Dry landஎருக்கிலையும்
இலந்தையும் தவிர
எல்லாமிழந்தது
பூமி

தீனியில்லாத
சினைப்பசுவொன்று
குப்பையில்
ஊதிச் செத்தது

ஊர்
காக்கிற அம்மன்
கட்டமன் ஆனாள்

ஆல்
தங்காத ஊரில்
அருகம்புல்
தங்குமா?

பனை
தங்காத ஊரில்
பச்ச நெல்லு
தங்குமா?

சொலவடை
சொல்கிற
பெருசுகள் மனசு
கூமுட்டையென
கலங்கிக் கிடக்கும்
பிள்ளைகள் வாழ்வு நினைத்து

அபலை
கண்ணென
மஞ்சள் பூத்தது
வெள்ளாட்டின் கண்

முன்னோர்
ஆத்மா வாழும்
பெருமரங்கள்
மொட்டையாகின

ஊரில் பாதி
கிரையமானது
ஜெயவிலாஸ் மில்லுக்கும்
ஈரோட்டுக்காரனுக்கும்

உச்சந்தலை
ஊன்றி நின்றாலும்
தலை நனையாத
கிணறுகள் காய
தரைதளிர்த்துக்
கிடக்கின்றன
பரம்பரை நிலங்கள்

எலிப்பொந்தில்
இறங்கிய நீரென
புகுந்த வறுமையில்
திசைக் கொருவராக
தெறித்தோடினர்
வாரிசுகள்

பழகிய காடுகளில்
ஆவிவெந்து
அலைகிறார்கள்
அன்னைமார்கள்


வே. ராமசாமி
Pin It