Manநான் முற்றிலும்
தீர்ந்துவிட்டதாக ஒரு
எண்ணம்...

குறைந்தபட்சம்
அவளை பற்றிக்கூட
கவிதை
எழுத முடியவில்லை..

என் உலகத்தை
சுற்றிப்பார்த்து விட்டு
என்னை பார்த்துக்கொள்கையில்
நான்
ஒரு அஃறிணையாகி விடுகிறேன் ...

என் இயல்புகள்
இயங்க மறுக்கின்றன..

கூடிழந்த
பறவைகளை பார்க்கையில்
சமீபகாலமாய்
கண்ணீர் வருவதில்லை..

குழந்தை
அழுகின்ற சத்தம் கேட்டால்
தூக்கம் கலைவதில்லை....

கால் நனைந்திடக்கூடாது ...
என்னும் கவனத்தோடே
கடற்கரையில் நடக்கிறேன்..

மழைத்துளி பட்டுவிட்டால்
துடைத்துக் கொள்ளும்
புதுப் பழக்கம்...

சில சாதாரண
குணாதிசயங்களோடு
என் உலகத்தை
சுழற்றிக் கொண்டு இருக்கிறேன்...

என் தேகத்துக்குள்
இன்னொரு தேகமும்
என் உயிருக்குள்
இன்னொரு உயிரும்
இருப்பதை
மெல்ல மெல்ல உணர்கிறேன்..

அவன்...

அவன்
கவிஞன் அல்லாத
ஒரு போலி... 

சேஷா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It