Village Houseகரியடுப்பில் கொதிக்கும்
கற்சட்டிக்குழம்பின் வாசனையும்
சாணமிட்டு மெழுகிய தரையில்
பளிச்சிடும் கோலமும்
அணில் விளையாடித் திரிந்த
முற்றமும்
அகல்விளக்கு எரியும் பிறைகளும்
ஆடிப் பிடித்து விளையாடும் தூண்களும்
கொண்ட அழகான கூடமும்
நிலா பதுங்கும் கிணறும்
வந்தவர்கள் அமர்ந்து
வம்புபேசும் திண்ணையும்
கொலுசொலிக்குப் போட்டியாய்
கிணுகிணுக்கும் ஊஞ்சலொலியும்
சிட்டுக்குருவிகள் கூடுகட்ட வாகாய்
இடம்கொடுக்கும் உத்திரமும்
அவ்வப்போது ஓட்டப்பந்தயம் நடத்தும்
எலிகள் நிறைந்த பரணும்
மரமும் செடியுமாய்
மணக்கும் பூக்கள் கொண்ட
தோட்டமும்
அசைபோட்டபடியே
சதா அமர்ந்திருக்கும்
மாடுகள் நிறைந்த கொட்டிலும்
என்றான கிராமத்து வீட்டை
நகரத்து நாகரீகபாணியில்
மாற்ற வேண்டுமென
பெரியண்ணன்
பிடிவாதமாய் இடித்துக்
கட்டி முடித்ததைப்
பார்க்க நேர்ந்தபோது
காணாமல் போனவைகள்
பட்டியலில்
மேற்கூறியவை மட்டுமல்ல
களியாட்டம் போட்ட
மனதும்தான். 

ஷைலஜா இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Pin It