புல்லாங்குழலின் துளைகளின்
வழியேயும்
வழியத்தான்செய்கிறது..
கண்ணீர்....
ரயில்பெட்டிகளில்
யாசிக்கும் முதுமை
இதயங்களின் ஓட்டைகளுக்குள்
ஊடுறுவிக் கொண்டிருக்கும்
குற்ற உணர்வுகளுக்கு
இசையென்று பெயரிட்டுக் கொள்ளலாம்
கட்டாயம் சில
சில்லறைகளை வீசி..
அவசர அவசரமாய்
செவிடாகிப்போவோம்.
மீண்டும் ஒரு
பயணத்தில்
ஓசைகளின் அரிதாரத்துடன்
ஊடுறுவும் அக்குழல்கள்..
இதயத்தை
துளையிடுகின்றன
வீசப்படும்
ஒற்றை நாணயத்தால்
அடைப் படுகின்றன
துளைகள்.
- சிந்தா, நெல்லை ஏர்வாடி