அன்று
நீயும் நானும்
திருவிழா கொண்டாடிய
அதே வீதிதான் இது.

நம் ஊரின்
பெரும் அடையாளமான நதி
வற்றத் துவங்கிய நாள் முதலே
தலைதூக்கியது மணற்கொள்ளை.

சொட்டு நீருக்கு
நாம் கையேந்தும் இவ்வேளையில்தான்
மணல் திருட்டிற்குப் பெயர்போன ஒருவன்
திருவிழாக் கடையொன்றில்
தன் சிறு பிள்ளைக்கென
தண்ணீர்த் துவக்கையினை
பேரம் பேசிக் கொண்டுள்ளான்.

வா நண்பனே ...
என் விரல்களை இறுகப் பற்று.
பீய்ச்சியடிக்கும்
அவன் துப்பாக்கி நீரில்
சிறிது நேர ஆறாகி
சலசலத்து ஓடலாம்
நாமும்....நம் தெருவும்...

- வான்மதி செந்தில்வாணன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.