நித்தமும் அதிகாலையில் விடுபட்ட
நம் முந்தைய நாள் இரவின்
மிச்சக் குறுஞ்செய்தியில் விழிப்பது
உன் முகம் பார்க்கத் தேடியபடி
என் தினப் பொழுதை துவங்கத்தான்
குளியலறைக் கதவும் சுவரும் நீரும்
நான் பின்னாளில்
மறந்து போக வேண்டிய பொருட்களை
நியாபகப்படுத்திய பின் தான்
என்னை விடுகிறது
நம் அறையெங்கும் பரவும்
சமையலறை வாசத்திற்குக் காரணம்
நான் உரித்த பூண்டிலென்றும்
நீ அரிந்த காயிலென்றும்
செல்லச் சண்டையிட வேண்டுமெனச்
சொன்ன பின் தான்
முப்பொழுதும் பசி வந்து பார்க்கிறது
படுக்கை விரிப்பினில் தூங்காமல்
என் கனவுகள்
விழித்துக் கொண்டிருக்க
சிறகடித்துக் கொண்டிருக்கும்
வாட்சப் படங்களும்
இதய சுமைலிகளும்.....
எல்லாப் பொழுதை விடவும்
குட்டியாகிப் போன
இரவை வைத்துக் கொண்டு
இந்த தூர தேசத்து நிலவிடம்
நம் பெருங்கதையைப் பேசி முடியவில்லை
உனக்கும் எனக்கும் இடையில்
நிலா மட்டுமா அல்லல்படுகிறது?
நீயும் நானும் தானே!
- முருகன்.சுந்தரபாண்டியன்