எங்கு பார்த்தாலும் உன் பிம்பமே..

எதைக் கேட்டாலும் உன் குரலே..

எதைச் செய்தாலும் உன் நினைவே..

isaipriya_loveஎது பேசினாலும் உனைப் பற்றியே..

எந்த நுகர்விலும் உன் வாசமே..

ஐம்புலன்களும் அடங்காமல்

உன்னைச் சுற்றி..

அடக்கும் வழி தெரியாமல்

அல்லாடுகிறேன்..

அத்தனையையும்

நிறுத்திக் கொள்ள

நீ நேசிப்பதைத் தவிர

வேறு வழியேயில்லை..

 

-------------------------------

 

வயல்வெளியினூடே

எதற்கும் அஞ்சாது நிற்கும்

வைக்கோல் பொம்மையினை

கண்டு பயந்து போகும்

பறவைகளைப் போலானதல்ல..

பின்வாங்க மறுக்கும் நேசம்..

 

------------------------------

 

நமக்கிடையே

ஒன்றுமில்லை..

அதீத நேசம்

அளவிலா அன்பு

அடங்காத மகிழ்ச்சி

அடம்பிடிக்கும் இதயம்

ஈர்ப்பான பார்வை

இப்படி

நமக்கிடையே ஒன்றும் இல்லை..

நமக்கான இடைவெளிகளில்

நம்மைத் தவிரவும் யாருமில்லை..

 

------------------

 

மிச்சமிருந்த

மரணம் பற்றிய பயத்தை

விட்டொழித்தேன்..

அறிமுகமற்ற

வாழ்வு பற்றிய

ரகசியத்தை

அறிந்து கொண்டேன்..

இரண்டும்

உன் மனதிலிருந்து

துண்டித்து வீசப்பட்ட

வார்த்தைகளின்

ஒப்பிடமுடியாத

வீரத்திற்கான வெளிப்பாடு..

 

----------------------------------

 

ஒரு குழந்தையைப் போல

விளையாட விடு..

அல்லது

ஒரு பறவையைப் போல

பறக்க விடு..

அல்லது

ஒரு கவிதையைப் போல

வாழவிடு..

அல்லது

உன் நேசத்தையாவது

சொல்லிவிடு..

 

- இசை பிரியா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It