கடந்த சில மாதங்களாகவே மனது சரியில்லை. காரணம் உங்களுக்குத் தெரிந்திருக்கும், ஈழப்படுகொலைகள்தான். நீங்களும் நானும் சேர்ந்துதான் போர் நிறுத்தம் கோரினோம். கண்டு கொள்ளாத மத்திய அரசு நம் மனம் கோணும்படி நடந்து கொண்டது. ஆனால் அதே நாட்களில் டில்லியில் தங்கியிருந்து பதவிகளைப் பெற்று செல்வத்தோடும் செல்வாக்கோடும் சந்தோசத்தின் உச்சத்தில் இருக்கும் உங்களுக்கு உள்ளூரில் நமது அண்டை மாநிலத்தில் வாழும் நமது தமிழ் மக்கள் குறித்து எச்சரிக்கை செய்யவே இந்தக் கடிதத்தை உங்களுக்கு எழுதும்படியாயிற்று.

Karunanidhiபெங்களூருவில் அய்யன் திருவள்ளுவர் சிலை திறக்கப்படும் வரை நான் பெங்களூருவுக்குள் காலடி எடுத்து வைக்க மாட்டேன் என்று சில வருடங்களுக்கு முன் நீங்கள் அறிவித்தீர்கள். சொன்னது போலவே எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் நீங்கள் பெங்களூருவுக்குச் சென்றதில்லை, உங்கள் மகள் செல்வி வீட்டிற்குக் கூட, இப்போது காலம் கனிந்திருக்கிறது. அதுவும் நீங்கள் முதல்வராக இருக்கும் போதே, கூடவே உங்கள் மகள் செல்வி வீட்டிற்குச் செல்லும் ஆசையும். கர்நாடக அரசுடன் ஏற்கனவே தமிழ்நாட்டிற்கு காவிரி, ஓகேனனக்கல் பிரச்சனையில் முட்டலும் மோதலும் காலங்காலமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. காவிரி, ஓகேனக்கல், திருவள்ளுவர் என்கிற இந்த மூன்றில் ஓகேனக்கலும், காவிரியும் பல கோடி ஏழை விவசாயிகள் தொடர்பான நீராதார உரிமைகள். திருவள்ளுவரோ தமிழர் வாழ்வின் அடையாளம். தமிழக மக்களின் நீராதார உரிமைகளான ஓகேனக்கலும் காவிரிப் பிரச்சனையும் முடியாத நிலையில் நீங்கள் திருவள்ளுவர் சிலையைத் திறக்க கையாண்ட தந்திரம் ராஜதந்திரம்தான். உலகப் பொதுமறையாம் திருக்குறளை உலகுக்குக் கொடுத்த அய்யன் திருவள்ளுவர் சிலையை பெங்களூருவில் திறக்க கன்னடக் கவிஞர் சர்வஞ்ஞரின் சிலையை சென்னையில் திறக்க ஒப்புக் கொண்டுள்ளதன் மூலம் வள்ளுவரையும் கன்னடக் கவிஞர் சர்வஞ்ஞரையும் சமன் செய்திருக்கிறீர்கள். வெள்ளியை வாங்கும் விலையில் தங்கத்தை வாங்க முடியாத இந்த காலச் சூழலில் வெள்ளியையும் தங்கத்தையும் ஒன்று போல காட்ட முனைகிற உங்கள் ராஜதந்திரத்தைப் புரிந்து கொள்வதில் நமக்கு சிக்கல் ஒன்றும் இல்லைதான். நாளையே கழகக் கண்மணிகள் ‘‘பெங்களூருவில் அய்யன் வள்ளுவனுக்கு சிலை கண்ட வள்ளலே....வள்ளுவனே’’ என்று உங்களுக்கு பிரமாண்ட டிஜிட்டல் பேனர்களை வைத்து உங்களை குளிர்விக்கலாம். இதற்கான இன்னும் பத்து பாராட்டு விழாக்கள் பிரமாண்டமாக உங்களுக்கு நடத்தப்படலாம். அதுவல்ல இப்போது பிரச்சனை.

வள்ளுவர் சிலை என்றால் அதை சமன் செய்ய கன்னடக் கவிஞரின் சிலை வைக்க சென்னையில் நமக்கு ஏராளமாக இடம் இருக்கிறது. கன்னடக் கவிஞரின் சிலையை சென்னையில் அனுமதிக்கும் மனப் பக்குவமும் தமிழர்களுக்கு வாய்த்திருக்கிறது. உங்களுக்கு நினைவிருக்கும் என நினைக்கிறேன். காவிரிப் பிரச்சனையில் பெங்களூருவில் தமிழர்கள் தாக்கப்பட்டபோதும், ஓகேனக்கல் பிரச்சனையில் போது தமிழர்கள் தனிமைப்படுத்தப்பட்ட போதும் தமிழகத்தில் ஒரு கன்னடர் மீது கூட, கன்னடர்களின் ஒரு வணிக நிறுவனங்கள் மீது கூட தாக்குதல் நடத்தப்படவில்லை, தமிழ் மக்கள் எப்போதும் சகிப்புத்தன்மை உள்ள மக்களாக இருக்கிறார்கள். திருவள்ளுவரின் சிலை பெங்களூருவில் திறக்கப்பட வேண்டும் என்ற உங்களின் ஆசைக்காக சர்வஞ்ஞருக்காக ஒரு இடத்தை சென்னையில் ஒதுக்கிக் கொடுத்து விட்டீர்கள். நல்ல விஷயம் ஒன்றைக் கொடுத்து இன்னொன்றை பெற்றுக் கொள்கிற இந்த ராஜதந்திரம் நன்றாகவே இருக்கிறது. சரி எதைக்கொடுத்து நாம் காவிரியின் தண்ணீர் பெற்றுக் கொள்வது, எதை விட்டுக் கொடுத்து ஓகேனக்கல் திட்டத்தை நிறைவேற்றுவது. ஒன்று செய்யலாம் காவிரி, ஒகேனக்கலில் கர்நாடக அரசு நமது உரிமைகளை விட்டுத் தர நமது மாவட்டங்களில் ஒன்றையோ இரண்டையோ அவர்களுக்கு எழுதிக் கொடுத்தாவது தண்ணீரை பெற்றுக் கொள்ள முடியும் என்றால் உங்கள் ராஜதந்திரம் வெறும் சிலையோடு முடிந்து போகாமல் பல கோடி விவாசாய ஏழைகளின் வாழ்வில் பாலையாவது வார்க்கும்.

ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட ஈழத் தமிழர்களை இனப்படுகொலை செய்த இலங்கை அரசிடம் நீங்கள் நீக்குப் போக்காக நடக்கச் சொன்னீர்கள். இந்த நீக்குப் போக்குக் கொள்கை நீண்ட கால அரசியல் அனுபவத்தினால் வந்தது. ஐரோப்பிய தமிழர்கள் தங்களின் இரத்த உறவுகளுக்காக அனுப்பிய மெர்ஷிமிஷன் நிவாரணப் பொருட்களை நீங்கள் தலையிட்டு தமிழகத்தில் இருந்து வேறு ஒரு கப்பல் மூலம் கொழும்பு அனுப்பி வைத்தீர்கள். ஆனால் உங்களுக்கு ஒன்று தெரியுமா? கிட்டத்தட்ட எழுபது நாட்கள் கடந்து விட்ட நிலையில் இப்போது அந்த நிவாரணப் பொருட்கள் கொழும்பு துறைமுகத்தில் அநாதையாகக் கிடக்கிறதாம். அதை முகாம்களில் உள்ள மக்களுக்கு விநியோகிக்க வேண்டும் என்றால் நாற்பது லட்சம் ரூபாய்க்கு மேல் தேவைப்படும் என்பதால் அப்படியே கிடக்கிறது அந்தப் பொருட்கள். விளைவு அந்த உணவுப் பொருட்கள் கெட்டுப் போகத் துவங்கிவிட்டதாம். தாயக உறவுகளுக்கு புலம்பெயர்தமிழர்கள் அனுப்பிய பொருட்கள் சென்றுவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிற சிங்கள அரசிடம் நீங்கள் நீக்குப் போக்காக நடந்து கொள்ளச் சொல்கிறீர்கள்.

சரி விஷயத்துக்கு வருகிறேன்.

கன்னட அரசோ, கன்னட மக்களோ தமிழக மக்களுக்கு எப்போதும் எதிரிகளல்ல, இன்றும் எல்லையோர கிராமங்களில் தமிழர்களும் கன்னடர்களும் ஒரு தாய்ப்பிள்ளைகளாக வாழ்ந்து வருகிறார்கள் என்பதோடு பெங்களூருவில் வாழும் தமிழர்களும் கன்னடர்களும் அண்ணன் தம்பிகளைப் போலத்தான் இன்றும் பழகிவருகிறார்கள். ஆனால் சுயநலமிக்க அரசியல் ஆட்டத்தால் ஒவ்வொரு முறை காவிரியிலும் ஓகேனக்கலிலும் பிரச்சனை எழும் போதும் அங்கே தமிழர்கள் தாக்கப்படுகிறார்கள், சில நேரங்களில் ஒட்டு மொத்த சிவில் உரிமைச் சமூகத்தில் இருந்தும் தனிமைப்படுத்தப்படுகிறார்கள். இந்நிலையில் போதாக்குறைக்கு முல்லை அணை உரிமைக்காக கேரளத்தோடும், பாலாறு அணைக்காக ஆந்திராவோடும் முரண்பட்டு நிற்கிறோம். இந்த எல்லாப் பிரச்சனைகளிலுமே பாதிக்கப்படுவது தமிழகம்தான். புவியியல் ரீதியாக இந்தியாவில் நமக்கு வாய்த்த இடம் அப்படி. ஆனால் அணை போட்டு தடுக்கக் கூடாத தண்ணீரைத் தடுப்பதன் மூலம் தமிழனின் தொண்டைக்குழியை வறளச் செய்கிற வேலையை அண்டை மாநிலங்கள் செய்து கொண்டிருக்கின்றன. தட்டிக் கேட்க வேண்டிய மத்திய அரசோ மௌனமாக இருக்கிறது. பல நேரங்களில் அண்டை மாநிலங்களுக்கு சாதகமாகவும் நடந்து கொள்கிறது. நீரினின்றி அமையாது உலகு என்பது தமிழின் முதுமொழி. நாமோ பருவமழையை மட்டும் நம்பியே காலத்தை ஓட்ட வேண்டிய கட்டாயம். பருவமழை பொய்த்துப் போகிற வருடங்களில் காவிரிப் பிரச்சனை விஸ்வரூபம் எடுப்பதும். மழை பெய்தால் அதை மறந்து போவதும் பருவங்களுக்கு ஏற்ப நடந்து வருகிறது. இதோ தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவு கொட்டவில்லை. வரும் காலங்களில் பெய்ய வேண்டிய மழையின் அளவு இல்லாமல் போனால் இந்த வருடமே காவிரியும், ஒகேனக்கலும் மீண்டும் தமிழகத்தில் ஒலிக்கும். நீருக்காக அண்டை மாநிலங்களையே சார்ந்திருக்கும் இம்மாதிரியான சூழலில் அதுவே இரு மாநிலங்களிலும் அரசியலாகவும் மாறிப் போனது பரிதாபம்தான், ஆனால் இந்த இரண்டிற்கும் இடையில் சிக்கிக் கொண்ட பெங்களூர் தமிழர்கள் நிலை?

சர்வஞ்ஞர் சிலையை சென்னையில் திறப்பது குறித்து யாருமே தமிழகத்தில் ஒரு வார்த்தை கூட வாய் திறக்காத நிலையில், வருகிற 9-ஆம் தேதி நீங்கள் சென்று சிலையைத் திறப்பதாக அறிவித்திருக்கிறார்கள். அதற்காக தயாராகியும் வருகிறீர்கள். இப்போதே உங்களை சந்தித்து பலரும் சால்வைகளும் பொன்னாடைகளும் போர்த்தத் துவங்கிவிட்டார்கள். ஆனால் இதோ, எந்த ஒன்பதாம் தேதி நீங்கள் திருவள்ளுவர் சிலையைத் திறப்பதாக அறிவித்திருக்கிறீர்களோ அந்த ஒன்பதாம் தேதி பெங்களூரையே ஸ்தம்பிக்க வைக்கப் போவதாக கன்னட அமைப்புகள் அறிவித்திருக்கின்றன. வாட்டாள் நாகராஜின் கன்னட சாளுவளி, வட்டாள் பக்ஷ£, பிரவீன் ஷெட்டி தலைமையிலான கன்னட ரக்ஷன வேதிகே, கன்னட சேனை, கன்னட வேதிகே, நாராயண கௌடா தலைமையிலான இன்னொரு கன்னட ரக்ஷன வேதிகே என அடுக்கடுக்கடுக்காக அத்தனை அமைப்புகளும் கடந்த சில தினங்களாக விஷத்தைக் கக்கி வருகின்றன. பெங்களூருவில் உள்ள ஒவ்வொரு தமிழனும் ஒன்பதாம் தேதி என்ன நடக்குமோ என்று அஞ்சி நடுங்கும் சூழல் உருவாகியிருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. உண்மையில் இதை ஒட்டியே இந்தக் கடிதம் எழுத நேர்ந்தது.

அவர்கள் சொல்வது இதுதான் சென்னையில் சர்வஞ்ஞருக்குச் சிலை தேவையில்லை. பெங்களூருவில் திருவள்ளுவர் சிலையைத் திறக்க அனுமதிக்க மாட்டோம் என்று சொல்லித்தான் ஒன்பதாம் தியதி பந்த் அறிவித்திருக்கிறார்கள். ஒரு முதல்வராக சர்வ பாதுகாப்போடும் சிகப்பு கம்பள வரவேற்போடும் நீங்கள் பெங்களூர் சென்று கன்னட மக்களின் விருப்பத்தையும் மீறி அங்கு திருவள்ளுவர் சிலையை அங்கு திறந்து வைத்து விட்டு வந்து விடலாம். அது ஒரு பிரச்சனையே இல்லை. ஆனால் அது குறித்த அச்சம் இப்போதே பெங்களூர் தமிழர்களிடம் பரவியிருக்கிறது. அவர்களுக்கு என்ன பாதுகாப்பு? காவிரி, ஓகேனக்கலோடு இப்போது கூடுதலாக திருவள்ளுவரும் அந்த மக்களுக்கு தலைவலியாக மாறியிருக்கிறார். நான் ஒரு மானமுள்ள தமிழனாகக் கேட்பது இதுதான். என்ன காரணத்திற்காக திருவள்ளுவரின் சிலையை பெங்களூருவில் திறக்க வேண்டும்? வான்புகழ் வள்ளுவனுக்கு வானாளவிய சிலையை குமரிக் கடலில் நிறுவி அழகு பார்த்த நீங்கள், அய்யனின் சிலையை தமிழகத்தில் இன்னும் நிறுவ எவ்வளவோ இடங்கள் இருக்கும்போது அதை ஏன் பெங்களூருவில் திறக்க வேண்டும்? அதற்கு சமனாக சர்வஞ்ஞரின் சிலையை ஏன் சென்னையில் திறக்க வேண்டும்? இந்த இரண்டுமே வெறும் சிலைகளாக இங்கே நிற்கப் போகிறதா? அல்லது காலாகாலத்திற்கும் தமிழர் எதிர்ப்பரசியலுக்கு கன்னடர்களுக்கு கிடைக்கும் இன்னொரு வாய்ப்பாக உருவாகப் போகிறதா? நிதானமாக யோசித்துப் பாருங்கள்.

பல கோடி விவசாயிகள் தொடர்பான ஓகேனக்கல், காவிரி தொடர்பாக மௌனம் சாதிக்கிற நீங்கள் இன்றுவரை ஓகேனக்கல் கூட்டுக் குடி நீர்திட்டத்தை துவங்கவில்லை. பல லட்சம் மக்களின் தண்ணீர் தாகத்தை தீர்ப்பதை விட ஒரு சிலை திறப்பதிலா தமிழனின் தன்மானம் இருக்கிறது? கர்நாடகத்தில் தமிழ் மக்களுக்கு எதிரான கடந்த கால நிகழ்வுகளை நினைவில் கொண்டே இதை எழுதுகிறேன். இப்போது தேவை சிலைகளல்ல, வாழ்வாதார உரிமைகளே. இதைச் சுட்டிக் காட்டியதற்காக வழக்கம் போல ‘‘ஐய்யகோ அய்யனுக்கு சிலை வடிக்க நினைக்கிறேன் அக்ரகாரம் வடிக்கும் நீலிக்கண்ணீரை பார்த்தீர்களா?” என்று முழு நீளக் கவிதை எழுதாதீர்கள். அதை ரசிக்கிற மனம் ஒரு தமிழனாக எனக்கு இல்லை என்பதோடு உங்கள் ஆட்சிக்காலத்தில் நாங்கள் எதிர்பார்ப்பது ஓகேனக்கல், காவிரி சிக்கலைத் தீர்ப்பதைத்தானே தவிர சிலை திறப்பதை அல்ல என்பதைக் கூறி நீண்ட காலத்திற்குப் பிறகு உங்கள் மகள் வீட்டிற்குச் செல்லும் உங்களுக்கு வாழ்த்துக்களைச் சொல்லி இக்கடிதத்தை முடிக்கிறேன்.

வழக்கம் போல போருக்கு எதிராக உங்களுக்கு மடல் எழுதிய அதே தமிழன்.

Pin It