நீ தந்த முத்தத்தின்
ஈரத்தை உரசி சென்ற காற்று
உருவாக்குகிறது வானிலை மாற்றங்களை
அங்கக் கடலில் புது
காதல் அழுத்த உயர்வு அலைகளை.
நமக்குள் உருவான புயலுக்கு
ஊரெல்லாம் எச்சரிக்கை கொடிகள்..
உன்னில் மய்யம் கொண்டு
கரை கடந்த வேளை
நுரைபடிந்த மணல்வெளியில்
நண்டுகள் ஆடிக்களிக்கும் நீ உரசிய கொந்தளிப்பை...
வலசை வந்த கடலாமைகள்
கதகதப்பாய் இடுகின்றன
காதலின் முட்டைகளை
கடற்கரை மணல் நெஞ்சில் குழிபறித்து
சுவருடைத்து வெளியேறுகிறது
பேரன்பின் குஞ்சுகள்
காதல் பெருங்கடலில்
நீந்திட வட்டமடிக்கிறோம்
காகங்களுக்கும் கழுகுகளுக்குமிடையே
ஏகாந்தமாய்.

- சதீஷ் குமரன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.