வெட்ட வெளியில் முளைக்கிறது
ஒரு கருப்புத் தாமரை
காட்டுக் கொடிகள்
விடும் கரும்பட்டமோ என
நான் வியந்து கொண்டிருக்க
எதிர்பாராத கணத்தில்
சிறகு விரிக்கிறது
ஒரு கரிச்சான் குருவி
பனித்திரைக்குப் பின்னால்
சிலிர்க்கும் ரோமக் கால்களென
வெடவெடத்து வானேகுகின்றன
திரட்சியுற்ற காட்டு மரங்கள்
வான்காவின் பச்சை தேவதைகள்
ஏரிக் கண்ணாடியில்
முகம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்
இன்று ருதுவான
கொழுந்தைப் பறித்து
என் சட்டைப் பையில்
வைத்துக் கொள்கிறேன்
உன் நினைவுகள் வந்தது
பறித்த உடனா அல்லது
அதற்கும் முன்பா என்று
தெரியவேயில்லை
- தங்கேஸ்