நீதிமன்ற விசாரணை குறித்தஅம்சங்களைப் புரிந்து கொள்ள ஏதுவாக, ஒரு வழக்கில் பல்வேறு வகைப்பட்ட சாட்சிகளின், சாட்சியங்களின் பதிவுகளை ஓர் எடுத்துக்காட்டாக ஆய்வு செய்யும்போதுதான் அவற்றின் முழுமையான பரிமாணங்களை உணர முடியும்.இந்த அடிப்படையில் மேலவளவு வழக்கின் சாட்சிகளின், சாட்சியங்கள் கடந்த இதழின் தொடர்ச்சியாக இந்த இதழிலும் வெளியிடப்படுகிறது.

அ.சா. 2 : குமார் (கண்ணுற்ற சாட்சி) முதல் விசாரணை :

நான் மேலவளவு காலனியில் குடியிருக்கிறேன். நான் கூலி வேலை செய்கிறேன். நான் பறையர் இனத்தை சேர்ந்தவர். அ.சா. 1 கிருஷ்ணனை எனக்கு தெரியும். இந்த வழக்கில் இறந்துபோன முருகேசன், மூக்கன், சேவகமூர்த்தி, பூபதி, செல்லதுரை, ராஜா ஆகியோர்களை எனக்கு தெரியும். எதிரிகள் அனைவரையும் எனக்கு தெரியும். பஞ்சாயத்து போர்டு தேர்தல் விஷயமாக, எதிரிகளுக்கும் எங்கள் இனத்தவர்களுக்கும் விரோதம். 30.06.97 ஆம் தேதியன்று சம்பவம் நடந்தது. 30.06.97 ஆம் தேதி மேலூர் பஸ் ஸ்டாண்டிலிருந்து நான், சின்னய்யாவும் கே.என்.ஆர். பஸ்சில் எங்கள் ஊருக்கு போவதற்கு ஏறினோம். எங்களுடன் எதிரிகள் அழகர்சாமி, துரைபாண்டி, ஜெயராமன், பொன்னய்யா, ஜோதி, மணிகண்டன் ஆகியோர்களும் ஏறினார்கள். ஜெயராமன் தற்போது இறந்துவிட்டார். பஸ்சில் முருகேசன், நித்தியானந்தம், பாண்டியம்மாள், சேவகமூர்த்தி, செல்லதுரை, ராஜா, பூபதி, மூக்கன், கிருஷ்ணன் ஆகியோர்களும் இருந்தார்கள்.

அக்ரஹாரம் கள்ளுக்கடை மேடு அருகே பஸ் வரும்போது துரைபாண்டி என்பவர் டிரைவரிடம் பஸ்சை நிறுத்தச் சொன்னார். 40ஆவது எதிரி ராமர் தலைமையில் வண்டியை சுற்றி கும்பலமாக இருந்தார்கள். முருகேசனை அழகர்சாமி (முதல் எதிரி) முடியைப் பிடித்து உனக்கு என்னடா பஞ்சாயத்து தலைவர் பதவி உனக்கு என்னடா நஷ்ட ஈடு? என்று சொல்லி பட்டாக் கத்தியால் வெட்டினார். முருகேசனின் தலையை எடுத்துக் கொண்டு அழகர்சாமி மேற்காக ஓடிவிட்டார். அங்கிருந்தவர்கள் மற்றவர்களை வெட்டினார்கள். தமிழனும், சேவகப் பெருமாளும், எனது இடது நடுவிரல் வலது கையிலும், பின் கழுத்திலும் வெட்டினார்கள். நான் எங்கள் ஊருக்கு ஓடினேன். எனக்கு முன்னாடி சின்னய்யா ஊருக்கு போயிருந்தார். சின்னய்யாவுக்கு காயம் இருந்தது.

நாங்கள் இருக்கும்போது கிருஷ்ணனும் ஊருக்கு வந்துவிட்டார். கிருஷ்ணனுக்கு தோள்பட்டையில் காயம் இருந்தது. என்னை யும், கிருஷ்ணனையும், சின்னய்யாவையும் சைக்கிளில் வைத்து மேலூர் ஆஸ்பத்திரிக்கு கூட்டிப் போனார்கள். அங்கிருந்து எங்கள் மூவரையும் மதுரை அரசு பெரிய மருத்துவமனைக்கு கூட்டிப் போனார்கள். மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் நான் ஒரு வாரம் உள்நோயாளியாக இருந்தேன். மறுநாள் என்னை டி.எஸ்.பி. வந்து விசாரித்தார்.

1, 4, 5, 6, 10, 19 மற்றும் 40ஆவது எதிரிகளின் தரப்பில் குறுக்கு விசாரணை :

நான் தினந்தோறும் கூலி வேலைக்குப் போகிறேன். என்னைப் போல் எங்கள் ஊரிலிருந்து பல ஊர்களுக்கு கூலி வேலைக்குப் போகிறார்கள். சம்பவ தினம் அன்று மதியம் 12.30 மணிக்கு மேலூர் வந்தேன். மேலூர் பஸ் ஸ்டான்டில் சின்னய்யாவை எதேச்சியாகப் பார்த்தேன். கே.என்.ஆர். பஸ் மேலூருக்கு நிறைய பயணிகளுடன் வந்தது. இந்த வழக்கில் இறந்த 6 பேர்களும் நான் பார்க்கும்போது பஸ்சில் உட்கார்ந்து கொண்டு இருந்தார்கள். பரவலாக 6 பேர்களும் மாறி மாறி பஸ்சில் உட்கார்ந்து கொண்டு இருந்தார்கள். மேலூரில் பஸ் ஸ்டாண்டை விட்டு புறப்பட்டு சென்ற பஸ் மேலவளவு கள்ளுக் கடை அருகில் துரைபாண்டி வண்டியை நிறுத்தச் சொல்லும்வரை பஸ் எந்த இடத்திலும் நிற்கவில்லை.

நான் பார்த்தபோது அழகர்சாமி முருகேசனின் தலையை வெட்டி துண்டித்தது எல்லாம் பஸ்சுக்குள்தான். நான் பயந்துகொண்டு பஸ்சை விட்டு வெளியே வந்த பிறகு, தமிழனும், நான் அடையாளம் காட்டிய சேவகப் பெருமாளும் என்னை தாக்கினார்கள். அவர்கள் தாக்கியவுடன் எனக்கு காயம் ஏற்பட்டவுடன் நான் பயந்து கொண்டு ஊருக்கு வந்துவிட்டேன். அங்கிருந்த பொது மக்களிடம் 1ஆவது எதிரி முருகேசனின் தலையை துண் டித்து எடுத்து போன விஷயத்தை சொன்னேன். நான் சொன்னதை கேட்டவுடன் ஊர்மக்கள் சம்பவம் நடந்த இடத்திற்கு அலறி அடித்துக் கொண்டு ஓடிவந்தார்கள்.

ஊருக்கு போன இரண்டு நிமிடத்திலேயே என்னை சைக்கிளில் அழைத்துக் கொண்டு மேலூர் ஆஸ்பத்திரிக்கு வந்தார்கள். அடிப்பட்ட எங்கள் மூவரையும் ஊரைவிட்டு மேலூர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள். மேலூர் ஆஸ்பத்திரியில் 5 அல்லது 10 நிமிடங்கள்தான் இருந்தோம். மூவரும் ஒன்றாகத்தான் மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு போனோம். டி.எஸ்.பி. விசாரணையில் 8 எதிரிகளின் பெயர்களை மட்டும் சொல்லி உள்ளேன் என்றும் மற்ற எதிரிகளின் பெயர்களை நான் சொல்லவில்லையென்றும் சொன்னால் அது சரியல்ல. நான் பஸ்சில் போனேன் என்று பொய் சொல்கிறேன் என்றால் சரியல்ல. 30.6.97 ஆம் தேதியன்று மேலூர் டவுனில் கலவரமொன்று ஏற்பட்டபோது அந்தக் கலவரத்தில்தான் எனக்கு காயம் ஏற்பட்டது என்றும் அதைக் கொண்டு என்னை வழக்கில் போலிசார் சாட்சியாக உட்புகுத்தியுள்ளார்கள் என்றும் சொன்னால் சரியல்ல.

அ.சா. 3 : சின்னையா (கண்ணுற்ற சாட்சி) முதல் விசாரணை :

நான் மேலவளவு காலனியில் குடியிருக்கிறேன். நான் பறையர் வகுப்பைச் சேர்ந்தவர். இங்குள்ள எதிரிகள் அனை வரையும் எனக்கு தெரியும். 8ஆவது எதிரி மனோகரன் பாரதிதாசன் ஆகியோர்களைத் தவிர மற்ற எதிரிகள் அம்பலக்காரர் இனத்தை சேர்ந்தவர்கள். இறந்துபோன முருகேசன், பூபதி, ராஜா, செல்லதுரை, மூக்கன், சேவகமூர்த்தி ஆகியோர் தாழ்த்தப்பட்ட என் இனத்தை சேர்ந்தவர்கள். மேலவளவு பஞ்சாயத்தை தனித் தொகுதி ஆக்கி எங்கள் இனத்தைச் சேர்ந்த முருகேசன் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதால், எதிரிகள் வகையறாவுக்கும் எங்கள் வகையறாவுக்கும் விரோதம் இருந்து வந்தது. சம்பவ தினத்தன்று நான் மேலூருக்கு மாட்டுத்தீவனம் வாங்குவதற்காக சென்றுவிட்டு ஊருக்கு திரும்புவதற்காக மேலூர் பஸ் ஸ்டாண்டுக்கு பகல் 3 மணியளவில் வந்தேன்.

அங்கு எங்கள் இனத்தைச் சேர்ந்த குமாரும் நானும் இருந்தோம். அம்பலக்காரர் ஜாதியை சேர்ந்த எதிரிகள் அழகர்சாமி, 1ஆவது எதிரி, 2ஆவது எதிரி துரைபாண்டி, 3ஆவது எதிரி பொன்னய்யா, இறந்துபோன ஜெயராமன், ஜோதி 4ஆவது எதிரி, 5ஆவது எதிரி மணிகண்டன் ஆகியோர்கள் வந்து எங்களுடன் கே.என்.ஆர். பஸ்சில் ஏறினார்கள்.

பஸ்சுக்குள் தலைவர் முருகேசன், பாண்டியம்மாள், மூர்த்தி, சேவகமூர்த்தி, செல்லதுரை, ராஜா, பூபதி, மூக்கன், கிருஷ்ணன் (அ.சா. 1) ஆகியோர்களும் இருந்தார்கள். அப்போது பஸ்சை சுற்றிலும் ராமர் கோஷ்டியைச் சேர்ந்த 40 பேர்கள் ஆயுதங்களுடன் இருந்தார்கள். அப்போது முருகேசனை, அழகர்சாமி (1ஆவது எதிரி) மாறி மாறி வெட்டினார். நானும், முருகேசனுக்குப் பின்னாடி இறங்கியபொழுது எதிரி கறந்தமலை (16ஆவது எதிரி) என்னுடைய வலது கன்னத்தில் வெட்டினார். குமாரை எதிரி தமிழனும், சேவக பெருமாளும் வெட்டினார்கள். (19 மற்றும் 27ஆவது எதிரி) சேவகமூர்த்தியை, சேதும், மணிவாசகமும் வெட்டினார்கள். (24, 6ஆவது எதிரிகள்).

நான் மிரண்டு போய் எங்கள் காலனிக்கு ஓடினேன். நான் ஊருக்குப் போனபோது எனக்கு முன்னாடியே குமார் காயத்துடன் அங்கு இருந்தார். நான் ஊருக்கு போன பிறகு அ.சா. 1 கிருஷ்ணன் வலது தோள்பட்டையில் காயத்துடன் வந்தார். எங்கள் மூவரையும் தும்மப்பட்டி வழியாக மேலூர் ஆஸ்பத்திரிக்கு அழைத்துப் போனார்கள். மேலூர் ஆஸ்பத்திரியிலிருந்து பிறகு எங்களை மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு காரில் அனுப்பி வைத்தார்கள். அங்கு வந்த ஆய்வாளர் அ.சா. 1 கிருஷ்ணன் விசாரித்தார். மறுநாள் என்னை டி.எஸ்.பி. விசாரித்தார். காயம்பட்ட சேவகமூர்த்தி இறந்து விட்டார். முருகேசனும் இறந்துவிட்டார். ஒருவருடம் கழித்து எனக்கு வயிற்றில் ஆப்ரேசன் செய்யப்பட்டது. எனக்கு நெத்தியில் அடிபட்டது.

1, 4, 5, 6, 10,19 மற்றும் 40ஆவது எதிரிகளின் தரப்பில் குறுக்கு விசாரணை :

சம்பவ தினம் நான் மேலூருக்கு வந்ததன் காரணம் மாட்டு தீவனம் வாங்குவதற்காக மட்டுமே. நாங்கள் பேருந்தில் ஏறியபோது உள்ளே இருக்கை காலியாக இருந்தது. நாங்கள் இருக்கையில் உட்கார்ந்து விட்டோம். அப்போது பேருந்துக்குள் அ.சா. 1 கிருஷ்ணனையும் மற்றும் இறந்துபோன 6 பேர்களையும் நான் பார்த்தேன். எனக்கு வெட்டுப்பட்ட உடனேயே பயந்து ஓடவில்லை. கொஞ்ச நேரம் அங்கேயேதான் இருந்தேன். சுமார் 2 நிமிடங்கள் நின்று இருப்பேன். அதற்கு முன்பாகவே முருகேசனை அழகர்சாமி வெட்டுவதை பார்த்துவிட்டேன்.

பஸ்சுக்கு வெளியே நின்று கொண்டு இருந்தபோதுதான் மற்ற நபர்கள் வெட்டுப்பட்டதை நான் பார்த்தேன். குமார் வெட்டுப்பட்டதை தான் நான் முதன் முதலாகப் பார்த்தேன். குமாரை வெட்டியவர்கள் இரண்டு பேர்கள். அந்த வெட்டுப்பட்ட குமார் ஓடிவிட்டான். நானும் குமார் பின்னாடியே ஓடினேன். 40ஆவது எதிரி ராமரை எனக்கு சிறு வயது முதல் தெரியும்.

நான் எங்கள் ஊருக்கு போகும்போது எங்கள் கிராமத்தை சேர்ந்தவர்கள் ஆண் களும் பெண்களும் கலந்து கூடி கூச்சல் போட்டுக் கொண்டு இருந்தார்கள். அந்தக் கும்பலில் எங்கள் இனத்தைச் சேர்ந்த இறந்தவர்களின் மனைவிமார்களும், உறவினர்களும் இருந்தார்கள். அவர்கள் என்ன நடந்தது என்று என்னை விசாரித்தார்கள். நான் கண்ட சம்பவம் பற்றி அவர்களிடம் தெரிவித்தேன். நான் காயம்பட்டதின் விளைவாக, எனது துணிமணிகளில் ரத்தம் இருந்தது. டி.எஸ்.பி. விசாரணையின்போது என்னையும் குமாரையும் அ.சா. 1 கிருஷ்ணன் தான் மருத்துவமனைக்கு கூட்டிச் சென்றார் என்று கூறியுள்ளேன் என்றால் அது சரிதான்.

மேலூர் அரசு மருத்துவமனையில் சுமார் 10 நிமிடங்கள்தான் இருந்திருப்போம். என்னை டாக்டர் பரிசோதனை செய்தபோது அ.சா. 1 கிருஷ்ணனும் அ.சா. 2 குமாரும் அங்கு இருந்தார்கள். டாக்டர் சொல்லியதன் பேரில் தான் மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு நாங்கள் சென்றோம். மேலூர் நகரத்தில் நடந்த கலவரத்தில்தான் எனக்கு காயம் ஏற்பட்டது என்று சொன்னால் அது சரியல்ல. டி.எஸ்.பி. என்னை விசாரித்தபோது 10 பெயர்களை மட்டும் குறிப்பிட்டு சொல்லி உள்ளேன் என்றால் சரியல்ல. 13 பெயர்களை கூறியுள்ளேன்.

அ.சா. 4 : கூ. சத்தியமூர்த்தி (பிறழ் சாட்சி) முதல் விசாரணை :

நான் எட்டிமங்களத்தில் குடியிருக்கிறேன். நான் தாழ்த்தப்பட்ட பறையர் வகுப்பைச் சேர்ந்தவர். மேலவளவு பஞ்சாயத்து தேர்தல் நடந்த விஷயம் பற்றி எனக்கு தெரியாது. இந்த வழக்கு பற்றி எனக்கு எதுவும் தெரியாது. (இச்சாட்சி பிறழ்சாட்சியாக கருதப்பட்டு பின்னர் அரசு வழக்குரைஞரால் குறுக்கு விசாரணை செய்யப்பட்டார்).

அ. சா. 5 : பெரியவர் (கண்ணுற்ற சாட்சி) முதல் விசாரணை :

நான் மேலவளவு காலனியில் வசிக்கிறேன். ஆஜர் எதிரிகளில் சில பேரை தெரியும். சில பேரை எனக்கு தெரியாது. அதில் எங்கள் ஊரைச் சேர்ந்தவர்களும் சேராதவர்களும் இருக்கிறார்கள். நான் தாழ்த்தப்பட்ட பறையர் வகுப்பைச் சேர்ந்தவர். 30.6.97 அன்று திங்கட்கிழமை நான் மற்றும் ஏகாதேசியும் அக்ரஹாரத்திற்கு சென்றோம். அப்போது பகல் 3.15 மணி இருக்கும். அப்போது நத்தம் செல்லக்கூடிய கே.என்.ஆர். பஸ் வந்து நின்றது (எங்க ஊரைச் சேர்ந்த அம்பலக்காரர் ஜாதிக்காரர்களும் மற்ற ஊரைச் சேர்ந்தவர்களும் பஸ்சை சுற்றி அரிவாளுடன் நின்றனர். அதில் என் ஊரைச் சேர்ந்த எதிரிகள் ராமர், தங்கமணி, கண்ணன், எதிரி ரசம் என்கிற அய்யாவு, எதிரி மார்கண்டன் (11ஆவது எதிரி) மற்றும் பலரும். எங்கள் ஊரைச் சேர்ந்த எங்கள் இனத்தைச் சேர்ந்தவர்களை, எங்கள் ஊரைச் சேர்ந்த அம்பலக்காரர்களும் மற்ற ஊரைச் சேர்ந்தவர்களும் வளைத்து வளைத்து வெட்டினார்கள். அவர்கள் அரிவாள், கத்தி, ஆயுதங்களுடன் வந்தனர். எங்கள் இனத்தைச் சேர்ந்த தலைவர் முருகேசனை முதல் எதிரி அழகர்சாமி வெட்டி, தலையை துண்டாக எடுத்துக் கொண்டு வயல்காட்டுப் பக்கம் ஓடிவிட்டார்.

எதிரி ராமர், எங்கள் இனத்தைச் சேர்ந்த ராஜாவை மாறி, மாறி தலை பக்கம் வெட்டினார். எதிரி ஆண்டிச்சாமி, அதே ராஜாவை பின்பக்கம் வெட்டினார். என் இனத்தைச் சேர்ந்த சேவகமூர்த்தியை எதிரி மனோகரன் வலது கையில் வெட்டினார். என் இனத்தைச் சேர்ந்த மூக்கனை எதிரி ராஜேந்திரன் கையில் வெட்டினார். எதிரி கறந்தலை, எங்கள் இனத்தை சேர்ந்த சின்னய்யாவை (அ.சா. 3) அருவாளால் வெட்டினார். நான் நெருங்கிச் சென்றபொழுது, அவர்கள் எங்களையும் வெட்டி விடுவதாக மிரட்டியதால் நான் பயந்து ஓடினேன்.

1, 4, 5, 6, 10, 19 மற்றும் 40ஆவது எதிரிகளின் தரப்பில் குறுக்கு விசாரணை :

நான் மேலவளவு கிராமத்திலேயே பிறந்து வளர்ந்தவன், மேலவளவு கிராமத் தைச் சேர்ந்த எனக்கு தெரிந்த நபர்களின் பெயர்களை முன் விசாரணையில் குறிப்பிட்டுள்ள நானும், ஏகாதேசியும், ஒரே காரணத்திற்காகத்தான் அக்ரஹாரம் கிராமத்திற்கு சென்றோம். மாடு வாங்குவதற்காக சென்றோம். 20 மீட்டர் தூரத்திலிருந்து பஸ் நின்றதையும் ஜனங்கள் சூழ்ந்து நின்றதையும் பார்த்தோம். பஸ்சுக்கு வடபுறமாக நின்று நாங்கள் பார்த்தோம். மேலும் பஸ்சை நோக்கி நகர்ந்து நாங்கள் சென்றோம். அப்படி நாங்கள் சென்றபோது பஸ்சிலிருந்து இறங்கி வந்தவர்கள் எங்களை நோக்கி யாரும் ஓடிவரவில்லை. எங்கள் இனத்தை சேர்ந்தவர்களை தவிர மற்றவர்கள் இறங்கி ஓடிவிட்டனர்.

எங்கள் இனத்தை சேர்ந்தவர்களை இறங்க விடவில்லை. இரண்டு வழிகளிலும் அடைத்துக் கொண்டதால் எங்கள் இனத்தவர்கள் பஸ்சுக்குள்ளே இருந்து இறங்க இறங்க வெட்டினார்கள். அம்பலக்காரர் இனத்தை சேர்ந்தவர்களும் பஸ்சுக்குள் இருந்தார்கள். அவர்கள் எங்கள் இனத்தை சேர்ந்த ஒவ்வொருவரையும் வெட்டி வெளியே தள்ளினார்கள். அப்படித் தள்ளப்பட்டவர்களை வெளியில் இருந்தவர்கள் மீண்டும் அவர்களை வெட்டினார்கள். அப்படி வெட்டுப்பட்டவர்களும் ஆங்காங்கே விழுந்து விட்டார்கள். நானும் ஏகாதேசியும் கூச்சல் போட்டோம்.கூச்சல் போட்டவுடன் எங்களை மிரட்டியதால் நாங்கள் எங்கள் ஊருக்கு ஓடிவிட்டோம். நாங்கள் சென்றதும் எங்கள் இனத்தைச் சேர்ந்த 6 பேர்களையும் கொன்றுவிட்டார்கள் என்று பொதுவான ஊர் ஜனங்களிடம் சொன்னோம். நாங்கள் சொன்னதும் அவர்கள் அலறி அடித்துக்கொண்டு சம்பவ இடத்தை நோக்கி ஓட ஆரம்பித்து விட்டனர். இரவு 10 மணி வரை போலிசார் யாரும் மேலவளவு காலனிக்கு வரவில்லை. இரவு 10 மணியளவில் நான் சம்பவ இடம் வந்த பிறகு தான் போலிசார் அங்கு வந்திருப்பது எனக்கு தெரிய வந்தது. வெட்டுப்பட்ட சம்பவத்தை நான் பஸ் நின்ற இடத்திற்கு மேற்குப் பக்கம் நின்று பார்த்தேன்.

அ.சா. 6 : ஏ.கே. பழனி (கண்ணுற்ற சாட்சி) முதல் விசாரணை :

நான் மேலவளவு காலனியில் வசிக்கின்றேன். எங்கள் ஊரில் பஞ்சாயத்து தேர்தல் நடந்தது. அது தனித் தொகுதி. முருகேசன் தேர்தலில் வெற்றி பெற்றார். அதன் காரணமாக கள்ளர் சமுதாயத்திற்கும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்திற்கு விரோதம் ஏற்பட்டது. 30.6.97 ஆம் தேதி அன்று பகல் 2.45 மணியளவில் நான் மேலூர் பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டு இருந்தேன். என்னுடன் கணேசன் என்பவரும் நின்று கொண்டு இருந்தார். மேலவளவுக்கு செல்வதற்காக நான் நின்று கொண்டு இருந்தேன். அப்போது கே.என்.ஆர். பஸ் திண்டுக்கல் போகும் பஸ் வந்தது. உடனே பஸ்சில் நானும் கணேசனும் ஏறிவிட்டோம். எங்களுக்குப் பின்னாடி அ.சா. 2 குமாரும், அ.சா. 3 சின்னய்யாவும் ஏறினார்கள். அதன் பிறகு எதிரி அழகர்சாமி, இறந்து போன எதிரி ஜெயராமன், எதிரி ஜோதி, மணிகண்டன் மற்றும் பலரும் பஸ்சில் ஏறினார்கள். பஸ்சுக்குள் எங்க ஊர் தலைவர் முருகேசன் ராஜா, செல்லதுரை, சேவகமூர்த்தி, கிருஷ்ணன், நித்தயானந்தம், பாண்டியம்மாள் ஆகியோர்களும் இருந்தார்கள்.

பஸ் அக்ரஹாரம் கள்ளுக்கடை மேடு வந்தபோது பஸ்சில் இருந்த எதிரி துரை பாண்டி பஸ்சை நிறுத்துடா என்று கூச்சல் போட்டவுடன் டிரைவர் பஸ்சை நிறுத்திவிட்டார். உடனே எதிரி தலைவர் அழகர்சாமி அரிவாளால் முருகேசனை வெட்டினார். எதிரி அழகு முருகேசனை இடது கன்னத்திலும், வலது தோள்பட்டையிலும் அரிவாளால் வெட்டினார். எதிரி பாரதிதாசன், முருகேசனை இடது கையில் அரிவாளால் வெட்டினார். எதிரி நாகேஷ், முருகேசனை இடது முழங்கையில் வெட்டினார். எதிரி கதிர்வேல், எதிரி தங்கமணி, எதிரி கணேசன், எதிரி மணி ஆகியோர்களும் முருகேசனின் வயிற்றுப் பகுதியிலும் நெஞ்சுப் பகுதியிலும் வெட்டினார்கள். எதிரி ரங்கநாதன், சேவகமூர்த்தியை இடது கணுக்காலில் வெட்டினார்கள். எதிரி சேகர் பூபதியுடைய வலது கையில் வெட்டினார்.

எதிரி தமிழன் அ.சா. 2 குமாருடைய வலது கையில் வெட்டினார். எதிரி ராஜேந்திரன், மூக்கனுடைய வலதுபுற தலையில் வெட்டினார். எதிரி ராஜேந்திரன், மூக்கனுடைய வலதுபுற தலையில் வெட்டினார். மேலும் எதிரி ராமர், எதிரி மனோகரன், எதிரி சக்கரமூர்த்தி ஆகியோர்களும் மற்றவர்களும், சேர்ந்து பக்கத்தில் யாராவது வந்தால் வெட்டிவிடுவோம் என்று மிரட்டினார்கள். நாங்கள் பயந்து கொண்டு ஓடிவிட்டோம். பிறகு வெட்டுப்பட்ட 6 பேர்களும் இறந்துவிட்டதாக தெரிந்து கொண்டேன். 35 நாட்கள் கழித்து டி.எஸ்.பி. வந்து என்னை விசாரித்தபோது நான் இந்த சம்பவம் பற்றி சொன்னேன்.

1, 4, 5, 6, 10, 19 மற்றும் 40ஆவது எதிரிகளின் தரப்பில் குறுக்கு விசாரணை :

நான் பஸ்சில் ஏறியபோது உட்காருவதற்கு சீட் கிடைத்தது. என்னுடன் கணேசனும் பஸ்சில் சீட் கிடைத்து உட்கார்ந்து விட்டார். நான் குறிப்பிட்டுச் சொல்லிய நபர்களைத் தவிர வேறு பல நபர்களும் பஸ்சில் ஏறினார்கள். நான் எங்கள் இனத்தை சேர்ந்த நபர்களை இச்சம்பவத்தில் இறந்து போனவர்களிடமும் சாட்சிகளிடமும் நான் பேசவில்லை. நான் பஸ்சில் உட்கார்ந்திருந்தபடியே அழகர்சாமி 1ஆவது எதிரி முருகேசனை வெட்டுவதைப் பார்த்தேன். அவர் வெட்டுப்பட்டதை பார்த்தும் உள்ளே இருந்த பயணிகள் கீழே இறங்கி ஓட ஆரம்பித்தார்கள். 1ஆவது எதிரி அழகர்சாமி வெட்டிய முதல் வெட்டு முருகேசனின் வலதுபுற தோள்பட்டையில் பட்டது. வெட்டு வாங்கும்போது முருகேசன் குனிந்தபடி இருந்தார். மேலும் முருகேசனை இழுத்துக் கொண்டே வந்தார்கள். மற்ற அம்பலக்காரர் ஜாதியை சேர்ந்தவர்கள் அப்போது முருகேசனை வெட்டிக் கொண்டும் குத்திக் கொண்டும் வந்தார்கள். அன்று அழகர்சாமி மற்றும் அம்பலக்காரர்களும் முருகேசனை வெட்டியதை முதல் முதலில் பார்த்தேன்.

நான் மற்ற நபர்களை வெட்டியதையும் பார்த்துவிட்டுத்தான் ஓடினேன். முருகேசனை தவிர மற்ற நபர்கள் வெட்டுப்பட்டதை பஸ்சுக்கு வெளியே நின்றுதான் நான் பார்த்தேன். நான் பார்த்த சம்பவம் சுமார் 10 நிமிடங் கள் நடத்திருக்கும். நான் பயந்து ஊருக்கு ஓடியபோது என்னுடன் வேறு யாராவது ஓடி வந்தார்களா என்பதை நான் கவனிக்கவில்லை. நான் ஊருக்குப் போனவுடன் என் தாயாரிடம் நடந்த சம்பவத்தை கூறினேன். நான் ஊருக்கு ஓடிப்போய் சேர்ந்தபோது, அங்கு ஜனங்கள் கூடியிருந்தார்களா இல்லையா என்பது எனக்கு ஞாபகமில்லை.

என் தாயார் யாரிடமும் சொல்லாதேஎன்று கேட்டுக் கொண்டதால், புலன் விசாரணைக்கு வந்தவர்களிடம் நான் எதுவும் சொல்லவில்லை. அப்போது என் தாயாரை அந்த போலிஸ் அதிகாரி விசாரிக்கவில்லை. நான் சொல்வது போல் சம்பவம் எதையும் நான் பார்க்கவில்லையென்றும் காலதாமதமாக ஜோடிக்கப்பட்ட வழக்கில் என்னை சாட்சியாக போலிசார் உட்புகுத்தியுள்ளார்கள் என்றால் சரியல்ல.

- சு.சத்தியச்சந்திரன்

(தலித் முரசு ஜனவரி 2010 இதழில் வெளியான கட்டுரை)

Pin It