anger 297

நிலம் பறித்தீர்கள்
விலை மறுத்தீர்கள்
முலை அறுத்தீர்கள்
பிழைக்கக் கெஞ்சோம் இனி
கொலைக்கும் அஞ்சோம்....

*****

சில கத்தும் குட்டிகள்
கழுத்து நெறிக்க ஒருபோதும் நிகழாது
சிங்கத்து மரணம்.....

*****

அவர்கள் வெட்டிச் சரித்த
தேகம் சரிந்திடினும்
கொப்பளிக்கும் குருதியில் சூடு

*****

கடலின் நீள் முனையிலிருந்து
தொடுவானம் ஏறி
நீந்தத் தொடங்குகிறான்
நான்கு நாட்களாக கரை
திரும்பாதவன்.

*****

பால் ஓடியதாம் தேன் ஓடியதாம்
ஆறும் ஓடியதாம்
லாரி ஓடுவதுதான் தெரிகிறது

*****

தூக்கிட்டு தொங்க
மரங்களும் இருக்கின்றன
தூக்கிட்டு சாக
உழவர்களும் இருக்கிறார்கள்
கண் கொட்டாமல் கண்டு
உச் கொட்ட
நாமும் இருக்கின்றோம்.....!

*****

அலுத்து களைத்து பிடித்து வந்த
மீன்களில் முள்ளும் தோலுமாக
கிடந்த ஒன்றுக்கு
பார்டரில்
சிங்கள குண்டுக்கு செத்துப் போன
தாத்தாவின் சாயல்.

*****

அந்த அப்பார்ட்மெண்ட் கடக்கையிலெல்லாம்
யாரிடமாவது சொல்லத் தோன்றுகிறது
முன்பொரு காலத்தில் இது எங்களூர் சுடுகாடு

*****

வீணாப் போனவர்களின் வேட்டிக்குள்
வீம்பு முளைக்க
பணம் பிணமாகிறது பிணம் பணமாகிறது
ATMன் வரைபடம் நீண்ட கோடுகளால்
மாற்றியமைக்கப் படுகிறது....

*****

- கவிஜி

Pin It