(1.இந்தியத் தகவல் ஏடு, நவம்பர் 15, 1943, பக்கங்கள் 279-81)

          யுத்தப் பிற்காலத்தில் இந்தியாவில் மின்விசை வளர்ச்சி குறித்த பிரச்சினைகள் அக்டோபர் 25ஆம் தேதி புதுடில்லியில் நடைபெற்ற மறுசீரமைப்புக் கொள்கைக் குழுவில் விவாதிக்கப்பட்டன. வைசிராய் கவுன்சிலில் தொழிலாளர் நலத்துறை உறுப்பினராக உள்ள மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் கூட்டத்துக்குத் தலைமை வகித்தார். மத்திய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் மாகாண அரசாங்கங்களிலிருந்தும், பெருமளவுக்கு மின் விசை உற்பத்தி செய்யும் மாகாணங்களிலிருந்தும், பொறியியல் வட்டாரங்களிலிருந்தும் ஏராளமான பிரதிநிதிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

            குழுவின் கூட்டத்தில் மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் பேசும்போது கூறியதாவது:

          ambedkar 381  பெருந்தகையாளர்களே, 3 சி எண் சீரமைப்புக் குழுவின் இந்தக் கொள்கைக் குழுக் கூட்டத்திற்கு வருகை தந்திருக்கும் உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன். கூட்டத் தலைவருக்கு துவக்க உரை ஆற்றும் கடமையும் சலுகையும் உண்டு. எனக்குள்ள கடமைப் பொறுப்பை ஏற்கிறேன். ஆனால் நீண்டதொரு சொற்பொழிவாற்றி எனது சலுகையை துஷ்பிரயோகம் செய்ய நான் விரும்பவில்லை. நான் இப்போது செய்யப்போவதெல்லாம் நாம் பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டுள்ள விஷயம் சம்பந்தமான சில மெய்ம்மைகளை முன்னிலைப்படுத்தி அவற்றின்மீது நமது கவனத்தை ஒருமுகப்படுத்துவதுதான்.

            மறுசீரமைப்பு குறித்த பல்வேறு பிரச்சினைகளை ஆராய்வதற்காக இந்திய அரசாங்கம் வைசிராய் நிர்வாக சபையின் சார்பில் மறுசீரமைப்புக் குழு ஒன்றை அமைத்துள்ளது. இக்குழு அமைக்கப்பட்டது பற்றித் தெரியாதவர்கள் பலர் இங்கு இருக்கின்றனர். இத்தனைக்கும் இந்தப் பணியில் அவசியம் பங்கெடுத்துக் கொள்ள வேண்டியவர்கள் இவர்கள். எனவே, இவர்கள் தெரிந்து கொள்ளும் பொருட்டு இந்த மறுசீரமைப்புக் குழு மேற்கொண்டுள்ள பணியையும், அதனைச் சிறப்பாகவும் துரிதமாகவும் நிறைவேற்றும் பொருட்டு வகுக்கப்பட்டிருக்கும் வேலைத் திட்டத்தையும் பற்றி இங்கு இரத்தினச் சுருக்கமாக கூறலாம் என்றிருக்கிறேன்.

ஐந்து குழுக்கள்

            பண்பும் நேயமுமிக்க என் நண்பரும் சகாவுமான மாண்புமிகு சர் ஜே.பி. ஶ்ரீவஸ்தா தலைமையில் நிர்வாக சபையின் மறுசீரமைப்புக் குழு ஒன்றை அமைக்க முன்னாள் வைசிராய் லின்லித்கோ பிரபு கடந்த மார்ச் மாதம் முடிவு செய்தது உங்கள் அனைவருக்கும் நினைவிருக்கும். நிர்வாக சபையின் இந்த மறு சீரமைப்புக் குழு ஐந்து வெவ்வேறு சீரமைப்புக் குழுக்களை அமைத்தது. இவற்றில் குழு எண்: I மறு குடியமர்வு, மறு வேலைவாய்ப்புப் பிரச்சினைகளைக் கவனித்துக்கொள்கிறது. குழு எண் II பைசல்கள், ஒப்பந்தங்கள், அரசாங்கக் கொள்முதல்கள் முதலியவற்றுக்கு பொறுப்பு ஏற்றிருக்கிறது. குழு எண். III-ன் பணி மூன்று குழுக்களிடையே பிரித்துத் தரப்பட்டிருக்கிறது – குழு எண் 3 ஏ போக்குவரத்தைக் கவனித்துக் கொள்கிறது; குழு எண் 3 பி அஞ்சல், தந்தி, விமானப் போக்குவரத்தை மேற்பார்க்கிறது; குழு எண். 3 சி பொதுப்பணித்துறை, மின்விசை போன்றவற்றுக்குப் பொறுப்பு ஏற்கும். குழு எண் IV வாணிகம் மற்றும் தொழில் துறையைக் கவனித்துக் கொள்ளும். குழு எண் V வேளாண் துறையில் ஈடுபாடு கொள்ளும்.

            இந்தக் குழுக்களில் ஒவ்வொன்றும் ஒரு கொள்கை வகுக்கும் குழுவைப் பெற்றிருக்கும். வைசிராய் நிர்வாக சபையின் உறுப்பினர் ஒருவர் இதன் தலைவராக இருப்பார். மத்திய அரசாங்கம், மாகாண அரசாங்கங்கள், வாணிகம், தொழில் முதலான துறைகளின் பிரதிநிதிகள் இதில் அங்கம் வகிப்பர். மேலும் இந்தக் குழுக்கள் ஒவ்வொன்றும் பணித்துறைக் குழுவைக் கொண்டிருக்கும். இலாகா செயலாளர் இதன் தலைவராக இருப்பார். சம்பந்தப்பட்ட இதர இலாக்காக்களின் செயலாளர்களும் இதில் இடம் பெற்றிருப்பர்.

            இந்த இருவகையான குழுக்களைத் தவிர சில மறுசீரமைப்புக் குழுக்கள் தத்தமது துறைகள் சம்பந்தப்பட்ட மூன்றாவது குழு ஒன்றையும் கொண்டிருக்கின்றன. துறைசார்ந்த குழு என்று அழைக்கப்படும் இக்குழு தனது செயல் எல்லைக்குள் எழும் தொழில்நுட்பப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண உதவுகிறது. இவை தவிர, சமூக சேவைகள் குழு ஒன்றும், பொருளாதார ஆலோசனைக் குழு ஒன்றும் அமைக்கப்பட்டிருக்கின்றன. இத்தகையதுதான் மறுசீரமைப்புப் பிரச்சினைகளைச் சமாளிப்பதற்கு மத்திய அரசாங்கம் வகுத்துள்ள வேலைத் திட்டமாகும். நமது இப்போதைய கூட்டம் மறுசீரமைப்புக் குழுஎண். 3 சியின் கொள்கைக் குழுக் கூட்டமாகும். மின்விசை சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை ஆராய்வதும், அவற்றிற்குச் சிறந்த முறையில் தீர்வு காணுவதற்கான பரிந்துரைகளை வழங்குவதும்தான் இந்தக் குழுவின் பணி.

            இந்தப் பிரச்சினைகள் யாவற்றையும் பற்றி ஆராய்வதற்கு முன்னதாக ஒரு விஷயத்தை இங்கு ஆரம்பத்திலேயே குறிப்பிட விரும்புகிறேன்; அவ்வாறு செய்வது நிலைமையைத் தெள்ளத் தெளிவாகப் புரிந்துகொள்வதற்கு உதவிகரமாக இருக்கும். மின்விசை உற்பத்தி செய்வதற்குத் தேவையான எந்திர சாதனங்கள், கருவிகள், தொழிற்கூடங்கள் முதலியவற்றை கொள்முதல் செய்வது சம்பந்தப்பட்டது இந்த விஷயம். இந்த எந்திர சாதனங்களை வெளியிலிருந்துதான் அதிலும் பிரதானமாக பிரிட்டனிலிருந்துதான் வாங்க வேண்டும். இத்தகைய எந்திர சாதனங்களை வாங்குவதில் சிரமம் இல்லாமலில்லை. பிரிட்டனில் உற்பத்தி செய்யப்படும் மின் எந்திர சாதனங்களில் பெரும் பகுதி அதன் சொந்த தேவைகளுக்கே வேண்டியிருக்கிறது.

            மேலும், தங்களுக்குத் தேவையான எந்திர சாதனங்களையும் தொழிற்சாலைகளையும் பிரிட்டிஷ், அமெரிக்க சந்தைகளில் வாங்கும் பல ஐரோப்பிய, ஆசிய நாடுகளும் இருக்கின்றன. இந்தப் போட்டியில், இந்தியா தனக்கு வேண்டிய சாதனங்களை வாங்குவது கடினமாக இருக்கிறது. இத்தகைய சூழ்நிலையில்,, இந்தியா தனது நிலைமையைப் பாதுகாத்துக் கொள்வதற்கு கூடிய மட்டிலும் முன்கூட்டியே ‘ஆர்டர்களை’ப் பதிவு செய்து முன்னுரிமை பெறுவது மிகவும் உகந்ததாக இருக்கும். இவ்வாறு முன்னுரிமை பெறுவதில் பெரும் சிரமம் ஏதும் இருக்காது. இந்த யுத்தத்தில் இந்தியா செய்துள்ள மகத்தான உதவியையும் தியாகத்தையும் கருத்திற்கொண்டு பார்க்கும் போது, இது விஷயத்தில் இந்தியாவுக்கு முன்னுரிமை பெற்றுத் தருவதற்கு மன்னர் பிரான் அரசாங்கத்தை நம்பலாம் என்று உறுதியாகக் கருதுகிறேன். எனினும் நமக்குத் தேவையான எந்திர சாதனங்கள், கருவிகள் முதலியவற்றுக்கான மதிப்பீடுகளை முறையாகத் தயாரித்து சம்பந்தப்பட்ட உற்பத்தி நிறுவனங்களிடம் ‘ஆர்டர்கள்’ தருவது போன்ற வேறு சில சிரமங்கள் இருக்கின்றன.

            முதலாவதாக, மின்விசை முற்றிலும் மாகாணம் சம்பந்தப்பட்ட விஷயம். எனவே, தேவையான கருவிகள், எந்திரங்கள் முதலியவை சம்பந்தப்பட்ட மதிப்பீடுகள் மாகாணங்களிலிருந்துதான் வர வேண்டும். மத்திய அரசாங்கம் இவற்றை எல்லாம் கொண்டு தொகுத்துத்தான் தர முடியும்.

            இரண்டாவதாக, எந்த வகையான எந்திரங்கள் தேவைப்படும் என்பது சம்பந்தப்பட்டவர்கள் எண்ணெய், நீரோட்டம் போன்றவற்றில் எவற்றின் உதவியைக் கொண்டு மின்விசை தயாரிக்கத் திட்டமிட்டிருக்கிறார்கள் என்பதைப் பொறுத்திருக்கிறது.

            யுத்தத்திற்குப் பிறகு அமையும் அரசாங்கங்களின் போக்கு எப்படியிருக்கும் என்ற நிச்சயமற்றத் தன்மை மூன்றாவது இடர்ப்பாடாகும். இப்போதைய அரசாங்கம் வகுத்தளிக்கும் திட்டங்களை எதிர்கால அரசாங்கம் ஏற்குமா? இப்போதைய அரசாங்கம் தனது திட்டங்களை நிறைவேற்றுவதற்கு விதிக்கும் வரிகளை எதிர்கால அரசாங்கங்கள் தொடருமா? இவற்றைப் பற்றி எல்லாம் எதுவும் நிச்சயமாகக் கூறுவதற்கில்லை. எனினும் யுத்தம் முடிவுற்றதும் மின்மயமாக்கத்துக்குத் தேவையான எந்திர சாதனங்களையும் கருவிகளையும் வாங்குவதற்கு ஏற்பாடு செய்யவில்லை என்றால் இந்த அரசாங்கம் தனது கடமையைச் செய்வதிலிருந்து பிறழ்ந்த குற்றச்சாட்டுக்கு ஆளாக நேரிடும்.

கொள்கை வகுக்கும் குழுவின் பணிகள்

          இந்த விஷயம் அவசரமானதும் முக்கியமானதும் என்று குறிப்பிட்டேன். ஆனால் இந்த விஷயம் இந்தக் குழு சம்பந்தப்பட்டதல்ல என்பதை நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன். இது கொள்கை வகுக்கும் குழு. மின்விசை உற்பத்தி, விநியோகம், நிர்வாகம் இவை சம்பந்தப்பட்ட பிரச்சினைகளைக் கையாள்வதும், எதிர்கால அரசாங்கத்துக்கு வழிகாட்டக்கூடியவை என நாம் கருதும் கோட்பாடுகளைப் பரிந்துரைப்பதுமே நமது பிரதான பணியாகும். தங்களது கருத்துகளைத் தெரிவிப்பதற்கு தங்களுடைய பிரதிநிதிகளை இக்கூட்டத்துக்கு அனுப்பும்படிக் கேட்டுக் கொள்ள நமது கொள்கை வகுப்புக் குழுவின் இந்தக் கூட்டத்தை நாம் பயன்படுத்திக் கொண்டோம்.

            பொது அக்கறைக்குரிய விஷயம் என்ற முறையில் மின்விசைப் பிரச்சினையைக் கையாளும் முறை பல மாற்றங்களுக்கு உள்ளாகி வந்திருக்கிறது. இந்திய அரசாங்கம் இந்தப் பிரச்சினையை முதன் முதலில் 1905 ஆம் ஆண்டில்தான் கவனத்தில் எடுத்துக் கொண்டதாகத் தெரிகிறது. அப்போது அது மாகாணங்களுக்கு ஒரு சுற்றுக் கடிதத்தை அனுப்பியது. அதன் பிறகு மாகாண அரசாங்கங்களும் மத்திய அரசாங்கமும் நித்திரையில் ஆழ்ந்துவிட்டன. 1918-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட இந்தியத் தொழில் துறை ஆணையத்தின் அறிக்கையும், இதற்கு ஓராண்டுக்குப் பிறகு வெளியிடப்பட்ட இந்தியப் படைக்கல வாரியத்தின் அறிக்கையும் மின்விசைத் துறையில் தீவிர அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியத்தை வலியுறுத்திய பிறகே அவை விழித்துக் கொண்டு செயலில் ஈடுபடத் தொடங்கின.

            இந்தியாவில் நீர்நிலைப் பரப்பாராய்ச்சி மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், இந்தப் பணியை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்காமல் அரசாங்கமே மேற்கொள்ள வேண்டும் என்றும் தொழில்துறை ஆணையம் பரிந்துரைத்தது. இந்தப் பரிந்துரையை இந்திய அரசாங்கம் ஏற்றுக்கொண்டு, இந்த ஆராய்ச்சிப் பணிக்குப் பொறுப்பாளராக அச்சமயம் ஐக்கிய மாகாணங்களில் பாசனத்துறையின் தலைமைப் பொறிஞராக இருந்த ஜி.டி.பார்லோ, சி.ஐ.இ.யை நியமித்தது; இந்த ஆய்வில் அவருக்குத் துணைபுரிய இந்திய அரசாங்கத்தின் மின்விசை ஆலோசகராக இருந்த திரு.ஜி.எம். மியரல், எம்.ஐ.சி.இ.யை நியமித்தது. ஆனால் விரைவிலேயே திரு.பார்லோ காலமாகிவிட்டார். அவர் விட்டுச் சென்ற பணியை திரு.மியரஸ் மேற்கொண்டார். 1919-1922 ஆம் ஆண்டுகளுக்கு இடையே அவர் மிகச் சிறந்த மூன்று அறிக்கைகளைச் சமர்ப்பித்தார். மின்விசை வழங்கீடு சாத்தியக்கூறுகள் சம்பந்தமான மாகாண ரீதியான முக்கிய தகவல்கள் பின்கண்ட ஐந்து தலைப்புகளில் அடங்கியிருந்தன – (1) ஏற்கெனவே நிர்மாணிக்கப்பட்டுள்ள நீர்மின்விசை நிலையங்கள், (2) தற்போது கட்டப்பட்டுவரும் மின் நிலையங்கள், (3) ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்ட ஆனால் இன்னமும் வளர்ச்சியுறாத பிரதேசங்கள், (4) விரிவான ஆய்வுக்கு உகந்தவை என்று தெரியவந்துள்ள இடங்கள், (5) ஆய்வு செய்யப்படாத இடங்கள்.

மின்விசைமாகாணத்தின் பொறுப்பிலுள்ள துறை

            1919-ஆம் வருடச் சட்டத்தின் விளைவாக இந்திய அரசாங்க அமைப்பில் பல மாற்றங்கள் செய்யப்பட்டன. துரதிர்ஷ்டவசமாக இதனைத் தொடர்ந்து மின்விசை மாகாணத்தின் பொறுப்பிலுள்ள துறையாகி விட்டது. அதுமட்டுமல்ல, தனது நிர்வாக வரம்புக்கு வெளியே உள்ள விஷயங்களில் தகுதியானவை, உகந்தவை எனத்தான் கருதுபவற்றுக்கு மத்திய அரசாங்கம் நிதி ஒதுக்கலாம் என்று இப்போதுள்ள சட்டத்தில் இருப்பது போன்று அச்சமயம் இருந்த சட்டத்தில் துரதிர்ஷ்டவசமாக வழிவகை ஏற்பாடு எதுவும் செய்யப்படவில்லை. இதனால் நீர்நிலைப் பரப்பாராய்ச்சிக்கு இந்திய அரசாங்கம் நிதி ஒதுக்க முடியாது போயிற்று, இவ்வாறு, இந்தியாவுக்கு மின்விசை வழங்குவதற்குத் துணைபுரியும் ஒரு சிறந்த, அத்தியாவசியமான, மாபெரும் பணி முடிவுக்கு வந்தது.

            இந்தியாவில் மின்விசை உற்பத்தியைப் பெருக்குவதற்குப் பொறுப்பான அதிகாரி எவரும் மத்திய அரசாங்கத்தில் இல்லை. இதன் விளைவாக இந்தியாவில் மின்விசை உற்பத்தி, விநியோகம், நிர்வாகம் சம்பந்தமான தகவல்கள் எதுவும் மத்திய அரசாங்கத்திலுள்ள எங்களுக்கு அண்மைக் காலம் வரை கிடைக்கவில்லை.

            எனவே, இந்தியாவில், மின்விசைத் துறை மீண்டும் மிகுந்த அக்கறைக்கும், ஆர்வத்துக்கும், கவனத்துக்கும் உரியதாகி இருப்பது குறித்து நான் பெரிதும் மகிழ்ச்சி அடைகிறேன். எனக்குத் தெரிந்த வரை மின்விசை சம்பந்தமான பின்கண்ட கேள்விகளுக்கு இந்தக் குழு விடை காண வேண்டும் என்று கருதுகிறேன்:-

  • மின்விசைத் துறை தனியார் பொறுப்பில் இருக்க வேண்டுமா, அல்லது அரசாங்கப் பொறுப்பில் இருக்க வேண்டுமா?
  • அது தனியார் வசம் இருக்கும் பட்சத்தில் பொது மக்களின் நலன்களைப் பாதுகாக்கும் பொருட்டு விதிக்க வேண்டிய நிபந்தனைகள் ஏதும் உண்டா?
  • மின்விசைத் துறையை வளர்த்து மேம்படுத்தும் பொறுப்பு மத்திய அரசாங்கத்திடம் விடப்பட வேண்டுமா, அல்லது மாகாண அரசாங்கத்திடம் விடப்பட வேண்டுமா?
  • இந்தப் பொறுப்பை மத்திய அரசாங்கத்திடம் விடும்பட்சத்தில், மலிவாகவும் பெருமளவிலும் மின்விசை வழங்கீடு செய்வதற்கும், மூல வளங்கள் வீணடிக்கப்படுவதைத் தவிர்ப்பதற்கும் தடுப்பதற்கும் எத்தகைய தேர்ந்த, உகந்த, பயனுறுதியுடைய நிர்வாக முறைகளை மேற்கொள்ள வேண்டும்?
  • இவ்வாறில்லாமல் இந்தப் பொறுப்பு மாகாணங்களிடம் ஒப்படைக்கப்படும் பட்சத்தில், இது விஷயத்தில் மாகாணங்களின் நிர்வாகம் ஆலோசனை கூறும் அதிகாரங்களையும், ஒருமுகப்படுத்தும் அதிகாரங்களையும் கொண்ட மாகாணங்களுக்கு இடையிலான ஒரு வாரியத்தின் மேற்பார்வைக்கு உட்பட்டதாக ஆக்கப்பட வேண்டுமா?

மூன்று அம்சங்கள்

              இந்தக் கேள்விகள் ஒவ்வொன்றுக்கும் இரண்டு கோணங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு கோணமும் தனது ஆதரவாளர்களைப் பெற்றுள்ளது. இந்தக் கட்டத்தில் என் கருத்தை வெளியிட நான் விரும்பவில்லை. நான் திறந்த மனமுடையவனாக இருக்கிறேன்; ஆனால் அது வெற்று மனமல்ல. மின்விசை உற்பத்தியைப் பெருக்குவதற்கு எது சிறந்த மார்க்கம் என நாம் முடிவுக்கு வருவதற்கு முன்னர் பின்வரும் மூன்று அம்சங்களை நாம் மனத்திற் கொள்ள வேண்டும்:-

  • இவை இரண்டில் எது மலிவான விலையில் அல்லாமல் மிகமிக மலிவான விலையில் நமக்கு மின்விசை வழங்கும்,
  • இவை இரண்டில் எது போதுமானது மட்டுமல்லாமல் அபரிமிதமாக நமக்கு மின்விசை வழங்கும்,
  • இவற்றில் எது கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ரயில்வேயைப் போல் கருதப்பட்டு அதாவது உடனடி லாப நோக்கமில்லாமல் தொடங்கப்படும் ஒரு தொழில் முயற்சியைப் போல் கருதப்பட்டு இந்தியாவின் மின்மயமாக்கத்தைச் சாத்தியமாக்கும்.

மலிவான அதேசமயம் அபரிமிதமான மின்விசை வழங்கீடு உத்தரவாதம் செய்யப்பட வேண்டும் என்று இந்தியா விரும்புகிறது; இதனால்தான் இந்த மூன்று அம்சங்களை இங்கே வலியுறுத்துகிறேன்.

இவை அடிப்படையான கேள்விகள், இவற்றில் பெரும்பாலானவை அரசியலமைப்புச் சட்டத்தில் மாற்றங்களைச் செய்யும் பிரச்சினையை எழுப்பக்கூடும் என்ற ஐயம் இருந்துவரும் காரணத்தால் உங்களில் சிலர் இவற்றைப் பற்றி முடிவு எடுப்பதற்குத் தயங்கலாம். என்னைப் பொருத்தவரையில் இத்தகைய தயக்கம் ஏதும் இல்லை ஓர் அரசியலமைப்புப் பிரச்சினையைத் தீர்மானிப்பதற்கும் அது குறித்து அபிப்பிராயம் தெரிவிப்பதற்கும் இடையே வேறுபாடு உண்டு. அரசியலமைப்புப் பிரச்சினைகளை இங்கு நாம் தீர்மானிக்கப் போவதில்லை. அவை சம்பந்தமான நமது கருத்தைத் தான் வெளியிடுகிறோம். அவை அரசியலமைப்புச் சட்ட இயல்பு கொண்டிருக்கும் காரணத்தால் அவற்றைப் பரிசீலிப்பதிலிருந்து நாம் எவ்வகையிலும் தடை செய்யப்படவில்லை. நம் பொறுப்பில் விடப்பட்டிருக்கும் துறையிடம் நாம் நேர்மையோடு நடந்து கொள்ள வேண்டுமானால் இவற்றை நாம் தவிர்க்க முடியாது என்று நான் நிச்சயமாக நம்புகிறேன்.

மின்விசை இலாகா

          இந்த முக்கியமான பிரச்சினைகள் தவிர எவ்வகையிலும் இரண்டாந்தரமானவை அல்லாத வேறு பிரச்சினைகளும் இருக்கின்றன. மின்விசையமயமாக்கம் வெற்றிபெற வேண்டுமாயின் இந்தப் பிரச்சினைகளை நம் கவனத்திலிருந்து அகற்றி விட முடியாது. இப்பிரச்சினைகள் வருமாறு:

  • மின்விசை உற்பத்திக்கு அவசியமான நிலக்கரி, பெட்ரோல், எரி சாராயம், நீரோட்டம் முதலியவற்றைப் பற்றி முறையாக ஆய்வு செய்வதற்கும், மின் விசை உற்பத்தி அற்றலை அதிகரிப்பதற்கான வழி துறைகளைப் பரிந்துரைப்பதற்கும் மத்தியில் ஒரு மின்விசை இலாகாவை உருவாக்குவது அவசியமா?
  • கிடைக்கக் கூடிய மின்விசையை மிகத் திறமையோடு பயன்படுத்திக் கொள்ளும் பொருட்டு மின்விசை ஆதாரங்களுக்கும் எந்திர சாதனங்களுக்கும் இடையே உள்ள உறவுகளுடன் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை ஆராய்வதற்கு மத்தியில் ஒரு மின்விசை ஆராய்ச்சி மையத்தை அமைப்பது அவசியமா?
  • இந்தியாவில் மின்விசை நிலையங்கள் மற்றும் எந்திர சாதனங்களை உருவாக்குவதற்கும், பராமரிப்பதற்கும், மேம்படுத்துவதற்கும் திட்டமிடவும் அத்திட்டங்களைச் செயல்படுத்தவும் மின் விசைத் தொழில் நுட்பத்தில் இந்தியர்களைப் பயிற்றுவிக்கும் வழி துறைகளைக் காணுவது அவசியமா?

என் உரையை முடித்துக் கொள்வதற்கு முன்னர் இந்தியாவில் மின்விசை உற்பத்தியைப் பெருக்குவதன் முக்கியத்துவத்தையும், அதன் இறுதிக் குறிக்கோளையும் சுட்டிக்காட்டக்கூடிய சில கருத்துகளை இப்போது உங்கள் முன்வைக்கலாமா? ஏனென்றால் இத்துறைக்குப் பொறுப்பேற்பவர்கள் இந்த முக்கியத்துவத்தையும் இறுதிக் குறிக்கோளையும் முழு அளவுக்கு உணர்ந்து தெளிந்தவர்களாக இருப்பது அவசியம். இது விஷயத்தில் நீங்கள் என்னுடன் உடன்படுவீர்களானால் உங்களை நீங்களே பின்வரும் கேள்வியைக் கேட்டுக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன்; ‘இந்தியாவில் நமக்கு ஏன் மலிவான, ஏராளமான மின்விசை தேவை?’ மலிவான, ஏராளமான மின்விசை இல்லாமல் இந்தியாவைத் தொழில்மயமாக்கும் முயற்சி வெற்றிபெற முடியாது என்பதே இந்தக் கேள்விக்கான பதிலாக இருக்க முடியும். இந்தக் குழு மேற்கொள்ள வேண்டியிருக்கும் பணியின் முக்கியத்துவத்தின் ஒரு பகுதியையே இந்தப் பதில் வெளிப்படுத்துகிறது எனக் கூற வேண்டும்.

பின்வரும் மற்றொரு கேள்வியையும் நீங்கள் கேட்டுக் கொள்ளுங்கள்: ‘தொழில்மயமாக்கம் ஏன் அவசியம்?” அப்போது இந்த முழு முக்கியத்துவமும் உடனே உங்களுக்குப் புலனாகும்; ஏனென்றால் கொத்தியெடுக்கும் கோர வறுமை என்னும் நிரந்தர சுழல் வட்டத்தில் சிக்கித்தவிக்கும் கோடானுகோடி ஏழை எளிய மக்களை அதன் இரும்புப் பிடியிலிருந்து மீட்கும் உறுதியான, நிச்சயமான மார்க்கமாக இந்தியாவில் தொழில்மயமாக்கம் இருக்க வேண்டுமென நாம் விரும்புகிறோம். எனவே இந்தியாவின் தொழில்மயமாக்கத்தில் நாம் உடனடியாக ஈடுபடுவது அவசியம்.

இந்தியாவின் தொழில் வளர்ச்சி

            இந்தியாவின் தொழில் வளர்ச்சி குறித்துப் பல ஆண்டுகளாகவே நாம் பேசி வருகிறோம். ஆனால் தொழில் வளர்ச்சியைச் சாத்தியமாக்குவதற்கு, சாதிப்பதற்கு எத்தகைய உருப்படியான முயற்சியும் மேற்கொள்ளப்பட்டதை நாம் காணவில்லை. இது விஷயத்தில் உதட்டு சேவை செய்வதுடன்தான் இன்னமும் சிலர் இருந்து வருகின்றனர். வேறு சிலரோ இது விஷயத்தில் எதிர்க்கோடிக்கு சென்று, மட்டுமீறிய வெறி ஆர்வம் காட்டுகின்றனர். இது இவ்வாறு என்றால் வேறுபலர் முற்றிலும் மாறுபட்டதொரு போக்கைக் கடைப்பிடிக்கின்றனர்; இந்தியா முழுக்க முழுக்க ஒரு விவசாய நாடு, எனவே வேளாண்மையை மேம்படுத்துவதில் நமது முழு முயற்சியையும் ஈடுபடுத்துவதுதான் மிகச் சிறந்தது என்று உபதேசம் செய்வதில் இவர்கள் ஒருபோதும் சலிப்பதோ, சளைப்பதோ இல்லை. இந்தியா பிரதானமாக ஒரு வேளாண் நாடு என்று யாரும் சொல்ல வேண்டிய அவசியமில்லை. எல்லோருக்குமே இது தெரியும். ஆனால் இது எத்தகைய ஒரு மாபெரும் அவப்பேறு என்பதை உணர்ந்திருப்பவர்கள் வெகு சிலரே இருப்பது வியப்பூட்டுவதாக இருக்கிறது. இது ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்பது எனக்குத் தெரியும். வங்காளத்திலும் இந்தியாவின் இதர பகுதிகளிலும் பஞ்சம் கோர நர்த்தனமாடி வருகிறது; அங்கு ஒரு சாண் வயிற்றுக்கு உண்ண உணவின்றி அல்லது உணவை வாங்க சக்தியின்றி மக்கள் கொத்துக் கொத்தாக மாண்டு மடிந்து வருகின்றனர்; அந்த கொடிய பஞ்சத்தை விடவும் இது அவப்பேறானது என்பதை மெய்ப்பிக்க மேற்கொண்டு என்ன சான்று வேண்டும்?

            என் அபிப்பிராயத்தில் இந்தியாவின் வேளாண் துறை மிக மிகப் பரிதாபகரமாக தோல்வியடைந்து விட்டது என்பதைக் காட்டுவதற்கு பெரிய சான்று எதுவும் தேவையில்லை; ஏனென்றால் கைப்புண்ணுக்கு யாராவது கண்ணாடியைத் தேடுவார்களா? இந்தியா உணவைத் தவிர வேறு எதையும் உற்பத்தி செய்வதில்லை. அந்த உணவும் மக்களைப் போஷிக்கும் அளவுக்கு உற்பத்தி செய்யப்படுவதில்லை. இதற்கு என்ன காரணம்? நாடு முழுக்க முழுக்க வேளாண்மையைச் சார்ந்திருக்கும்படிச் செய்யப்பட்டிருப்பதே, நம்பியிருக்கும்படி நிர்ப்பந்திக்கப்பட்டிருப்பதே இந்தியாவின் படுபயங்கர வறுமைக்கு முற்றிலும் காரணம் என்பது என் திட்டவட்டமான கருத்து.

            இந்தியாவின் மக்கட்தொகை ஆண்டுக்கு ஆண்டு, வாரத்திற்கு வாரம், நாளுக்கு நாள், மணிக்கு மணி அதிகரித்து வருகிறது. இவ்வாறு மக்கட் தொகை எல்லையற்று பெருகிவரும் அதே வேளையில் சாகுபடிக்குக கிடைக்கும் நிலம் மிக மிகக் குறைவு; அந்த மிகக் குறைந்த நிலத்தின் வளப்பமோ வருடத்துக்கு வருடம் தேய்பிறையாகக் குன்றி வருகிறது. இந்தியா ஒரு குறடின் இரு பக்கங்களுக்கு இடையே சிக்கிக் கொண்டிருக்கிறது. ஒரு பக்கத்தில் மக்கட் தொகை வரைமுறையின்றிப் பெருகி வருகிறது; மற்றொரு பக்கத்திலோ மண்ணின் வளம் கிடுகிடுவென்று சரிந்து வருகிறது.

விநாசகாலம் சூழ்ந்து கொண்டிருக்கிறது

            இதன் விபரீத விளைவு என்ன? ஒவ்வொரு பத்தாண்டின் இறுதியிலும் மக்கட்தொகைப் பெருக்கத்துக்கும் வேளாண் உற்பத்திக்கும் இடையே ஒரு படு பயங்கர அதல பாதாளம் தோன்றி விடுவதைப் பார்க்கிறோம்; வாழ்க்கைத்தரம் நாளுக்கு நாள் கூனிக் குறுகி வருவதைக் காண்கிறோம். ஒவ்வொரு பத்தாண்டுக் காலத்திலும் மக்கட் தொகைக்கும் உற்பத்திக்கும் இடையேயான இந்த இடைவெளி மிகுந்த அச்சம் கொள்ளும் வகையில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் இந்தியா படுபயங்கர வறுமைப் படுகுழியில், மீளமுடியாத கெபியில் மேலும் மேலும் தள்ளப்பட்டு வருகிறது. உண்மையில் ஒரு விநாசகாலம் இந்தியாவைச் சூழ்ந்து கொண்டிருக்கிறது. நாடுகளெங்கும் பட்டிதொட்டிகளெங்கும் வேளாண் பொருட் காட்சிகளையோ அல்லது விலங்குகள் கண்காட்சிகளையோ நடத்தி விடுவதனாலோ, சிறந்த உரத்தைப் பயன்படுத்துவது பற்றிப் பிரசாரம் செய்துவிடுவதாலோ இந்த விநாசத்தைத் தடுத்து நிறுத்திவிட முடியாது. வேளாண்மை ஆதாயம் தரக்கூடியதாக ஆக்கப்பட்டால்தான் இத்தகைய விபரீத நிலைக்கு, அவலநிலைக்கு முற்றுப் புள்ளி வைக்க முடியும். தொழில் வளர்ச்சிக்கு ஆதரவாக தொடர்ந்து பல தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலொழிய இந்தியாவில் விவசாயத்தை லாபகரமானதாக்குவது சாத்தியமில்லை. தொழில் வளர்ச்சி ஒன்றுதான் நிலத்தை முழுக்க முழுக்க நம்பியுள்ள அளவுக்கு அதிகமான மக்கட் தொகையில் ஒரு பகுதியினரை வேளாண்மையல்லாத இதர ஜீவனோபாயத் தொழில்களில் ஈடுபடும்படிச் செய்ய முடியும்.

            சுருக்கமாகக் கூறினால், நமது மறுசீரமைப்புக் குழுக்கள் நோக்கத்திலும் சரி, செயல்பாட்டிலும் சரி பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளிலுள்ள மறுசீரமைப்புக் குழுக்களின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளன; ஏனென்றால் இந்நாடுகளில் எல்லாம் தொழில்துறை அமைப்புகளை ஜெர்மானியர்கள் அழித்தொழித்து நாசப்படுத்திவிட்டபோது இத்தகைய சீரமைப்புக் குழுக்கள்தான் அங்கு தொழில்துறைக்குப் புத்துயிரும் புத்தாக்கமும் அளித்தன. மறுசீரமைப்புப் பிரச்சினைகள் நாட்டுக்கு நாடு வேறுபடுகின்றன, வேறுபடவே செய்யும். சில நாடுகளில் மறுசீரமைப்புப் பிரச்சினை பத்தாம் பசலியாகிவிட்ட தொழில் நிலையங்களையும் எந்திர சாதனங்களையும் புனரமைக்கும் பிரச்சினையாக அமைந்திருக்கிறது.

இந்தியாவிலுள்ள நிலைமை

            வேறு சில நாடுகளில் மறுசீரமைக்கும் பிரச்சினை போரில் நிர்மூலமாக்கப்பட்டுவிட்ட கருவிகளையும் எந்திரங்களையும் தொழில் நிலையங்களையும் புதுப்பிக்கும் பிரச்சினையாக உருவெடுத்திருக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரையில், அதன் மறுசீரமைப்புப் பிரச்சினையில் போரில் ஈடுபட்டுள்ள இதர நாடுகளுக்கு இவ்வகையில் ஏற்பட்டுள்ள அனைத்து அனுபவங்களையும், அவற்றின் சகல அம்சங்களையும் கணக்கிலெடுத்துக் கொள்ள வேண்டும்.

            ஆனால் அதே சமயம் இந்தியாவின் மறுசீரமைப்புப் பிரச்சினை இதர நாடுகளின் மறுசீரமைப்புப் பிரச்சினையிலிருந்து அடிப்படையிலேயே மாறுபட்டது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. ஏனைய நாடுகளில் மறுசீரமைப்புப் பிரச்சினை ஏற்கெனவே உள்ள தொழில் துறையைப் புதுப்பிக்கும் பிரச்சினையாக இருந்து வருகிறது.

            இந்தியாவின் மறுசீரமைப்புப் பிரச்சினையோ ஏற்கெனவே உள்ள தொழில்களைப் புனரமைக்கும் பிரச்சினையாக அல்லாமல் பிரதானமாக இந்தியாவின் தொழில் வளர்ச்சிப் பிரச்சினையாக, முடிவில் காலகாலமான, நாட்பட்ட கொடிய வறுமையை ஒழித்துக்கட்டும் பிரச்சினையாக இருந்து வருவதை நான் காண்கிறேன்.

            எனவே, மத்திய அரசாங்கமும் மாகாண அரசாங்கங்களும் போட்டி போட்டுக்கொண்டு உரிமை கொண்டாடுவதைக் கருத்திற்கொள்ளாமல், மனித வாழ்க்கையை மனத்திற்கொண்டு மின்விசை சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு ஆழ்ந்த அக்கறையுடனும் மெய்யார்வத்தோடும் அரசியல் மேதகைமையுடனும் நாம் தீர்வு காண முடியும் என்று நம்புகிறேன்.

            மறுசீரமைப்பு சம்பந்தமாக கடந்தகாலத்தில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பரிதாபகரமாக தோல்வியடைந்த கசப்பான நினைவுகள் இருந்தபோதிலும் நம்பிக்கை இழந்த உணர்வோடு என் உரையை முடிக்க விரும்பவில்லை. அவசியத்திலிருந்து புதுமை தோன்றும் என்பார்கள்; அல்லல்களிலிருந்து ஆண்டவன் பக்தி தோன்றும் என்று கூறுவது உண்டு. அதே போன்று மறுசீரமைப்புக்கான உத்வேகத்தை யுத்தம் அளிப்பதாகத் தோன்றுகிறது. ஆனால் இதில் பரிதாபத்துக்கும் வேதனைக்குமுரிய விஷயம் என்னவென்றால், போரிலிருந்து தோன்றும் உந்துதல் சமாதானம் ஏற்பட்டதும் மடிந்து விடுவதாகத் தெரிகிறது. கடந்த யுத்தத்திற்குப் பிறகு இந்தியாவில் இதுதான் நிகழ்ந்தது; அப்போது இந்தியத் தொழில்துறை ஆணையமும், இந்தியப் படைக்கல வாரியமும் முன்வைத்த மறுசீரமைப்புத் திட்டத்திற்கு இதே கதிதான் ஏற்பட்டது. ஆனால் இம்முறை மறுசீரமைப்புத் திட்டம் வாடிவதங்கி உதிர்ந்து போகாது என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. ஏனென்றால் வில்லியம் ஜேம்ஸ் குறிப்பிட்டது போன்று “இந்தியாவின் வறுமை எத்தகையது என்பதை சென்ற யுத்தகால ராஜியவாதிகள் அறிந்திருக்கவில்லை. ஆனால் அந்த இந்திய வறுமையின் கண்கண்ட எதார்த்தம் பற்றிய கூரிய உணர்வை” இந்த யுத்தம் தோற்றுவித்திருப்பதை நாம் இப்போது காண்கிறோம்.

*           *           *

1ஷெட்யூல்டு வகுப்பு மாணவர்களுக்கும் இந்திய அகதிகளுக்கும் உதவி

நிரந்திர நிதிக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட பரிந்துரைகள்

(1.இந்தியத் தகவல் ஏடு, டிசம்பர் 15, 1943, பக்கம் 337)

            விஞ்ஞான, தொழில் நுட்பக் கல்வி பயிலும் ஷெட்யூல்டு வகுப்பு மாணவர்களுக்கு உபகாரச் சம்பளங்கள் வழங்குதல், யுத்த பிராந்தியங்களிலிருந்து வரும் அகதிகளுக்கும் அங்கு காவலில் வைக்கப்பட்டிருப்போரை சார்ந்து வாழுபவர்களுக்கும் ஆகும் செலவை ஏற்றல் ஆகிய இரு முக்கியமான பரிந்துரைகள் 1943 நவம்பர் 20 ஆம் தேதி புதுடில்லியில் இந்திய அரசாங்கத்தின் நிதித்துறை உறுப்பினரான மாண்புமிகு சர் ஜெரிமி ரய்ஸ்மான் தலைமையில் நடைபெற்ற நிரந்தர நிதிக்குழு கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டன.

            முந்திய பரிந்துரையைச் செயல்படுத்துவதற்கு ஐந்தாண்டு காலத்துக்கு வருடம் ரூ.3 லட்சமும் பிந்திய பரிந்துரையைச் செயல்படுத்துவதற்கு 1944-45ல் ரூ.225 லட்சமும் செலவாகும்.

உபகாரச் சம்பளங்கள்

            உயர்நிலைப் பள்ளிக் கல்வியை முடித்த ஷெட்யூல்டு வகுப்பைச் சேர்ந்தவர்கள் மேற்கல்வி பெறுவதற்கு வருடம் ரூ.3 லட்சம் வீதம் 5 ஆண்டுக் காலத்திற்கு வழங்கப் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் விஞ்ஞான, தொழில்நுட்பக் கல்வி பெறுவதற்கு இந்த உபகாரச் சம்பளங்கள் வழங்கப்படும்.

            குழு இந்தப் பரிந்துரையை ஏற்றுக்கொண்டது.

(டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் : பேச்சும் எழுத்தும் நூல் தொகுப்பு, தொகுதி 18)

Pin It