சீடர்களுடன் நடத்திய அறிவார்ந்த விவாதங்கள்

கடவுள் உலகைப் படைத்தார் என்றால், துன்பம் பேரிடருக்கு யார் காரணம்? பிராமணர் மட்டும் உயர்ந்தவன் என்றால், அந்த நம்பிக்கை ஏன் உலகம் முழுதும் இல்லாமல், இந்த தேசத்தில் மட்டும் இருக்கிறது என்று வாழ்வின் எதார்த்தங்களிலிருந்து வாதிட்டார் புத்தர்.

“கடவுள் உண்டா இல்லையா என்பது பற்றி புத்தர் கவலைப்படாதவராக அது பயனற்ற வாதம் என்ற கருத்துடையவராக இருந்தாலும் அனைத்தையும் உருவாக்கி ஆட்டிப் படைக்கும் சக்தி ஒன்று உண்டு என்ற நம்பிக்கை புத்தரிடம் இருந்திருக்குமானால், அவர் போதித்த கருத்துகள் எல்லாம் தலைகீழாக வேறு திசையில் சென்றிருக்கும்” என்கிறார், தலைசிறந்த இந்திய தத்துவ ஆய்வாளர் தேவி பிரசாத் சட்டோ பாத்யாயா.

“அப்படி ஒரு ‘சக்தி’ இருக்கிறது என்ற நம்பிக்கையி லிருந்துதான் அந்தக் கடவுளை மகிழ்வித்தால் கருணை காட்டுவார் என்ற நம்பிக்கை உருவாகிறது; அந்த நம்பிக்கையில் தான் கடவுளை வேண்டுதல்; காணிக்கை செலுத்துதல்; பலியிடுதல் என்ற சடங்குகள் வந்தன. இறைவனை இவற்றின் வழியாக மகிழ்வித்து கருணையைப் பெற முடியும் என்ற நம்பிக்கை, புத்தர் காலத்திலும் இருந்தது. இவற்றில் நம்பிக்கை இல்லாத காரணத்தினால் தான் புத்தர் இந்த நம்பிக்கைகளை முற்றாக ஒதுக்கிவிட்டு மனிதனின் துயரத்துக்கு என்ன காரணம் என்பது குறித்து சிந்தித்தார். இல்லாவிட்டால் துயரத்துக்கும் மகிழ்ச்சிக்கும் காரணம் கடவுள் என்று கூறி கடவுளை அடையும் வழிமுறைகளைத்தான் புத்தரும் பேசியிருப்பார்.

ஆனால் புத்தர் அப்படி சிந்திக்காமல் துயரத்துக்குக் காரணங்களைக் கண்டறியவே முற்பட்டார்” என்கிறார் சட்டோ பாத்யாயா. புத்தர் வாழ்ந்த காலத்தில் அவரது கருத்துகள் எதுவும் பதிவாகவில்லை. புத்தர் காலத்துக்குப் பிறகு அஸ்வகோசர் தனது நினைவிலிருந்து புத்தர் கருத்துகளை ‘புத்த சரிதத்தில்’ பதிவு செய்தார். புத்தரின் கருத்துகளாக அஸ்வகோசர் முன் வைத்திருக்கும் தத்துவங்கள் - புத்தர் ஒரு முழுமையான நாத்திகர் என்பதையே உறுதிப்படுத்துகின்றன.

இவ்வுலகம் கடவுளால் படைக்கப்பட்டது என்றால், தூய்மை; தூய்மையற்ற எல்லா பொருள்களும் அவனிடமிருந்தே வந்திருக்க வேண்டும். அப்படியானால், கடவுளால் அனுப்பி வைக்கப்பட்ட அனைத்திலும் மாற்றமோ, அழிவோ நடந்திருக்கக் கூடாது. துன்பம், இயற்கைப் பேரிடர் ஏதும் நிகழ்ந் திருக்கக் கூடாது. சரி; தவறு என்று எதுவும் இருக்க முடியாது.........

ஒரு உயிருக்கு இன்பம், துன்பம், விருப்பு, வெறுப்பு அனைத்தும் இறைவனின் கொடை என்றால், இறைவனுக்கும் அந்த உணர்வுகள் இருந்திருக்கத்தான் வேண்டும். அப்படியானால் அவனை குணங்களற்றவன் என்று எப்படி கூற முடியும்?

கடவுள் மனிதனைப் படைத்தார்; எனவே கடவுள் ஆணையை ஏற்பதைத் தவிர, உயிர்களுக்கு வேறு வழியில்லை என்றால், ஒரு மனிதனுக்கு நல்ல குணங்களே வேண்டும். அவை மட்டுமே உயர்வானது என்று ஏன் சிறப்பிக்க வேண்டும்? அனைத்தும் அவன் செயல் என்றால் நல்லது, கெட்டது என்பதற் கெல்லாம் இடம் ஏது? இந்த குணங்கள் அனைத்தும் கடவுளுக்கும் உரியதாக ஆகிவிடு மல்லவா?

துன்ப, துயரங்களுக்கு எல்லாம் கடவுள் காரணமில்லை என்று கூறினால், அதற்குக் காரணம் யார்? அதற்கெல்லாம் கடவுளைத் தவிர்த்த வேறு காரணங்கள் உண்டு என்றால், கடவுளைத் தவிர்த்து, அவன் சக்திக்கு உட்படாதவைகள் உண்டு என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும். கடவுளுக்கே தொடர் பில்லாதவைக்கு கடவுள் காரணம் இல்லை என்பதையும் ஒப்புக் கொண்டாக வேண்டும்.

உலகைப் படைத்தவர் கடவுள் என்றால், அவர் படைத்ததற்கு ஒரு நோக்கம் இருந்தாக வேண்டும். அந்த நோக்கம் முழுமையாக நிறை வேறும்போது கடவுளுக்கு ஒரு மனநிறைவு கிடைக்கும். முழுமையான நோக்கம் நிறை வேறாதபோது கடவுள், ‘பூரணத்துவம்’ பெற்றவர் என்று எப்படி கூற முடியும்? சரி; நோக்கம் ஏதுமின்றியே கடவுள் உலகைப் படைத்தார் என்றால், அந்தக் கடவுள் பைத்தியக்காரனாகவோ அல்லது பால் உறிஞ்சும் பச்சைக் குழந்தையாகவோ தான் இருக்க முடியும்.

அப்படியே படைத்திருந்தாலும் அது ஒரே கடவுளாகத்தானே இருக்க முடியும்? ஒன்றுக்கு மேற்பட்ட கடவுள்கள் எப்படி வந்தன?”

- என்று கடவுள் இருப்பையே கேள்விக் குள்ளாக்கியிருக்கிறார் புத்தர்.

‘அநாதபிண்டிகர் என்பவர் ஆசிரமத்தில் புத்தர் தங்கியிருந்தபோது ஆசுவலாயனன் என்ற பார்ப்பன இளைஞன், புத்தருடன் வாதம் செய் கிறான். அந்த விவாதம் மிகவும் சுவையானது:

“ஆசுவலாயனன் : கவுதமரே! பிராமண வருணமே உயர்ந்தது. மற்ற வருணங்கள் தாழ்ந்தவை. பிராமண வருணம் வெண்மை யானது. மற்றவை கருப்பானவை. பிராமணர் களுக்கே முக்தி கிடைக்கிறது. மற்றவர்களுக்கு அல்ல. பிராமணர்கள் பிரம்மதேவனுடைய முகத்திலிருந்து உண்டானவர்கள். அவர்கள் அவனுடைய சொந்தப் பிள்ளைகள். எனவே, அவர்கள்தாம் அவனுடைய செல்வத்துக்கு உரிமையானவர்கள் என்று பிராமணர்கள் கூறுகிறார்களே, இதைப் பற்றி உங்கள் கருத்து யாது?

புத்தர் : ஆசுவலாயனா! பிராமணர்களின் மனைவியர் பூப்படைகிறார்கள், கருத்தரிக் கிறார்கள், மகவை ஈனுகிறார்கள், குழந்தை களுக்குப் பாலூட்டுகிறார்கள். இப்படியாக அந்தணரின் சந்ததியர் பிற வருணத்தவரைப் போலவே தாய் வயிற்றிலிருந்து பிறந்திருக்க, பிரம்மதேவனுடைய முகத்திலிருந்து தோன்றியதாகக் கூறிக் கொள்வது வியப்பாக இல்லையா?

ஆசுவலாயனன் : கவுதமரே! தாங்கள் எப்படி வேண்டுமானாலும் சொல்லுங்கள். ஆனால், பிராமணர்கள் தாங்கள் பிரம்ம தேவனுடைய செல்வத்துக்கு உரியவர்கள் என்பதில் முழு நம்பிக்கை கொண்டிருக் கிறார்கள்.

புத்தர்: ஆசுவலாயனா! யவனம், காம் போஜம் முதலிய எல்லை நாடுகளில் ஆரியர், தாசர் என்ற இரண்டே வருணங்கள் உண்டு. சில சமயம் ஆரியன் தாசனாவான், தாசன் ஆரியனா வான். இதை நீ கேள்விப்பட்டிருக்கிறாயா?

ஆசுவலாயனன்: ஆம், கவுதமரே! கேள்விப் பட்டிருக்கிறேன்.

புத்தர்: அப்படியிருக்கையில், பிரம்ம தேவன் ‘பிராமணர்களை’ முகத்திலிருந்து உண்டாக்கினான், அவர்கள் உயர்ந்தவர்கள் என்பதற்கு ஆதாரம் என்ன?”

அக்கினியில் வேறுபாடு உண்டோ?

தங்களுக்குத் தாங்களே எழுதிக்கொண்ட ரிக் வேதத்தின் புருஷ சூக்தத்தை ஆதாரமாகக் கொண்டே ‘பிராமணர்கள்’ பிரம்மனின் முகத்திலிருந்து உதித்தவர்கள் எனும் நம்பிக்கை கட்டமைக்கப்பட்டது. இதற்கு எதிராக வாழ்வின் யதார்த்தங்களை ஆதாரமாக வைத்தார் புத்தர். பிராமணர்கள் மிக உயர்ந்தவர்கள் என்றால் அந்த நம்பிக்கை இந்த தேசத்தில் மட்டும் நிலவுவது ஏன்? பக்கத்து நாடுகளில் அது இல்லாதது ஏன்? இதிலிருந்தே பிறப்பின் அடிப்படையில் உயர்வு தாழ்வு கற்பிப்பது முறையற்றது என்பது தெளிவாகிறது என்பதே புத்தரின் வாதம். அப்படியும் இதை ஏற்கவில்லை. ஆசுவலாயனன் அவன் சொன்னதையே சொன்னான்.

ஆசுவலாயனன் : கவுதமரே! தாங்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லுங்கள். ‘பிராமணர்கள்’ தங்களை உயர்வாகவும் மற்ற வருணத்தவரைத் தாழ்வாகவும் கருதுகிறார்கள் என்பது உண்மை.

புத்தர் : ஆசுவலாயனா! அரசன் ஒருவன் பிராமணர்களையும் க்ஷத்திரியர்களையும் பார்த்து ‘சால மரம் அல்லது சந்தன மரம் போன்ற உயர்ந்த மரங்களைக் கடைக் கோலாகக் கொண்டு தீயை உண்டாக்குங்கள்’ என்றான். புலையர், வேடர் உள்ளிட்டவர்களைப் பார்த்து, ‘நாய்க்கும் பன்றிக்கும் தீனி வைக்கும் பாண்டத் திலும், சாயம் தோய்க்கும் பாண்டத்திலும் ஆமணக்கைக் கொண்டு தீயை உண்டாக்குங்கள்’ என்றான். ஆசுவலாயனா! அப்போது பிராமணர் முதலியோர் உண்டாக்கிய அக்கினி மட்டுமே ஒளிரும், புலையர் முதலியோர் உண்டாக்கிய அக்கினி ஒளிராது என்று உனக்குத் தோன்று கிறதா?

ஆசுவலாயனன் : கவுதமரே! அக்கினி ஒரே மாதிரிதான் ஒளிரும். எங்கும் ஒரே மாதிரி யாகவே அக்கினி காரியம் நடக்கும்” என்று ஒப்புக் கொண்டான் ஆசுவலாயனன்.

புத்தர் மகத்தான தத்துவஞானி மட்டுமல்ல, ஓர் அருமையான இலக்கியவாதியும் கூட. எளிமையான, அழகான, கச்சிதமான உவமைகளைப் பயன்படுத்தியிருக்கிறார் பல இடங்களில். ஒரு மாபெரும் மக்கள் தலைவராக இவர் பரிணமித்ததற்கு அவருக்குள்ளிருந்த கவித்துவ ஆற்றலும் ஒரு முக்கிய காரணமாகும்.

எதைக் கொண்டு உருவாக்கப்பட்டாலும் தீ, தீதான். எத்தகைய மனிதர்களுக்குப் பிறந்தா லும், மனிதன், மனிதன்தான். அதில் வேறுபாடு இருக்க முடியாது. பிறப்பின் அடிப் படையில் பாகுபாடு காட்டக் கூடாது. இதை இன்னும் பட்டவர்த்தனமாகச் சொன்னார் புத்தர்.

“புத்தர் : ஒரு க்ஷத்திரியப் பிள்ளை பிராமணப் பெண்ணை மணந்து கொண்டால், அந்தத் தொடர்பினால் அவனுக்குப் பிறக்கும் மகன் தாய் தந்தையைப் போலவே மனிதனாக இருப்பானா இல்லையா? ‘பிராமண’ப் பிள்ளை ஒருவன் க்ஷத்திரியப் பெண்ணை மணந்தால், அந்தத் தொடர்பினால் பிறக்கும் மகன், தாய் தந்தையரைப் போலவே மனிதனாக இருப்பானா இல்லையா?

ஆசுவலாயனன் : இத்தகையக் கலப்பு மணத்தினால் பிறக்கும் மகன் தாய் தந்தையரைப் போல மனிதனாகவே இருப்பான். கவுதமரே! அவனை பிராமணர் என்றும் சொல்லலாம், க்ஷத்திரியன் என்றும் சொல்லலாம்.

புத்தர்: ஆனால் ஆசுவலாயனா! ஒரு பெண் குதிரைக்கும் ஆண் கழுதைக்கும் தொடர்பு ஏற்பட்டு ஒரு குட்டி பிறந்தால் அது தாயைப் போல இருக்குமா? தகப்பனைப் போல் இருக்குமா? அதைக் குதிரை என்று சொல்ல முடியுமா? கழுதை என்று சொல்ல முடியுமா?

ஆசுவலாயனன் : கவுதமரே! அதைக் குதிரை என்றோ, கழுதை என்றோ சொல்ல முடியாது. அது மூன்றாவது இனம் ஒன்றைச் சேர்ந்த பிராணி. அதைக் கோவேறுக் கழுதை என்கிறோம். ஆனால், பிராமணருக்கும் க்ஷத்திரி யருக்கும் உண்டான கலப்பினால் பிறந்த குழந்தையிடம் இத்தகைய மாறுதல் இருப்பதில்லை.”

வருண வேறுபாடு செயற்கையானது. அது இருவகை உயிரினங்களுக்கும் இடையிலான இயற்கையான வேறுபாடு அல்ல. அதனால் தான் வருணக் கலப்பால் பிறக்கும் பிள்ளை மனிதனாக இருக்கிறது. யதார்த்த உண்மை இப்படியிருக்கும் போது வருணத்தின் பேரில் உயர்வு தாழ்வு கற்பிக்க முடியாது என்று ஆணித்தரமாக வாதிட்டார் புத்தர். இன்றைக்குக்கூட இப்படி வாதாடப் பலரும் தயங்குவார்கள். அந்த ஞானியோ 2500 ஆண்டுகளுக்கு முன்பே இப்படி அஞ்சாமல் வாதாடினார்.

ஆனாலும்கூட புத்தர் ஒரு தவறு செய்து விட்டார்

புத்த மார்க்கம் பார்ப்பனர்களையும் ஏற்றுக் கொண்டதால் அதற்கான கடும் விலையை அது தர வேண்டியிருந்தது. புத்த மார்க்கப் புரட்சியால் யாகம், சடங்குகளின் செல்வாக்குகள் வெகுவாகக் குறைந்து விட்டதால் வருமானமில்லாத நிலையில் பல பார்ப்பனர்கள், பார்ப்பன உணர்வுகளைவிட்டு விடாமலேயே புத்த மார்க்கத்தில் இணைந்துக் கொண்டனர். புத்த பிட்சுக்களாக உருவாக்கப்பட்ட ‘ஆஸ்ரமங்களில்’ அவர்கள் சுகவாழ்வு வாழத் தொடங்கினர். பிற்காலத்தில் பிரிட்டிஷ் ஆட்சியில் அதிகார மய்யங்களைப் பார்ப்பனர்கள் தங்கள் வசமாக்கிக் கொண்ட அதே கதைதான்.  புத்த பிட்சுவாக மாறிய பிறகும் பார்ப்பனர்கள் தங்கள் ‘தீண்டாமை’யை விட்டு விடவில்லை என்பதை சீனப் பயணியாக இந்தியாவுக்கு வந்த ஃபாஹியான் தனது பயணக் குறிப்பில் பதிவு செய்திருக்கிறார்.

“புத்த மார்க்கத்தைத் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வந்த ஒரு பார்ப்பன புத்த பிக்கு பாடலிபுத்திரத்தில் இருந்தார். மன்னர் அவரைச் சந்திக்கச் செல்லும்போது குருவின் கைகளைத் தொட்டு வணங்குவார். உடனே அந்த ‘பார்ப்பன பிக்கு’ தலைமுதல் பாதம் வரை தண்ணீரில் தேய்த்து குளிப்பது வழக்கம்” என்று குறிப்பிடுகிறார். கட்டுப்பாடு பாடலிபுரத்தில் இருந்தவரை புத்தமார்க்கம் கொள்கைக் கட்டுபாடுடனேயே இருந்தது. ஊடுருவிய பார்ப்பனர்களால் எந்த மாற்றமும் செய்ய முடியவில்லை வெளி நாட்டினர் ஏராளமாக வரத் தொடங்கி அவர்கள் புத்த மார்க்கத்தில் சேர்ந்து ஆஸ்ரமங்களைக் கைப்பற்றிய பிறகுதான் பார்ப்பனர்கள் புரோகித மந்திர தந்திரங்களை புத்த மார்க்கத்தின் தவிர்க்க முடியாத அம்சமாக மாற்றிவிட்டனர். பவுத்தப் பேரரசுகளின் அதிகாரம் குன்றி  வெளி நாட்டினர் இந்தியாவுக்கு வந்து அரசாட்சியைக் கைப்பற்றிய வுடன் பார்ப்பனர்கள் புத்தமதத்தை இரண்டாகப் பிளந்து புத்தரை கடவுளாக்கி யாக சடங்குகளைப் புகுத்தி விட்டனர் என்று ஹேவல், ஆர்.சி.தத் போன்ற வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

பார்ப்பனர்களின் தலைமையில் உருவானதுதான் ‘மகாயான பவுத்தம்’, அதன் வழியாக புத்தரும் காளி தேவியும் ஒன்றுதான் என்று பிரச்சாரம் செய்யத் தொடங்கி விட்டனர். புத்தமார்க்கம் இரண்டாகப் பிளவுபட்டது வைசாலி என்ற பகுதியில் தான்.

புத்தரின் மரணத்துக்கு 8 ஆண்டுகளுக்கு முன்பு அவரது உண்மையான சீடர்கள் சதவானி என்ற மலைக்குகை வாயிலில் முதல் பவுத்தப் பேரவையை கூட்டினார்கள். புத்தரின் அனைத்து கோட்பாடு களையும் முறையாக மூன்று பிரிவுகளாக தொகுத்து ஒழுங்குபடுத்தி, ‘திரிபீடகம்’ என்று அதற்கு பெயரிட்டார்கள். பீடகம் என்றால் பிரிவு என்று பொருள். இந்த ‘திரிபீடகம்’ எழுத்து வடிவில் தொகுக்கப்பட வில்லை என்பது முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியதாகும்.

அதற்குப் பிறகு 100 ஆண்டுகள் கழித்து தான் இரண்டாம் பவுத்தப் பேரவை வைசாலி யில் கூடியது. புத்தர் அப்போது உயிருடன் இல்லை. அப்போது புத்த துறவிகளுக்கான விதிமுறைகளை மாற்றுவது என முடிbடுத்து பத்து மாற்றங்களை ஊடுருவிய பார்ப்பனர்கள் செய்தார்கள். புத்தர் கூறிய சங்கத்துக்கான விதிமுறைகளை கட்டாயம் ஏற்க வேண்டிய அவசியமில்லை என்பதும், தங்கம், வெள்ளி போன்ற விலை மதிப்பு மிக்க பொருள்களை தானமாகப் பெறக் கூடாது என்ற விதியை மாற்றி தானமாகப் பெற்றுக் கொள்ளலாம் என்பதும் மாற்றப்பட்ட திருத்தங்களில் அடங்கும். 

தலைமை தாங்கிய புத்த துறவி ரேவதர், இந்த திருத்தங்கள் புத்தரின் கொள்கைகளுக்கு எதிரானது என்று ஏற்க மறுத்தார். ‘வஜ்ஜியத் துறவிகள்’ என்று அழைக்கப்பட்ட பார்ப்பனத் துறவிகள் பேரவையி லிருந்து வெளியேறி தனிப் பிரிவாக செயல்படத் தொடங்கினர். வைசாலியில் புத்த மார்க்கம் இரண்டாகப் பிளவுபட்டது. அடுத்த 400 ஆண்டுகளில் பவுத்தம் 108 பிரிவுகளாக சிதறியது என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இதில் 18 பவுத்தப் பிரிவுகள் பற்றிய குறிப்புகள் மட்டும் இருக்கின்றன. இதில் மகாயான பவுத்தப் பிரிவை கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் ஆந்திராவைச் சார்ந்த நாகார்ஜுனன் என்ற பார்ப்பனர் உருவாக்கினார். மகாயானப் பவுத்தப் பிரிவு தோன்றியதற்குப் பிறகு ஏனைய பவுத்தப் பிரிவினரை அது விழுங்கிக் காணாமல் போகச் செய்துவிட்டது. நாகார்ஜூனன் முன் வைத்த ‘மாயாவாதம்’ என்ற தத்துவம் புத்தரின் பொருளிய நாத்திகத்துக்கு முற்றிலும் எதிரானது என்கிறார் ஆய்வாளர் தேவி சட்டோபாத்யாயா.

“உலகத்தை கடவுள் படைத்தார்; அல்லது கடவுளால் உலகம் படைக்கப்படவில்லை” என்ற முரண்பாட்டு தர்க்கத்தை நாகார்ஜூனன் குழப்பி, நாத்திகம் பேசும் பாவனையோடு தெளிவற்ற நிலைக்குக் கொண்டு சென்று விடுவதை சட்டோபாத்யாயா சுட்டிக் காட்டுகிறார்.அவரது மொழியிலேயே  கூற வேண்டுமானால், “நாகார்ஜூனரைப் பொறுத்தவரை முரண்பாட்டு விதி என்பது கழைக் கூத்தாடியின்  வெற்று வித்தையைப் போன்றது. தனது மாயா ஜாலத்தின் மூலம் யாதொன்றையும் கணப்பொழு துக்கு நம் கண்களிலிருந்து மறைத்திடும் கழைக் கூத்தாடியைப்போல, புலனறிவுக்கு உட்படுகிற உண்மைகள் அனைத்தையும் நாகார்ஜூனன் சூன்யத்துக்குள் தள்ளி விடுகிறார். அவரின் இந்த மாயாவாதம் - தத்துவக் கண்ணோட்டத்தில் மிகவும் ஆபத்தானது” என்கிறார். புத்தரின் கருத்துகள் சிதைக்கப்பட்டது மட்டுமல்ல, புத்தமார்க்கமும் சிதைக்கப்பட்டது.

ஒடுக்கப்பட்ட மக்களின் புகலிடமாக புத்தர் காலத்தில் இருந்த புத்த மடங்கள் சொகுசு மடங் களாகி, புத்தரின்கோட்பாடுகள் அனைத்துக்கும் எதிரானதாக மாறிப் போனது என்கிறார் ஆய்வாளர் ரொமிலா தாப்பர். ஆதரவற்ற ஏழைகள் படும் துயரத்துக்கான காரணம் அவர்கள் முற்பிறவியில் செய்த தீமைகள் என்றும் நியாயப்படுத்தத் தொடங்கிவிட்டார்கள். பவுத்தத்தைப் பின்பற்றிய அசோகர் சமூகப் புரட்சியை முன்னெடுப்பதில் ஓரளவுதான் வெற்றி பெற்றார். பார்ப்பனர்களின் கொட்டங்கள் அசோகர் காலத்திலேயே தொடங்கி விட்டன. அவர்களை அசோகர் அடக்கத் தவறி விட்டார். அனைவரையும் அரவணைத்துப் போக வேண்டும் என்ற அவரது அன்பு உள்ளமே கொள்கைத் தோல்வியில் முடிந்தது என்கிறார் ஆய்வாளர் ரைஸ்டேவிட்ஸ். அசோகர் மறைந்த 40 ஆண்டுகளுக்குள் வரலாற்றின் பொற்காலம் என்று அம்பேத்கர் வர்ணிக்கும் மவுரிய ஆட்சியும் முடிவுக்கு வந்தது.

பவுத்த மதம் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும். வேதம் மீண்டும் அரியணையில் ஏற்றப்பட  வேண்டும் என்று முடிவெடுத்த பார்ப்பனர்கள், கடவுள் மறுப்புக் கொள்கையாளர்களின் சிந்தனைகள் நூல்களை எல்லாம் முற்றாக அழிக்கும் வேலைகளைத் தொடங்கினர். சட்டோத்யாயா வேதனையுடன் இவ்வாறு கூறுகிறார்: “கடவுளை மறுத்த லோகாயதவாதிகளின் உன்னதமான படைப் பிலக்கியங்களை மூலப் படிகளை மீட்கவே முடியாதவாறு அழிக்கப்பட்டுவிட்டன. துண்டு துண்டாக வெட்டப்பட்ட சில பகுதிகள் தான் கிடைக்கின்றன. அவைகள்கூட லோகயாதத்தை எதிர்த்தவர்கள் நூல்களிலிருந்துதான் கண்டறிய முடிகிறது” என்கிறார்.

மவுரிய வம்சத்துக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த புஷ்யமித்திர சுங்கன் என்ற சுங்க வம்சத்தைச் சார்ந்த பார்ப்பனன், அசோகர் நிறுவிய 84000 தூண்களை (புத்தர் பொன்மொழிகளைக் கொண்டவை) இடித்துத் தரைமட்டமாக்கினான். பார்ப்பனர்களும் களத்தில் இறங்கினார்கள். புத்த மடாலயங்களை தரைமட்டமாக்கி புத்த பிக்குகளையும் கொன்று ஒழித்தார்கள். இந்த கொடூரமான வரலாறுகள் மிகவும் விரிவானவை.

புத்த மதத்தில் ஊடுருவிய பார்ப்பனியம் அதை மெல்ல வலுவிலக்கச் செய்து கொண்டிருந்த சமூகச் சூழலில் கி.பி.8ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கேரள பார்ப்பனர் சங்கரர், பார்ப்பனியத்துக்கு புத்துயிரூட்ட ‘அத்வைதம்’ என்ற தத்துவத்தை முன் வைத்தார். பார்ப்பனியத்தை உறுதிப்படுத்தி ‘நான்கு வர்ண’ சமூகத்தை மேலும் வலிமைப்படுத்துவதே அதன் நோக்கமாக இருந்தது. உலகத்தை ‘மாயை’, ‘உண்மையற்றது’ என்று கூறிய சங்கரரின் அத்வைதம், ‘புத்த மார்க்கத்தை’ மட்டும் ‘மாயை’ என்ற பார்வையில் பார்க்காமல் அதை அழிக்கப்பட வேண்டிய அமைப்பாகப் பார்த்து அழித்து ஒழித்தது. சங்கரர் ஈவிரக்கமின்றி செயல்பட்டதை வரலாற்றாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.

புத்தரின் கொள்கைகளைப் பரப்ப, ‘புத்த மடாலயங்கள்’ ஏற்படுத்தியதை அப்படியே பின்பற்றிய சங்கரர், வடக்கே பத்ரிநாத், மேற்கே துவாரகை, கிழக்கே பூரி, தெற்கே சிருங்கேரி என்ற மடங்களை நிறுவினார். (காஞ்சிபுரம் சங்கர மடம், உண்மையில் சங்கரர் நிறுவியதுஅல்ல. சங்கரர் நிறுவியதாகக் கூறிக் கொண்ட மோசடி மடம்) ‘சூத்திரர்கள் வேதம் படிக்கவோ, யாகம் செய்யவோ உரிமையில்லை’ என்றார் சங்கரர். மக்கள் தொகையில் பெரும் பான்மையாக இருந்த ‘சூத்திரர்கள்’ கல்வி அறிவற்றவர்களாகவே முடங்கவேண்டும் என்ற ‘காருண்யமிக்க’வர்களாகவே சங்கரர்கள் இருந்தார்கள்.

புத்த மார்க்கத்தில் ஊடுருவி, அதன் கொள்கை களை சிதைத்த பார்ப்பனர்கள், கடைசியில் புத்தரை ‘விஷ்ணு’வின் 10 அவதாரங்களில் 9ஆவது அவதாரமாக அறிவித்து விட்டனர். கி.பி. 6ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு எழுதப்பட்ட மச்ச புராண சுலோகம் விவரிக்கும் பத்து அவதாரங்களில் “ராமோ ரமகோ கிருஸ்ணங்கா - ‘புத்தா’ கல்கி இதிகா க்ரம்திஹ்” - என்று எழுதி புத்தரையும் அவதாரமாக்கி விட்டது.

வரலாற்றில் பார்ப்பனக் கொடுங் கோன்மையை எதிர்த்தவர்கள் அழிக்கப்பட்டார்கள்; வீழ்த்தப் பட்டார்கள் இன்று வரை ‘உயிரோடு’ நிலைத்து நிற்பது பெரியார் மட்டும் தான்.

பெரியாரியத்தின் தூதுவர்களாக நாம் களத்தில் நிற்கிறோம்.           

Pin It