சகோதரர்களே!

சுயமரியாதையும், புத்தமதமும் என்ற விஷயத்தைப்பற்றி பேசும் இந்தக் கூட்டத்தில் நான் பேசவேண்டியிருக்கும் என்று இதற்கு முன் நினைக்கவேயில்லை. இன்று நான் ரயிலுக்குப் போக சற்று நேரமிருப்பதாலும், தங்கள் சங்க செக்கரட்டரி என்னை இங்கு அழைத்ததாலும், இவ்விடம் நடக்கும் உபன்யாசத்தைக் கேட்டுப் போக வந்தேன். இப்போது திடீரென்று என்னையே பேசும்படி கட்டளையிட்டு விட்டீர்கள். ஆனபோதிலும் தங்கள் கட்டளையை மறுக்காமல் சிறிது நேரம் சில வார்த்தைகள் சொல்லுகின்றேன். அவை தங்கள் அபிப்பிராயத்திற்கு ஒத்ததாக இல்லையே என்று யாரும் மனவருத்த மடையக்கூடாது என்று முதலில் தங்களைக் கேட்டுக்கொள்ளு கிறேன்.

buddha 272ஏனெனில் இன்று பேசும் விஷயத்திற்கு, ‘சுயமரியாதையும், புத்தமதமும்’ என்று பெயரிட்டு இருப்பதால் அதைப்பற்றி பேசுகையில் என் மனதில் உள்ளதைப் பேசவேண்டியிருக்கும். பச்சை உண்மையானது எப்போதும் மக்களுக்கு கலப்பு உண்மையைவிட அதிகமான அதிருப்தியைக் கொடுக்கக் கூடியதாகவே இருக்கும். உண்மையை மறைத்துப் பேசுவது என்பது எப்போதும் பேசுகின்றவனுக்கும், பேச்சுக் கேட்பவர்களுக்கும் திருப்தியைக் கொடுக்க கூடியதாகவே இருக்கும்; திருப்தி உண்டாகும்படியும் செய்து கொள்ளலாம். ஆனால் உண்மை பேசுவதன் மூலம் அப்படிச் செய்ய முடியாது என்பது எனக்குத் தெரியும். ஆனாலும் நான் என் கடமையைச் செய்கின்றேன் என்கின்ற முறையில் பேசுகின்றேன். பிறகு அது எப்படியோ ஆகட்டும்.

சகோதரர்களே ! சுயமரியாதையும், புத்தமதமும் என்பது பற்றிப் பேசுவதில் நான் முக்கியமாய்ச் சொல்லுவதென்னவென்றால் இன்ன மதந்தான் சுயமரியாதை இயக்கம் என்பதாக நான் ஒருக்காலமும் சொல்லமாட்டேன். அந்தப்படி என்னால் ஒப்புக்கொள்ளவும் முடியாது. இன்று காணப்படும் படியான எந்த மதமுமே கூடாது. அவை மனிதனுக்கு அவசியமும் இல்லை என்கின்ற கொள்கையையுடைய சுயமரியாதை இயக்கமானது எப்படித் தன்னை ஏதாவது ஒரு மதத்துடன் பிணைத்துக் கொள்ள சம்மதிக்க முடியும் என்பதை நீங்களே யோசித்து பாருங்கள்.

ஏனெனில் சுயமரியாதை இயக்கமானது ஒரு நாளும் யாரோ ஒருவர் சொன்னார் என்பதற்காக எதையும் ஒப்புக்கொள்ளக்கூடியதன்று. யார் சொன்னதாக இருந்தாலும் அது தன் பகுத்தறிவுக்கு பொறுத்தமாக இருக்கின்றதா? தனது அனுபவத்திற்கு ஒத்ததாக இருக்கின்றதா? என்பதைப் பார்த்துத் திருப்தியடைந்த பிறகே எதையும் ஒப்பு கொள்ளவேண்டும் என்கின்ற கொள்கையையுடையது. அது எந்த மனித னையும் அந்தப்படி பரீக்ஷித்த பிறகே எதையும் ஒப்புக் கொள்ளவேண்டும் என்கின்றது.

அன்றியும் அது அந்தக் கொள்கையோடு அதன் நிபந்தனைக்குட்பட்டு யார் எதை சொன்னாலும் அதை யோசிக்கத் தயாராக இருக்கின்றது. அப்படிக்கில்லாமல் எந்த மதமாவது, எந்த நபராவது தான் அனுசரிக்கும் கொள்கையும், தான் சொல்லுவதும் இன்ன காலத்தில் இன்னார் மூலமாக இன்னார் சொன்னது என்பதாகவும், அதற்கு விரோதமாக யாரும் எதையும் சொல்லக் கூடாது என்பதாகவும், அதை யாரும் பரீக்ஷிக்கவும் கூடாது, அதைப்பற்றி சந்தேகமும் படக்கூடாது என்பதாகவும் யாராவது சொல்ல வந்தால் அது எந்த மதமானாலும், அது எப்படிப்பட்ட உண்மையா னாலும் அதைச் சுயமரியாதை இயக்கம் ஒரு நாளும் ஒப்புக்கொள்ள முடியாது.

அன்றியும் கடவுள் சொன்னார், அவதாரக்காரர் சொன்னார், தூதர் சொன்னார் என்று சொல்லி ஒன்றைத் தங்கள் பகுத்தறிவுக்கு பொருத்திப் பார்க்காமல் ஒப்புக் கொண்டிருக்கின்றவர்கள் யெவரும் சுயமரியாதை இயக்கத்தில் ஈடுபட்டவர்கள் என்று சொல்லிக்கொள்ள சாத்தியப்படாது. அன்றியும் அவர்கள் தங்களைச் சுயமரியாதை உடையவர்களாக எண்ணிக் கொள்ளவுமாட்டார்கள்.

பழைய அபிப்பிராயங்கள் எல்லாம் அது ஏதுவானாலும் அடியோடு பரிசோதிக்கப்பட வேண்டும், பரிசோதிக்கச் சற்றும் பயப்படக்கூடாது. அப்படிப் பரிசோதிப்பதிலும் நடு நிலையிலிருந்தே பரிசோதிக்க வேண்டும். அந்தப்படி பரிசோதிக்கப் பின்வாங்குகின்றவன் யாராயிருந்தாலும் கோழையேயாவான்.

நமக்கு முன்னால் இருந்த மனிதர்களைவிட நாம் விஷேச அனுபவமும், ஞானமும் உடையவர்களென்று சொல்லிக் கொள்ளப் பாத்தியமுடைவர்கள் என்பதை ஞாபகத்தி லிருத்தாதவன் மனிதத்தன்மை யுடையவனாக மாட்டான். ஏனெனில் முன் காலம் என்பதைவிட முன் இருந்தவர்கள் என்பதைவிட இந்தக்காலம் என்பதும், இப்போது இருக்கிறவர்கள் என்பவர் களும் அறிவுக்கும், ஆராய்ச்சிக்கும் அதிகமான சுதந்தரமும், செளகரியமு முடையது, உடையவர்கள் என்பது ஒரு சிறு குழந்தையும் ஒப்புக்கொள்ளக் கூடியதாகும். அன்றியும் இந்தக் காலம் அனுபவத்தின்மேல் அனுபவம் என்கின்ற முறையில் புதிய புதிய தத்துவங்கள் வளர்ந்து வந்த காலமுமாகும். மேலும் இப்போதுள்ளவர்கள் பல வழிகளில் இயற்கையாகவே முற் போக்கும் அறிவு விளக்கமும், அனுபோகப் பயிற்சியும் பெற்று வருகிற சந்ததியில் பிறந்தவர்களுமாயிருக்கிறார்கள்.

ஆகவே இயற்கையாகவும் செயற்கையாகவும் முன்னோர்களைவிட நாம் எவ்விதத்திலும் அறிவிலோ, ஆராய்ச்சியிலோ, இளைத்தவர்கள் அல்ல என்பதையும் காலவேறுபாட்டிற்கும், கக்ஷி வேறுபாட்டிற்கும் தகுந்தபடி கருத்து வேறுபாடு அடையவேண்டிய உரிமையும் அவசியமுடையவர்கள் என்பதையும் நாம் நன்றாக உணரவேண்டும்.

இந்த நிலையில் இருந்துகொண்டு நாம் பார்த்தோமானால் முன்னோர் சொன்னவைகள் என்பவற்றிற்கு எவ்வளவு மரியாதை கொடுக்கலாம் என்பது தானாகவே விளங்கிவிடும். நிற்க,

மற்றொரு விஷயம் என்னவென்றால், முன்னோர்கள் சொன்னவைகள் என்பவற்றிற்கு நம் கருத்துக்கள் ஒத்து இருக்கின்றனவா என்று பார்த்துப் பிறகு தான் நம் கருத்துக்களை உறுதிப்படுத்த வேண்டுமென்கின்றதான மனப்பான்மையையும் அடியோடு எடுத்தெறிய வேண்டும். ஏனெனில் முன்னோர் கருத்து என்பதற்காக நாம் எதற்கும் அடிமையாய் விடக்கூடாது என்பதற்காகத்தான் அப்படிச் சொல்லுகின்றேன். முன்னோர் கருத்துக்கு அடிமையாய்க் கொண்டுவந்தோமேயானால் உண்மையையும், அறிவு வளர்ச்சியையும் நாம் அடியோடு கொன்று விட்டவர்களாவோம். ஆதலால் புத்த மதம் தான் சுயமரியாதை இயக்கமென்று யாரும் சொல்லக் கூடாது என்று சொல்லுகிறேன்.

ஏனென்றால் உதாரணமாக, புத்த மதத்திற்குக் கடவுள் இல்லை, ஆத்மா இல்லை, நித்யமொன்றுமில்லை என்கின்ற கொள்கை இருக்கின்றது என்று சொல்லுகின்றார்கள். இது புத்தரால் சொல்லப்பட்டது என்றும் சொல்லுகின்றார்கள். இதை உண்மை என்றே வைத்துக் கொள்ளுவோம். இந்தக் கொள்கைகள் புத்தர் சொன்னார் என்பதற்காகத் தங்கள் புத்திக்குப் பட்டாலும் படாவிட்டாலும் பெளத்தர்கள் என்கின்றவர்கள் ஒப்புக்கொள்ள வேண்டியவர்களாகின்றார்கள்.

இப்படியேதான் மற்ற மதக்காரர்களும் இந்துக்களோ, மகமதியர்களோ, கிறிஸ்தவர்களோ கடவுள் உண்டு ஆத்மா உண்டு நித்தியப் பொருள் உண்டு மனிதன் இறந்தபிறகு கடவுளால் விசாரிக்கப்பட்டு அதன் செய்கைக்குத் தகுந்தபடி மோக்ஷம், நரகம், சன்மானம், தண்டனை ஆகியவைகள் கடவுளால் கொடுக்கப்படுவது உண்டு என்பனபோன்ற பல விஷயங்களை நம்பிக்கொண்டிருக்கிறார்கள்.

இந்த நம்பிக்கைகளுக்குக் காரணம் தங்களுக்கு முன்னேயே யாரோ ஒருவர் சொன்னதாக ஏதோ ஒன்றில் இருப்பதைப் பார்த்து நம்பிக்கொண்டு இருக்கின்றார்கள். இவை உண்மை என்றே வைத்துக் கொள்ளுவோம். இந்த இரண்டு கூட்டத்தார்களும் தங்கள் தங்கள் அபிப்பிராயங்களை தங்கள் தங்கள் பகுத்தறிவு, ஆராய்ச்சி, யுக்தி, அனுபவம் ஆகியவைகள் காரணமாகக் கொண்டிருக்கின்றார்கள் என்று ஏற்படுவதானால் இருதிரத்தாரும் சுயமரியாதை இயக்கக்காரர்களே யாவார்கள்.

ஏனெனில் கண்மூடித்தனமாய் முன்னோர் வாக்கு என்பதாக அல்லாமல் தங்கள் தங்கள் அறிவு, ஆராய்ச்சியின் பயனாய் ஏற்பட்ட அபிப்பிராயம் என்று சொல்லுகின்றவர்களாய் இருக்கின்றார்கள். ஆதலால் அவர்கள் சுயமரியாதைக்காரர்கள் ஆகின்றார்கள்.

உதாரணமாக புத்த மதஸ்தன் என்று சொல்லிக்கொள்ளுகின்ற ஒருவன் தனக்குக் கடவுள் இல்லை என்றும், ஆத்மா இல்லை என்றும், வாயால் சொல்லிக்கொண்டு காரணா காரியங்களுக்கு ஆதாரம் என்ன என்பதை அறியாமல் சந்தேகப்பட்டுக் கொண்டு இருப்பானானால் அவன் தன்னை புத்தமதஸ்தன் என்று சொல்லிக் கொள்ளமுடியவே முடியாது.

அதுபோலவே ஒரு இந்துவோ, இஸ்லாமானவரோ, கிறிஸ்தவரோ கடவுள் உண்டு என்கின்ற மதக்காரராக இருந்து கொண்டு நடப்பில் தங்கள் காரியங்களுக்கும், அதன் பயனுக்கும் தங்களைப் பொறுப்பாக்கிக்கொண்டு தங்கள் காரியங்களுக்குப் பின்னால் பயன் உண்டு என்கின்ற கொள்கையையும் நம்பிக்கொண்டு அதற்குச் சிறிதும் கட்டுப்படாமல் நடந்து கொண்டும் இருக்கின்ற ஒருவன் தன்னை கடவுள் நம்பிக்கைக்காரன் என்றும் தனது ஆத்மா தண்டனையையும் சன்மானத்தையும் அடையக்கூடியது என்றும் நம்பிக்கொண்டிருக்கின்றவர்களாக மாட்டார்கள். ஆதலால் இந்த இரண்டு கூட்டத்தார்களும் சுயமரியாதைக்காரர்கள் அல்ல என்றும்தான் சொல்லுவேன்.

ஏனெனில் அவர்களுடைய அறிவுக்கும், அனுபவத்திற்கும் விரோதமான நம்பிக்கையை உடையவர்களாக இருக்கின்றார்கள். ஆதலால், இவ்விரு கூட்டத்தாரிலும் சுயமரியாதைக்காரர்கள் என்பவர்கள் தங்களுக்குத் தோன்றியவை களும், தாங்கள் கண்ட உண்மைகளும் முன்னோர் கூற்றுக்கு ஒத்திருந்தால் மாத்திரம் முன்னோர் கூற்றம் ஆதரவாக எடுத்துக் கொள்ள பாத்தியமுடையவர் களாவார்கள். அப்படிக்கில்லாமல் முன்னோர் கூற்றுக்குத் தான்கூட உண்மையை பொருத்து கின்றவர்களும் அல்லது அதற்கு ஆதரவாகத் தங்களது உண்மை இருக்கின்றது என்று கருதுகின்றவர்களும் சுயமரியாதைக்காரராகமாட்டார்கள்.

ஆகையால் நீங்கள் எப்படிப்பட்ட கொள்கையை உடையவர்களாக இருந்தாலும் அதில் எவ்வளவு உண்மை இருப்பதாகயிருந்தாலும் அதை நீங்கள் பிரத்தியக்ஷத்தில் தெளிவுபடுத்திக்கொண்டீர்களா? அனுபவத்தில் சரிப்பட்டு வருகின்றதா? என்பதைப் பூரணமாய் அறிந்துகொண்டவர்கள் என்பதைப் பொருத்தும், அவை உங்களுடைய சொந்த அபிப்பிராயத்தின் மீது நம்புகின்றீர்களா? அல்லது அந்தந்த கொள்கையையுடைய மதத் தலைவர்கள் சொன்னதற்காக நம்பிக்கொண்டிருக்கிறீர்களா? என்பதைப் பொருத்துமேதான் உங்கள் மதத்திற்கோ, கொள்கைக்கோ மதிப்பு கிடைக்கும் அப்படியில்லாமல் ஒருவன் தன்னை இந்து என்றோ, கிறிஸ்துவர் என்றோ, மகமதியர் என்றோ, பெளத்தர் என்றோ சொல்லிக்கொள்ளுகின்றவர் ஒரு நாளும் சுயமரியாதைக் காரராகமாட்டார்.

ஏனெனில் ஒரு குறிப்பிட்ட மதத்துக்காக ஒரு கொள்கையை ஏற்றுக் கொண்டிருக்கிறார் என்பதோடு அது தன்னுடைய நடைமுறைக்கு பிரத்தியக்ஷ அனுபவத்திற்கு ஒத்துவராதிருந்தும் அக்கொள்கைக்காரன் காரணாகாரியங்கள் அறியமுடியாமல் இருந்தும் அவற்றையுடைய ஒரு மதத்தின் பெயரைச் சொல்லிக் கொண்டிருப்பது என்பது சிறிதும் ஒப்புக் கொள்ள முடியாததாகும்.

(குறிப்பு : சென்னை மவுண்ட்ரோட்டிலுள்ள தென்னிந்திய புத்தமத சங்கத்தில் 22.03.1931 அன்று ஆற்றிய உரை. - குடி அரசு - சொற்பொழிவு - 29.03.1931)

Pin It