காய்ந்த புற்களுக்கிடையே
ஓடிக் கொண்டிருக்கும்
சிறு நதி
காட்டிக் கொண்டிருக்கிறது
எனக்கான
சின்னதொரு பாதையை ..
தோளில் சுமந்திருந்த
சிறு பையோடு மோதி
எதிரொலித்துக் கொண்டிருக்கிறது
என் முன்
சிறகடித்துக் கொண்டிருக்கும்
குருவிகளின் இறைச்சல் ..
அந்த மரத்தினடியில்
முன்பு கட்டப்பட்ட
ஊஞ்சல் இன்னும்
அசைந்து கொண்டுதானிருக்கிறது..
அதனருகே
தன் கூண்டினை
அலகோடு சேர்த்துச்
சுமந்தபடியே
பறந்து கொண்டிருக்கிறது
சின்னஞ்சிறு கிளியொன்று..
முகம் புதைத்து வைத்திருந்த
விரல்களின் இடைவெளியில்
இன்னும் மீதமிருக்கின்றன
நேற்றைய
கண்ணீர்த் துளிகளின் ஈரம்..
இன்னும் சில நொடிகளோடு
முடிந்து விடக்கூடும்
என் பயணம்..
எனினும் கைகளைக் கட்டியிழுத்து
ஆட்டுவிக்க
இன்னும் சில கயிறுகள்
காத்திருக்கக் கூடும்..
- கிருத்திகா தாஸ்