சிறு துளி, பெருவெள்ளம் என்பது தமிழ்ச்சொலவடை. அதன் அடிப்படையில் 1980 ஆம் ஆண்டு சிறு அளவில் தொடங்கப்பட்டிருந்தாலும், நல்லோர் வட்டம் எனும் அமைப்பு 2000-ஆம் ஆண்டில் சென்னையச் சார்ந்த சமூகச் செயல்பாட்டாளர் பாலசுப்பிரமணியம் அவர்கள் தலைமை ஏற்ற பிறகு, மாபெரும் பாய்ச்சலில் பெருமளர்ச்சி பெற்றது. அவரது விடாமுயற்சியால் தமிழகம் தழுவிய மாபெரும் விருச்சமாக நல்லோர் வட்டம் இப்பொழுது பல்வேறு கிளைகளோடு விரிவடைந்து உள்ளது.
(நல்வோர் வட்டம் சார்பாக டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை அவர்களிடமிருந்து "ஒளிந்தும் ஈரோடு" தலைவர் சின்னுசாமி அவர்கள் பாராட்டுப் பட்டயம் பெறுதல்)
ஒர் இலட்சிய சமுதாயம் அமைக்க இவ்வமைப்பு மேற்கொண்டு வரும் பல்வேறு பணிகளைப் பாராட்டி, மேனாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்கள் அமெரிக்காவில் கலிபோர்ணியா மாநிலத்தில் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
நம் நாட்டின் பண்பாட்டுப் பாரம்பரியத்தை மேம்படுத்துவதற்கும், பாதுகாப்பதற்கும் அர்ப்பணிக்கப்பட்ட ஒரு சமூக அமைப்பாகத் தன் இலக்கை இது வரையறுத்துக் கொண்டுள்ளது. அதற்கேற்பப் பகுதி வாரியாக, துறை வாரியாகச் சமூகப் பார்வையுடைய அறிவார்ந்த பகுதியினரை இது ஒருங்கிணைத்து வருகிறது.
இரத்ததானம், கண்தானம், மரக்கன்று நடுதல் போன்ற பொதுவான எளிய பணிகளில் தொடங்கிய இவ்வமைப்பு, இன்று 100 செயல்பாடுகளை உள்ளடக்கிய பல்வேறு களங்களாகப் பெருகியுள்ளது. அதிலும் குறிப்பாக மாணவர்கள், இளைஞர்கள், மகளிர் ஆகியோரைச் சமூகப் பணிகளுக்கு ஈர்ப்பதைத் தனது முக்கியமான இலக்காக வைத்துள்ளது. கிராம சுயாட்சி, சுற்றுச்சூழல் மேம்பாடு, வாழ்வியல் விழிப்புணர்வு என இதன் செயல்பாடுகள் மென்மேலும் வளர்ந்து வருகிறது.
தமிழகத்திலுள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களை அணுகி, அவர்களில் பொதுநல நோக்கும் பொறுப்புணர்வும் மிக்கவர்களைத் தெரிவு செய்து, அவர்களை "மாணிக்க மாணவர்கள்" என வகைப்படுத்தி அவர்களுக்குத் தனிச்சிறப்பான பயிற்சிகளை நல்வோர் வட்டம் நல்கி வருகிறது. இன்றைய நிலையில் தமிழகத்தில் இப்படிப் பல்லாயிரக் கணக்கான மாணிக்க மாணவர்கள் பொறுப்பும், குடிமைப் பண்பும் மிக்கவர்களாக அர்ப்பணிப்புடன் செயலாற்றி வருகின்றனர். அதிலும் குறிப்பாக அரசுப்பள்ளி மாணவர்களை மையப்படுத்தி இத்தகைய முன்னெடுப்பை நல்வோர் வட்டம் செய்து வருவது பாராட்டுதலுக்குரியது.
அதே போல் மகளிர் களம் வாயிலாகப் பெண்களுக்கு விழிப்புணர்வு ஊட்டும் பணியும் தொடர்கிறது. "இல்லம் தேடி உள்ளம் நாடி" எனும் கோட்பாட்டின் அடிப்படையில் பல தரப்பிலும் உள்ள மகளிரைத் தனித்தனியே சந்தித்து அவர்களை ஒருங்கிணைத்து வருகிறது இவ்வமைப்பு.
இலட்சிய சமுதாயம் அமைப்பதற்கான பொறுப்புணர்வு மிக்க இளைஞர்களை வளர்த்தெடுத்து அவர்களை மாவட்ட / மண்டல / மாநில அளவிலான கட்டமைப்புகளில் களப் பொறுப்பாளர்களாக முன்றிந்து துகிறது.
நமது நாடு, கிராமங்களை அடிப்படை அலகுகளாகக் கொண்டிருப்பதை அடைவரும் அறிவோம். கிராமங்களிலுள்ள ஊராட்சித் தலைவர்களுக்குச் சிறப்பு முகாம்கள் நடத்திக் கிராமங்களுக்கென அரசு வழங்கி வரும் பல்வேறு உதவிகள் குறித்து விழிப்புணர்வு ஊட்டி வருகிறது. மேலும் கிராம நிர்வாகம், நிதி ஒதுக்கீடு, பொருளாதாரத் திட்டமிடல் போன்றவை குறித்துக் கிராம சபை மூலம் தொடர்ந்து பயிற்றுவிக்கின்றனர். பொதுவாகக் கிராமங்கள் சுயாட்சி மிக்கவையாக மாறத் தேவையான அடித்தளக் கட்டமைப்புப் பணிகளை இவ்வமைப்புத் தன் செயல்நெறியாகக் கொண்டுள்ளது.
ஈரோட்டில் குழந்தை பணியாற்றி வரும் "ஒளிந்தும் ஈரோடு" என்ற அமைப்பிற்கு முதல் முறையாக நல்லோர் வட்டம் அண்மையில் விருது வழங்கிச் சிறப்பித்துள்ளது. அவ்விழாவில் அறிவியலாளர் மயில்சாமி அண்ணாதுரை அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு கருத்துரை ஆற்றினார். இந்நிகழ்வில் நல்லோர் வட்டத்தைச் சார்ந்த பாலசுப்பிரமணியம், அக்னி ஸ்டீல் நிர்வாக இயக்குநர்கள் தங்கேவன், சின்னுசாமி மற்றும் கேகஸ்கே ரபீக், க.பழனித்துரை, கார்த்திக் உள்ளிட்ட பல்துறை ஆளுமைகள் பங்கேற்று விழாவைச் சிறப்பித்தனர்.
நல்லோர் வட்டம் போன்ற அமைப்புகள் நாட்டில் பெருக வேண்டும். சனநாயக விழுமியங்கள் மிக்க ஒரு பொன்னுலகை அப்பொழுது நாம் எளிதில் கண்டடைய முடியும்.
- கண.குறிஞ்சி