periyar 350நரை விழுந்து
உடல் தளர்ந்து
மூத்திரப்பை சுமந்து
திரிந்த வேளையிலும்
மூடத்தனங்களுக்கு எதிராக
மூர்க்கமாக மோதிக்கொண்டிருந்தார்
பெரியார்

தீச்சட்டி ஏந்தி
தீ மிதித்து
காவடி தூக்கி
அலகு குத்தி
அடிமைப்பட்டு கிடக்கிறாய்
இன்னும் நீ

ஆதிக்க வெறிகொண்டு அலைந்த
பார்ப்பன  மதயானைகளை
அடக்கி வைக்கும் அங்குசமாய்
இட ஒதுக்கீட்டை
முன்மொழிந்தார் பெரியார்

இட ஒதுக்கீடை அனுபவித்து
சமூக அறிவற்று
நவயுக பார்ப்பானாக
நாறிக் கிடக்கிறாய்
இன்னமும் நீ

பழமை பாடும்
மத நூல்களை எரித்துவிட்டு
புதுமைகள் பாடும்
விஞ்ஞான நூல்களை
படைத்திடச் சொன்னார்

கீதையின் உபதேச
போதையில் மயங்கி
வீழ்ந்து கிடக்கிறாய்
இன்னமும் நீ ...

இந்தி திணிப்புக்கு எதிராக
முந்தி நின்று குரல் கொடுத்தார்
பெரியார்

வித்யாலயா பள்ளிகளில்
உன் பிள்ளைகளை படிக்கவைத்து
பேருவுவகை கொண்டு
வீழ்ந்து கிடக்கிறாய்
இன்னமும் நீ

பெண் உரிமை பேசி
பாலின பேதத்திற்கு
பாடை கட்டினார் பெரியார்

பெண்ணினத்தை பண்டமாக்கி
சதைகளை சந்தையாக்கி
ரசித்துக் கிடக்கிறாய்
இன்னமும் நீ

பரிணாமம்
தேவையற்ற பின்னொட்டான
மனித வாலை நறுக்கியது
பெரியாரின் பகுத்தறிவோ
பெயரின் பின்னொட்டான
சாதி வாலை நறுக்கச் சொன்னது

சாதிக்கு விளக்கம் சொல்லி
சாதிக்கொரு சங்கம் கட்டி
நறுக்கிய வாலை
நாய் போல ஆட்டிக்காட்டுகிறாய்
இன்னமும் நீ

சூத்திரன் என்றால்
ஆத்திரம் கொண்டு அடி
என்று கற்றுக்கொடுத்தார் பெரியார்

சூத்திரனாக வாழ்வதே சுகமென்று
ஆண்ட சாதி பெருமை பேசி
பார்ப்பனியத்தின் காலடியில்
அடிமைப்பட்டு கிடக்கிறாய்
இன்னமும் நீ

நவயுக வளர்ச்சியின் சாதனங்கள்
அனைத்தும் இருக்கிறது
உன்னிடத்தில்
பெரியார் கற்றுத்தந்த
பகுத்தறிவும்
சுயமரியாதையும் தவிர

அரைநூற்றாண்டுக்கும் முன்பே
அவர் அய்நூறு ஆண்டுகள்
முன்னோக்கி பார்த்தார்

இருபத்தோராம் நூற்றாண்டுடிலும்
கற்கால மனிதன் போல
பழமையில் மூழ்கிக் கிடக்கிறாய்
இன்னமும் நீ

சமஸ்கிருத மயமாக்கல்
இந்தி மயமாக்கல்
சாதி மயமாக்கல் என
உன் அடிமுதல்
முடி வரை
காவி இருள் சூழ்கிறது
மீண்டும் மீண்டும்

மீண்டுவர பெரியாரை படி
பகுத்தறிவே உயிர் நாடி...

- வீர பாண்டி

Pin It