அவள் இல்லாத இடம் ஏது
கதவு திறந்தால்
ஜன்னல் திறந்தால்
வீடு திறந்தால்
வீதி திறந்தால்
ஊர் திறந்தால்
உலகம் திறந்தால்
வானம் திறந்தால்
அதற்கு மேலும் திறந்தால்
எங்கும் அவளே
சரி அத்தனையும் மூடினால்
அப்போதும் இருக்கிறாள்
திறவாத உள்ளங்கைக்குள்
இல்லாத இருத்தல் அது

*
கோயில் வரிசையில்
காசு நீட்டி
கை கூப்பும்
முந்திரிக் கொட்டைகளுக்கு
ஒருபோதும்
மூஞ்சைக் காட்டாது
புத்தியுள்ள சாமி

*
ஒதுக்கு
அடக்கு
தள்ளி வை
ஏளனம் செய்
மட்டம் தட்டு
மதியாதே
சூரியன் வராமலா போகும்

- கவிஜி

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.