நள்ளிரவு நேரத்தில்
கண்காணிப்பு கேமராவின்
பார்வை இருளாகி
காவலாளியின் தூக்கம்
மயக்கமானபோது
கடவுள் திருடப்பட்டார்,
நந்தனார் போலவே
உயர் வெப்பநிலைத் தீயில்
தள்ளப்பட்டதில்
சிலை வெந்துருகியும் போனார்...
காலை நடைதிறக்கும் முன்
கோவிலைச் சேர்ந்து
தன்னை உலக ரட்சகராக
நிரூபிக்க முடியாத
கையறுநிலையிலும்,
நாளை வருவதாக இருக்கும்
பேருபெற்ற பிரமுகர்களின்
பெரும் பரிகாரங்களைப்
பெற முடியாத ஏக்கத்திலும்,
அவர் ஆன்மா சாந்தியடையாமல்
சுற்றிக் கொண்டிருக்கிறது...
அதற்குப் பேய் என்று மட்டும்
பெயர் வைத்துவிடாதீர்கள்...!
- இரா.ரவிக்குமார்
RSS feed for comments to this post