மலைகளின் மேல் சுழன்று
மரங்களினூடே மோதிப்பிரியும்
குளிர்க்காற்றின் தீண்டலுக்கு
செவி கொடுத்த
காட்டுக்குயில் ஒன்றின்
சிறகசையும் ஒலியில் நான்
காலத்தைக் கணித்துக் கொள்வேன்..
முன்பெப்போதோ ஒரு ஓவியமென
வரைந்து வைத்திருந்த
இந்த மலைகளுக்கு அருகிலேயே
இலைகளின் நிறங்களைக்கொண்டு
இன்னும் ஒரு காடு செய்து கொள்வேன்..
அந்தக் காட்டுக்குள் முன்பு
பறவையாய்த் திரிந்ததொரு பிறவியில்
நான் கண்ட மனிதர்களின் சாயல்
எங்கேனும் தென்படுகிறதா..
தேடிக்கொண்டிருக்கிறேன்..

***

அடர்ந்த கனவுகளுக்கும்
கொஞ்சம் உருமாறியிருக்கும்
நிஜங்களுக்கும்
இடைப்பட்ட வெளியொன்றில்
கற்பனைக்கென்று
கொஞ்சம் இடம் மீதமிருந்தது..
கற்பனைகளைக்
காட்சிகள் செய்ய முனைந்தபோது
கனவுகளின் நிறங்கள் பூசி ,
நிஜங்கள் தன்
வடிவங்கொண்டதாய்த் தோன்றியது..
மாயக் காட்சிகளையும்
தூரிகையையும் இணைக்கும்
சின்னஞ்சிறு
கால அவகாசத்துக்குள்
சில வர்ண ஜாலங்கள்
நிகழ்ந்து முடிந்திருந்தது ..

- கிருத்திகா தாஸ்

Pin It