இருவரும் சேர்ந்து வளர்க்கும் காதல் பிராணி
என்னமாய்க் களிப்பு மழையில் நனைகிறது பார்
காலையிலும் மாலையிலும் எப்பொழுதிலும்
அன்பூற்றி வளர்க்கும் பிராணி
என்னமாய் வளர்ந்து நிற்கிறது பார்
காதல் பிராணியின் எடைகளையொத்த உன் நேசம்
சுமக்கும் முத்தங்களைச் சேர்த்துச் சேர்த்து வை
மீண்டும் சந்திக்கும் நாளொன்றின் முதல்துளியில்
அள்ளியள்ளி எடுத்துக் கொள்கிறேன்

எந்தத் தேவதையின் காதல் சிறகுகளைத் திருடி
என்னிடம் பறந்துவருவாய்
சிறகுகளை இழந்த சுப தேவதைகள்
பொறாமையில் பார்த்துநிற்கக்
கனாக் கண்டவை யாவும் பூர்த்தியாகும் மகிழ்வில்
துள்ளும் இக்கணத்தின் பூரிப்பைக் கொண்டாடுகிறேன்
இதயத்தைக் கருவறையாக்கி
என் வாழ்நாள் முழுதும் சுமக்குமுன்
எடையற்ற கனத்தைக் கொண்டு
சிரிக்கிறாய் நீ அதிலெப்போதும்
மனம் முழுதும் மகிழ்வை நிறைக்கும் நீ
என்ன செய்தபடியிருக்கிறாய் இப்பொழுது

எம்.ரிஷான் ஷெரீப், மாவனல்லை, இலங்கை. இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Pin It