ஒரு வரலாற்று ஆய்வு – தொடர்

நுழைவாயில்:

robert clavin 350இந்த தலைப்பிற்குள் நுழைய வேண்டுமானால் 50 ஆண்டுகால திராவிட ஆட்சிக்கு முன்பாக என்னெவெல்லாம் புரட்டுக்களாகவும் இழிவுகளாகவும் இருந்தது; அது எப்படியெல்லாம் யாரால் வேருக்கு நீரூற்றி உரமிட்டு வளர்ப்பதுபோல்  வளர்க்கப்பட்டு பேணிப்பாதுகாக்கப்பட்டது; பின்பு எந்தவகையான போராட்டங்கள் அதற்கு எதிராக எழுந்தன; அதை செய்தவர்கள் யார் யார் அதன் பிறகு அதாவது 1967-இல் இருந்துதான் ஆட்சியில் அதிகாரம் என்கிற நிலை திராவிடக்கட்சிகளுக்கு வருகிறது எனினும்;  ஒருமுறை நெடிய  வரலாற்றை சிறிய சுருக்கமாக திரும்பிப்பார்த்துவிட்டு; தலைப்பிற்குள் செல்வது அனைவருக்கும் ஒரு புரிதலை கொடுக்கும் என்பதால், நாம் நம்முடைய பார்வையை சற்றே பின்னோக்கி பார்த்துவிட்டு பிறகு திராவிடத்தை விமர்சிப்பது நல்லது என்பது எனது கருத்தல்ல புரிதல்.

அலகாபாத் ஒப்பந்தம்

பீகாரில் உள்ள பக்சார் மாநிலத்தை ஆண்ட மொகலாயப்பேரரசர் இரண்டாம் ஷா அக்டோபர் 1764-இல் நடந்த போரில் வங்காளம் மற்றும் அயோத்தி நவாப்புகளை ஏற்கனவே வென்றிருந்த இராபர்ட் கிளைவுடன் தோற்றதால்  12 ஆகஸ்டு 1765 அன்று அன்றைய துணைக்கண்டப் பகுதிகளாக இருந்த இந்தியா, வங்காளதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நேபாளம், பூட்டான், இலங்கை போன்ற பகுதிகளில் பிரித்தானியர்களின் ஆட்சி காலூன்ற ஒப்பந்தம் எனும்பெயரில் வழிவகை செய்யப்பட்டது.

தொடக்கத்தில் ஜான் நிறுவனம் என்று அழைக்கப்பட்டு  பின்னர் ஒரு கூட்டுநிறுவனமாக மாறி அடுத்தடுத்து வளர்ச்சிபெற்று; இந்தியத் துணைக் கண்டத்தில் வணிகம் செய்து லாபம் ஈட்டும் நோக்கத்தில், பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனி பிரித்தானிய வணிகர்களால் லண்டனில் 1600ஆம் ஆண்டில் நிறுவப்பட்டு; கிழக்கிந்திய கம்பெனியாக உருமாறியது; 1600 டிசம்பர் 31ஆம் நாள் கிழக்கிந்தியக் கம்பெனி தனது வர்த்தகத்தைத் தொடங்க இங்கிலாந்து ராணி முதலாம் எலிசபெத் அனுமதி அளித்தார். தற்போதைய தெற்காசிய நாடுகள், தென் கிழக்கு ஆசிய நாடுகள் ஆகியவற்றை உள்ளடக்கியப் பகுதிகளில் வர்த்தகத்தை மேற்கொள்ள இந்த நிறுவனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது. இராபர்ட் கிளைவ்  அதன் மேஜர் ஜெனரல்  மட்டுமன்றி  இராணுவ மற்றும் அரசியல் மேலாதிக்கத்தை நிலைநாட்டிய ஒரு பிரித்தானிய அதிகாரி என்பதோடு, 1858 முதல் 1947 வரை இந்திய தலைமை ஆளுநராகவும் பிரித்தானிய நிர்வாகத்தின் முக்கிய முடிவுகளை எடுக்கக்கூடிய முக்கிய அரசு தலைவராகவும் செயல்பட்டார்   என்பது குறிப்பிடத்தக்கது. இதில் இன்னுமோர் வியப்பான விடயம் வாரன் ஹேஸ்டிங்சும் இவருடன் இதே காலகட்டத்தில் படை தளபதியாக செயலாற்றினார் என்பதே.

இங்கே நமக்கு இயல்பாக வரவேண்டிய சந்தேகம் 1600 மற்றும்  1800களில் வெறும் 50 இலட்சம் மக்கள்தொகையைக்கொண்ட பிரிட்டிஷ் இராஜ்யம்; எப்படி அவர்களைப்போன்று 60 மடங்கு அதாவது 30 கோடி மக்கள்தொகையைக்கொண்ட இந்தியா போன்ற கீழை நாடுகளை தங்களுடைய கொடையின்கீழ் கொண்டுவந்தது என்பது பற்றி; அதுமட்டுமன்றி, நூறு ஆண்டுகள் வரை வெறும் வியாபாரம் மட்டுமே செய்துகொண்டிருந்தவர்கள் எப்படி நாடுபிடிக்கும் வேலைகளில் இறங்கி; அதில் வெற்றிகண்டார்கள் என்றும் எழவேண்டுமல்லவா? நாளடைவில் பருத்தி ஏற்றுமதி மற்றும் இந்திய பருத்தியின் தரமும் மகசூலும்  குறைந்ததால், கிழக்கிந்திய கம்பெனி பெரும் நட்டத்தை சந்தித்தது; இந்த நிலையில்தான் நாடுபிடிக்கும் கொள்கையில் இறங்கியது கிழக்கிந்திய கம்பெனி. விளைவு இருதரப்பினருக்கும் பெருநட்டம் விளைய நேர்ந்தது. அதுவே இந்திய துணைக்கண்டத்தின் பேரழிவாகத் தொடங்கியது எனலாம். இந்தியாவின் வளங்கள் பீரங்கி முனையிலும் துப்பாக்கி முனையிலும் கொள்ளையடிக்கப்பட்டன எனினும்; அது பிரிட்டனின் யாருக்குச் சென்றது அரசுக்கா அல்லது பெருநிறுவனங்களுக்கா தனிநபருக்கா என்கிற ஆயிரமாயிரம் கேள்விகள் இருப்பினும், பிரிட்டிஷ் பிரதேசம் முழுதும் ஏதோவொருவகையில் பயனடைந்ததுதான் உண்மை. கார்ப்பரேட் எனும் கொள்கையை வகுத்ததே பிரிட்டன்தான் என்றால் மிகையல்ல தோழர்களே!

இந்தியாவில் புதிய கல்விக்கொள்கை தோற்றம்

குருகுலம் என்கிறபெயரில் பார்ப்பன மற்றும் உயர்சாதி பிள்ளைகள் மட்டுமே படிக்கமுடியும் என்கிற மாயையை உடைத்தெறிந்தது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம். ஒரு தேசத்தின் எதிர்காலம் அதன் கல்விச்சாலைகளிலேயே நிர்ணயிக்கப்படுகிறது. ஒரு அரசு முன்வைக்கும் கல்விக் கொள்கையின் மீதே அந்த எதிர்காலம் கட்டமைக்கப்படுகிறது அது பிரிட்டிஷ் அரசுக்கான நிர்வாக ஒழுங்கமைப்பிற்கானவொன்றே  எனினும்; அதிலிருந்து சூத்திர மக்களின் மாணவர்களின் கல்விக்கு வழிவகுத்தது என்றால் மிகையல்ல. 1828 முதல் 1835 வரை தலைமை ஆளுநராக பதவி ஏற்றிருந்த வில்லியம் பெண்டிங் பிரபு அவ்வளவாக இந்திய மக்களின் நலனில் அக்கறை கொண்டிருந்தும்;

1813-இல் முதன்முறையாக இந்திய மக்களுக்குக் கல்வி அளிக்கும் பொறுப்பைத் தனது பணியாக ஏற்பதாக பிரிட்டிஷ் அரசு அறிவித்ததோடு; ஆங்கிலக் கல்வியே தனது கல்வி என அதற்காக ஒரு இலட்ச ரூபாய் உடனடி நிதியாகவும் ஒதுக்கி உத்தரவிட்டதையும்; கிழக்கிந்திய கம்பெனியில் வேலை பார்க்க, இந்திய மக்களுக்குச் சாதி மதம் உள்ளிட்ட தகுதி தேவையில்லை, பிரிட்டிஷ் கல்வி நிறுவனக் கல்வித் தகுதியின் அடிப்படையில் மட்டுமே வேலை வழங்கப்படும் என அதன் இரண்டாம் ஷரத்து குறிப்பிடுவது பற்றிய முழு விவரங்களையும் பெண்டிங் பிரபு அறிந்திருந்தபடியாலும்; 1835ஆம் ஆண்டு தொடக்கத்தில் கிழக்கிந்திய கம்பெனியின் நிர்வாக கட்டளையை நிறைவேற்றவேண்டியும் அரசுக்கு ஆங்கில அறிவு பெற்ற குமாஸ்தாக்கள் அதிக அளவில் தேவைப்பட்டதாலும்; இழந்த செல்வாக்கை பெரிய அளவில் மீட்டெடுக்க உடனடி நடவடிக்கைகள் பிரிட்டன் நிறைவேற்ற துடித்ததாலும்; உடனடியாக வர்த்தகத்திற்கு மட்டுமே பயன்படும் ஒரு எளிமையான ஆங்கில பாடத்திட்ட முறையை பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் ஏற்கனவே உருவாகியிருந்தது.

ஆனால் அதை படிக்க கற்றுத்தெளிய தேவையான அறிவு பெற்றிருக்கும் இந்தியர்கள் யார் யார் அல்லது யார் யாருக்கு அந்தக்கல்வியை படிக்கும் திறமை இருக்கிறது என்பதை ஆராய ஒரு அறிக்கை தேவைப்பட்டதால்; 1835இல் பாபிங்டன் மெக்காலே இந்தியாவிற்கு அழைத்துவரப்பட்டு உடனடியாக நேரடியாகவே களத்தில் இறங்கினார். அதற்காக சில ஆசை வார்த்தைகளை கையாண்டார்; அதாவது இதுவரையில் சமஸ்கிருதம் அரபியிலும் படித்துவரும் நீங்கள் இந்த ஆங்கில புதிய கல்வியினால் ஆங்கிலேயர்களாகவே மாறப்போகிறீர்கள் வெறும் குருதியால் நிறத்தாலும் மட்டுமே நீங்கள் இந்தியர்கள் மற்றபடி ஆங்கிலம் கற்கும்  எல்லோருக்கும் அரசு வேலை என்றார். இதை மறு ஆய்வு எதையும் செய்யாமல் மனமகிழ்ந்து அடிமைகள் போன்று உடனே ஏற்றுக்கொண்டு ஆங்கிலமே எங்களது மூச்சு என்று பார்ப்பனர்கள் பயிலத்தொடங்கினர். இதுதான் அவர்கள் செய்த நமக்கான முதல் துரோகம்.

இதனால் பார்ப்பன பிள்ளைகள் ஆர்வம் அதிகம் காட்டியதோடு ஆங்கிலத்தில் நிறைய பேர் சென்னை மாகாணத் தமிழர்களுக்கு சமமாகப் பயிற்சியும் தேர்ச்சியும் பெற்றுவிட்டனர். ஆனால் யாருக்கு அரசு வேலை என்பதுதான் இங்கு போட்டி. ஏற்கனவே ஆங்கில அறிவு பெற்று அதனால் அளவிடற்கரிய இலாபங்களை பெற்றவர்கள் இந்த தங்க வாய்ப்பைப் பார்ப்பனர்கள் நழுவவிடுவார்களா என்ன? அதுவும் சூத்திர மக்களின் மீது வன்மமே கொண்டிருப்பவர்கள் அவர்களின் பிள்ளைகள் படித்திருந்தாலும் முன்னேற அவ்வளவு எளிதில் விட்டுவிடுவார்களா என்ன? ஏற்கனவே ஆங்கிலேயரிடம் வேலையிலும்  விசுவாசத்திலும் செல்வாக்கு  பெற்றிருந்த பார்ப்பனர்கள்; எங்களுக்கே எல்லா அரசு பணியிடங்களும் வேண்டும் என்று முடிவு செய்து, அதன்படி காய் நகர்த்தத் தொடங்கினார்கள்.

இதன் விளைவு என்னாயிற்று தெரியுமா? அதாவது 1890இல்  சென்னை மாகாணத்தின் மொத்த மக்கள்தொகையே நான்கரை கோடி அதில் ஏறத்தாழ 90 விழுக்காடு சூத்திர மக்கள்; மீதமுள்ள 10 விழுக்காடு மட்டுமே பார்ப்பனர்கள். இன்றைக்கு IAS என்று அழைக்கப்படும் பணி அன்று ICS என்று இருந்தது. 1892 - 1904இல் நடத்தப்பட்ட மொத்தம் 16 ICS பணிகளுக்கான தேர்வுகளில் 15 இடங்கள் பார்ப்பனர்களே பெற்றுக்கொண்டார்கள்; ஒரே ஒரு இடம் மட்டுமே வேசி மக்கள் எனும் சூத்திர மக்களுக்கு கிடைத்தது என்க. அதுமட்டுமல்ல அடுத்தடுத்த பொறியாளர் தேர்வுகளில் மொத்த பணியிடமான 21 இடங்களில் 17 பேர்கள் பார்ப்பனர்களே பெற்றுக்கொண்டனர் வெறும் நான்கு இடங்கள் மட்டுமே சூத்திர மக்களுக்கு கிடைத்தது. அதே நேரத்தில் 140 உதவி ஆட்சியர் பணியிடங்களும் நிரப்பப்பட்டன அதில் 77 பேர்கள் பார்ப்பனர்கள் என்றால் நீங்களே ஒரு முடிவிற்கு வாருங்கள்.

சென்னை திராவிடர் சங்கம்

பாதிப்புக்கு உள்ளாகும் அத்தனை பேருமே பிராமணர் அல்லாத மக்கள். எனில், ஏன் அவர்கள் அத்தனை பேரையும் ஒற்றைக் குடையின்கீழ் திரட்டக் கூடாது? அதற்கு சாட்சியாக 1893இல் வெளியான The non brahmin Races and Indian Public Service மற்றும் The Ways and Means for the Amelioration of Non Brahmin Races என இந்த இரண்டு நூல்களும் வித்திட்டன. ஏறத்தாழ 150 ஆண்டுகளாக நடந்துவரும் ஆங்கிலேயே ஏகாதிபத்திய ஆட்சி வெறும் பார்ப்பன ஆட்சியே மட்டுமன்றி மற்ற பெருவாரியான மக்களைப் பன்றிகளும் கழுதைகளும் போன்று நடத்தப்படுவதை உணர்ந்ததன் விளைவாக 1909 -இல் The Madras Non Brahmin Association தொடங்கப்பட்டது.

திராவிடர் என்பது ஓர் இனத்தைக் குறிக்கும் பெயர். சென்னை, கேரளம், கர்நாடகம், ஆந்திரம் ஆகிய இந்தியாவின் தென்பகுதியைச் சேர்ந்த பிராமணர் அல்லாத மக்களுக்கான பொதுவான பெயராக திராவிடர் என்ற சொல் பயன்படுத்தப்பட்டது. உண்மையில் திராவிடர் என்ற சொல்லை சென்னை ஐக்கியக் கழகத்தினர் பயன்படுத்திக் கொள்வதற்கு முன்பே இன்னொரு இயக்கம் பயன்படுத்தியிருந்தது. 1892இல் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த அயோத்திதாசப் பண்டிதர் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் தங்களுடைய இயக்கத்துக்கு திராவிட ஜன சபை என்று பெயர் வைத்திருந்தனர்

புரட்சி வீரரான டாக்டர் டி.எம்.நாயர் சென்னை மாநகராட்சியின் சார்பாக 1904-இல் சென்னை சட்டமன்றத்துக்கு தேர்வு செய்யப்பட்டார். "விழி, எழு, இன்றேல் என்றும் வீழ்ந்துபட்டோர் ஆவீர்" என்று திராவிட சங்கத்தின் முதலாம் ஆண்டுவிழாவில் உரத்த குரலில் முழங்கினார். அவரை ஒரு திராவிட லெனின் என்று அழைக்க வேண்டும் என்று பெரியார் அழைக்கிறார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

இந்தச் சங்கம் பிராமணரல்லாதாரின் முன்னேற்றங்கள் நடவடிக்கைகள் குறித்து பேசி அறிக்கை வெளியிட்டது.

1. முழுக்க முழுக்க சமுதாய முன்னேற்ற அமைப்பாக அரசியல் சார்பற்றமுறையில் தொடர்ந்து செயல்படும்.

2. சூத்திர மாணவர்கள் மேற்படிப்பிற்காக வெளிநாடு சென்று பயில இந்தச் சங்கம் உதவும். அவர்கள் அவ்வாறு கல்வி கற்று திரும்பி வந்து புதிய தொழில்களை தொடங்கும்பட்சத்தில் அவர்களுக்கான அனைத்து உதவிகளையும் செய்து கொடுக்கும். 3. நல்ல அறிவும் கல்வி சிந்தனையும் உள்ள மாணவர்களை தெரிவு செய்து படிக்கவைக்கும். 4. சமூக பொருளாதார ஏணியில் ஏறத்துடிக்கும் மாணவ மக்களுக்கு இந்த சங்கம் உறுதுணை செய்கிறது. 1916இல் நடைபெற்ற டெல்லி சட்டசபைத் தேர்தலில் தாம் வெற்றிபெறுவதற்கு அனைத்து தகுதிகளும் இருந்தும் பார்ப்பனச் சதியால் டாக்டர் டி எம் நாயர் தோல்வியடைந்த வரலாற்றை நீங்கள் அறிவீர்கள் என்பதால் அதைத் தவிர்த்து தாவிவிடுகிறேன்.

அன்னிபெசன்டும் சனாதன அணுகுமுறையும்

anni besant 3501847ஆம் ஆண்டில் லண்டனில் பிறந்த அன்னி வூட் தனது 19ஆவது வயதில் பிராங்க் பெசன்ட் என்ற பாதிரியாரை மணந்து கிறித்துவப் பணியில் ஈடுபட்டார்; தனது "லிங்க்" பத்திரிகையில்  விடுதலைப் போராட்டங்களுக்கு ஆதரவாக எழுதியதன் மூலம் உலக அளவில் அனைவராலும் அறியப்பட்டார். அதைத்தொடர்ந்து அன்னிபெசன்டிற்கு  பெசன்டோடு இணைந்து கிறித்துவ மதப்போதகராக பணியாற்றுவதில் நாட்டமில்லாமல் போனதால்; 1873இல் தன் கணவரைவிட்டுப் பிரிந்து விடுதலைப்போராட்டத்திற்கு ஆதரவாக 1913இல் காமன்வீல் பத்திரிகையைத் துவங்கிய அன்னி பெசன்ட்; 1914இல் சென்னையில் இருந்தபடி நியூ இந்தியா இதழைத் துவக்கினார். ஏற்கனவே காங்கிரஸ் முழுவதிலும் பார்ப்பன ஆதிக்கம் அதிகம் ஆதலால், தமக்கு ஒரு வசீகரிக்கும் பேச்சாளர் கிடைத்துவிட்டார் என்ற மகிழ்ச்சியில் துள்ளினர். இதனால் காங்கிரஸில் தன்னை இணைத்துக்கொண்ட அன்னி பெசன்ட்  அங்கிருந்த பார்ப்பனர்களால் சுவீகரிக்கப்பட்டு பார்ப்பனீயத்திற்கு ஆதரவாகவே தன் வாழ்நாளை கழிக்கும் நிலைக்கு ஆளானார். அவரது பார்ப்பனீய ஆதரவு போக்கிற்கு அவர் நடத்திய பத்திரிகைகளும் எழுதிய நூல்களுமே சான்றாய் விளங்குகிறது.

1917இல் கல்கத்தாவில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டிற்கு நரசிம்மாச்சாரி போன்ற பார்ப்பனர்கள் வருவதால் அவர்களுக்கு உயர்தர சைவம் ஏற்பாடு செய்யவேண்டி தனியாக ஒரு உணவக விடுதியை உருவாக்கி; அவர்களுடைய சனாதன நெறியை காப்பாற்றியவர்தான் இந்த அன்னிபெசன்ட் அம்மையார் அவர்கள். இவர் அதோடு தன்னுடைய பார்ப்பனீய அடிமைத்தனத்தை நிறுத்திக்கொள்ளவில்லை எல்லாவற்றிலும் மேலாக பகவத் கீதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்து அதாவது தாம் ஒரு பெண் என்பதையும் மறந்து பெண்கள் பாவ யோனியில் பிறந்தவர்கள் என்று சொல்லும் நூலான கீதையையும்; இராமாயணம், மகாபாரதம் போன்ற புராணக் குப்பைகளிலும், இந்து சாஸ்திரச் சாக்கடையிலும் மூழ்கி அவற்றைப் புத்தகமாக்கி புளகாங்கிதம் அடைந்தவர்.

சென்னை அடையாறு பகுதியில் செத்துப்போன சமஸ்கிருதத்திற்கென்றே தனி நூலகம் அமைத்து அதில் இத்துப்போன நூல்களையெல்லாம் தேடித்தேடி சேகரித்து  மதம் சார்ந்த கல்வியைப் பரப்புவதில் ஆர்வம் காட்டியது மட்டுமன்றி பார்ப்பனர் நலனுக்காகவே ஹோம்ரூல் எனும் இயக்கத்தை நடத்தி பார்ப்பன சனாதன மனு அதர்மத்தைக் கெடாமல் பார்த்துக்கொண்டார் இந்த புண்ணியவதி என்றால் பாருங்களேன். பஞ்சாபில் நடைபெற்ற வரலாற்றையே உலுக்கியெடுத்த ஜாலியன் வாலாபாக் படுகொலையைப் "பஞ்சாபியர்கள் செங்கல் எறிந்ததற்கும் ஜெனரல்டயர் பீரங்கி குண்டு போட்டதற்கும் சரியாகப்போய்விட்டது. இதுதான் அரச தர்மம்" என்றார்!

ஆய்வு தொடரும்

Pin It