பொது உடமை என்கின்ற வார்த்தையானது மக்களின் காதுகளில் படும்போதே அது ஒரு பயங்கர சப்தம்போல் கருதப்படுகின்றது. கொஞ்ச காலத்திற்குமுன் நாஸ்திகம் என்கின்ற வார்த்தையும் இந்தப்படிதான் மக்கள் காதுக்கு ஒரு பெரிய அதிருப்தியானதும், வெறுப்பானதுமான சப்தமாகக் கருதப்பட்டு வந்தது. என்றாலும் இப்போது, அது ஒரு தர்க்கவாதத்துக்கு ஏற்றதாகவும், சிலர் அதை ஒரு நாகரீகமாகக் கருதவும் சிலர் அவ்வார்த்தையின் கருத்தை, சாதாரண நோக்கத்தோடு கவனித்து “அது அவரவர்கள் அபிப்பிராயம்” என்பதாகவும், சிலர் ஜனசமூக வாழ்க்கைக் கட்டுப்பாட்டிற்கு “அந்தப்படி (கடவுள் என்பதான) ஒரு அபிப்பிராயம் இருந்தால் நல்லது” என்றும் கருதும் படியாகவும் இருந்து வருகின்றது. நாஸ்திக விஷயத்தில் இப்போது ஆத்திரங்காட்டுபவர்கள் எல்லாம் மதப்பிரசாரத்தினால் வாழலாம் என்று கருதுகின்றவர்களும், மதப் பிரசாரத்தை தங்களது வாழ்க்கைக்கு ஆதாரமாய்க் கொண்டவர்களும் தவிர மற்றவர்களுக்கு அதைப் பற்றி சிறிதும் கவலையே இல்லாமல் இருந்து வருகின்றது.

பொது ஜனங்களில் நாஸ்திகத்தைப் பற்றி எந்தக் கூட்டத்திற்காவது சிறிது அதிருப்தி இருக்கும் என்று கருத வேண்டுமானால் அது போதிய கல்வி அறிவு பெறாத சமூகமும், முரட்டுக் கட்டுப்பாட்டுக்குள் இருந்து வரும் பிடிவாத சமூகமும், தங்களைத் தவிர வேறு வித உலக அபிப்பிராயம் இருக்கின்றது என்றுகூட உணர முடியாமல் வைத்திருக்கும் பாமரக் கூட்ட சமூகமும் ஆகியவர்களுக்குள்ளாக இருந்து வரலாம். பொதுவாக 100க்கு 10 அல்லது 12 பேரே படித்த மக்களும், 100க்கு 80, 90 பேர்கள் தற்குறிகளாகவும் இருக்கும் ஒரு தேசத்து மனித சமூகத்தில் நாஸ்திகத்தை வெறுக்கும் ஜனங்கள் சிலராவது இருக்கிறார்கள் என்பதில் அதிசயமொன்றுமில்லை. ஏனெனில் நாஸ்திகம் என்பது அறிவு வளர்ச்சியினாலும், ஆராய்ச்சித்திரத்தினாலும், சுதந்திர உணர்ச்சியாலும் ஏற்பட வேண்டிய விஷயமே ஒழிய; கடவுள் சொன்னார் என்று எழுதப்பட்ட புஸ்தகங்களில் என்ன சொல்லியிருக்கிறது என்றும்; தங்களைக் கடவுள் அவதாரமாகவோ, தூதர்களாகவோ குமாரர்களாகவோ சொல்லிக் கொண்டவர்கள் என்ன சொன்னார்கள் என்றும், பெரியோர்கள், ரிஷிகள், நபிமார்கள், நாயன்மார்கள், தீர்க்கத்தரிசிகள், ஆள்வார்கள், சித்தர்கள், ஞானிகள், மகாத்மாக்கள் என்று சொல்லப்பட்டவர்கள் என்ன சொன்னார்கள் என்றும், அவர்கள் சொன்னதாக ஏற்பாடு செய்த ஏடுகளிலும், புத்தகத்திலும் என்ன எழுதியிருக்கினறது என்றும் கவனித்து அவைகளுக்கெல்லாம் அடிமையாகி இருக்கும் அது விஷயத்தில் சுதந்திரமும், சுய அறிவும் இல்லாத மக்களுக்கு விளங்கக் கூடிய காரியம் அல்ல.periyar04ஆகையால் அறிஞர்கள் அவ்விதமக்களின் கூப்பாடுகளை லட்சியம் செய்யாமல் இருந்து வருவதுடன் ஆராய்ச்சியையும், சுயபுத்தியையும் பற்றி பிரசாரம் செய்து வருகிறார்கள். ஆதலால்தான் இப்போது நாஸ்திகம் என்னும் வார்த்தையானது மிகச் சாதாரண வார்த்தையாகவும், நாகரீக ஆராய்ச்சி அபிப்பிராயமாகவும் கொள்ளப்பட்டு வருகின்றது என்று சொன்னோம்.

அதுபோலவே பொதுஉடமை என்னும் வார்த்தையானது அது பற்றிய ஆராய்ச்சியே இல்லாத காரணத்தாலும் சுயநலத்தின் காரணமாய் அவ்வார்த்தைக்கு எதிராகவே பிரசாரங்கள் நடைபெறுவதாலும் பொது ஜனங்களுக்கு பொது உடமை என்றால் வெறுப்பாயும், பயமாயும் தப்பிதமாயும் தோன்றலாம். எந்தப் புதிய கொள்கையும், அபிப்பிராயங்களும் ஆரம்பகாலத்தில் பாமர மக்களிடை வெறுப்பாகவும் கஷ்டமாகவும்தான் தோன்றும். இதற்கு நாம் உதாரணங்கள் எடுத்துக்காட்ட வேண்டியதில்லை. ஏனெனில் புதிய அபிப்பிராயங்களையும், கொள்கைகளையும் கொண்டு வந்து புகுத்தியவர்கள் சரித்திரங்கள் என்பவைகளைப் பார்த்தால் இது தானாகவே விளங்கிவிடும். ஆதலால் பொது உடமை என்னும் வார்த்தை யும், கொள்கையும் பொது ஜனங்களால் பாமரமக்களால் சுயநலங்கொண்ட சோம்பேறிக் கூட்டங்களால் ஆதரிக்கப்படுகின்றதா? வரவேற்கப்படுகின்றதா? வெறுக்கப்படாமல் இருக்கின்றதா? என்பவைகளைப்பற்றி கவனிக்காமல் அதுவிஷயமாய் நமக்குத் தோன்றியதை எழுதலாம் என்றே கருதுகிறோம்.

பொது உடமை என்பது ஒரு குடும்பத்தில் உள்ள சொத்துக்கள், வரும் படிகள், தொழில்கள், லாபநஷ்டங்கள், இன்ப துன்பங்கள், போகபோக்கியங்கள், பொருப்பு கவலைகள் முதலாகியவைகள் எல்லாம் எப்படி அக்குடும்ப மக்களுக்கு பொதுவோ அதுபோல் தான் ஒரு கிராமத்திலோ, ஒரு பட்டணத் திலோ, ஒரு மாகாணத்திலோ, ஒரு தேசத்திலோ, ஒரு கண்டத்திலோ, ஒரு உலகத்திலோ உள்ள மேற்கண்டவைகள் எல்லாம் ஆங்காங்குள்ள அவ்வளவு பேருக்கும் பொதுவானது என்பதாகும். சுருக்கமாய்ச் சொல்ல வேண்டுமானால் பொது உடமைக் கொள்கையின் கடசி லட்சியம் உலகம் பூராவும் ஒரு குடும்பம். உலக மக்கள் எல்லோரும் சகோதரர்கள். உலகத்தில் உள்ள செல்வம் இன்பம் போகபோக்கியம் முதலியவை எல்லாம் அக் குடும்ப சொத்து. குடும்பமக்கள் (உலக மக்கள்) எல்லோருக்கும் அக்குடும்ப சொத்தில் (உலக சொத்தில்) சரிபாகம் என்கின்ற கொள்கையேயாம். ஆகவே பொது உடமை என்பது ஒரு கணக்குப் பிரச்சினை (Mathematic Problem) ஆகும்.

ஆகவே இப்படிப்பட்ட கருத்துக் கொண்ட பொது உடமைக் கொள்கையை வெறுக்கவோ, எதிர்க்கவோ நியாயமான முறையில் யாதொரு காரணமும் இருப்பதாய் நமக்குத் தோன்றவில்லை.

ஆனால் சகோதரனுடைய பங்கை மோசம் செய்து சகோதர துரோகத்தின்மூலம் அதிகப் பங்கை ஆசைப்படுகிற மனப்பான்மை உள்ளவனும், குடும்ப வேலைகளில் தனக்குள்ள சரிபாகப் பொருப்பை தான் ஏற்றுக் கொள்ளாமல் மற்ற சகோதரர்களையே அதிகமாய் உழைக்கச் செய்து தான் சோம்பேரியாய் இருந்து அதிகப் பங்கை அடைந்து மற்றவர்களுக்கு போதுமான அளவு கூலி கொடுக்காமல் வஞ்சித்து ஏமாற்ற வேண்டும் என்கின்ற தான மனப்பான்மை உள்ளவனும்தான் பொதுவுடமைக் கொள்கையை வெறுக்கவும் எதிர்க்கவும் கூடும்.

நிற்க, மற்றொரு விதத்திலும் பொதுவுடமைத் தத்துவம் என்பது எல்லா ஜனங்களாலும் மதிக்கத்தக்கது என்கின்றதான வேதாந்த தத்துவம் என்பதும் ஆகும். எப்படியெனில் எல்லா சரீரத்திலும் வசிக்கும் ஆத்மா ஒன்றே என்றும், எப்படி ஒரே சூரியன் பதினாயிரம் குடம் தண்ணீரில் பதினாயிரம் சூரியனாகக் காணப்படுகின்றதோ அதுபோல் கோடானுகோடி ஜீவராசிகளினுள்ளும் கோடானகோடி ஆத்மாவாகக் காணப்படுகின்றது என்று சொல்லப்படுகின்றது. ஆதலால், ஒவ்வொரு சரீரத்திலும், வெவ்வேறு ஆத்மாவாக இருக்கின்ற தென்றோ ஒவ்வொரு ஆத்மாவுக்கும் வெவ்வேறு வித சைதன்னிய அதாவது ஞானமோ, வேற்றுமை உணர்ச்சியோ இல்லை என்கின்ற தத்துவமே வேதாந்தமாகும். ஆதலால் அப்படிப்பட்ட வேதாந்தக் கொள்கைக்கு பொதுவுடமைத் தத்துவம் எவ்விதத்திலும் விறோதமானதல்ல.

மதக்கொள்கைகளுக்கும், பொதுவுடமைத் தத்துவம் விறோதமானதாக இல்லை. எப்படியெனில் எல்லா மதமும் மக்கள் யாவரும் சகோதரர்களென்றும், ஒருவருக்கொருவர் சகோதர உணர்ச்சியுடனேயே இருக்க வேண்டும் என்றும், எல்லோரையும் எல்லோருமே சகோதரர்களாகப் பாவிக்க வேண்டும் என்றும், எல்லோருமே ஒரேவித இன்பத்தையும், ஒரே வித செல்வத்தையும் அடைய வேண்டுமென்றே கற்பிக்கின்றதாகச் சொல்லப்படுகின்றது. ஆதலால் பொதுவுடமைத் தத்துவம் எந்த மதக் கொள்கைக்கும் விறோதமானது என்று சொல்லிவிட முடியாது.

மற்றும் பொதுவுடமைத் தத்துவமானது ஆஸ்த்திகம் என்பதற்கும் விறோதமானதல்ல. ஏனெனில் ஆஸ்திகமென்பது கடவுள் என்பதாக ஒன்று இருக்கின்றதென்றும், அது பாரபட்சமற்றது என்றும், சர்வ சக்தியும், சர்வ வியாபகமும் உடையது என்றும் அதுவே உலகத்தையும், உலகத்திலுள்ள வஸ்த்துக்களையும், ஜீவர்களையும் சிருஷ்டித்தாரென்றும், உலகமும் உலக வஸ்த்துக்களும் அந்த ஜீவர்களுக்காகவே சிருஷ்டிக்கப்பட்டவை என்றும் கருதுவதேயாகும். ஆகவே அப்படிப்பட்ட கருத்துக்கு எல்லா மக்களும் சகோதரர் என்கின்ற கொள்கையும், எல்லாப் பொருள்களும் இன்பதுன்பங்களும், எல்லா மக்களுக்கும் சரிசமமான பொது என்பதையும் எந்த ஆஸ்திகர்களும் ஆட்சேபிக்கவோ, எதிர்க்கவோ முடியாது என்பது விளங்கும்.

மேலும் மகாத்மாக்கள் என்பார்களுக்கும், பொதுவுடமைத் தத்துவம் வெறுப்பாகவோ, விறோதமாகவோ இருக்க நியாயமில்லை. ஏனெனில் மகாத்மா தத்துவம் என்பது எல்லா ஜீவர்களையும் சரிசமமாய்ப் பார்ப்பதும், எல்லா ஜீவர்களிடத்திலேயும் ஒரே ஆத்மா பரிணமிக்கின்றது என்பதை உணருகின்ற வர்க்கமாகும். ஆதலால் அப்படிப்பட்ட தத்தவமுடையவர்களுக்கு பொதுவுடமைத் தத்துவம் என்பது ஆட்சேபிக்கத்தக்கதாவதற்கு இடமில்லை. இவை தவிர கிருஷ்ணன், புத்தர், ஏசு, மகம்மது, குருநானக், ராஜாராம் மோகன்ராய், தயானந்த சரஸ்வதி என்று சொல்லப்படுபவர்களான அங்கீகரிக்கப்பட்ட மதத் தலைவர்கள், சீர்திருத்தவாதிகள் என்பவர்களுடைய கொள்கைகளுக்கும், லட்சியங்களுக்கும், எல்லா மக்களும், சகோதரர்கள், எல்லா சொத்தும் பொதுவானது என்னும்படியான கொள்கை கொண்ட பொதுவுடமைத் தத்துவம் விறோதமாகவோ, ஆட்சேபிக்கத்தக்க தாகவோ இருக்கும் என்று சொல்லுவதற்கில்லை.

மற்றும் தேசியம் என்பதற்கோ, தேசீயவாதிகள் என்பவர்களுக்கோ, பொதுவுடமைத் தத்துவம் விறோதமானது என்று சொல்லுவதற்கும் இடமிருக்கக் காரணமில்லை. ஏனெனில் தேசீயவாதிகளுடைய கொள்கை யெல்லாம் தங்கள் தேசத்து செல்வத்தை மற்றொரு தேசத்தார் கொள்ளை கொள்ளக் கூடாது என்பதும் தங்கள் தேச ஆட்சியை மற்றொரு தேசத்தார் ஆளக் கூடாது என்பதுமே முக்கியமானதாகும். ஆதலால் இதே கொள்கை கொண்ட தான அதாவது ஒருவருடைய உழைப்பின் பயனை மற்றவர்கள் கொள்ளை கொள்ளக்கூடாது என்பதும், ஒருவர்மீது ஒருவர் ஆதிக்கம் கொள்ளக்கூடாது என்பதும் எல்லோரும் சமமாய் உழைக்க வேண்டும். எல்லோரும் சமமாய் அடைய வேண்டும். எல்லோருக்காக எல்லோரும் ஆட்சி செலுத்த வேண்டும் என்னும் கொள்கை கொண்ட பொதுவுடமை தத்துவத்தை ஆட்சேபிக்க நியாயமே இல்லை. மற்றபடி சமூக சேவைக்காரருக்கோ, பொது நல சேவைக்காரருக்கோ, நீதிக்கோ, பகுத்தறிவிற்கோ, பொதுவுடமைத் தத்துவம் மாறானதென்றோ ஆட்சேபிக்கத்தக்கதென்றோ சொல்வதற்கு எந்தவிதத்திலும் ஆதாரம் இருப்பதாய் தெரியவில்லை.

ஆனால் யாருக்கு விறோதமாகவும், ஆட்சேபிக்கத் தக்கதாகவும் கெடுதி தரத்தக்கதாகவும் இருக்கும் என்று பார்ப்போமேயானால் சுயநலம் கொண்ட மக்களாகிய சக்கிரவர்த்தி, அரசர், பாதிரி, குரு, முதலாளி, ஜமீன் தாரன், மிராசுதாரன், மேல்ஜாதிக்காரன் (பார்ப்பான்) என்று சொல்லப்படுபவர்களுக்கும் இவர்களுக்கு கூலிகளாய் இருப்பதினாலேயே உயர்வான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றவர்களுமான மக்களுக்கும் ஆட்சேபனையாய் இருக்கலாம். இவர்களுடைய ஆட்சேபனைகளை நாம் லட்சியம் செய்ய வேண்டியதில்லை.

ஏனெனில் இவர்கள் யோக்கியதைகளை நன்றாய் உணர்ந்து இவர் களால் மக்களுக்கு ஏற்படும் கஷ்ட நஷ்டங்களையும், இழிவுகளையும் அறிந்து இவர்கள் தன்மைகளை ஒழிக்க வேண்டும் என்றும் மாற்றவாவது வேண்டுமென்றும் மக்கள் வெகு நாளாகவே பாடுபட்டு வருகிறார்கள்.

உதாரணமாக ஏகாதிபத்தியத் தன்மை கூடாதென்றும், தனிப்பட்ட நபர் களான அரசர்களுடைய ஆட்சிகள் கூடாதென்றும் கிளர்ச்சிகள் வெகுகாலமாகவே நடந்து வருகின்றன. இதன் பயனாகவே சில ஏகாதிபத்தியங்கள் ஒழிந்து சில அரச ஆட்சிகளும் வீழ்ந்து, பொது ஜனஆட்சி என்றும், குடிகளுடைய ஆட்சி என்றும் சொல்லும்படியான ஆட்சிகள் ஏற்பட்டும் இருக்கின்றன. இனியும் ஏற்படுத்தும் முயற்சிகளும் நடந்து வருகின்றன. ஆதலால்தான் அவற்றைப் பற்றி நாம் கவனிக்க வேண்டியதில்லை என்றோம். மற்றபடி மேல் ஜாதிக் கொடுமையையும், நன்றாய் உணர்ந்து அதை ஒழிக்க வேண்டும் என்றும் முயற்சி செய்ததோடு சில ஒழித்தும் வருகிறோம். மற்றபடி ஜமீன் முதலாளி முதலியவர்களுடைய கொடுமைகளையும் அநீதியான வழியில் அவர்கள் செல்வம் பெருக்குவதையும் நன்றாய் உணர்ந்து அவர்களது கொடுமைகளை ஒழிக்கவும், அவர்களது அநீதிகளில் இருந்து மீளவும் முயற்சிகள் செய்து கொண்டுதான் வருகிறோம்.

கடைசியாக குருமார்கள், பாதிரிமார்கள் என்று சொல்லுகின்ற கூட்டத்தார்களின் யோக்கிய தைகளும் அறிஞர்கள் உணர்ந்ததேயாகும். எப்படியெனில் குரு, பாதிரி, முல்லா, புரோகிதர்கள் என்கின்ற கூட்டத்தார்கள் அரசர்கள், செல்வவான்கள், சோம்பேரிகள் ஆகியவர்களுடைய லைசென்சு பெற்ற கூலிகளேயாவார்கள். இவர்களுடைய உழைப்பின் பயன் எல்லாம் அரசர்களுக்கும், செல்வவான்களுக்கும், சோம்பேறி கூட்டத்தார்களான மதப் பாஷாண்டிகளுக்குமே பயன்படத்தக்கதாதலால் இவர்களது அதிருப்தியைப் பற்றியோ, அழுகையைப் பற்றியோ, நாம் சிறிதும் கவலைப்பட வேண்டியதில்லை. இருந்தபோதிலும் இந்த கூட்டத்தாரும் சாவதானமாய் இருந்து நல்லறிவைக் கொண்டு யோசித்துப் பார்ப்பார்களானால் பொது வுடமைத் தத்துவம் என்பது தங்கள் கூட்டத்தாருக்கும் கெடுதி இல்லை என்பது விளங்கும். எப்படியெனில் பொதுவுடமைத் தத்துவத்தினால் மனித ஜீவனுக்கு ஏற்படப் போகும் முக்கியமான மாறுதலும், அனுகூலமும் என்னவென்றால் மனிதனுக்குக் கவலை என்பது 100-க்கு 90 பாகத்துக்கு மேலாகவே குறைந்து போகும். இதுதவிர அதிர்ப்தி, பொறாமை என்று சொல்லும்படியான இயற்கை குணங்கள் என்பவைகள் எல்லாம் குறைந்து விடும். இவைகளில் ஏதாவது ஒரு அளவும், பொதுவுடமைத் தத்துவத்திலும் இருக்கும் என்று தர்க்கத்துக்காக சொல்ல வந்தாலும் அதுவும் பொது நலத்தை உத்தேசித்து இருக்குமே ஒழிய சுயநலத்தை உத்தேசித்து இருக்க முடியவே முடியாது. அதுபோலவே மனிதனுக்கு துக்கம் என்பதும் பெரும் பாகமும் மறைந்து போகும். இப்போது மேற்குறிப்பிட்டதான கவலை அதிர்ப்தி, ஆசை, பொறாமை, துக்கம் முதலிய குணங்கள் தனி மனிதனில் ஆகட்டும், மனித சமூகத்தில் ஆகட்டும் எந்த நிலைமையில் இருக்கின்றவர்களுக்கும் இருந்துதான் வருகின்றது.

அரசனுக்கோ, செல்வவானுக்கோ, குருவுக்கோ, பார்ப்பானுக்கோ, மற்றும் பெரும் பதவியில் இருக்கின்றவன் என்பவனுக்கோ இல்லை என்று சொல்லிவிட முடியாது. இவர்களுக்கு உள்ள பெருமையெல்லாம் அன்னியர்கள் இவர்களைப் பெருமையாய் நினைக்கிறார்கள் என்பதைத் தவிர தங்கள் தங்களுக்கு சொந்தத்தில் துக்கமும், கவலையும் இல்லாதவர்கள் இல்லவே இல்லை.

மத சம்மந்தமான ஆதாரங்களில் காணப்படும், மோட்சத்திற்கும், முத்திக்கும் சொல்லப்படும் கருத்தெல்லாம் கவலையும், துக்கமும் அற்ற தன்மை என்று தான் சொல்லப்படுகின்றதே ஒழிய மற்றபடி வேறு ஒரு லோகத் தில் போய் வெல்வெட் மெத்தையில் சதா தூங்கிக் கொண்டிருப்பது என்று சொல்லப்படவில்லை. ஆனால் இப்படி எங்காவது ஒன்று இரண்டு இடத்தில் சொல்லப்படுவதாய் சொல்லப்பட்டாலும் அது புரோகிதர்களுடையவும், முல்லாக்களுடையவும், பாதிரிகளுடையவும் கூட்டத்தாரின் வயிற்றுப் பிழைப்புக்காகக் கற்பித்துக் கொண்ட புராணப்பிடுங்கல் கற்பனை என்பதை எல்லா தத்துவ ஜன அறிஞர்களும் ஒப்புக் கொள்ளுகின்றார்கள். ஆகையால் பகுத்தறிவுள்ள மனித ஜீவர்கள் வாழ்க்கையில் கவலையும் துக்கமும் இல்லாத ஒரு நிலையை ஒருநாளும் வெறுக்கவோ, மறுக்கவோ முடியவே முடியாது.

ஆகவே பொது உடமை என்பது பொது மனித தர்மமென்றும் சகோதரத் தன்மையும், சமத்துவத் தன்மையும் கொண்டதென்றும் வேதாந்த தத்துவத்துக்கும், ஆஸ்திகத் தன்மைக்கும் தத்துவத்துக்கும் ஏற்றது என்றும் மதத் தலைவர்களுக்கும் தேசீயத்துக்கும், நீதிக்கும், பகுத்தறிவுக்கும் ஒத்ததென்றும் அரசர்களுக்கும் செல்வவான்களுக்கும் பாதிரிப் புரோகிதக் கூட்டங்களுக்கும் நன்மை பயக்கக் கூடியதென்றும் பொது உடமைத் தத்துவ மேதான் மோட்ச நிலை என்பதும் முத்திநிலை என்பதுமாகும் என்றும் ஒருவாறு சுருக்கமாய் விளக்கிக் காட்டியிருக்கிறோம், இனி பொது உடமைத் தத்துவம் சாத்தியமா என்பதும், எப்படி ஏற்படுத்துவது என்பதும் எந்த எந்த அளவில் இன்று நமது நாட்டிலும் இருந்து வருகின்றது என்பதும் முதலாகிய விஷயங்களைப் பற்றி மற்றொரு சமயம் சாவகாசமாய் எழுத எண்ணியுள்ளோம். அல்லது யாராவது இவ்விஷயத்தில் ஆராய்ச்சியுள்ள தோழர்கள் வியாசரூபமாக எழுதினாலும் பொருத்தமானதை மகிழ்ச்சியுடன் பிரசுரிக்கக் காத்திருக்கிறோம்.

(குடி அரசு - தலையங்கம் - 10.09.1933)

Pin It