முழங்கால் அல்லது கணுக்கால் மூட்டில் அடி அல்லது காயம் ஏற்பட்டால் அங்கு வீக்கம் ஏற்படுகிறது. ஏனெனில் அந்த அடிபட்ட இடத்தில் இயல்பாக உள்ள உயிர் நீர்மங்கள் (Cells) பெருக்கப்பட்டுத் திண்டாகக் குந்திக் கொள்கின்றன. அத்துடன் அடிபட்டதால் உள்காயம் ஏற்பட்டு உள்ளே குருதி ஓரளவு கசிவு ஏற்பட்டுப் பரவும்.

வீக்கங்கள் இரண்டு பெருங் குழுக்களாகப் பிரிக்கப்படுகின்றன. அவை பொய் வீக்கக் கட்டிகள், உண்மை வீக்கக் கட்டிகள் (False, True tumours) எனப்படும். அழற்சி சார்ந்த வீக்கங்கள் (Inflammatory swellings) மூட்டுகளில் தோன்றுபவை; முதல் வகையான பொய் வீக்கக் கட்டிகளைச் சாரும். அது உட்புண் (Bruises), கருங்கண் (Black eyes), சுளுக்குகள், (Sprains) முறிவுகள், (Fractures) கொப்புளங்கள் (Boils) சீழ்க்கட்டிகள் (Abscesses) போன்ற தொற்று நோய்கள் ஆகியவற்றை உட்படுத்தி உள்ளது. வீங்கிய இணைப்புகள் (Swollen joints) குளிர்ந்த ஈரத்துணியை நெருக்கி அழுத்தமாகக் கட்டுவதாலும் அல்லது பஞ்சு உள்வைத்துத் தைத்த பையை ஈரமாக்கி அழுத்திக் கட்டு வதாலும் அல்லது பனிக்கட்டித் தொகுதியை மேல்வைப்பதாலும் தம் தன்மையிலிருந்து சிறிது சிறிதாக மாறி நலத்தை நோக்கிச் செல்லும். இறுக்கமான கட்டுகளும் அதற்குத் துணையாகப் பயன்படுத்தப்படும்.

உண்மையான கட்டிகள் அல்லது வீக்கங்கள் (True tumours or Swellings) என்பவை, ஏற்கனவே உள்ள உடம்பு உயிர்மங்களிலிருந்து வளர்ச்சி பெற்ற இழைமத் தொகுதிகளால் ஆனவை. அவை தொடர்ந்து வளரும் போக்குக் கொண்டவை. அவற்றுள் சில கட்டிகள் இயல்பான உயிர்மங்களையுடையதாய் ஏதும் விளைவிக்காததாய் (Benign) அல்லது துன்பம் தராததாய் இருக்கின்றன. மற்ற கட்டிகளில் உள்ள உயிர்மங்கள் இயல்புக்கு மாறாகத் தம் தாய் உயிர்மங்களிலிருந்து கொஞ்சம் வேறுபட்டு, பொதுவாக நச்சுத் தன்மை கொண்ட கொடிய வேகமாகப் பரவும் கட்டிகளாக மாறிவிடுகின்றன.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.