இறந்தவர்களுக்குத் திதி கொடுக்க வேண்டுமென்றால் இறந்து போனவர்களின் ஆத்மாவைப் பற்றி 3 விதமாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
1. இறந்து போகும் ஜீவனின் ஆத்மா மற்றொரு சரீரத்தைப் பற்றிக் கொண்டுதான் இந்த சரீரத்தை விடுவதாக.
2. இறந்து போன ஜீவனின் ஆத்மா இறந்த உடன் பிதிர்லோகத்தை அடைந்து அங்கு இருப்பதாக. (பிதிர்களாய் இல்லாத ஆத்மா எங்கிருக்குமோ)
3. இறந்து போன ஜீவனின் ஆத்மா அதனதன் செய்கைக்குத் தகுந்தபடி மோக்ஷத்திலோ, நரகத்திலோ பலன் அனுபவித்துக் கொண்டிருப்பதாக.
ஆகவே இந்த மூன்று விஷயத்தில் எது நிஜம்? எதை உத்தேசித்துத் திதி கொடுப்பது?
இது தவிர ஆத்மா என்பது கண்ணுக்குத் தெரியாதது என்றும் சரீரம் உருவம் குணம் இல்லாதது என்றும் சொல்லப்பட்டிருக்கிறதே. சரீரம் உருவம் குணம் இல்லாததற்கு நாம் பார்ப்பானிடம் கொடுக்கும் அரிசி, பருப்பு, செருப்பு, விளக்கமாறு ஆகியவை எப்படிப் போய்ச் சேரும். அவற்றை ஆத்மா எப்படி அனுபவிக்க முடியும்?
(பகுத்தறிவு (மா.இ.) கட்டுரை அக்டோபர் 1935)