இயல்பாக இருந்தால்
தொடுவதற்கான சாத்தியங்கள்
அமையப்பெறாத
அவ்விரு பூங்கா இருக்கைகளும்
ஒன்றின்மீது மற்றொன்று
அளவில்லாத பிரியங்கள்
கொண்டவை...

காதலின்மீது
பெருமதிப்புடையதாய்
இருந்ததால்
ஸ்பரிசத்தின் மீதும்
ஆழ்ந்த ஈடுபாடுகொண்டு
மாலை நேரங்களில்
பெண்ணாகவும்
ஆணாகவும் மாறி
அளவளாவிக் கொண்டிருக்கும்!

பனிக்கால இரவுகளில்
பெருமரத்திலிருந்து
உதிரும் சருகுகள் ஆசிர்வதிக்க
அவை ஒன்றையொன்று
முத்தமிட்டுக்கொள்வது
காண்பதற்கினியது

எவனோ ஒருவனின்
சுயதேவைக்காக
எடுத்துச்செல்லப்பட்ட
ஒற்றை இருக்கையின்
இழப்பிற்குப்பின்
வாழ்வின் விளிம்பில் பயணிக்கிற
உறவுகளால் நிராகரிக்கப்பட்ட
மனிதர்களாகவே அவதரிக்கிறது
மற்றொரு இருக்கை.

- நாவிஷ் செந்தில்குமார்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.