கடந்த 25 ஆம் தேதி, இந்தியப் பிரதமர் மோடி, ‘சௌபாக்கியா யோஜனா’ என்னும் மின்னொளித் திட்டத்தை அறிவித்தார். 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் இந்தியா முழுவதும் எல்லா கிராமங்களிலும் மின் இணைப்பைக் கொடுப்பதாகத்  திட்டம்.

இத்திட்டத்தை செப் 25 ஆம் தேதி அறிவித்ததற்கும் ஒரு காரணம் உண்டு. அது தீனதயாள் உபாத்தியாயாவின் பிறந்த நாள். 1916 செப் 25 அன்று உ.பி.யில் பிறந்தவர் அவர். 20 வயதிலேயே ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில்  தன்னை இணைத்துக் கொண்டவர். 1967&-68 இல் அவ்வியக்கத்தின்  தலைவராகவும் இருந்தவர்.  அதாவது அவர்கள் கட்சியில் அவர் ஒரு தலைவர். அவ்வளவுதான். ஆனால் அவரை நாட்டின் தலைவர் போல ஆக்கி, அவர் பிறந்தநாளில் புதிய திட்டத்தை அறிவித்துள்ளார் பிரதமர்.

india rural electrification

இந்த அறிவிப்பைப் பார்த்தவுடன், இது தமிழகத்திற்கு மிகவும் பழையது என்பதைச் சுட்டிக்காட்டி என் கீச்சகத்தில் (ட்விட்டர்) ஒரு பதிவை நான் ஏற்றினேன். 1976ஆம் ஆண்டு மார்ச் மாதமே, தமிழகத்தில் 99.2% மின் இணைப்பு கொடுக்கப்பட்டு விட்டது என்னும் செய்தியைப் பதிவு செய்தேன்.

உடனே காவிப்  படைகள் வெகுண்டெழுந்து நான் பச்சைப் பொய் சொல்வதாக மறு பதிவு இட்டன. அவற்றுள் மிகச் சில மட்டுமே  சற்று நாகரிகமான பதிவுகள்  என்று சொல்ல வேண்டும். ஆபாசம், வன்முறை ஆகிய இரண்டு மட்டுமே அவர்களின் பதிவுகளில் எப்போதும் தலைதூக்கி  நிற்கும். அவர்களுக்காக அன்றி, பொதுவான மக்களுக்கு உண்மை தெரிய வேண்டும்  என்பதற்காகச் சில சான்றுகளை இங்கே தந்துள்ளேன்.

1976இல் நூறு விழுக்காடு மின் இணைப்பு பெற்ற  மாநிலமாக ஹரியானா மட்டுமே இருந்தது. இரண்டாம் இடத்தில் இருந்தது தமிழ்நாடு. அடுத்து கேரளா. 1980களின் தொடக்கத்தில், ஹரியானா, பஞ்சாப், தமிழகம், கேரளா ஆகிய நான்கு மாநிலங்களும் 100% மின் இணைப்பைப் பெற்றன. இதுதான் உண்மைச் செய்தி!

எப்போதோ தமிழகம் நம் தலைவர் கலைஞர் ஆட்சியில் செய்து முடித்தவைகளை, இப்போது தன்  சாதனைத் திட்டமாக வெளியிட்டுக்  கொண்டுள்ளது மோடி  அரசு.                                                  

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.