ஜப்பாவிலிருந்து ஆக்ரிக்கு நாங்கள் புறப்படத் துவங்கும் நிலையில் எங்கள் புறப்பாடு ஏதும் துயர் கொண்டதாயில்லை. விழாக்காலங்களில் மற்றவர்கள் எவ்வாறு அயல் ஊருக்கு ஒவ்வொரு ஆண்டும் செல்வரோ, அவ்வாறே நாங்களும் செல்ல நினைத்தோம். ஆக்ரியிலும் எமது நாட்கள் நன்கு கழிந்தன. எவ்விதச் சம்பவங்களுமின்றி. எனக்கு இந்நாட்கள் பிரியமானவை. ஏனெனில் நான் அந்நாட்களில் பள்ளி செல்ல வேண்டியிருந்ததில்லை. சூழல் எதுவாயினும், ஆக்ரியில் அன்றிரவு நிகழ்ந்த பெருந்தாக்குதலைத் தொடர்ந்து பின் நிகழ்ந்தவைகள் வேறொன்றை உணர்த்தின. அவ்விரவு கசப்பாக, கொடூரமாகக் கழிந்தது; ஆண்கள் சோர்வுற, பெண்கள் ஆழ்ந்து பிரார்த்தனை செய்ய என, நீ, நான் நம் வயதொத்தவர்கள் இந்நிகழ்வுகளை உணர்ந்து கொள்ளும் அளவு முதிர்ச்சியற்றவர்களெனினும் ஆதி அந்தம் என எதுவும் விளங்கவில்லை. எனினும்- உண்மை மெதுவாக துலங்க ஆரம்பித்தது. காலையில், யூதர்கள் பின்வாங்கும் நிலையில் அவர்கள் எரிச்சலுடன் மிரட்டல் விடுத்தவாறு இருந்தபோது-- ஒருபெரிய லாரி ஒன்று எங்கள் வீட்டின் முன் வந்து நின்றது. படுக்கைகளின் ஒரு சிறு தொகுப்பு இங்கும் அங்கும் விரைவாக, எரிச்சலுடன் எறியப்பட்டது. நான் வீட்டில் பழஞ்சுவர் ஒன்றின் மீது வியந்து நின்று கண்ட நிலையில் உனது தாய், அத்தை மற்றும் குழந்தைகள் லாரியில் ஏறிக் கொண்டிருப்பதைக் கண்டேன். உன்னுடைய தந்தை, உன்னை, உனது சகோதரர்கள் மற்றும் சகோதரிகளை பொருட்கள் மீது உள்ளெறிந்தவாரிருந்தார். உனது தந்தை என்னைப் பற்றி ஓட்டுநரின் மேற்புறம் காணப்பட்ட பலகைக்கு மேலாக உயர்த்தினர்; அங்கு எனது சகோதரன் ‘ரியாத்’ அமைதியாக அமர்ந்திருந்தான். நான் ஒரிடத்தில் அமைதியாக அமரும் முன் லாரி நகரத் தொடங்கியது. அன்பிற்குரிய ஆக்ரி, ராஸ் நாகுராவிற்கு செல்லும் சாலை எம்மை அழைத்துச் சென்ற வழியில் வாகனம் கிளம்பியதும் கண்களிலிருந்தும் மறையத் துவங்கியது.

palestinian boyமேகமூட்டம் நிறையக் காணப்பட்டதால் குளிர் என்னுடலைச் சூழ்ந்தது. ரியாத் அமைதியாகக் காணப்பட்டான். அவனது கால்கள் அடுக்குப் பலகையின் விளிம்பிற்கு வெளியே தொங்கிக் கொண்டிருந்தன. அவன் தனது முதுகினைப் பயணப் பெட்டியின் மீது சாய்த்திருந்தான். அவன் விழிகள் வானத்தில் நிலை கொண்டிருந்தன. நான் அமைதியாக இருந்தேன். எனது கால்களைக் கட்டியணைத்திருந்த நிலையில் மோவாயை முழங்கால்களுக்கிடையில் செருகியிருந்தேன். ஆரஞ்சு மரங்களின் வரிசை எங்கள் பயண நெடுகிலும் தொடர்ந்து ஓடி வந்தவாறிருந்தது. பயம் எங்களைத் தின்று கொண்டிருந்தது. ஈர நிலத்தின் மீது நாங்கள் பயணித்த லாரி ஊர்ந்து கொண்டிருந்தது. தூரத்தில் ஒலித்த வெடியொலி எம்மை வழியனுப்பும் வண்ணம் ஒலித்தவாறிருந்தது.

ராஸ் நாகுரா தொலைவில் தோன்றிய நிலையில் நீலத் தொடுவான் முழுக்க மேகமூட்டமாயிருந்தது. லாரி அவ்விடத்தில் நின்றது. பெண்கள் தம் பயணப் பெட்டிகளினை விட்டிறங்கி காலை குறுக்குவாட்டில் வைத்து ஆரஞ்சுக் கூடையின் இடையில் கிடத்தி அமர்ந்தனர். அவர்கள் ஆரஞ்சினை எடுத்துக் கொண்டதும் விசும்பல் ஒலி எங்களது காதுகளை வந்தடைந்தது. ஆரஞ்சு என்பது நமது விருப்பத்திற்குரிய பழம், பெரிதான, தூய்மையான அப்பழம் நமது கண்களுக்கு உவகையூட்டுவதென நான் நினைத்திருந்தேன். பெண்கள் சில ஆரஞ்சுப் பழங்களை வாங்கினார். பின் அவை லாரிக்குத் திரும்ப எடுத்து வரப்பட்டன. உனது தந்தை ஓட்டுனரின் இருக்கையிலிருந்து இறங்கி கை நீட்டி ஒன்றை எடுத்தார். மௌனமாக அதனை உற்று நோக்கிய அவர் திடீரென உடைந்து அழுதார். ஒரு விரக்தியற்ற குழந்தையென.

ராஸ் நாகுராவில் மற்ற அநேக லாரிகளுடன் ஒன்றாய் எமது வாகனமும் நின்றது. தங்களது ஆயுதங்களை அங்கிருந்த போலீஸ்காரரிடம் அம்மனிதர்கள் கைமாற்றினர். எங்களது முறைவந்த போது நான் கண்டது
நீண்ட துப்பாக்கிகள் மற்றும் இயந்திர துப்பாக்கிகளை மேசையின் மீது வரிசையாக கிடத்தப்பட்டிருந்ததை. லாரிகள் லெபனானை நோக்கி வருகை தரும் நீண்ட தொடர்ச்சி வளைவினை தாண்டியும் காணப்பட்ட நிலையில் ஆரஞ்சுகளின் நிலத்திலிருந்து மீளும் அவற்றின் தொலைவினை உணர இயலும். நானும் அப்போது உடைந்து அழுதேன். உனது தந்தை யூதர்களிடம் இழந்த ஆரஞ்சு மரங்கள் அவரது முகத்தில் பிரதிபலித்தன. ஒரு காலத்தில் ஒவ்வொன்றாக வாங்கி பயிரிட்டு வளர்த்த அம்மரம் ஒவ்வொன்றின் அடையாளம் அவர் முகத்தில் காணப்பட்டது. கண்ணீரிலும் அது நிறைந்திருந்தது. அவர் காவல்துறை முனையில் இருந்த அதிகாரியின் முன் கட்டுக்கடங்காமல் அழுதார். மதிய வேளையில், சிடோனை நாங்கள் அடைந்த பொழுது, நாங்கள் முழுமையான அகதிகளானோம்.

நெடுஞ்சாலையினால் விழுங்கப்பட்ட பலருள் நாங்கள் ஒருவராயினும்- தூக்கத்தை தன்னிலிருந்து தொலைத்தவராக உனது தந்தை காணப்பட்டார். பெரிதாகக் குவிக்கப்பட்டிருந்த பயண பொருட்களின் முன்னே, தெருவில் அவர் நின்று கொண்டிருந்தார். நான் ஓடிச் சென்று அவரிடம் ஏதாவது தெரிவிக்கலாம் என்ற நிலையில் அவர் என்னைக் கடிந்து கொள்வார். ‘உன்னுடைய அப்பா ஒளிந்து போக’ இவ்விரு உறுதிமொழிகளும் அவரது முகத்தில் தெளிவாகத் தீட்டப்பட்டிருந்தன. நான் ஒரு கண்டிப்பான, ஒழுங்கு நிறைந்த மதம் சார்ந்த பள்ளி ஒன்றில் கல்வி பயின்றவன். எனினும் எனக்குக் கடவுளின் மீது இத்தருணங்களில் சந்தேகம் அரும்பியது. அவர் மெய்யாகவே மனிதர்களை மகிழ்ச்சி கொண்டவர்களாகப் படைத்தாரா?. எனக்கு மேலும் ஐயமேற்பட்டது. கடவுளால் அனைத்தையும் பார்க்கவும், கேட்கவும் இயலுமா? பள்ளித் திருச்சபைகளில் எங்களுக்கு அளிக்கப்பட்ட வண்ணந்தீட்டிய கடவுளின் படங்களின் முகத்தில் குழந்தைகளின் மீது அனுதாபமும், மெல்லிய புன்சிரிப்பும் இழையோடும். கடவுள், ஒழுக்கமும் கண்டிப்பும் நிறைந்ததாகக் கூறப்படும் பள்ளிகள் அதிக கட்டணம் வசூலிப்பதற்கு இத்தந்திரங்களை கையாள்வதை கடவுள் உணர்ந்து நகைக்கிறார். எனவே எனக்குத் தோன்றியது, பாலஸ்தீனத்தில் நாங்கள் வழிபட்டு வந்த கடவுளும் அதனைவிட்டு நீங்கி விட்டார் என்றும் அவரும் அகதியாக இருக்க கூடும் என்றும் நான் உணர்கிறேன். நாங்கள் தற்போது புலம் பெயர்ந்தோர் என்று ஆன நிலையில் ஓரத்திலிருந்து சிறு நடைபாதை சுவரொன்றின் மீது அமர்ந்து கொண்டோம். எமக்கு ஏதாவது தீர்வு கிட்டலாம்- அன்றிரவு ஒண்டிக்கொள்வதற்கு ஒரு கூரை கிட்டியது. குழந்தையின் எளிய மனதில் வலி கவிய தொடங்கியது.

இரவு அச்சம் தாங்கிய ஒன்று- எங்கள் மீது கவிந்த இருள் பயங்கரம் ஒன்றை உணர்த்திச் சென்றது. நடைபாதை ஒன்றில் இரவு முழுதும் கழிக்க வேண்டுமென்ற எண்ணம் என்னுள் அச்சத்தை ஏற்படுத்தியது. அனைத்து அச்சங்களும் கொடூரமானவை. யாரும் என் மீது கருணை காட்டவில்லை, அனுதாபம் கொள்ளவில்லை. உனது அப்பாவின் பார்வை நெஞ்சில் பயத்தை வாரிகொட்டியது. அம்மா வைத்திருந்த ஆரஞ்சு தலையில் நெருப்பைக் கொட்டியது.

கரிய சாலை மீது படிந்திருந்தன நம் கண்கள்; ஊழ் அவ்விடத்தில் தோன்றும்; அது குழந்தைகள் அனைவருக்கும் நன்மை பயக்கும் என்ற நம்பிக்கையில் அதனைப் பின் தொடர்ந்து சென்று ஒரு பக்கம் ஒண்ட நினைத்திருந்தோம். ஆம், விதி அவ்வாரே தோன்றியது உன் மாமா ஏற்கனவே அங்கிருந்தவர் நம் முன் தோன்றினார்.

அறத்தின் மீது அவருக்கு என்றும் நம்பிக்கை இருந்ததில்லை. மேலும் நடைபாதையில் அவரைக் கண்டவுடன், அவருக்கிருந்த கொஞ்சநஞ்ச நம்பிக்கையும் விடைபெற்று சென்றுவிட்டது. ஒரு யூத குடும்பம் தங்கியிருந்த ஒரு வீட்டை அவர் பிடித்து வைத்திருந்தார். கதவை திறந்து சாமான்களை உள்ளெறிந்தவாரே தன்னுடைய உருண்டையான முகத்தை அவர்களை நோக்கி உலுப்பிக் கொண்டே கத்தினார். ‘அனைவரும் பாலஸ்தீனத்திற்கு திரும்பச் செல்லுங்கள்’ யாரும் அவ்வாறு திரும்பப் போவதில்லையெனினும், மௌனமாக பக்கத்து அறைக்குச் சென்றனர். மாமா தரையையும் எங்களையும் மாறி பார்த்தவாறு குழம்பினார்.

உனது மாமா நம்மனைவரையும் குடும்பம், சாமான்கள் குவியலுக்குள் விட்டுச்சென்றார். சின்னஞ்சிறு உடல்கள் தரையில் நன்கிழைய இரவில் கிடந்துறங்கினோம். ஆண்களின் கோட்டை நாம் குளிருக்கு பயன்படுத்திக் கொண்டமையால் அவர்கள் உறக்கமின்றி அமர்ந்திருந்தனர். துயரம் நமது ஆன்மாவை திண்ணத்துவங்கும். சிடானில் நாம் நீண்ட காலம் இல்லை நம்மனைவருக்கும் மாமாவின் இருப்பிடம் ஏற்றதல்ல- மூன்று நாட்கள் புகலிடமாய் இருந்தது. அம்மா, அப்பாவிடம் வேலை தேடச் சொன்னார் இல்லையெனில் ஆரஞ்சு மரத்துக்கு (விவசாயத்திற்கு )
திரும்ப வேண்டும். அப்பா உரத்த குரலில் ஏசினார். துவேஷம் அவளுக்கு மௌனத்தை சுமத்தியது; குடும்பங்களில் பிரச்சனைகள் தலைதூக்கின. நிலம், வீடு என்று பல்வேறு தியாகத்தாலும் உயிர் நீத்தலிலும் உருவான நமது இருப்பிடம் நம்மிடமிருந்து எடுத்துக் கொள்ளப்பட்டுவிட்டது. நானறியேன் அப்பா எங்கிருந்து பணம் பெருகிறார் என்று; அம்மாவின் நகைகளை விற்றிருக்க கூடும். நகைகளை வாங்கி அவளுக்கு அணிவித்த போது அதனை பெருமைக்குரியதாக அவர் கூறினார். அவ்வாபரணங்கள், சிக்கல்களை தீர்க்கவல்லன அல்ல என்றாலும் வேறு வழி புலப்படவில்லை. அவர் கடனை பெற்றாவாரா? எதனையாவது விற்றாரா? நாங்கள் சிடானுக்கு வெளியிலுள்ள கிராமத்திற்கு நகர்ந்து செல்கிறோம். பால்கனியிலேயே அப்பா அமர்ந்துள்ளார். வெற்றிகொண்ட படைகள் 15, மே அன்று திரும்ப வரக்கூடும் என்றெண்ணி.

மே,15 நீண்ட கசப்புணர்வின் பின் வந்தது. நள்ளிரவில் உன் அப்பா தனது பாத்த்தால் எத்தி எழுப்பினார். எழுந்திரு அரேபிய படைகள் பாலஸ்தீனத்துள் நுழைவதைப் பார். பின் நாங்கள் மலை உச்சிக்கு வெறுங்காலுடன் தள்ளாடி நடக்க துவங்கினோம். இளையோர், முதியோர் அனைவரும் மனமுறிவுண்டு பதறி ஓடினோம். லாரிகள் ராஸ் நாகுராவின் மீதேறும் ஒளிர்வினை யாம் காண நேர்ந்த்து. காலையில் நடக்கும் போது குளிர் அதிகமாக இருந்த்தெனினும் அப்பாவின் கூக்குரல் காரணமாக யாரும் அதனை காட்டிக்கொள்ளவில்லை. லாரியின் பின் சிறுவன் போல் அவர் ஓடினார், ஓடியதில் மூச்சு வாங்கி, கூக்குரலிட வழியின்றி நில்லாமல் ஓடினார். நாங்களும் அவர்களுடன் ஓடினோம். நட்புடன் படை வீரர்கள் ஹெல்மட்டின் வழி எமை நோக்கினர். மௌனமாக இறுகி அவர்கள் நோக்கினர். மூச்சிரைந்த நிலையில் அப்பா 50வயது நிரம்ப பெற்றிருப்பினும் சிகரெட்டுகளை எடுத்து வீரர்களிடம் வீசினார். ஆட்டுமந்தை போல் யாங்கள் தொடர்ந்து ஓடினோம்.

இறுதியாக லாரிகள் பயணம் முடிவுற்றது. நாங்கள் அயர்ச்சியுடன் வீடு திரும்ப நேர்ந்த போது சற்று இளைப்பாறினோம். அப்பாவும் நாமும் மௌனத்தில் ஆழ்ந்தோம். அவர் முகத்தில், ஓடும் கார் ஒன்றின் வெளிச்சம் விழுந்த போது அவர் அழுது கொண்டிருந்ததை காண இயன்றது.

நகரும் கணங்கள் தாமதமாயின. வந்த செய்தி ஏமாற்றமளித்தது. உண்மையின் தோற்றம் சகிக்க இயலாதது. மக்கள் முகங்களில் ஏமாற்றம். அப்பா அந்நாட்களில் பாலஸ்தீன் குறித்து குறிப்பிடுவார். தனது தோட்டங்கள், வீடுகளில் மகிழ்ச்சியாய் பணிபுரிந்த நாட்களின் நினைவுகள் அவர் சொற்களில். அவரது வாழ்கையில் துயரத்தால் உருவான சுவர்கள் நாங்களானோம். அதன் மீதுள்ள விரிசல்களும் நானே. அடுத்த நாள் அதிகாலையில் மலை உச்சிக்கு செல்ல அவர் பணித்தார். அதன் மூலம் காலையில் உணவருந்தல் தவிர்க்க அவர் நினைத்திருக்கலாம்.

குழப்பங்கள்… ஏதாவது சிறு காரணம் போதும் அவர் சினங்கொள்ள. யாரோ ஒருவன் அவரைக் கேட்கிறான், உடனே அவரது உடல் மின்பாய்ச்சல் கண்டது போல் நடுங்குகிறது. உன் முகத்தில் மேய்ந்த அவரது கண்கள் ஒளிவீசின. ஒரு விபரீதமான எண்ணம் அவருள் தோன்றியது என்பதை உணர இயன்றது. பின் அம்முகத்தில் ஒரு முடிவு தென்பட்டது. எல்லா சிக்கல்களுக்கும் விடை கண்டுவிட்டவராக, கணத்தில் தீர்வுள்ள ஒரு நடவடிக்கை மேற்கொள்பராக, திரும்பி நின்றவர் சில சொற்களை உதிர்த்தார். சுழன்று நின்ற அவர் எதனைத் தேடுகின்றனர் என்பது நினைவில்லை. ஆக்ரியிலிருந்து கொண்டு வந்த ஒரு பெட்டியை வளமாக எட்டி உதைத்தார் அதிலிருந்த பொருட்கள் சிதறின. அம்மா இச்செயலை உணர்ந்தாள். அதன் பொருள் பிள்ளைகள் துயருரும் வேளையில் அன்னையர் அவ்வாபத்தினை உணரும் தருணம் அது. நீங்கள் மலை உச்சிக்கு ஓடுங்கள் என்று கூக்குரலிட்டாள். ஆனால் நாங்கள் ஜன்னல் அருகே நின்றோம். எமது சிறிய காதுகளை கதவின் மீது ஒட்டி வைத்தோம்,

‘நான் அவர்களை கொலை செய்வேன், தற்கொலை பண்ணிக்குவேன், எல்லாத்தையும் முடிச்சுடறேன், நான் இவ….’

உன் அப்பா திடீரென கீழே விழுந்தார். கதவின் விரிசல் வழியாக நாங்கள் கண்டபோது அவர் கீழே விழுந்து கிடந்தார். மூச்சுவிட சிரமப்பட்டிருந்தார். அம்மா பதைபதைக்க இக்காட்சிகளை நோக்கியவாறிருந்தார்.

எமக்குப் புரியவில்லை; தரையில் கிடந்த கறுப்பு ரிவால்வர் அனைத்தையும் விளக்கியது. மரணத்தின் கொடூரம் நிலைத்த காட்சி கண்ட குழந்தை அதன் தாக்கம் அவனை துரத்த மலையை நோக்கி ஓடினேன் விரைவாக.

வீட்டிலிருந்து ஓடும் நிலையில் எனது குழந்தமையை விட்டோடினேன். எனக்கு விளங்கியது இனி வாழ்வில் ஆனந்தம் கிடையாது, அமைதியாக வாழ வழியில்லை, ஒவ்வொரு தலைக்கும் ஒரு துப்பாக்கி ரவை என்பது ஒரு தீர்வாக அக போகும். ஆகவே நாங்கள் எவ்வாறு நடந்து கொள்வது? பசித்தால் உணவு கேட்க கூடாது. அப்பா என்றும் மௌனம் சாதித்தார். எதையாவது அவரிடம் கேட்டால் புன்முறுவலுடன், ‘ மலை உச்சிக்கு செல்லுங்கள், மதியம் திரும்ப வாருங்கள்’ .

மாலையில் தான் நான் வீடு திரும்பினேன். அப்பா படுத்துகிடந்தார். அம்மா அவரருகே, உன் கண்கள் பூனையினை போல் ஒளிர்ந்தன. இதழ்கள் திறந்த வழக்கமற்றதைப் போல மூடிக்கிடந்தன. அவை முகத்தின் மீது வலிய காயம் ஒன்று ஏற்பட்டு தழும்பினை போன்றிருந்தன. நிலைகுலைந்து கிடைந்தாய் நீ-- உனது குழந்தமையிலிருந்தும் ஆரஞ்சு நிலத்திலிருந்தும். ஆரஞ்சுகள் செழிப்பானவை, குடியானவன் நீரூற்றி பராமறிக்கும் வரை செழிப்பானவை, அவன் நீங்கினால் அவை வாடி சுருங்கும், மற்றவர் நீரூற்றினால் அவை ஏற்றுக்கொள்ளா.

அப்பா படுக்கையில் கிடக்கிறார். கண்களை விட்டு நீங்காத துயர் உருவாக்கிய கண்ணீரை துடைத்தெறியும் நெடிய செயல் செய்யும் அம்மா அவரருகில். மூன்றாமவன் போல் நான் மெல்ல நுழைகிறேன். உனது தந்தையை நான் நோக்கும் வேளை அம்முகம் கையாலாகாத சினத்துடன் பொங்கி ததும்பியது, கறுப்பு ரிவால்வர் ஒன்றும், ஆரஞ்சும் மேஜைக்கடியில் கிடந்தன. அவ்வாரஞ்சு காய்ந்து, சுண்டிக் கிடந்தது.

(கசான் கனாஃபானி 1936ல் ஆக்ரி, வடபாலஸ்தீனத்தில் பிறந்தவர். பின் டமாஸ்கசுக்கு குடிபெயர்ந்தவர். உயர்கல்வி முடித்து ஆசிரியர், பத்திரிக்கையாளர் என பணிபுரிந்து வந்தவர். அரேபிய தேசிய இயக்கத்தில் சுறுசுறுப்புடன் பணியாற்றிய இவரை மேற்கத்திய நாடுகள் பாலஸ்தீனத்திற்காக உரையாடி வந்தவர் என்று சித்தரிக்கின்றன. யதார்த்தத்தை பின்னணியாகக் கொண்ட எழுத்தை வடிக்கும் இவர் பண்புகள் பாலஸ்தீன புனைவிலக்கியத்தில் தர்வீஷ் போன்றோருக்கு உகந்த நிலையில் குறிப்பிடப்படுபவை. இவரும் இவரது சகோதரி மகளும் காரில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்டனர். இவர் வாழ்க்கை வெறும் 36 ஆண்டுகளே நிரம்பியது.)

தமிழில்-ரா.பாலகிருஷ்ணன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It