1

தமிழகத்தின் கி.பி.250 முதல் கி.பி.600 வரையிலான நூற்றாண்டுகளை களப்பிரர்களின் காலம் என்றும், இருண்ட காலம் என்றும் பெருவாரியான 'செல்வாக்கு மிகுந்த' வரலாற்று ஆய்வாளர்கள் சொல்லி வந்திருக்கிறார்கள்.

நீலகண்ட சாஸ்திரியார், சதாசிவ பண்டாரத்தார், ஔவை துரைசாமிப்பிள்ளை என பலரும் அவர்களை கொடியவர்கள் என்றும் சூறையாடியவர்கள் என்றும் சாடி உள்ளனர். கே.கே. பிள்ளை தமிழ்நாட்டு பாடநூல் கழகம் வெளியிட்ட தனது 'தமிழக வரலாறு: மக்களும் பண்பாடும்' எனும் நூலில் "தமிழகத்தில் இவர்களால் ஏற்பட்ட குழப்பமும் இழப்பும் அளவிறந்தன. இவர்கள் கொடுங்கோலர்கள், கலியரசர்கள்" என கொட்டித் தீர்க்கிறார்.

போதுமான, நம்பகமான தரவுகள் ஏதுமற்ற பின்சங்க காலத்தில், இலக்கியங்களைத் தவிர்த்துப் பா்த்தால் பற்றிக்கொள்ள எந்த ஆதரவும் இல்லாததாலேயே இருண்டகாலம் எனும் இத்தகு சொல்லாடலானது தொடர்ந்து இருந்து வருகிறது.

வேள்விக்குடி செப்பேடு பதிப்பிக்கப்பட்ட பின்பும் கூட அது குறித்து எதிர்மறையாக பொருள் கொள்ளப்பட்டதே அன்றி சரியான அர்த்தத்தில் அது வெளிக்கொணரப் படவில்லை.

இருண்டகாலம், இருண்ட குலம், சூரையாடும் கூட்டம் என பலவாறாக கருத்து சொல்லப்பட்ட அந்தக் காலத்தைக் குறித்துதான் 1975 ம் ஆண்டு, பெரும் வரலாற்று ஆய்வாளரான மயிலை சீனி வேங்கடசாமி அவர்கள் 'களப்பிரர் ஆட்சியில் தமிழகம்' எனும்  பெருமைமிகுந்த நூலை எழுதினார். அவர் தனது நூலின் முன்னுரையில் "களப்பிரரின் இருண்டகாலம் இந்நூலினால் 'விடியற்காலம்' ஆகிறது" என பொருள்படச் சொன்னார்.

கிடைத்த சொர்ப்ப வரலாற்றுத் தகவல்களையும் பதினெண் கீழ்கணக்கு நூல்களையும் மிகுந்த கவனத்தோடு ஆய்வு செய்து கூர்மையான சில மதிப்பீடுகளை அவர் முன்வைக்கிறார். அவையாவன..

  1. களப்பிரர்கள் தமிழர் அல்லர்.
  2. அவர்கள் திராவிட இனத்தவரே குறிப்பாக கன்னடர்.

3.இவர்களது காலத்தில் சமணமும் பௌத்தமும் தழைத்தோங்கி வளர்ந்தன.சைவம் உள்ளிட்ட  சிலமதங்கள் ஔிமங்கியே காணப்பட்டன.

  1. களப்பிரரின் படையெடுப்பு, வெற்றிக்கு காரணம் சமூக தேக்கநிலை, பேரரசு அற்ற நிலை. எனக் குறிப்பிட்டுச் சொல்கிறார்.

மேற்படி அறிஞரின் நூல் வெளிவந்த(1975) பிற்பாடு குறிப்பட்ட இந்தக் காலம் குறித்து பல ஆய்வாளர்களும் கூடுதல் கவனம் செலுத்த ஆரம்பித்தனர். பல முனைவர் பட்ட ஆய்வுகளும் இந்த காலம் குறித்து தயாரிக்கப்பட்டன.

இந்த நூல் வெளிவந்த பின்னால் அவர்கூறிய 'விடியற்காலம்' என்பதற்கு  பின்னால் உள்ள சில துணிபுகளும், ஐயங்களும் பல ஆய்வாளர்களின் கவனத்தை ஈர்த்தது. இத்தகு கவனத்தின் ஒருபகுதியாக அந்தக் காலத்தை ஒரு 'பொற்காலம்' எனும் அளவுக்கு சில ஆய்வுகள் உயர்த்திக் கொண்டு போயின. வேள்விக்குடி செப்பேட்டை மையமாகவைத்து  கருத்து சொல்லவந்த பலரும், களப்பிரர்கள் ஏதோ சமண, பௌத்த மதங்களை வரித்துக்கொண்டவர்கள்  என்பதுபோலவும், திட்டமிட்டு அவர்கள் பிராமணர்களையும், அவர்கள் அனுபவித்துவந்த தேவதானங்களையும் ஒடுக்கினார்கள் என்பதுபோலவும் எண்ணி அவர்கள் சாதிய படிநிலைகளுக்கு பெருத்த அடி கொடுத்தார்கள் என்று உணர்ச்சி பூர்வமாக முடிவு செய்தனர். "காலம் பறையர் என்பதே களப்பிரர்கள் என மருவியது ஆகவே நாங்களும் ஆண்ட பரம்பரையினர்தான்" சில அறிவுஜீவிகள்  கொண்டாடுவதும், ஆளாளுக்கு நாங்களே களப்பிரர் என உரிமை கோருவதாகவுமே இங்கே வரலாற்று ஆய்வுகள் முன்வைக்கப் படுகின்றன.

உண்மையில் களப்பிரர்கள் சைவம் உள்ளிட்ட பிற மதங்களை வதைத்தவர்கள் என்றோ, அவர்களின் சடங்கு முறைகளை தடைசெய்தனர் என்றோ மயிலை சீனி வேங்கடசாமியாகட்டும், பர்ட்டன் ஸ்டெய்னாகட்டும் யாருமே குறிப்பிடவில்லை.

"களப்பிரர், வேள்விக்குடி தானத்தை இறக்கினார்கள் என்றுசெப்பேடு கூறுவது உண்மைதான். ஆனால், அதன்காரணம் பார்ப்பனர் மாட்டுப் பகையன்று. அதற்கு வேறுஏதோ காரணம் இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. களப்பிரர் பிராமணர்க்குப் பகைவர் அல்லர். அவர்கள் பிராமணர்களுக்கு தானம் கொடுத்ததை 'அகலிடமும் அமலரும்' எனத் தொடங்கும் பாடல்  சுட்டுகிறது" எனக் குறிப்பிடுகிறார் வேங்கடசாமி. அவரின் ஆய்வுகளுக்கு  பிறகு கண்டு பிடிக்கப்பட்ட பூலாங்குறிச்சி கல்வெட்டுகளும் களப்பிரர்கள் பிராமணர்களுக்கு நிலக்கொடை அளித்து ஆதரித்து உள்ளதை குறிப்பிடுகிறது.

இதேபோல், களப்பிரரின் ஆட்சி வீழ்ந்தது குறித்தும் கூட ஆய்வாளர்களிடம் இருந்து பல்வேறு முரண்பட்ட கருத்துக்கள் வெளியிடப்பட்டன. அவர்களுக்கு 'நாட்டில் அரசியல் ஆதரவு இல்லை' என வேங்கடசாமி கூற, 'புதிய நிலப்பிரபுகளின் எழுச்சி' அவர்களை பலகீனப்படுத்தியதாக பேரா. சிவதம்பி எழுதுகிறார். பர்ட்டன் ஸ்டெய்னோ 'பிரதான உற்பத்தி சக்தியான விவசாய அமைப்புமுறையோடு அவர்கள் ஒன்று கலக்காமல் போனதே அவர்களின் விழ்ச்சிக்கு காரணம்' என குறிப்பிடுகிறார். அறிஞர் போ.வேல்சாமியும் கூட மேற்படி ஸ்டெய்னின் கருத்தை தனது பொற்காலங்களும், இருண்டகாலங்களும் கட்டுரையில் வழியுறுத்துகிறார்.

தொகுப்பாக, களப்பரரின் காலம் இருண்டகாலம் என மொழியப்பட்டதற்கான காரணம், அவர்களின்  வரலாற்றுத் தடயங்கள் பிற்காலத்தில் வந்தவர்களால் துடைத்து அழிக்கப்பட்டதற்கான காரணம், சமண பௌத்த செல்வாக்குகளே அன்றி களப்பிரர்களின் சாதி சமத்துவத்துக்கான செயல்பாடுகள் இல்லை. குறிப்பாக சொல்வதானால் இதில் அவர்கள் வெறும் பார்வையாளர்கள் மட்டுமே. நிலைமை இவ்வாறு இருக்க களப்பிரர்களை சாதி சமத்துவப் போராளிகள் என்பதும், பார்ப்பனர்களின் எதிரிகள் என்பதும் வரலாற்றை திரிக்கும் மோசமான முன்னுதாரணங்களாகும்.

                     2

நமது இந்தப் புரிதலில் இருந்தே இந்த மேற்கண்ட நூலை நாம் அனுகுகிறோம். சங்கம் மருவிய காலத்தில் இருந்து  தொடங்குகின்ற முனைவர் ஆலால சுந்தரத்தின் இந்த ஆய்வானது,  சங்ககால மற்றும் பதினெண்கீழ்கணக்கு  நூல்களிலும், பிற்பாடான பக்தி பணுவல்களிலும்  ஆழமாக வேர்பரப்பி, ஒரு பெரும் விருட்சமாக நம் கண்முன்னே நிற்கிறது. அதேசமயம் கிடைக்கின்ற ஒருசில தொல்லியல் தகவல்களையும் பண்டைய  இலக்கியங்களின் ஔியில் அலசி சரியான வரலாற்றை கட்டமைக்க முயலுகிறது.

பொதுவாக தரவுகளை உள்வாங்கி ஊகித்து வலாற்றைச் சொல்வது என்பது ஒருவகை. இலக்கியங்களையும் தொல்லியல் தரவுகளையும் திரட்டி ஒருமாலைபோல் நமக்கு வரலாற்றை உய்த்தறிய பின்னித்தருவது இரண்டாவது வகை. இரண்டாவது வகையை நூல் கையாளுகிறது. இதில் ஆய்வாளரின் உழைப்பு நம்மை நெகிழ்வுகொள்ளச் செய்கிறது.

சங்ககால சமூகத்துக்கும், பின் சங்ககாலத்துக்கும் இடையில் இருந்த உறவையும், முரண்பாடுகளையும் நுணுக்கமாகச் சொல்லும் இந்த ஆய்வு,  சுவாரஸ்யமான சில தகவல்களை நமக்குத் தருகிறது. அரசனையும், வீரத்தையும் புகழ்ந்துபேசிய சங்ககால இலக்கியங்களுக்கு மாற்றாக அற நெறிகளையும், அரசனது கடமைகளை வழியுறுத்துவதையும் ஒப்பிட்டு இத்தகு வேறுபாடுகளின் காரணங்குறித்து ஆழமாக நூல் பேசுகிறது. பின்சங்க காலத்து  இலக்கியங்களின் முக்கியக் கூறாக மத சகிப்புத்தன்மையை எடுத்துக்காட்டுகிறது.

ஒருபுறம் சமண, பௌத்தத்தின் முன்னணி பாத்திரங்களை விவரிக்கும் நூல், மறுபுறம் பார்பனர்களின் செல்வாக்கையும், வணிகர்களின் அபரிமிதமான வளர்ச்சியையும் (கிரீடம் தவிர மன்னனுக்கு உரித்தான  அனைத்தையும் வைத்துக்ககொள்ள வணிகனுக்கு அதிகாரம் இருந்தது. படை உட்பட..) குறிப்பிடுகிறார். அதேபோல் வேளாளர்களில் தோன்றிய 'உழுவித்துண்போர்' எனப்படும் புதிய வர்க்கப் பிரிவையும் விளக்குகிறார்.  குறிப்பாக தமிழகத்தில் வருணாசிரம முறை நீடிக்கவில்லை என்பதை தகுந்த ஆதாரங்களோடு சுட்டிக்காட்டுகிறார். ஒவ்வொரு சாதிகளுக்குமான பணிகளை வேறுபடுத்தி அவற்றின் மூலம் அவைகளின் சமூக அந்தஸ்தை நுணுக்கமாக ஆராய்கிறார்.

நிலக் கொடைகள் இருந்ததையும், நிலத்தில் தனியுடைமை இருந்ததையும் சுட்டிக்காட்டும் நூலானது நிலம் தொடர்பான எந்த முடிவுகளிலும் அரசனே இறுதியானவன் என்பதையும் சுட்டிக்காட்டுகிறது.

பிற்காலத்தில் சைவத்தின் எழுச்சியை கூடுதலான வார்த்தைகளில் சொல்லும் ஆய்வு, சைவத்தில் தொடக்ககாலங்களில் மேலோங்கியிருந்த சாதி சமத்துவ கருத்துகளையும் சுட்டிக்காட்டுகிறது. ஆதி சைவர்களான  சம்பந்தர் மற்றும் திருநாவுக்கரசர் ஆகியோரைப்பற்றி குறிப்பிடும்போது, இருவரும் "பெருமளவிலான பிராமணர்களல்லாத தமிழ் மக்களின் துணையின்றி சமண பௌத்தக் கட்டுக்களை களையமுடியாது" என்கின்றனர் என்றும், சைவ நாயன்மார்களில் 63 பேர்களில் 16 பேர் அந்தனர், 6 பேர் வணிகர், 13 பேர் வேளாளர்கள், 10 பேர் தாழ்ந்த சாதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கிறது. ஆனால்  சைவர்களின் நோக்கம் நிறைவடைந்தவுடன் (சமண, பௌத்த மதங்களின் செல்வாக்கு ஒழிக்கப்பட்டவுடன்) அது தமது சாதி சமத்துவ கருத்தை கைவிட்டது என சரியாகவே குறிப்பிடுகிறது.

பல்லவர்கள் கி.பி.250 வாக்கில் காஞ்சியை கைப்பற்றியதாக குறிப்பிடும் நூல், பல்லவர்களுக்கும் களப்பிரர்களுக்கும் இடையிலான உறவு குறித்தோ, இருவர் பிரதேசங்களின் எல்லைகள் குறித்தோ எதையும் சொல்லாமல் விடுவது என்பது பல்வேறு சந்தேகங்களுக்கு இடமளிக்கிறது. மேலும் சைவ, வைணவ பிரிவுகளின் உருவாக்கம் குறித்தும், முரண்பாடுகளுக்கான அடிப்படை அம்சங்கள் குறித்தும் கூடுதலாக சொல்லியிருக்க வேண்டும். என்றாலும் கிடைக்கின்ற சொற்ப தரவுகளை வைத்துக்கொண்டு இதையெல்லாம் துள்ளியமாக எதிர்பார்ப்பது பேராசைதான்.

என்றாலும் நிச்சயம்  பலவகையிலும் நமது புரிதலை செழுமை படுத்திக் கொள்வதற்கான முக்கியமான நூல் இது என்பதில் யாதொரு சந்தேகமும் இல்லை.

முனைவர். இர. ஆலால சுந்தரத்தின் முனைவர் பட்ட ஆய்வேடு இது. 1990ல் தனது முனைவர் பட்ட ஆய்வேட்டை சமர்ப்பித்த அவர் 1995 ம் ஆண்டில் தனது ஆங்கில முதல் பதிப்பை (Tamil social life,c.250to 700 AD) வெளியிட்டார். இந்த நூல் சமீபத்தில்தான் (2016 ல்தான்) முதல் முறையாக தமிழில் வெளிவந்துள்ளது.

பண்டைய தமிழக வரலாற்றில் ஆர்வம் கொண்டிருக்கும் பலரும் நிச்சயம் வாசிக்க வேண்டிய முக்கியமான நூல் இது என்றால் அது மிகையில்லை.‌‌

- பாவெல் இன்பன், தருமபுரி

Pin It