புணர்தலுக்கு மொழி பற்றாது
முட்டி மோதும் மூச்சுக்குள்
புல்லாங்குழல் கண்டெடு
களிறு போலத் தான்
கண்களினால் கட்டுப்படும்
கவரிமானும் கண்டுணர்
நகம் கீறிடும் போதும்
நயம் அதுவென பொறு
முந்தா நாள் வைத்த
மருதாணி வாசம்
துருவி எடுக்கிறேன்
மயக்கத்தின் மத்தியில்
புள்ளிகளால் பூரிக்கும்
இரு மலை வட்டம்
பானை வனக் கள்ளென
இரட்டைக்கிளவி தம்பட்டம் தான்
சிலிர்த்துக் கொள்கிறேன்
முயங்கி சரிகையில்
முகம் காண வெட்கிடும்
தலையணை தந்திரம்
கீழே கிடக்கும் உன்னிரவில்
மின்னலைக் கொட்டி மறைகிறது
மேலே தகிக்கும் என் ஒளி
பேருடல் சொட்டிய வனத்தில்
மூச்சொலி மும்மரம்
உடலேந்திக் கிடக்கும்
செங்கழுத்தில்
நம்மையாட்டிய சிறு மரணம்

- கவிஜி

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.