வயதானப் பாட்டியோ
கர்ப்பிணியோ
Chennaiஅருகில் நிற்க
தீராத அலுப்பில்
தூங்கியது போல
நடிக்கவும்

பச்சை விளக்குக்காக
காத்திருக்கையில்
விபத்திற்கு பலியானவர்
குறித்த வருத்தத்தை விட
அலுவலக அவசரத்திற்கு
வருந்தவும்

வரைந்த கைகளையோ
கோலத்தின் அழகையோ
பொருட்படுத்தாது
காலணிகளால்
காயப்படுத்தவும்

தருமம் பண்ணுங்கய்யா
வாசகம் கேட்கும் போதெல்லாம்
காது கேட்காதவராய்
மாறி விடவும்

சொன்ன விலைக்கு
வாங்கிய
அடுக்குமாடிக் கடைகளின்
அதிருப்தியை
சாலையோரக் கடைகளில்
பேரம் பேசித்
தீர்த்துக் கொள்ளவும்

மரங்களை வெட்டி
வீடாக்கி விட்ட
வாடகை அறையில்
ஒட்ட வைத்த
பிளாஸ்டிக் பட்டாம் பூச்சியில்
மனம் லயிக்கவும்

மிஞ்சிப் போனால்
மூன்றுப் பேர் தங்கலாம்
என்ற நிலைமையில்
‘விருந்தும் மருந்தும் மூன்று நாளைக்கு’
என்று சொன்னவனை
முட்டாள் என
முன்மொழியவும்

பாரிமுனையை
‘பாரிஸ் கார்னர்’ என்றும்
திருவல்லிக்கேணியை
‘டிரிப்பிளிகேன்’ என்றும்
தியாகராய நகரை
‘டி.நகர்’ என்றும்
சொல்லிச் சொல்லி
புறம் மகிழவும்.

இப்படியாக...
இன்னும்...இன்னும்
ஏராளமாய்
என்னுள் விதைத்திருக்கிறது
நகர வாழ்க்கை.


கதிர்மொழி

More articles by கதிர்மொழி

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.