இந்திய நாட்டின் தொழிலாள வகுப்பார்கள் தங்கள் அடிமைச் சங்கிலிகளை அறவே தகர்த்தெறிய, பரிபூரணமாக இன்னும் முற்படவில்லை என்றாலும், ஓர் அளவிற்கு அவர்கள் சமீப காலத்தில் விழிப்படைந்திருக் கிறார்கள் என்பது மாத்திரம் மறுக்க முடியாத உண்மையாகும். தொழிலாளர்களுடைய விழிப்பிற்குக் காரணம், அவர்களுடைய சகிக்க முடியாத கொடிய துன்பங்களும் கஷ்டங்களுமேயாகும்.

தொழிலாளர்களுக்கு, முதலாளிகளோ அல்லது அரசாங்கத்தாலோ இன்றையத் தினம் "கிருபா கடாக்ஷம்" காட்டப்படுகிற தென்று சொன்னால், அது அந்த தொழிலாளிகளின் உழைப்பின் பயனாகவே, நியாயமாக கிடைக்க வேண்டிய வரும்படியிலிருந்து கொஞ்சம் கொடுத்து, தொழிலாளர்கள் வயிறு ஒட்டி, வாடி வதங்கி சாகாமலிருக்கச் செய்து, மீண்டும் சாஸ்வதமாக தங்களுக்கே ஊழியம் செய்து கொண்டிருப்பதற்கே தவிர, மற்றப்படி நியாய புத்தியையோ, கருணைப் பிரவாகத்தையோ அல்லது பச்சாதாப இரக்க புத்தியையோ, கொண்டதல்லவென்று துணிந்து கூறுவோம்.

periyar 322இன்றைய தினம் முதலாளியானவன், ஒரு தொழிலாளியைப் பற்றி எப்பேர்க்கொத்த மனோநிலையைக் கொண்டிருக்கிறான் என்று முடிவு கட்டுவதற்கு, அவனுடைய நடைமுறை வாழ்க்கையை பரிசீலனை செய்யுங்கள். ஒரு முதலாளிக்கு, அவனுடைய நாய்க்குட்டியோ, மைனாக் கிளியோ, எருமை மாடோ செத்துப் போனால், அதை நஷ்டமாகக் கருதி துக்கப்படுகிறான். ஆனால், ஒரு தொழிலாளி செத்துப் போனால், அந்தப்படி கூட துக்கப்படுவதைக் காணோம். தொழிலாளர்களுடைய இந்த பரிதாப நிலைமைக்கு யார் என்ன சமாதானம் கூறக்கூடும்.

தொழிலாளர்கள் தங்களுடைய நியாயமான உரிமையைப் பாதுகாத்துக் கொள்ள, இன்னும் தக்க சிரத்தை எடுத்துக் கொள்ளவில்லை என்றாலும், ஆங்காங்கே தொழிலாள சமூக விழிப்பின் காரணமாக, சில தொழிற்சங்க ஸ்தாபனங்களும், டிரேட் யூனியன் சங்கங்களும் ஸ்தாபிக்கப்பட்டு வந்திருக்கின்றன, வருகின்றன. இவற்றில் சில முதலாளிமார்களின் சூழ்ச்சிக்கு அடங்கியதும், தொழிலாளர்களை வஞ்சித்து துரோகம் செய்வதுமாகும். இது போன்ற ஸ்தாபனங்கள் நாட்டில் புதிய அரசியல் சீர்திருத்தங்கள் வழங்க உத்தேசிக்கப்படும் காலம் முதல், ஒரு சில சுயநலப் பித்தர்களால் உண்டாக்கப்படுவது சர்வ சாதாரணமாகும். இதைத்தக்கவாறு தொழிலாளத் தோழர்கள் கவனித்து பிறர் சூழ்ச்சிக்கு இடம் கொடுத்து விடக்கூடாது. (தொழிலாளர்களாகிய) தங்களின் ஆதிக்கத்தையே பரப்பப் பெரிதும் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டுகிறோம்.

முதலாளி வகுப்பின் ஆதிக்கம் ஒழிந்தாலொழிய தொழிலாளி விடுதலை பெற மார்க்கமில்லை என்பதை இன்றைய தினம் யாரும் ஆட்சேபனையின்றி ஒப்புக் கொள்வர். அதோடு ஜாதி அபிமானத்தாலோ மத அபிமானத்தாலோ தேசாபிமானத்தாலோ, கடவுளபிமானத்தாலோ தொழிலாளர்களுடைய முற்போக்கு கிஞ்சிற்றும் ஏற்படுவதற்கு வழியில்லை என்பதும், சமீப காலத்தில் நாம் அனுபவப் பூர்வமாகக் கூட கண்டறிந்த உண்மையாகும்.

உதாரணமாக இந்தத் தத்துவத்தை இரண்டு மாதங்களுக்கு முன்பு கூடிய அகில இந்திய டிரேட் யூனியன் காங்கிரசானது ஓர் அளவிற்கு நன்கு உணர்ந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. தொழிலாளர்களுடைய சரித்திரத்திலேயே மிகவும் சிலாகிக்கத்தக்க ஒரு விசேஷ சம்பவமும் இந்த மகாநாட்டில் நிறைவேறியது. அதாவது "மகாத்மா காந்தி உள்ளிட்ட மாபெரும் தேசீயத் தலைவர்களெல்லாம்" நாட்டின் முற்போக்கிற்கு தீங்கு விளைக்கும் "தேசத் துரோகிகள்" என்று பகிரங்கமாகவும், வன்மையாகவும், ஆத்திரத்தோடும் எடுத்துக் காட்டப்பட்டுக் கண்டிக்கப்பட்டிருக்கிறார்கள்.

தொழிலாளர்களுடைய விழிப்பு நிலை. ஒருவாறு இவ் விதமாக இருப்பதால், தொழிலாள தோழர்களுக்கு ஒரே ஒரு விஷயத்தை மட்டும் குறிப்பிட்டுவிட்டு இதனை முடித்து விடுகின்றோம். அதாவது தொழிலாளியின் முன்னேற்றத்திற்கு தொழிலாளிகளையே நம்புங்களென்பதேயாகும்.

(புரட்சி தலையங்கம் 25.03.1934)

Pin It