தொழில் அமைப்புகள் கூடங்குளம் அணு உலையை உடனடியாக திறக்க வேண்டும்

என அறிவித்துள்ள போராட்டத்தை மறு பரிசீலனை செய்து

அப்போராட்டம் கைவிடப்படவேண்டுமென மன்றாடி

கூடங்குளம் பெண்கள் கோவையில் உண்ணா நிலைப் போராட்டம்

நாள்: 15.12.2011. காலை 9மணி முதல் 5மணி வரை,

காந்திபுரம் தமிழ் நாடு ஹோட்டல் அருகில்

 

பல்வேறு அரசியல் கட்சிகள், தமிழ்த் தேசிய இயக்கங்கள், தலித் உரிமை அமைப்புகள், சூழலியல் ஆர்வலர்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகளைச் சார்ந்த அணு உலை எதிர்ப்பு கூட்டமைப்பினர் கோவையிலிருந்து கூடங்குளம்வரை மோட்டார் வாகனப் பரப்புரை செய்து போராடும் மக்களுக்கு நேரடி ஆதரவு தெரிவித்துவிட்டு திரும்பியுள்ளனர்.

போராடும் மக்களுக்கு ஆதரவு தெரிவிக்க கூட்டமைப்பினர் கூடங்குளம் சென்றிருந்த நேரத்தில் கோவையில் உள்ள தொழில் அமைப்புகள் மின்பற்றாக்குறையைத் தீர்க்க கூடங்குளம் அணு உலையை உடனே திறக்கவேண்டும் என அரசை வலியுறுத்தி அறிவித்துள்ளப் போராட்டச் செய்தியைக் கேட்டு கூடங்குளம்  அணு உலையைச் சுற்றியுள்ள மக்கள் தங்கள் அதிர்ச்சியையும் ஆழ்ந்த வருத்தத்தையும் தெரிவித்துள்ளனர்.

மின்சாரம் தேவை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அணு உலைகளை நிறுவுவதற்காக கைகொள்ளப்படவேண்டிய தேச, சர்வதேச அணுசக்திக் கட்டுப்பாட்டு நிறுவனங்களால் முன்வைக்கப்பட்டுள்ள அறிவியல் மற்றும் சட்ட மரபுகளை முழுமையாகப் புறந்தள்ளிவிட்டு அமைக்கப்பட்டிருக்கும் அணு உலைகளால் எவ்வாறு பாதுகாப்பாக இயங்க முடியும் என்பதை கோவை தொழில் அமைப்புகள் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும் என்ற வேண்டுகோளை அவர்கள் விடுத்துள்ளார்கள். ஜப்பானின் புக்குஷிமா அணு உலை விபத்திற்குப் பிறகு பிரச்சினையை சமாளிக்க முதல் வாரத்தில் செலவிடப்பட்ட தொகை தமிழ்நாட்டின் தற்போதைய ஐந்தாண்டுகளுக்கான பட்ஜெட் தொகை என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும். விபத்து ஏற்பட்டால் அதனால் ஏற்படப்போகும் தொழில் துறை பின்னடைவுகளில் தொழில்துறைகளுக்கான கூடுதல் வரி என்பது உலகளவில் நடந்துள்ள அனைத்து அணு உலை விபத்துகளும் நமக்கு உணர்த்தும் செய்தியாகும்.

மின்சாரம் வேண்டும் என்பதற்காக, அணு சக்தித் துறை அதிகாரிகளின் அசிரத்தை நடவடிக்கைகளால் தவறான இடத்தில் கட்டப்பட்டுவிட்ட இந்த அணு உலைகளின் பாதுகாப்பை முழுமையாக உறுதிப்படுத்தும் சீரிய ஆய்வுகள் இன்று அவசியமாகிறது. அவ்வாய்வுகளின்றி அவற்றை உடனடியாகத் திறக்கச் சொல்வதென்பது எதிர்காலத்தில் நம்மால் அனைத்து விதங்களிலும் சமாளிக்க முடியாத பிரச்சினையாக அது மாறிவிடுவதற்கான வாய்ப்புகள் இருப்பதை கோவைத் தொழில்துறையினர் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். அதுமட்டுமின்றி மக்களின் உயிரையும் வாழ்வாதாரத்தையும் தலைமுறை தலைமுறையாய் அழிக்கும் அணு உலையை, பிற மாநிலங்கள் வேண்டாம் என் புறக்கணித்த அணு உலையை அபாயகரமான பகுதியான கூடங்குளத்தில் தொடங்குவது தென் தமிழகத்திற்கே ஆபத்தானதாகும்.

மின்பற்றாக்குறையைப் போக்க தமிழகத்தில் தற்போதுள்ள மின் உற்பத்தியே தமிழகத்தின் அடிப்படைத் தொழில்/விவசாயத் தேவைகளுக்கு போதுமானது. மேலும், அதிக மின்தேவைகளுக்கு பாதுகாப்பான மாற்று வழிமுறைகளை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும். இவ்வாறிருக்க, குறிப்பாக கூடங்குளம் இடிந்தகரை மற்றும் சுற்றியுள்ள லட்சக் கணக்கான மக்களின் வாழ்வையும் வாழ்வாதாரத்தையும் தலைமுறை தலைமுறையாக அழிக்ககூடியது அங்கு நிறுவப்படவுள்ள அணு உலையும் அதன் அமைவிடமும் என்பதை விளக்குவதற்கும் இக் காரணத்தினால் கோவைத் தொழில் அமைப்பினர் தம் போராட்டத்தினை மறுபரிசீலனை செய்து அப்போராட்டத்தைக் கைவிட வேண்டும் என மன்றாடியும் அப்பகுதிகளிலிருந்து 500க்கும் மேற்பட்ட பெண்கள் ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொள்ள கோவை வருகின்றனர்.

மேற்படி நடக்கவிருக்கும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு கோவையைச் சேர்ந்த 64 மக்கள் நல அமைப்புகள் தங்கள் ஆதரவை தெரிவித்து உண்ணா விரதப் போராட்டத்தில் பங்குபெற இசைவு தெரிவித்துள்ளன.

உண்ணாவிரதப் போராட்ட்த்திற்கு அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் சுப. உதயகுமார் அவர்கள் தலைமை தாங்குவார்.

உண்ணாவிரத்த்தை இயற்கை வேளாண் விஞ்ஞானி திரு கோ. நம்மாழ்வார் அவர்கள் தொடங்கிவைத்து உரையாற்றுவார்.  பேரூர் ஆதீனம் இளையப்பட்டம் தவத்திரு மருதாசல அடிகளார் உண்ணா நிலைப் போராட்டத்தை முடித்து வைத்து நிறைவுறையாற்றுவார்.

வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் த.வெள்ளையன், ம.தி.மு.க பாராளுமன்ற உறுப்பினர் கணேச மூர்த்தி, கொங்கு இளைஞர் பேரவை குமார. இரவிக்குமார், தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் கோவை சையத், , விவசாய சஙகத் தலைவர் நல்லுசாமி, ஆதித் தமிழர் பேரவையின் நிறுவனர் அதியமான், சோசலிஸ்ட் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் மாவட்ட்த் தலைவர் அபுதாஹீர், போரட்டக்குழுவின் வல்லுனர்களில் முகாமையானவரான டாக்டர் ரமேஷ் ஆகியோர் சிறப்புரையாற்ற உள்ளனர்.

இவர்களைத் தவிர பல்வேறு அரசியல் இயக்கத் தலைவர்கள், சமூக இயக்கத் தலைவர்கள், தொழில் முனைவோர், அறிஞர்கள், படைப்பாளிகள், சுற்றுச் சூழல் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் பலரும் கலந்துகொண்டு கருத்துரை மற்றும் வாழ்த்துரை வழங்க இருக்கின்றனர்.

கூடங்குளத்திலிருந்து வருகைத் தரும் போராடும் பெண்கள் மற்றும் குழந்தைகள் இப்போராட்டத்தின் தேவை பற்றியும், கூடங்குளம் அணு உலை எப்படி தமிழகத்தின் மின் பற்றாகுறைக்கு தீர்வாகாது என்றும் போராட்டத்திலிருந்து தாம் பெற்ற அனுபவங்களைப் பற்றியும் உரையாகவும், முழக்கங்களாகவும், பாடல்களாகவும் வழங்கவுள்ளனர்.

இப்போராட்டத்தில் தாங்களும் தாங்கள் சார்ந்த அமைப்புத் தோழர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்

இப்போராட்டத்திற்கு பொது மக்களும் திரளாக கலந்துகொண்டு ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

அணு உலை எதிர்ப்புக் கூட்டமைப்பு, கோவை

15, சரசுவதி குடியிருப்பு, 3வது தெரு, கணபதி புதூர் 3வது தெரு, கோவை: 641006

மின்னஞ்சல்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.;

வலைத்தளம்: http://antinukekovai.blogspot.com

ஒருங்கிணைப்பாளர்கள்: கு.இராமகிருட்டிணன் (9443822256);

பொன்.சந்திரன். (9443039630)

Pin It