரண்பாடுகளை எங்கே மனிதர்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள்? அவரவர் நிலைகளில் நின்று கொண்டு ஒருவர் பக்கம் ஒருவரை இழுக்க முயற்சிக்கும் கயிறு இழுக்கும் போட்டி ஒரு போதும் காதலாகப் பரிணமிக்க முடியாது.

ஆக்கிரமிக்கும் மனதில்  அதிகாரமும், இழந்து கொண்டிருக்கும் மனதில் அடிமைத்தனமுமே வசிக்கின்றன.  தனக்கு மட்டுமே அவன் என்றும் அல்லது அவள் என்றும் ஒருவரையொருவர் சிறைப்பிடிப்பது காதலாகாது. ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் அன்பைக் காட்டிலும், நம்பிக்கை முக்கியமானது. நம்பிக்கையற்ற அன்பு விபரீதமானது. இதை ‘பொஸஸிவ்’ என்று ஆங்கிலத்தில் உச்சரித்துக் கொண்டு பெருமிதம் கொள்ளும் பைத்தியங்களாய் பலர் இருக்கிறார்கள். தங்கள் துணையின் காலடிகளை சதா நேரமும் மோப்பம் பிடித்துக் கொண்டே இருப்பார்கள்.

ஒருவர் பற்றிய ஒருவரின் நினைவு எப்போதும் பரவசத்தையும், சந்தோஷத்தையும் தருவதாக இருக்க வேண்டும். காதலர்களுக்கிடையே மனஸ்தாபங்களே வராது, வரக் கூடாது என்பதெல்லாம் அதீதக் கற்பனையே. அந்த நிகழ்வுகளிலிருந்து எப்படி ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு இணக்கம் கொள்கின்றனர் என்பதுதான் முக்கிய மானது. ஒருவருக்கொருவர் எதிரிகளாகப் பார்க்காமல், தன் அன்பின் துணை என்னும் சிந்தனை தெளிந்திருந்தால் முரண்பாடுகளை எதிர்கொள்ளும் விதமே அலாதியானதாகவும், அற்புதமாகவும் மாறும்.

காதல் வாழ்க்கை ஆணுக்கும், பெண்ணுக்கும் பரிபூரண சுதந்திரத்தைக் கொடுப்பதாக இருக்க வேண்டும். இலக்கியத்திலும், வெளியிலும் பார்ப்பதைவிட்டு காதலைத் தங்களுடைய வாழ்வாக அறிதல் வேண்டும். ஒரு ஆணும் ஒரு பெண்ணும் அவரவர்களுக்கான சுதந்திரத்தை எடுத்துக் கொள்வதிலும், பகிர்ந்து கொள்வதிலுமே காதலின்  அர்த்தம் இருக்கிறது.

காதல், காதலர்களை மேலும் மேலும் வளர்த்தெடுக்க வேண்டும்.

இந்த வளர்ச்சி சுயநலமற்றதாகவும், சமூகம் சார்ந்ததாகவும் பரிணமிக்கும்போது காதல் மகோன்னதம் பெறும்.

ஆண், பெண் இருவருமே உலகம் சார்ந்த மனிதர்களாய், சமமாய் மாறும்போது இந்த அற்புதம் நிகழும். ஒருவரையொருவர் காதலித்த, சேர்ந்து உலவித் திரிந்த, பேசி மகிழ்ந்த, சண்டை போட்டுத் தவித்த, பிரிந்து சேர்ந்த காலங்களோடு இந்த பூமி சுற்றிக் கொண்டிருக்கிறது. இந்த பூமியில் எல்லோரும் பார்க்கும்படியாகக் காதலர்கள் தங்கள் மரணங்களையும் வெறும் பெயர்களையும் எழுத வேண்டாம். தங்கள் வாழ்க்கையை எழுதட்டும்.

காதலின் சின்னங்களாகக் கல்லறைகள் வேண்டாம். வாழும் வீடுகளே இருக்கட்டும்.

(ஜா.மாதவராஜ் எழுதிய 
‘ஆதலினால் காதல் செய்வீர்’ நூலிலிருந்து)

Pin It